ஜோர்ஜ் லூயி போர்ஹே
-1942-
To Mandie Molina Vedia
எரிக் லோன்ராட்டின் மடத்துணிவான சிந்தனையை வருத்திய பல பிரச்சினைகளுள், இடைவெளி விட்டு தொடர்ச்சியாக நடைபெற்று Trist - le – Roy பங்களாவில் இடைவிடாமல் வீசிய யூகாப்லிப்டஸ் மர வாசனைக்கு இடையில் உச்சகட்டத்தை எட்டிய ரத்தக்களரியான கொலைகளின்தொடர்ச்சி மிக விநோதமானது–கிரமமான விநோதமென்று சொல்லலாம்தான். ஆனால் அவன் அதை முன் கூட்டியே யூகித்தான் என்பதை எவரும் மறுக்க முடியாது. கடைசிக் கொலையைத் தடுக்கத் தவறிவிட்டான் என்பது உண்மைதான். யார்மோலின்ஸ்கியின் அதிர்ஷ்டமற்ற கொலையாளின்அடையாளத்தை யூகிக்கத் தவறினான். ஆனால் தீவினைமிக்க நிகழ்ச்சித் தொடர்ச்சிகளின் மர்மமான
வடிவமைப்பையும், Scharlach the Dandy-என்ற பட்டப்பெயர் கொண்ட சிவப்பு ஸ்கார்லாக் என்பவன் அவற்றில் ஆற்றிய பங்குகளைப் பற்றியும் அவன் யூகித்துத்தான் இருந்தான். இந்த அடியாள் தலைவன் (அவனது மரபில் வந்த பலரைப் போல) எரிக் லோன்ராட்டை பிடிக்காமல் விடுவதில்லை என்று தன் கௌரவத்தின் மீது சூளுரைத்த போதிலும் லோன்ராட் இதனால் பயமுறுத்தப்படவில்லை. தன்னை ஒரு தூய தர்க்கவியலாளனாகக் கருதினான் லோன்ராட், ஒரு விதமான Auguste Dupin போல, ஆனால் அவனிடத்தில் ஒரு சாகசக்காரனின் தன்மையும், சூதாட்டக்காரனின் அம்சமும் இருந்தன.
அதன் பரந்த நீர்கள் மணலின் நிறத்தைப் போலிருக்கும் கழிமுகத்தை ஆதிக்கங்கொண்டிருந்த, உயர்ந்த முப்பட்டைக் கண்ணாடி போலிருந்த Hotel du Nord என்ற இடத்தில் முதல் கொலை நடந்தது(அது ஒரு வெறுக்கத்தகுந்த மருத்துவமனையின் வெற்றுச் சுவர்களையும், எண்ணிக்கை இடப்பட்ட அறைகளைக் கொண்ட சிறையைப் பற்றிய உணர்வையும், வேசிகள் இல்லத்தினைப் போன்ற பொதுவான தோற்றத்தையும் கொண்டதென்று அனைவரும் அறிவர்). டிசம்பர் மாதம் 3ஆம் தேதி, நரைத்த தாடியும், சாம்பல் நிறக்கண்களும் கொண்ட யூத அறிஞர் மார்செல் யார்மோ லின்ஸ்கி அந்த ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தார். மூன்றாவது Talmudic கருத்தரங்கத்திற்கு Podolsk பிரதேசத்திலிருந்து பிரதிநிதியாக அவர் வந்திருந்தார். ஹோட்டல் து நார்ட் அவருக்குப் பிடித்திருந்ததா என்று நாம் என்றுமே அறியப் போவதில்லை. கார்ப்பதியன் பிரதேசத்தில் நடந்த மூன்று வருடப் போரினையும், மூவாயிரம் வருட ஒடுக்கு முறையையும் யூதர்களை ஒழித்துக் கட்டுவதற்கான சதிகளையும் கடந்து வந்திருந்த ஒரு வித விருப்பு வெறுப்பற்ற, காலம்கடந்த மனநிலையுடன் அவர் அதை ஏற்றுக்கொண்டார். A என்ற தளத்தில் அவருக்கு ஒரு அறை கொடுக்கப்பட்டது. Galilee பிரதேசத்தின் நால்வர்தலைவர் தங்கியிருந்த பிரமாதமான அறைக்கு எதிர்த்தாற்போல் இவருடைய அறை இருந்தது.
யார்மோலின்ஸ்கி இரவு உணவருந்தினார். முன்பின் அறிமுகமில்லாதிருந்த அந்த நகரத்தைச் சுற்றிப் பார்ப்பதை அடுத்த நாளைக்குத் தள்ளிப் போட்டார். அவர் எழுதிய நிறைய நூல்களையும், சில உடையணிகளையும் அலமாரியில் அடுக்கி ஒழுங்கு செய்துவிட்டு, நடு இரவுக்கு முன்னால் இரவு விளக்கினை அணைத்தார்.(அடுத்த அறையில் தூங்கிக் கொண்டிருந்த
நால்வர்தலைவரின் காரோட்டி அப்படித்தான் கூறினான்) நான்காம் தேதி காலை 11.03 மணிக்கு, Judische Zeitung செய்தித்தாளின் ஆசிரியர் யூத அறிஞரை தொலைபேசியில் அழைத்தார். டாக்டர். ரபி மார்செல் யார்மோலின்ஸ்கி பதில் தரவில்லை. அதற்குப் பிறகு, அவருடைய அறையில், முகம் வெளிர்ந்து, அவரது பழைய பாணி தொளதொளத்த அங்கியில், முக்கால் பாகம் நிர்வாணமாய் அவர் கண்டு பிடிக்கப்பட்டார். ஹாலின் கதவுக்குப் பக்கத்தில் அவர் கிடந்தார். ஆழமான கத்திக்குத்து அவருடைய நெஞ்சினைப் பிளந்துவிட்டிருந்தது. சில மணிநேரம் கழித்து, அதே அறையில், பத்திரிக்கைச் செய்தியாளர்கள் மற்றும் புகைப்படக்காரர்களின் கூட்டத்திற்கு மத்தியில் இன்ஸ்பெக்டர் ட்ரெவிரேனசும், லோன்ராட்டும் நடந்திருக்கும் விஷயம் பற்றி அமைதியாகத் தங்களுக்குள் விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
ட்ரெவிரேனஸ் தனது ராஜரீகமான சுருட்டினைக் கையில் பிடித்தபடி “இங்கே மூன்று கால்களுடைய பூனைகளைத் தேடி நாம் காலத்தை வீணடிக்க வேண்டிய அவசியம் இல்லை” என்றார். நால்வர்தலைவரிடம் உலகத்தின் மிகச்சிறந்த ரத்தினங்கள் இருப்பது எல்லோரும் அறிந்ததே. அதைத் திருட வந்த எவரோ ஒருவர் இங்கே தவறுதலாக வந்திருக்கலாம். யார்மேலின்ஸ்கி விழித்துக் கொண்டார், திருடனுக்கு அவரைக் கொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. “இந்த விளக்கம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”
“சாத்தியம்தான், ஆனால் சுவாரசியமாக இல்லை” என்று பதில் அளித்தான் லோன்ராட். “– யதார்த்தம் என்பது சுவாரசியமானதாய் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இல்லை என்று நீங்கள் கூறுவீர்கள். அதற்கு அப்படி இருக்க வேண்டிய கடப்பாட்டை யதார்த்தம் ஒதுக்கிக்கொள்ளலாம். ஆனால் அது நம்மால் முடியாது. உங்களுடைய கருதுகோளின்படி, சந்தர்ப்பம் இதில் பெரிய பங்கு வகிக்கிறது. இதோ இங்கே ஒரு இறந்த ரபி. எனவே யூதகுருமார்களின் தன்மையைக் கொண்ட விளக்கமே நான் விரும்புவது. ஒரு கற்பனையான நகைத் திருடனின் கற்பனை செய்யப்பட்ட தவறுகள் அல்ல.”
“எனக்கு யூதகுருமார்கள் தன்மையான விளக்கங்களில் ஈடுபாடு இல்லை” என சற்று காட்டமாகப் பதில் சொன்னார் ட்ரெவிரேனஸ்; இந்த முன்பின் தெரியாத நபரைக் கொலை செய்தவரைக் கண்டுபிடிப்பதில்தான் என் ஈடுபாடெல்லாம் இருக்கிறது.”
“அவ்வளவு முன்பின் தெரியாத யாரோ ஒன்றும் அல்ல” திருத்தினான் லோன்ராட்“இதோ இங்கே இருக்கிறது அவர் எழுதிய அனைத்துப் புத்தகங்களும்.” அலமாரியின் அறைகளில் வரிசையாக அடுக்கப்பட்ட உயரமான புத்தகங்களைச் சுட்டிக் காட்டினான். Vindication of the Kabbalah, Study of the philosophy of Robert Fludd ஆகிய நூல்கள் இருந்தன. பால் ஷெம் பற்றிய ஒரு வாழ்க்கைச் சரிதமும், ஸெபிர் எஸிரா நூலின் மொழிபெயர்ப்பும், History of the Hasidic Sect என்ற நூலும், ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட டெட்ராகிரமட்டான் பற்றிய ஆய்வுக்கட்டுரையும், Pentateuch இல் கடவுளின் நாமங்களைப் பற்றிய கட்டுரைப்புத்தகமும் இருந்தது. ஒருவிதமான பயத்துடனும், ஏன், அருவருப்புடனும் இன்ஸ்பெக்டர் அவற்றை நோக்கினார். பிறகு அவரிடமிருந்து ஒரு வெடிச் சிரிப்பு கிளம்பியது.
“நான் ஒரு சாதாரண கிறிஸ்துவன்” என்றார். “உனக்குப் பிடித்திருந்தால் இந்த ஊச வாடை அடிக்கிற எல்லாப் புத்தகங்களையும் எடுத்துச் செல்லலாம். யூதமூடநம்பிக்கைகளின் மீது வீணடிக்க என்னிடம் நேரமில்லை.”
“இந்தக் கொலைக் குற்றமே யூத மூடநம்பிக்கைகளின் வரலாற்றுக்குச் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம்” என்று லோன்ராட் முனகினான்.
“கிறித்தவ மதத்தைப் போலவே” என்று தன்னை தைர்யப்படுத்திக் கொண்டு சொன்னார் Judische Zeitung பத்திரிக்கையின் ஆசிரியர். அவன் கிட்டப்பார்வை கொண்டவனாகவும், கடவுள் நம்பிக்கையற்றவனாகவும், கூச்ச சுபாவமுள்ளவனாகவும் இருந்தான்.
யாரும் அவனுக்குப் பதில் தரவில்லை.
அவனைப் பற்றி எவரும் கவனத்தில் எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. யார்மோலின்ஸ்கி யின் சிறிய டைப்ரைட்டரில் கீழ் வரும் முடிக்கப்படாத வாசகம் எழுதப்பட்ட வெள்ளைத்தாள் இருந்ததை போலீஸ் துப்பறிவாளர்களில் ஒருவர் கண்டுபிடித்தார் :
பெயரின் முதல் எழுத்து உச்சரிக்கப்பட்டுவிட்டது.
லோன்ராட் புன்முறுவல் செய்வதைக் கட்டுபடுத்திக் கொண்டான். திடீரென புத்தக வெறியனாகவும் எபிரேயப் படிப்பாளியாகவும் மாறிய அவன், இறந்து போன மனிதனுடைய புத்தகங்களை அடுக்கிக் கட்டச் செய்து தனது இருப்பிடத்திற்குக் கொண்டு வருமாறு உத்தரவிட்டான். அங்கே, போலீஸ் விசாரணை குறித்த அக்கறையைப் புறந்தள்ளிவிட்டு புத்தகங்களைப் படிப்பதில் ஆழ்ந்து போனான். Pious என்ற இனத்தவரின் ஸ்தாபகரான Israel Baal Shem Tobh இன் போதனைகளைக் கூறியது ஒரு பெரிய எண்மடி அளவு தொகுதி; மற்றொன்று டெட்ராகிரமட்டனின் மந்திரத்தையும் பயங்கரத்தையும் கூறியது. மூன்றாவது தொகுதி “கடவுளுக்கு ஒரு ரகசியப் பெயர் உண்டு, அதில் அவருடைய ஒன்பதாவது அம்சமான நித்தியத்துவத்தையுக் காணலாம்–அதாவது, சூரியனுக்குக் கீழிருக்கும் சகல விஷயங்களின் எதிர்காலம், நிகழ்காலம், கடந்தகாலம் பற்றிய உடனடி அறிவு பெறலாம் என்று கூறியது. (இந்த ரகசியப் பெயர் மேசிடோனியாவைச் சேர்ந்த அலெக்ஸாண்டரின் படிகக் கோளத்தில் உள்ளது போன்றது என பாரசீகர்கள் கூறுவார்கள்.) பாரம்பரியம் கடவுளின் தொண்ணூற்று ஒன்பது பெயர்களை பட்டியலிடுகிறது ; எபிரேயப் அறிஞர்கள் அந்த முழுமையற்ற பூஜ்ஜியத்திற்கு இரட்டைப்படை எண்கள் பற்றிய இறையியல் தன்மையான பயத்தினால் விளக்கம் தருவார்கள்; ஹேசிடிக் இனத்தவர் இந்த விடுபடும் சொல் நூறாவது பெயரை, முழுமுற்றான பெயரைக் குறிக்கிறது என்று வாதிடுகிறார்கள்.
இந்த புத்தகப்புழுத்தன்மையான செயலில் இருந்து லோன்ராட் சில நாட்களுக்குப் பிறகு Judische Zeitung பத்திரிக்கையின் ஆசிரியரின் வருகையால் கவனம் சிதறினான். வந்தவர் கொலையைப் பற்றிப் பேச விரும்பினார். எனினும் லோன்ராட், கடவுளின் பல பெயர்களைப் பற்றிப் பேசவே விரும்பித் தேர்ந்தான். தலைமை உளவாளி எரிக்லோன்ராட் கொலையாளியின் பெயரைக் கண்டுபிடிக்கும் பொருட்டு கடவுளின் பெயர்களைப் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டிருக் கிறார் என்று அடுத்த நாள், மூன்று பத்திச் செய்தியில் ஆசிரியர் எழுதினார். பத்திரிக்கைத் துறையின் எளிமைப்படுத்தல்கள் பற்றி நன்கு தெரிந்திருந்த லோன்ராட் அது குறித்து வியப்படைய வில்லை. எவர் வேண்டுமானாலும் எந்த ஒரு புத்தகத்தையும் வாங்குவதற்கு விரும்புகிறார் என்பதைக் கண்டு பிடித்துக்கொண்ட வியாபாரி ஒருவர் யார்மோலின்ஸ்கியின் History of the Hasidic Sect புத்தகத்தின் மலிவுப் பிரதி ஒன்றினை விற்க ஆரம்பித்தார்.
நகரத்தின் மேற்கு விளிம்புகளில், யாருமற்ற வெற்றுப் பிரதேசத்தில் இரண்டாவது கொலை ஜனவரி மூன்றாம் தேதி இரவு நடந்தது. விடியற்காலை இந்த தனிமைப் பிரதேசத்தை குதிரை மீதமர்ந்து ரோந்து சுற்றும் போலீஸ்காரர்களில் ஒருவர் சீரழிந்த இரும்பு மற்றும் பெயிண்ட் கடையின் வாசல்படி நிழலில் நீண்ட அங்கி அணிந்த மனிதன் மல்லாக்காகக் கிடத்தப் பட்டிருப்பதை கவனித்தார். ஒரு ஆழமான கத்திக் குத்து அந்த மனிதனின் நெஞ்சை வெட்டிப் பிளந்திருந்தது. அவனது இறுகலான வடிவக் கூறுகள் ரத்தத்தினால் மூடப்பட்டது போல் இருந்தது. கடைசிச் சுவரின் சம்பிரதாய சிவப்பு மற்றும் மஞ்சள் சதுரங்களின் மீது சாக்கட்டி யினால் சில சொற்கள் கிறுக்கப்பட்டிருந்தன. ரோந்துப் போலீஸ்காரர் அதை வாய் விட்டுப் படித்தார். அன்று மாலை ட்ரெவிரேனசும் லோன்ராட்டும் நகரத்தின் வழியாக கொலை நடந்த தூரத்து இடத்தை அடைந்தனர். அவர்களுடைய காரின் இடது மற்றும் வலது பக்கங்களில் நகரம் கலைந்து சென்றது. வானம் அகன்று வீடுகள் குறைவாயின. இப்பொழுது அதிகம் தெரிந்தது செங்கல் சூளைகளும் ஒன்றிரண்டு பாப்லார் மரங்களும்தான். அவலமான அந்த இடத்தினை அடைந்தார்கள். கற்கள் பாவப்படாத குறுகிய சந்து. அஞகே இருபக்கமும் இருந்த ரோஜா நிறச் சுவர்கள் அதீதமான சூர்யாஸ்தமனத்தைப் பிரதிபலிப்பதாய்த் தோன்றியது. இறந்து போனவனின் அடையாளம் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. டேனியல் சைமன் அஸிவேடோ என்ற அவன், பழைய வடக்குப் பிரதேசங்களின் வெளிப்பகுதிகளில் ஓரளவு பெயர் பெற்றிருந்தான். வாகன ஓட்டியாகத் தொடங்கி அடியாள் கும்பலின் தலைவனாக இருந்து தேர்தல்களத்து குண்டனாக மாறி, பிறகு திருடனாகவும், காட்டிக் கொடுப்பவனாகவும் சீரழிந்தான். (அவன் சாவின் விநோதத்தன்மை அவற்றிற்கெல்லாம் பொருத்தமாகத்தான் இருந்தது. தேர்ந்த முறையில் கத்தியைப் பயன்படுத்தத் தெரிந்த குற்றவாளிகளின் தலைமுறையில் கடைசி பிரதிநிதியாகத் திகழ்ந்தான் அஸிவேடோ. ஆனால் அவனுக்கு ரிவால்வாரைப் பயன்படுத்தத் தெரியாது). சுவரின் மீது சாக்கட்டியால் கிறுக்கப்பட்டிருந்த சொற்கள் பின்வருமாறு :
பெயரின்இரண்டாவதுஎழுத்து உச்சரிக்கப்பட்டுவிட்டது.
மூன்றாவது கொலை பிப்ரவரி மாதம் மூன்றாம் தேதி இரவு நடந்தது. ஒரு மணிக்கு சற்று முன்பாக இன்ஸ்பெக்டர் ட்ரெவரேனசின் அலுவலகத்தில் தொலைபேசி ஒலித்தது. அளப்பரிய ரகசியத் தன்மையுடன் அடித்தொண்டையில் பேசிய மனிதன் தன் பெயர் கின்ஸ்பெர்க்(அல்லது கின்ஸ்பர்க்)என்றும் ஒரு போதுமான அளவு சன்மானத்திற்காக அசிவேடோ மற்றும் யார்மேலின்ஸ்கி ஆகிய இருவரின் இரட்டைத் தியாகங்களைப் பற்றிய தகவல்களைத் தெளிவு படுத்துவதாகவும் கூறினான். விஸில்கள் மற்றும் வண்டி ஹாரன்களின் கலவை ஒலியில் காட்டிக் கொடுப்பவனின் குரல் அமிழ்ந்து போயிற்று. பிறகு தொலைபேசி துண்டிக்கப்பட்டது. அந்த சமயம் பண்டிகைக் களியாட்டக் காலத்தின் உச்சம் என்பதால் ஒரு ஏமாற்று விளையாட்டாக அது இருக்கக் கூடும் சாத்தியத்தையும் தவிர்க்காமல் ட்ரெவிரேனஸ் சோதித்தறிந்து ரூ த தோலான் தெருவில் இருந்த லிவர்பூல் நிலையம் என்ற பெயரிட்ட மாலுமிகளின் தங்கும் விடுதியில் இருந்து தனக்கு அந்த தொலைபேசிச் செய்தி வந்ததென்று தெரிந்து கொண்டார். நீர்முகத்துத் தெருவான அது, மேல் வளைவுகள் கொண்டது. அந்த அழுக்குச் சந்தில் ஒரே சமயத்தில் எதிரெதிரெ மெழுகுப் பொம்மை மியூசியத்தையும், பால் விற்பவனின் கடையையும், விலைமாதர் விடுதியையும் விவிலியப் புத்தகம் விற்பவர்களையும் நம்மால் பார்க்க முடியும். ட்ரெவிரேனஸ் அந்த விடுதியின் உரிமையாளரை தொலைபேசியில் கூப்பிட்டார். அந்த மனிதன் (அவனது பெயர் கறுப்பு ஃபின்னகன்–அவன் சீர்திருந்திய அயர்லாந்துக் குற்றவாளி; இப்போது கௌரவம், மதிப்பு போன்றவற்றால் ஒரேயடியாகக் கவர்ந்திழுக்கப்பட்டிருக்கிறான்.) தொலைபேசியைக் கடைசியாக உபயோகித்தது அவனது விடுதியின் அறை வாசியான கிரிஃபியஸ் என்கிற ஒருவன் என்றும் சில நிமிடங்களுக்கு முன்னர்தான் அவன் தன் நண்பர்களுடன் வெளியில் சென்றான் என்றும் தகவல் தெரிவித்தான். உடனடியாக ட்ரெவிரேனஸ் லிவர்பூல் நிலையத்திற்குக் கிளம்பினார். நிலையத்தின் உரிமையாளர் அவருக்கு கீழ்வரும் கதையை கூறினார்.
எட்டு நாட்களுக்கு முன் கிரிஃபியஸ், மதுவருந்தும் அறைக்கு மேலிருந்த ஒரு சிறிய அறையை வாடகைக்கு எடுத்துக் கொண்டான். கூர்மையான தோற்றக்கூறுகளுடைய அவனுடைய தாடி பனி போன்ற நிறத்தில் இருந்தது. அவனுடைய கறுப்பு நிற உடைகளை சீரற்று அணிந்திருந்தான். வெளிப்படையாகவே அதிகமான ஒரு தொகையை வாடகையாக ஃபின்னகன் கேட்டிருக்கிறான். (அந்த அறையை ஃபின்னகன் எந்த விஷயத்துக்காக பயன்படுத்துகிறான் என்பதை உடனடியாக ட்ரேவரேனஸ் யூகித்துவிட்டார்.) கோரப்பட்ட அந்த தொகையை கிரிஃபியஸ் சிறிதும் தயங்காமல் அந்த இடத்திலேயே செலுத்திவிட்டான். வெளியே செல்லாமலே இருந்த அவன், அறையிலேயே மதிய மற்றும் இரவு உணவைச் சாப்பிட்டான். மதுவருந்தும் பொது அறையில் அவன் முகம் பரிச்சயமே இல்லாதிருந்தது. குறிப்பிட்ட அந்த இரவில், ஃபின்னகனின் அலுவலகத்தில் இருந்த தொலைபேசியைப் பயன்படுத்த கீழிறங்கி வந்திருக்கிறான்.
மூடப்பட்ட கூப்பேவண்டி ஒன்று வாசலில் வந்து நின்றது. வண்டி ஓட்டி, இருக்கையிலிருந்து எழவில்லை. சில வாடிக்கையாளர்கள் அவன் ஒரு கரடியின் முகமூடியை “அணிந்திருந்தான் என்று நினைவு கூர்ந்தனர். இரண்டு வேஷமிட்ட கோணங்கிகள் வண்டியிலிருந்து இறங்கி வந்தனர். அவர்கள் மிகக் குள்ளமான மனிதர்கள். அவர்கள் மிக மோசமான குடி போதையில் இருந்ததை யாரும் கவனிக்கத் தவறவில்லை. தங்கள் ஊதல்களை சத்தமாக ஊதிக்கொண்டு, ஃபின்னகனின் அலுவலகத்திற்குள் திடீரென பிரவேசித்து கிரிஃபியஸின் கழுத்தைச் சுற்றித் தங்கள் கைகளை போட்டுக் கொண்டார்கள். ஆனால் கிரிஃபியஸ் அவர்களை முன்பே அறிந்திருந்த போதிலும் அவர்களுடைய செய்கைக்கு எந்த வித எதிர்வினையும் காட்டவில்லை. சில வார்த்தைகளை எபிரேய மொழியில் மூவரும் பேசிக்கொண்டார்கள்–அவன் தாழ்வான, அடித்தொண்டையிலும், அவர்கள் உச்சஸ்தாயிக் குரல்களிலும். பிறகு மூவரும் படிகளில் ஏறி மாடி அறைக்குச் சென்றார்கள். கால் மணி நேரத்தில் மிகவும் சந்தோஷமாக மூவரும் கீழிறங்கி வந்தனர். அவர்கள் அளவுக்கே குடிபோதையில், கிரிஃபியஸ், இப்போது அந்த வேஷமிட்ட கோணங்கிகள் இருவருக்கு மத்தியில், மிக உயரமானவனாக, போதை உச்சத்தில் தடுமாறி நடந்து வந்தான். (மதுவருந்தும் பொது அறையில் இருந்த பெண்களில் ஒருத்தி அவர்கள் உடையில் காணப்பட்ட சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் சாய்சதுரங்களை நினைவு கூர்ந்தாள்). இரண்டு முறை அவன் தடுக்கி விழுந்தான். கோணங்கிகள் இரண்டு முறையும் அவனைத் தாங்கித் தூக்கிப் பிடித்தனர். அருகிலிருந்த கப்பல் துறைமுகத்திற்காய் கிளம்பிய அம்மூவரும் (அங்கே அப்பகுதி சாய்சதுர வடிவிலான நீர்ப்பகுதிகளை உள்ளடக்கி இருந்தது) வண்டியில் ஏறிக்கொண்டு பார்வையிலிருந்து மறைந்தனர். கோணங்கிகளில் இரண்டாமவன் வண்டியின் முன்னால் ஏறுபலகையில் இருந்தபடி, கடைத்தூண்களில் தொங்கிக்கொண்டிருந்த மார்க்கெட் சிலேட் ஒன்றில் ஆபாசமான வரைபடத் தையும் சில வார்த்தைகளையும் கிறுக்கிச் சென்றான்.
ட்ரெவிரேனஸ் வெளியே எட்டிப்பார்த்தார். ஏறத்தாழ முன் கூறத்தக்க வகையில் அந்த வாக்கியத் தொடர் இவ்வாறிருந்தது:
பெயரின் கடைசி எழுத்து உச்சரிக்கப்பட்டு விட்டது.
பின்னர் அவர் கிரிஃபியஸ்-கின்ஸ்பர்க்கின் சிறிய அறையை சோதனை செய்தார். தரையில் நட்சத்திர அமைப்பில் ரத்தம் சிதறி விட்டிருந்தது; அறை மூலைகளில் ஹங்கேரியன்பிராண்ட் சிகரெட் துண்டுகள் கிடந்தன; துணிகள் வைக்கும் அலமாரியில் 1739 ஆம் வருடப் பதிப்பில் லத்தீனில் எழுதப்பட்ட கங்ன்ள்க்ங்ய் என்பவரின் டட்ண்ப்ர்ப்ர்ஞ்ன்ள் ஐங்க்ஷழ்ஹங்ர் — ஏழ்ஹங்ஸ்ரீன்ள் புத்தகம் இருந்தது. அதில் பல விளக்கக் குறிப்புகள் கையால் எழுதப்பட்டிருந்தன. கோபம் மிகுந்த ஒரு பார்வையை அவற்றின் மீது வீசிய ட்ரெவிரேனஸ் லோன்ராட்டுக்குச் சொல்லி அனுப்பினார். சாத்தியமாக இருக்கக் கூடிய கடத்தல் பற்றி எதிர்மாறான சாட்சிகளை இன்ஸ்பெக்டர் விசாரித்துக் கொண்டிருக்கும் போது, லோன்ராட், தான் அணிந்திருந்த தொப்பியைக் கூடக் கழற்ற அக்கறைப்படாமல், படிக்க ஆரம்பித்தான். அதிகாலை நான்கு மணிக்கு அந்த இடத்தை விட்டுக் கிளம்பினார்கள். வளைந்து வளைந்து சென்ற Rue de Toulon தெருவில் அந்த இரவின் அலங்காரத் தோரணங்களையும், ஜிகினாத் துண்டுகளையும் மிதித்தபடி வெளியே வந்த போது ட்ரெவிரேனஸ் குறிப்பிட்டார்: “இந்த இரவு நிகழ்ச்சிகள் எல்லாம் ஒரு தமாஷாக இருந்தால்?”
எரிக் லோன்ராட், சிரித்தபடி, பக்குவமான நிதானத்துடன் “ஃபிலோலோகஸ் நூலின் முப்பத்து மூன்றாவது ஆய்வுக் கட்டுரையில் அடிக்கோடிடப்பட்டிருந்த ஒரு பகுதியைப் படித்துக் காட்டினான்:
“Dies Judaeorum incipit a solis occasu usque ad soils occasum diei sequentis” இதற்கு அர்த்தம் என்னவென்றால் என்றவன் தொடர்ந்தான்: “யூதர்களின் ஒரு தினம் சாயங்காலத்தில் தொடங்கி அடுத்த நாள் சாயங்காலத்தில் முடிகிறது.”
அதற்கு ட்ரெவிரேனஸ் கிண்டலாகக் கேட்டார்: “அதுதான் இன்றிரவு நீ சேகரித்த மிக மதிப்பு வாய்ந்த ஒரு தடயமா?”
“இல்லை அதை விட மதிப்பு வாய்ந்தது உங்களுடன் தொலைபேசியில் பேசிய போது கின்ஸ்பர்க் பயன்படுத்திய வார்த்தைகளில் ஒன்று”
அந்த மாலை செய்தித்தாள்கள் அந்த வழக்கமான திடீர் காணாமல்போதல்களைப் பற்றிப் பெரிது படுத்தி எழுதின. சென்ற முறை Congress of Hermits கூட்டம் நடைபெற்ற பொழுது இருந்த பாராட்டத்தக்க கட்டுப்பாட்டினையும் இப்போது நடந்த வன்முறைச் செயல்களையும் வித்யாசப் படுத்திக் காட்டியது La Croix de L’Epee என்ற செய்தித்தாள். The Martyr பத்திரிக்கையில் எழுதிய எர்னஸ்ட் பாலாஸ்ட் என்பவர் பொறுத்துக் கொள்ள முடியாத நிதானத்தில் இந்த ரகசியமான மட்டரகமான கொலைகளையும் அவை மூன்று யூதர்களை ஒழித்துக் கட்ட எடுத்துக்கொண்ட மூன்று மாதங்களைப் பற்றியும் விமர்சித்தார். யூதர்களுக்கு எதிரான ஒரு சதித்திட்டம்–பற்றிய குறிப்பினை ஊடுருவித் துருவும் அறிவுஜீவிகள் பலர் இந்த முக்கொலை மர்மத்திற்கு யூத இனம் அழிய வேண்டும் என்ற நோக்கம் தவிர வேறெந்த காரணமும் இல்லை என்று தீர்மானமாகக் கருதினாலும் Judische Zeitung பத்திரிக்கை மறுத்தது. நகரின் தென்பகுதியில் இருந்த தலைசிறந்த துப்பாக்கிக்காரனான சிவப்பு டான்டி ஸ்கார்லாக், நகரில் அவன் இருக்கும் பகுதியில் இந்த மாதிரியான குற்றங்கள் நடக்கவே நடக்காதென்று சூளுரைத்து, இன்ஸ்பெக்டர் ஃபிரான்ஸ் ட்ரெவிரேனஸின் மீது தண்டனைக்குரிய அலட்சியத்தன்மை என்ற குற்றத்தையும் சாட்டினான்.
மார்ச் 1ஆம் தேதி இரவு, இன்ஸ்பெக்டருக்கு ஒரு பெரிய முத்திரையிடப்பட்ட கண்ணைக் கவரும் உறை வந்து சேர்ந்தது. அதைத் திறந்து பார்த்தபோது அதிலிருந்த கடிதத்தை யாரோ ஒரு ‘பாருக் ஸ்பினோசா’ என்பவன் கையெழுத்திட்டிருந்தான். கூட அந்த நகரத்தின் விளக்கமான் வரைபடம் ஒன்றும் இருந்தது. சுற்றுலாப் பயணிகளுக்கான வழிகாட்டி வரைபடத்திலிருந்து அந்த நகரின் வரைபட அமைப்பு கிழித்தெடுக்கப்பட்டிருந்தது தெளிவாகத் தெரிந்தது. மார்ச் 3ஆம் தேதி, நான்காவதாக ஒரு கொலைக் குற்றம் நடக்கப் போவதில்லை என அந்தக் கடிதம் முன்னறிவித்தது. ஏன் என்றால் மேற்குப் பக்கத்தில் அமைந்த இரும்பு மற்றும் பெயிண்ட் கடை, Rue de Toulon தெருவில் இருந்த விடுதி, மற்றும் Hotel Du Nord ஆகிய இவை மூன்றும் ஒரு சமபக்க மர்மமான முக்கோணத்தின் பண்பட்ட பக்கங்களாக அமைந்துவிட்டன என்று விளக்கம் தரப்பட்டிருந்தது. வரைபடத்தில் தீட்டியிருந்த சிவப்புமை முக்கோணத்தின் மூன்று பக்கங்களும் மிகச்சரியான நீளத்தைக் கொண்டிருந்ததை எடுத்துக்காட்டின. ட்ரெவிரேனஸ் இந்த ஜியோமிதித்தன்மையான வியாக்கியானத்தை ஒரு வித சலிப்புடன் படித்துவிட்டு கடிதத்தையும் வரைபடத்தையும் எரிக் லோன்ராட்டுக்கு அனுப்பி வைத்தான். அவன்தான் இந்த மாதிரியான கிறுக்குத்தனமான கருதுதல்களுக்குப் பொருத்தமானவன். அதில் விவாதத்திற்கே இடமில்லை.
லோன்ராட் அவற்றை ஆராய்ந்தான். மூன்று புள்ளிகளுமே சரிசம தூரத்தில் இருந்தன. கால ஒழுங்கிலும் சீர்தன்மை இருந்தது (டிசம்பர் மூன்று, ஜனவரி மூன்று, பிப்ரவரி மூன்று); இப்போது புவித்தள வெளியிலும் சமச்சீர்தன்மை இருந்தது. திடீரென்று, அந்தப் புதிருக்குத் தீர்வு கண்டு பிடிக்கும் விளிம்பில் தான் இருப்பதாக உணர்ந்தான். ஒரு காம்பஸ் கருவியும் டிவைடரும் அவனது திடீர் உள்உணர்வை முழுமையாக்கின. அவன் புன்முறுவல் செய்து, டெட்ராகிரமட்டான் என்ற சொல்லை (அவன் சமீபகாலத்தில் சேகரித்துக் கொண்டது) உச்சரித்தான். பிறகு இன்ஸ்பெக்டரை தொலைபேசியில் அழைத்தான்.
“நீங்கள் நேற்றிரவு அனுப்பி வைத்த சமபக்க முக்கோணத்திற்கு நன்றி” என்றான். “அது மர்மத்தைக் விடுவிக்க எனக்கு உதவியது. நாளை, வெள்ளிக்கிழமை, கொலைகாரர்கள் பத்திரமாக சிறையில் இருப்பார்கள். நாம் அதை நிச்சயமாக நம்பலாம்”
“அப்படியானால் அவர்கள் நான்காவது குற்றத்திற்கு திட்டமிட வில்லையா?”
“மிகச்சரியாக அவர்கள் நான்காவது குற்றத்திற்குத் திட்டமிடுவதால்தான் நம்மால் எளிதில் ஓய்வு கொள்ளமுடியும் என்று என்னால் திட்டவட்டமாகக் கூற முடிகிறது”.
லோன்ராட் தொலைபேசியை வைத்தான். ஒரு மணி நேரம் கழித்து யாருமற்ற திரிஸ்லா ராய் பங்களாவை நோக்கி தென்னக ரயில்வேயின் ரயில்பெட்டிகளில் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தான் அவன். நமது கதை நகரின் தென்புறமாக, தோல் பதனிடும் தொழிற் சாலைகளின் கழிவுகளாலும் சாக்கடைகளாலும் அசுத்தமான ஒரு இருண்ட, சேறு கலந்த ஆறு ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றின் எதிர்ப்பக்கக் கரையில் படுமோசமான அரசியல் பிரமுகன் ஒருவனின் ஆதரவினால் துப்பாக்கிக் கேடிகள் சுபிட்சமாக இருந்து வரும் ஒரு தொழிற்பேட்டை இருந்தது. லோன்ராட் தனக்குள் சிரித்துக் கொண்டான்.
துப்பாக்கியைக் கையாள்வதில் எல்லாரையும் விட அதிகம் பெயர்பெற்றவனான சிவப்பு ஸ்கார்லாக், லோன்ராட்டின் இந்த திடீர்ப் பயணத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு எதை வேண்டுமானாலும் கொடுத்திருப்பான். அஸிவேடோ ஸ்கார்லாக்கின் அடியாளாக இருந்தவன். நான்காவது பலி ஆளாக ஸ்கார்லாக்கே இருக்கக் கூடும் என்ற தூரத்து சாத்தியத்தை லோன்ராட் எண்ணிப் பார்த்தான். பிறகு அதை ஒதுக்கி விட்டான். ஏறக்குறைய அவன் புதிரினை முழுமையாக விடுவித்து விட்டான். அந்த வெறும் சந்தர்ப்பங்கள், யதார்த்தம் (பெயர்கள், கைது செய்தல்கள், முகங்கள், சட்ட மற்றும் குற்றவியல் ரீதியான செயல்முறைகள்) போன்றவை அவனுக்கு இப்போது ஈர்ப்பளிக்கவில்லை. மூன்று மாத அலுவலக ஃபைல் வேலைகளுக்கு பிறகு, நத்தை அளவுக்கு நடைபெற்ற ஆய்வுகளுக்குப் பின் அவன் எங்காவது ஓய்வாகச் செல்ல விரும்பினான். யார் அனுப்பியது என்று தெரியாமல் வந்து சேர்ந்த முக்கோணத்திலும், ஒரு தூசு படிந்த கிரேக்கச் சொல்லிலும் அந்தக் கொலைக்குற்றங்களுக்கான தீர்வு இருந்தது என்று ஆழ்ந்து யோசித்தான். மர்மம் இப்போது படிகத்தைப் போல தெள்ளத் தெளிவாகிவிட்டது. ஏறத்தாழ நூறுநாட்களை இதில் செலவழித்து விட்டதற்காக வெட்கப்பட்டான்.
யாருமற்ற அமைதியான ரயில் நிலையமொன்றில் ரயில் நின்றது. லோன்ராட் இறங்கிக் கொண்டான். விடியற்காலையைப் போலவே வெறுமையாக இருந்த பகல் நேரங்களில் அந்தப் பகல் வேளையும் ஒன்றாக இருந்தது. இருளடைந்து புல் நிறைந்த பகுதிகளின் காற்று ஈரம் மிகுந்தும், குளிர்ந்தும் இருந்தது. வயல்களுக்கு குறுக்காகச் செல்ல ஆரம்பித்தான் லோன்ராட். அவன் ஒரு நாயையும், வெளிப்புறச் சுவர் மறைப்பொன்றில் இருந்த காரினையும், தொடுவானத் தையும், தெளிவற்ற சாக்கடையிலிருந்து நீர் பருகிக் கொண்டிருந்த ஒரு வெள்ளை நிறக் குதிரையையும் பார்த்தான். சுற்றிலுமிருந்த யூகாலிப்டஸ் மரங்களின் உயரத்தை எட்டுவது போல் நெடுக மேலெழும்பி இருந்த திரிஸ் லா ராய் பங்களாவின் நீள்சதுர அழுக்கான திறந்த வெளி மேல்மாடியை அவன் பார்த்தபோது இரவு கவியத்தொடங்கி விட்டிருந்தது. பெயரை ஆவலுடன் தேடிக் கொண்டிருப்பவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் அற்புத விநாடியிலிருந்து அவனை இன்னும் ஒரு பகலும் ஒரு இரவும் அல்லது அதற்கும் குறைவான நேரமே (கிழக்கில் ஒரு புராதன ஒளியும் மேற்கில் இன்னொன்றும்) பிரித்து வைத்திருக்கிறது என்று எண்ணிக் கொண்டான் அவன்.
அந்த பங்களாவின் சீரற்ற சுற்றளவினை ஒரு துருப்பிடித்த இரும்பு வேலி வரையறுத்திருந்தது. பிரதான வாசல்கேட் சாத்தியிருந்தது. உள்ளே நுழைவதற்கான சாத்தியம் பற்றிய நம்பிக்கை அதிகம் இல்லாமல் லோன்ராட் கட்டடத்தைச் சுற்றி வந்தான். சாத்தப்பட்ட கேட்டினருகே மீண்டும் வந்து, இரும்புக் கம்பிக்கிடையில் ஏறத்தாழ இயந்திரத்தனமாகத் துழாவிய போது அதன் தாழ்ப்பாளைக் கண்டுபிடித்தான். துருப்பிடித்த இரும்பின் கீச்சொலி அவனை ஆச்சரியப் படுத்தியது. ஒரு வித கடினமான பணிவுடன், கேட் முழுமையாகத் திறந்து கொண்டது.
விழுந்த இலைகளின் அடுக்கடுக்கான குழப்பமான தலைமுறைகளை மிதித்த வண்ணம் யூக்காலிப்டஸ் மரங்களுக்கிடையில் லோன்ராட் முன்னேறி நடந்தான். கொஞ்சம் நெருங்கிப் பார்க்கும்போது அந்த பங்களா ஏராளமான அர்த்தமற்ற சீர்தன்மைகளின் சிதைவுகளாகவும் ஏறத்தாழ பைத்தியக்காரத்தனமான இரட்டிப்புகளின் இருப்பிடமாகத் தெரிந்தது. ஒரு இருண்ட மாடப்பிறையில் இருந்த டயானா வேறொரு மாடப்பிறையில் இருந்ததை ஒத்திருந்தது. ஒரு மேல் மாடம் மற்றொரு மேல்மாடத்தினைப் பிரதிபலித்தது. வெளியிலிருந்து இரண்டு படிக்கட்டுகள் ஒவ்வொரு இறங்கு தரையிலும் சந்தித்துக் கொண்டன. இரட்டை முகம் கொண்ட ஹெர்மிஸ் சிலை பூதாகரமான நிழலை வீசியது. தரையைச் சுற்றி வழி கண்டுபிடித்த மாதிரி வீட்டையும் சுற்றி வழி தேடினான். ஒவ்வொரு சிறு விவரத்தினையும் நுணுகிப் பார்த்தான். மாடித் தரைமட்டத்தினை ஒட்டி ஒரு குறுகலான திறப்புவழி இருப்பதைக் கவனித்தான்.
அதைத் தள்ளித் திறந்தான். சில பளிங்குப் படிகள் ஒரு நிலவறைக்குக் கீழே இட்டுச் சென்றன. இதற்குள்ளாக அதைக் கட்டிய கட்டிடக் கலைஞனின் இஷ்ட கோணங்களை முன்னோக்கிவிட முடிந்த லோன்ராட் அதற்கு எதிர்த்த சுவரிலும் இதை ஒத்த படிக்கட்டுகள் இருக்கும் என்பதை யூகித்தான். அதே மாதிரி இருக்கவும் செய்தது. அவற்றில் ஏறி, கைகளை உயர்த்தி ஒரு ரகசியத் திறப்பு கதவைத் திறந்தான்.
வெளிச்சத்தின் படிவு ஒன்று அவனை ஒரு ஜன்னலுக்கு இட்டுச் சென்றது. அதைத் திறந்தான். பராமரிப்பு இல்லாதிருந்த தோட்டத்தில் அமைந்த செயற்கை நீர் ஊற்றுக்களை வட்டவடிவமான மஞ்சள் நிற நிலா கோடிட்டுக் காட்டியது. தூசிபடிந்த படிக்கட்டு வழிகளில் ஏறி வட்ட வடிவமான பின்னறைகளைச் சேர்ந்தான். லோன்ராட் வீட்டைத் துருவி ஆராய்ந்தான். சிறிய முன்னறைகள், காத்திருப்பு அறைகள், விருந்தோம்பலறைகள் வழியாக அவன் முற்றங்களை ஒத்த பகுதிக்குச் சென்றான். சென்ற முற்றத்திற்கே மீண்டும் மீண்டும் செல்ல வேண்டி வந்தது. தூசி படிந்த படிக்கட்டுவழிகளில் ஏறி வட்டவடிவமான பின்னறைகளைச் சென்றடைந்தான். அங்கே அவன் உரு முடிவற்ற எண்ணிக்கையில் எதிரெதிர் அமைக்கப்பட்ட நிலைக் கண்ணாடிகளால் பிரதி பலிக்கப்பட்ட உரு பெருக்குமானம் கண்டான். அவன் மூடித்திறந்த, எட்டிப் பார்த்த ஜன்னல்கள் நிர்க்கதியாக விடப்பட்ட தோட்டத்தினை வேறுபட்ட உயரங்களில் இருந்தும், வேறுபட்ட கோணங்களில் இருந்தும் காட்டுவதாக அமைந்திருந்தது. அதில் அவன்சலிப்படைந்தான். அறைகளின் உட்புறம் மரச்சாமான்களின் துண்டங்கள், புழுதி மண்டிய மஞ்சள் காகிதத்தில் சுற்றப் பட்டிருப்பதையும், பளிங்குச் சரவிளக்குகள் மென்துகிலால் சுற்றப்பட்டிருப்பதையுமே கண்டு சலிப்படைந்தான். ஒரு படுக்கையறை அவன் கவனத்தைக் கவர்ந்தது. அதில் ஒரு பீங்கான் பூச்சாடியில் ஒரே ஒரு பூ இருந்தது. ஒரு தொடுதலிலேயே அதன் யுகாந்திர இதழ்கள் தூசியாகப் பொடிந்தன. மூன்றாவது மாடியில், கடைசி தளத்தில், வீடு முடிவற்றும் வளர்கின்ற மாதிரியும் தோன்றியது. இந்த வீடு அத்தனைப் பெரியதல்ல என்று நினைத்தான். இந்தக் குறைவான வெளிச்சம், ஒரே தன்மைகள், நிலைக்கண்ணாடிகள், அந்தப் பல ஆண்டுகள், என் அறிமுக மின்மை, என் தனிமை எல்லாமாகச் சேர்ந்துதான் இதைப் பெரிதாக்கு கின்றன என நினைத்தான்.
சுழல் படிக்கட்டுகளில் ஏறி ஒரு ஆய்வுப் பால்கனிக்குச் சென்றான். அந்த மாலையின் நிலா ஒளி சாய்சதுர வடிவில் இருந்த கண்ணாடிச் சட்டங்கள் வழியாகப் பிரகாசித்தது. அவை சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் இருந்தன. ஒரு பிரமிக்கத்தக்க மயக்கத்தில் தள்ளக் கூடிய நினைவு கூறல் அவனைத் தாக்கியது.
கட்டையான, குட்டையான இரண்டு மனிதர்கள் அவன் மீது கரடுமுரடாகவும் ஆக்ரோஷமாகவும் பாய்ந்து அவனது ஆயுதத்தைக் கைப்பற்றினர்; உயரமாக இருந்த மற்றொருவன், லோன்ராட்டை அமைதியாக வரவேற்றுச் சொன்னான்: “நீ மிகவும் கருணை உள்ளவன். எங்களுக்கு ஒரு இரவினையும் பகலினையும் மிச்சப்படுத்தி விட்டாய்.”
அவன்தான் சிவப்பு ஸ்கார்லாக். அந்த இருவர் லோன்ராட்டின் இரண்டு மணிக்கட்டுகளையும் சேர்த்துக் கட்டினர். சில வினாடிகளுக்குப் பிறகு லோன்ராட் தன் குரலைத் திரும்பப் பெற்றவனாய்ப் பேசினான் : “ஸ்கார்லாக், நீயும் அந்த ரகசியப் பெயரைத் தேடுகிறாயா?”
எதிலும் பாதிக்கப்படாதவனாக ஸ்கார்லாக் நின்று கொண்டிருந்தான். லோன்ராட்டிடமிருந்து ஆயுதத்தை பறிக்கச் செய்ய ஏற்பட்ட கைகலப்பில் அவன் பங்கேற்கவில்லை. லோன்ராட்டின் ரிவால்வாரை வாங்கிக் கொள்வதற்கும் அவன் கை நீட்டவில்லை. அவன் பேசினான். இந்தப் பிரபஞ்சத்தின் அளவு கொண்ட வெறுப்பினையும், அந்த வெறுப்புக்கு இணையான சோகத்தையும், இறுதி வெற்றியின் சலிப்பினையும் அந்தக் குரலில் லோன்ராட் கேட்க முடிந்தது.
“இல்லை” என்றான் ஸ்கார்லாக். “அதிகம் நித்தியமற்ற, அதிகம் நொய்மையான ஒன்றைத்தான் நான் தேடிக்கொண்டிருக்கிறேன். நான் லோன்ராட்டைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.” மூன்று வருடங்களுக்கு முன்னால் ரூ த தோலான் வீதியில் இருந்த ஒரு சூதாட்டப் புகலிடத்தில் நீயே எனது சகோதரனைக் கைது செய்து ஜெயிலில் தள்ளினாய். துப்பாக்கி சூடுகள் முடியும் முன்னால் என் ஆட்கள் என்னை ஒரு மூடப்பட்ட வண்டியில் ஏற்றினர். ஆனால் என் வயிற்றில் ஒரு போலீஸ்காரனின் துப்பாக்கிக் குண்டு இருந்தது. இந்தக் கைவிடப்பட்ட திருத்தமான பங்களாவில் வலியில் துடித்தபடி ஒன்பது இரவுகள், ஒன்பது பகல்கள் நான் நரகத்தை அனுபவித்தேன். காய்ச்சல் என்னைச் சிதறடித்துக் கொண்டிருந்தது. விடியற்காலைகளையும் சூரியன் மறைதல் களையும் பார்த்துக் கொண்டிருக்கும் வெறுக்கத்தக்க இரட்டை முகம் கொண்ட ஜேனஸ் கடவுளின் உருவம் எனது உறக்கத்தையும், விழிப்புகளையும் பயத்தாலும் பீதியாலும் நிறைத்தது. என் உடலை நான் வெறுக்கத் தொடங்கினேன். இரண்டு கண்கள், இரண்டு கைகள், இரண்டு நுரையீரல்கள் ஆகியவை இரட்டைமுகங்கள்ளு அளவுக்கே பூதாகரமாகத் தோன்றின. என்னை யேசுவின் மீது நம்பிக்கை கொள்ள வைக்க முயற்சி செய்த அயர்லாந்துக்காரன் கோயிமி’லிருந்து ஒரு விஷயத்தை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான். எல்லா சாலைகளுமே ரோம் நகரை நோக்கியே செல்கின்றன. இரவில் என் காய்ச்சல் அந்த உருவகத்தில் திளைத்தது. இந்த உலகம் ஒரு புதிர்ச்சிக்கல் என்றும் இதிலிருந்து தப்பிப்பது சாத்தியமற்றது என்றும் உணர்ந்தேன். ஏனென்றால் வடக்கு திசை நோக்கியோ தெற்கு திசை நோக்கியோ செல்வதாகத் தோன்றினாலும் எல்லா சாலைகளும் நிஜமாக ரோம் நகரையே நோக்கிச் சென்று கொண்டிருந்திருக்கின்றன. அதே சமயம் அந்த இடம் என் சகோதரன் செத்துக் கொண்டிருந்த சதுர ஜெயில் அறையாகவும் இந்த பங்களாவாகவும் இருந்தது. என் சகோதரனை ஜெயிலுக்கு அனுப்பிய மனிதனைச் சுற்றி ஒரு புதிர்ச்சிக்கலை பின்னுவது என அந்த இரவுகளில் இரட்டை முகங்களைக் கொண்டு பார்க்கும் கடவுளையும், பிற நிலைக்கண்ணாடிகள் மற்றும் காய்ச்சல்களின் கடவுள்களையும் முன் நிறுத்தி சூளுரைத்தேன். நல்லது. அதை நான் பின்னிவிட்டேன். அது இப்போது உறுதியாக இறுகிவிட்டது. ஒரு இறந்து போன யூத அறிஞனையும், ஒரு காம்பஸ் கருவியையும், பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு இனத்தையும், ஒரு கிரேக்க வார்த்தையையும், ஒரு நீண்ட கத்தியையும், ஒரு பெயிண்ட் கடையின் சுவரின் மீதிருந்த சாய்சதுர அமைப்புகளையும் அதற்கான ஆகு பொருள்களாக்கினேன்.”
லோன்ராட் இப்போது நாற்காலியில் இருந்தான். அவனருகில் அந்த குட்டையான மனிதர் இருவரும் இருந்தனர்.
“தொடர்ச்சியின் முதல் சொல் மிகவும் சந்தர்ப்பவசமாகவே எனக்குக் கிடைத்தது” ஸ்கார்லாக் சொல்லிக்கொண்டு போனான். “என் கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து–அவர்களில் டேனியல் அஸிவேடோவும் ஒருவன்– நால்வர்தலைவரின் ரத்தினக் கற்களைக் திருடும் திட்டத்தினை முன்பு தீட்டியிருந்தேன். அஸிவேடோ எங்களைக் காட்டிக் கொடுத்து விட்டான். அவனுக்கு முன்பணமாக நாங்கள் கொடுத்ததை வைத்துக் குடித்துவிட்டு ஒரு நாள் முன்னதாகவே அதிகாலை இரண்டு மணிக்கு ஹோட்டலின் பிரம்மாண்டமான குழப்பத்தில் யார்மோலின்ஸ்கியின் அறைக்குள் தவறுதலாக நுழைந்தான். அந்த யூத அறிஞர் தூக்கம் வராமல் போகவே ஏதாவது எழுதுவதென்று தீர்மானித்து எழுதத் தொடங்கியிருந்தார். சாத்தியங்கள் எல்லாவற்றிலும் கடவுளின் பெயரைப்பற்றி குறிப்புகள் தயாரிக்கவோ, கட்டுரை எழுதவோ ஆரம்பித்து பெயரின் முதல் எழுத்து உச்சரிக்கப் பட்டுவிட்டது என்ற வார்த்தைகளை டைப் செய்திருந்தார். அஸிவேடோ அவரை கத்தக் கூடாது அசையக் கூடாது என்று எச்சரித்தான். ஹோட்டலில் வேலை செய்யக் கூடிய எல்லா அலுவலர்களையும் எழுப்பி விட்டிருக்கக் கூடிய அழைப்பு மணியினை நோக்கி அவர் கை நீண்டது. தனது கத்தியால் அவரை அஸிவேடோ ஒரே குத்தில் சாய்த்தான். அது அவன் அறியாமலே செய்த எதிர்வினைதான். “ஐம்பது வருட வன்முறையானது, மிக சுலபமானதும், உறுதியானதுமான செயல், கொல்வதுதான் என்று அவனுக்குக் கற்றுத் தந்திருக்கிறது. . .பத்துநாட்கள் கழித்து, Judische Zeitung பத்திரிகையின் மூலமாக யார்மோ லின்ஸ்கியின் சாவுக்கான திறவுகோலினை, அவர் எழுதிய புத்தகங்களில் இருந்து நீ தேடிக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்தேன். நான் அவர் எழுதிய History of the Hasidic Sect நூலை படித்தேன். கடவுளின் பெயரை உச்சரிப்பதில் இருந்த புனித பயமானது,பெயர் ரகசியமான தென்றும் சர்வவல்லமை உடையதான கருத்து உருவாகக் காரணமாயிருந்தது என்றும் தெரிந்து கொண்டேன். Hasidim-ஐச் சேர்ந்த சிலர் அந்த ரகசியப் பெயரினைத் தேடிக் கொண்டிருப்பது மட்டுமின்றி நரபலி கொடுக்கும் அளவுக்கும் சென்றிருக்கின்றனர் என்பதை நான் தெரிந்து கொண்டேன். Hasidim- சேர்ந்தவர்கள் யூத அறிஞரை பலி கொடுத்துவிட்டார்கள் என நீ யூகிப்பாய் என்று நான் உணர்ந்தவுடன் அந்த யூகத்தினை நியாயப்படுத்துவதற்கு என்னாலான எல்லா வற்றையும் செய்தேன். யார்மோலின்ஸ்கி டிசம்பர் மூன்றாம் தேதி இரவு இறந்தார். இரண்டாவது பலிகொடுப்பதற்கு ஜனவரி மூன்றாம் தேதியைத் தேர்ந்தெடுத்தேன். அந்த ரபி வடக்குப் பக்கத்தில் இறந்திருந்தார்; இரண்டாவது பலிகொடுப்பதற்கு மேற்குப் பக்கத்தில் எங்களுக்கு ஒரு இடம் தேவைப்பட்டது. டேனியல் அஸிவேடோதான் எங்களுக்குத் தேவைப்பட்ட பலிஆள். அவன் காட்டிக் கொடுப்பவன், இஷ்டத்திற்கு செயல்படுபவன்; அவனுக்கு சாவு தகுதியானது. அவன் கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் எங்களின் முழுத்திட்டமே அழித்தொழிக்கப் பட்டிருக்கும். ஆட்களில் ஒருவன் அவனைக் கத்தியால் குத்தினான். அவன் பிரேதத்தை முந்தைய கொலையுடன் சம்மந்தப்படுத்த வேண்டி பெயிண்ட் கடைச் சுவரில் இருந்த சாய்சதுரங்களின் மீது நான் கிறுக்கினேன் :
பெயரின் இரண்டாவது எழுத்து உச்சரிக்கப் பட்டுவிட்டது.
ஸ்கார்லாக் தன்னிடம் சிக்கியவனை நேருக்கு நேராகப் பார்த்துவிட்டுத் தொடர்ந்தான். “மூன்றாவது கொலை பிப்ரவரி மூன்றாம் தேதி நடத்தப்பட்டது. ட்ரெவிரேனஸ் யூகித்தது போல அது ஒரு பொய்த் தயாரிப்பு. கிரிஃபியஸ்–கின்ஸ்பெர்க்–கின்ஸ்பர்க் நான்தான். முற்றுப் பெறவே முடியாதது போலத் தோன்றிய ஒரு வாரம் (இந்த பொய் தாடியுடன்) ரு த துலானிலிருந்த தெள்ளுப் பூச்சிகள் நிறைந்த சிறிய அறையில் என் நண்பர்கள் என்னைக் கடத்திச் செல்லும் வரை தங்கினேன். வண்டியின் ஏறுபலகை மீதிருந்து அதில் ஒருவன் தூணில் எழுதினான்: பெயரின் மூன்றாவது எழுத்து உச்சரிக்கப்பட்டுவிட்டது. அந்தச் செய்தியானது கொலைகளின் தொடர்ச்சி மூன்றாக அமைந்ததைச் சொன்னது. அப்படித்தான் பொதுமக்கள் அதைப் புரிந்து கொண்டார்கள். லோன்ராட் என்கிற தர்க்கக்காரனான நீ கொலைகள் நான்கு என்று தீர்வு ஏற்படுத்திக் கொள்ளும்படி நான் மீண்டும் மீண்டும் சில துப்புக்களை வீசினேன். வடக்கில் ஒரு கொலை, மற்றவை கிழக்கிலும் மேற்கிலுமாக இருப்பது தெற்கில் நான்காவது கொலையைக் கோரியது. டெட்ராகிராமட்டான் கடவுளின் பெயர் JHVH- நான்கு எழுத்துக்களால் ஆனது. கோணங்கிகளும், பெயிண்ட் கடையில் இருந்த குறியீடும் நான்கு புள்ளிகளைக் குறித்தன. லுஸ்டெனின் கையேட்டி லிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை நான் அடிக்கோடிட்டேன் .
ஒரு நாளினை யூதர்கள் சூர்யாஸ்தமனத்திலிருந்து சூர்யோதயம் வரைலானது எனக் கருதினார்கள்’ என்பதை அந்தப் பகுதி தெளிவுப்படுத்துகிறது. மரணங்கள் எல்லாம் ஒவ்வொரு மாதத்தின் நான்காம் தேதியில் சம்பவித்தன என்று அதே பகுதி புரியத்தருகிறது. நான்தான் ட்ரெவிரேனசுக்கு அந்த முக்கோணத்தை அனுப்பி வைத்தேன். விடுபடும் புள்ளியை நீயே தந்து கொள்வாய்-முழுமையான சாய்சதுரத்தின் புள்ளியை–அந்தப் புள்ளி, சாவு உனக்கு எங்கே காத்துக் கொண்டிருக்கிறதோ அதை நிச்சயப்படுத்துகிறது என்று தெரிந்தே செய்தேன். எரிக் லோன்ராட் ஆகிய உன்னை திரிஸ்லா ராயின் தனிமைக்கு கவர்ந்து வர எல்லாவற்றையும் திட்டமிட்டேன்”.
ஸ்கார்லாக்கின் பார்வையைத் தவிர்த்தான் லோன்ராட். சிவப்பு, பச்சை, மஞ்சள் நிற சாய்சதுரங்களாக உடைபட்டிருந்த வானத்தையும் மரங்களையும் நோக்கினான். தான் மெல்லிதாக சில்லிட்டுப் போவதை உணர்ந்தான். கூடவே ஒருவித தன்வயமற்ற, அநாமதேயமான சோகத்தையும் உணர்ந்தான். இப்பொழுது இரவாகி விட்டிருந்தது. கீழே அநாதரவான தோட்டத்திலிருந்து ஒரு பறவையின் பயனற்ற கூவல் கேட்டது. லோன்ராட், கடைசி தடவையாக ஒரு முறை சீர்தன்மையோடு, தொடர்ச்சியான இடைவெளியில் நடந்த மரணங்கள் என்ற பிரச்சனை குறித்து யோசித்தான்.
இறுதியாக, “உன்னுடைய புதிர்ச்சிக்கலில் அதிகப்படியான மூன்று வரிகள் இருக்கின்றன” என்றான். ஒற்றை நேர்க்கோடாக அமைந்த ஒரு கிரேக்கப் புதிர்ச்சிக்கலை எனக்குத் தெரியும். அந்த வழியில் பலப்பல தத்துவஞானிகள் தங்களை இழந்திருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது ஒரு சாதாரண துப்பறியும் அதிகாரியும் அப்படியே ஏமாறுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஸ்கார்லாக், வேறொரு ஒரு அவதாரத்தில் என்னை நீ வேட்டையாடும்போது. A யில் ஒரு குற்றத்தைப் புரிவதாக நடி. (அல்லது உண்மையாகவே செய்.) A யிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் B யில் இரண்டாவதையும் பின் A யிலிருந்தும் B யிலிருந்தும் சரிசமமாக நன்நான்கு கிலோமீட்டர் தொலைவில் இரண்டிற்கும் இடையில் இருக்கும்படியான C யில் மூன்றாவது குற்றத்தை நடத்து. அதற்குப் பிறகு A யிலிருந்தும் C யிலிருந்தும் சரிசம தூரத்தில். இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும்படியான D யில் எனக்காகக் காத்திரு. இதோ இப்பொழுது திரிஸ்லா ராயில் என்னைக் கொல்லப் போகிறாயே இதே மாதிரி”.
“அடுத்த முறை நான் உன்னைக் கொல்லும்போது கண்ணுக்குத் தெரியாததும் முடிவற்றதுமான ஒற்றைக் கோடு கொண்ட அந்தப் புதிர்ச்சிக்கலை உனக்குத் தருவேன் என்று உறுதியளிக்கிறேன்” என்று பதிலளித்தான் ஸ்கார்லாக்.
பின்னோக்கி சில அடிகள் தன்னை நகர்த்தினான். பிறகு அவன் கவனமாகத் துப்பாக்கியால் சுட்டான்.
(இந்தக் கதையை Donald W.Yates என்பவரும் மொழிபெயர்த்திருக்கிறார். இங்கே எடுத்துக் கொள்ளப்பட்ட பிரதி அலெஃப் மற்றும் பிற கதைகள் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது. லேபிரின்த்ஸ் தொகுதியிலிருந்து அல்ல.-மொழிபெயர்ப்பாளர்)
தமிழில் பிரம்மராஜன்
Translated by Normon Thomas Di Giovanni..
<




