Brammarajan’s Polyphonic poems

A unique blog about Tamil poetry and Tamil culture, with translations in English

Posts Tagged ‘Articles’

Borges’s Notes on his stories-ஜோர்ஜ் லூயி போர்ஹே – அலெஃப் , வட்டச் சிதிலங்கள், மரணமும் காம்பஸ் கருவியும்- பற்றிய குறிப்புகள்

Posted by brammarajan on November 28, 2008

borges-sribe1

ஜோர்ஜ் லூயி போர்ஹே – அலெஃப் , வட்டச் சிதிலங்கள், மரணமும் காம்பஸ் கருவியும்- பற்றிய குறிப்புகள்

அலெஃப் கதை பற்றிய குறிப்புகள்

ஜோர்ஜ் லூயி போர்ஹே

காலத்திற்கு நித்தியத்துவம் எப்படியோ அப்படித்தான் புவிவெளிக்கு அலெஃப். நித்தியத்துவத்தில் கடந்த, நிகழும், மற்றும் எதிர் காலங்கள் ஒரே சமயத்தில் சேர்ந்திருக்கும். அலெஃபில், வெளி தொடர்பான பிரபஞ்சத்தின் மூலமொத்தத்தையும் ஒரு சின்னஞ்சிறிய ஒரு அங்குலத்திற்கு மேற்படாத விட்டம் கொண்ட ஒளிரும் கோளத்தினில் பார்க்க முடியும். என்னுடைய கதையை எழுதிய போது, நம்ப முடியாப் புனைவுக் கதை வாசகனால் ஏற்றுக் கொள்ளும்படியாக இருக்க வேண்டுமானால் நம்பமுடியாத புனைவுக் கதைகளில் ஒரு சமயத்தில் ஒரேயொரு நம்புவதற்கியலா அம்சம் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்ற வெல்ஸின் கருத்தினை நினைவு கொண்டேன். உதாரணத்திற்கு செவ்வாய்க்கிரகத்து மனிதர்களால் நமது பூமி படையெடுக்கப் படுவது பற்றி ஒரு புத்தகத்தையும், இங்கிலாந்தில் இருக்கக் கூடிய கண்ணுக்குத் தெரியாத ஒரே ஒரு மனிதன் பற்றி ஒரு புத்தகத்தையும் வெல்ஸ் எழுதியிருக்கிற போதிலும் நம் பூமியைக் கைப்பற்ற வரக்கூடிய கண்ணுக்குத் தெரியாத பல ஆயிரம் மனிதர்கள் பற்றி அவர் எழுத முற்படுவதை விவேகமாகத் தவிர்த்தார்.  அலெஃப்பை ஒரு பிரமிப்பூட்டும் பொருள் என்று பாவித்து, என்னால் கற்பனை செய்யக் கூடியதிலேயே மிகவும் கவர்ச்சியற்ற ஒரு பின்ணனியில் அதை வைத்தேன்–போனஸ் அயர்சின் கர்நாடகமான பகுதிகளில் ஒன்றில் இருந்த வெகுசாதாரண வீட்டின் சிறிய நிலவறையில் இருக்கும்படி. அரேபிய இரவுகளின் உலகத்தில் மந்திர விளக்குகள் மற்றும் மோதிரங்கள் முதலியவை கேட்பாரற்றுக் கிடக்கின்றன, அவை பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. நம்முடைய எதிலும் நம்பிக்கை வைக்க முடியாத உலகில், நாம் விநோதமான பொருள்கள் மற்றும் கலவரமூட்டும் விஷயங்களை சுத்தப்படுத்தி சரியாக வைக்க வேண்டும். இங்ஙனமே, அலெஃப் கதையின் இறுதியில் அந்த வீடு இடித்துத் தள்ளப்பட்டு அதனுடன் அந்த ஒளிரும் கோளமும் அழிக்கபட்டாக வேண்டியிருந்தது.

ஒரு சமயம், மேட்ரிட் நகரில், ஒரு பத்திரிகையாளர், “போனஸ் அயர்ஸ் நகரம் நிஜமாகவே ஒரு அலெஃப்பைக் கொண்டிருந்ததா?” என்று என்னிடம் கேட்டார். நான் ஏறத்தாழ சபலத்திற்கு ஆட்பட்டு, “ஆம்” என்று சொல்லிவிட்டேன். ஆனால் நண்பர் ஒருவர் இடையில் புகுந்து அப்படிப்பட்டதொரு பொருள் மட்டும் இருக்குமானால் அது உலகத்திலேயே மிகவும் பிரபலமானதாக மட்டும் இல்லாமல் நமது காலம், வானவியல், கணிதவியல் மற்றும் புவிவெளி ஆகியவை பற்றிய முழுமையான கருதுகோள்களையே புதுப்பித்துவிடக்கூடியதாக இருக்கும் என்று கூறினார். “ஓ” என்றான் பத்திரிகையாளன், “அப்படியானால் அந்த முழு விஷயமுமே உங்கள் கற்பனைதான். நீங்கள் தெருவின் பெயரைக் கொடுத்திருந்ததால் அது உண்மையாக இருக்கும் என்று நினைத்தேன்.”  தெருக்களுக்குப் பெயரிடுவது அப்படி ஒன்றும் பிரமாதமான சாதனை இல்லை என்பதை நான் சொல்லத் துணியவில்லை.

அந்தக் கதையை எழுதுவதில் எனக்கு இருந்த பிரதான பிரச்சனை,  வால்ட்விட்மேன் மிக வெற்றிகரமாக சாதித்திருந்த விஷயத்தில் இருந்தது–முடிவற்ற வஸ்துக்களின் எல்லைக்குட்பட்ட அட்டவணையை தயாரிப்பது. காரியம், வெளிப்படையாகத் தெரிவது போல, அசாத்தியமானது. ஏன் எனில் அப்படிப்பட்ட பெருங்குழப்பமான எண்ணியெடுத்தலினை பாவனை செய்ய மட்டுமே முடியும். மேலும் ஒவ்வொரு வெளிப்படையான தாறுமாறான பொருளும் அதனுடைய அருகாமையில் உள்ளதுடன் ஒரு ரகசிய ஒற்றுமைப் பகிர்வினாலோ அல்லது வேறுபாட்டி னாலோதான் இணைக்கப்பட வேண்டியுள்ளது.

அலெஃப் அதன் வேறுபட்ட அம்சங்களுக்காக வாசகர்களின் பாராட்டினைப் பெற்றிருக்கிறது. நம்புவதற்கரிய விநோதம், கிண்டல், வாழ்க்கைச் சரிதம் தொடர்பானவை, மற்றும் அவலச்சுவை முதலானவை. எவ்வாறாயினும்  செறிவடர்த்திச் சிக்கல்கள் மற்றும் புதிர்வழிசுழல் மீதான நமது இன்றைய வழிபாடு தவறுதானோ என்று சமயங்களில் தோன்றுகிறது எனக்கு. ஒரு சிறுகதையானது அவ்வளவு அதிக சாதனைக் குறிக்கோள் கொண்டதாக இருக்கத்தான் வேண்டுமா என நான் வியக்கிறேன். விமர்சகர்கள் இதற்கு மேலும் போய், பியட்ரிஸ் விட்டர்போவின் கதாபாத்திரத்தில் பியட்ரிஸ் போர்ட்டினாரியின் பாத்திரத்தினையும், டேனரியின் பாத்திரத்தில் தாந்தேவையும், நிலவறையில் இறங்குதலை நரகத்தில் இறங்குவதையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். உள்ளபடியே, நான் இந்த எதிர்பாராத பரிசுகளுக்கு நன்றியுடையவனாக இருக்கிறேன்.

பியட்ரிஸ் விட்டர்போ நிஜமாகவே இருந்தாள். நானும் மிகவும் அதிகமாய், ஆனால் நிறைவேறும் சாத்தியப்பாடு இல்லாமல் அவளைக் காதலித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய கதையை அவளுடைய இறப்பிற்குப் பிறகு எழுதினேன். கார்லோஸ் அர்ஜன்டீனோ டேனரி என் நண்பர், இன்னும் உயிரோடு இருக்கிறார், இன்று வரை இந்தக் கதையில் அவர் இருக்கிறார் என்ற சந்தேகம் கொள்ளாமல். செய்யுள்கள் அவருடைய செய்யுள்களை பரிகாசம் செய்து எழுதப்பட்டவை. ஆகிலும் டேனரியின் பேச்சு மிகைப்படுத்திக் கூறப்படவில்லை. நேர்மையான பதிவாகும் அது. அர்ஜன்டீனிய எழுத்தாளர்களின் அகாதெமி இந்த மாதிரி வகைமாதிரிகளுக்கு வாழ்விடம்.

வட்டச் சிதிலங்கள் பற்றிய குறிப்புகள்

எதுவுமோ அல்லது எவருமோ தனது காரணார்த்திலிருந்தே தோன்றுகிறதான–அதாவது அதன் காரணம் அதுவே–என்கிற அறிவுத்தோற்றவியல் விவாதம், ஸ்பினோசா மற்றும் தத்துவப் பள்ளி சிஷ்யர்கள் கூறுவது போல இருப்பது வார்த்தை விளையாட்டுக்கள் போலவோ அல்லது மொழிக்கு இழைக்கப்பட்ட வன்முறை போலவோ எனக்கு எப்போதுமே தோன்றியிருக்கிறது. என் கருத்தில், ஒரு பேச்சானது ஒரு பேசுபவனையும் ஒரு கனவானது ஒரு கனவு காண்பவனையும் உள்ளுணர்த்துகிறது. இது, வாஸ்தவமாக, ஒரு முடிவற்ற எண்ணிக்கையற்ற பேசுவர்கள், கனவுகாண்பவர்கள் ஆகியோரின் தொடர்ச்சிகளின் கருதுகோளுக்கு இட்டுச் செல்கிறது. இதன் முடிவு, ஒரு முடிவே இல்லாத பின்னடைவுக்கு இட்டுச் செல்கிறது. ஒரு வேளை அதுதான் என் கதையின் வேராக அமைந்திருக்கிறதோ என்னவோ. இயல்பாக நான் அதை எழுதியபோது கதையை இப்படிப்பட்ட அரூபமயமான விஷயங்களுடன் சிந்தித்துப் பார்க்கவில்லை. அதற்குப் பல வருடங்களுக்குப் பிறகு, சதுரங்கம் பற்றி ஒரு ஜோடி சானெட்டுகளை(14 வரி கவிதைகள்) எழுதியபோது நான் மீண்டும் அந்த கருத்தாக்கத்தினை எடுத்துக் கொண்டேன்.  தாங்கள் ஒரு விளையாடுபவனால் வழிகாட்டப்படுகிறோம் என்று சதுரங்கக் காய்களுக்குத் தெரியாது. விளையாடுபவனுக்குத் தெரியாது தான் ஒரு கடவுளால் வழி நடத்தப்படுகிறோம் என்பது. அந்தக் கடவுளுக்குத் தெரியாது வேறு எந்தக் கடவுளர்கள் அவரை வழிநடத்திச் செல்கிறார்கள் என்பது. பல ஆண்டுகள் கழித்து, லபோக்குக்கு வருகை தந்த போது, டெக்சாஸ் பேன் ஹாண்டிலில், வேறு ஒரு கவிதையை எழுதுவதன் மூலம் –கோலம்– வட்டச் சிதிலங்கள் கதையை நான் பிரக்ஞாபூர்வமாக நான் திருப்பி எழுதுகிறேனா என்று என்னிடம் ஒரு பெண் கேட்டாள். இல்லை என்றுதான் பதில் கூறினேன், ஆனால் எனக்குள் இருந்த இந்த எதிர்பார்த்திராத ஒத்த தன்மையைச் சுட்டிக் காட்டியதற்காக நான் அவளுக்கு நன்றி தெரிவித்தேன். உள்ளபடியே, பாலைவனத்தின் விளிம்பு பிரதேசத்திற்கு, நூற்றுக் கணக்கான மைல் தூரம் பயணம் செய்வது, என்னைப் பற்றிய இந்த சிறு தகவலை அடைவதற்கு என்பது என்னை வியப்பில் ஆழ்த்தியது.

வாசகர்கள் வட்டச் சிதிலங்களை என்னுடைய சிறந்த கதை என்று நினைத்திருக்கிறார்கள். இந்தக் கதை தொடர்ந்து முடியும் விளிம்பான நுணுக்கமான எழுத்தினை நான் ஒரு புதிய எழுத்தாளனுக் குரிய பிசகு என்று  நினைப்பதால் அந்தக் கருத்தை நான் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. செய்யப்பட்டுத்தான் ஆக வேண்டுமானால், இந்த மாதிரிக் கதைக்கு இந்த மாதிரியான எழுதுதல்தான் அவசியமாகிறது என்று ஒருவர் சொல்லக் கூடும். அதன் திட்டம் சற்று காலாதீதமாக இருப்பதும், அதன் மங்கலான கீழைநாட்டுப் பின்னணியும் இதற்கு காரணம் தருகின்றன. தலைப்பே கூட பித்தகோரஸ் மற்றும் கீழைநாடுகளின் சுழல்காலம் பற்றித் தெரிவிக்கின்றன.

லூயி கரோலிடமிருந்து இந்தக் கதைக்கான முகப்பு மேற்கோள் எனக்குக் கிடைத்தது. அது அந்தக் கதையின் வித்தாகக் கூட இருக்கலாம். நான் வாழ்க்கையை ஒரு கனவாகப் பார்க்காது இருந்திருப்பேனாயானால்– அந்த வித்து, கோடிக்கணக்கான வாசகர்கள் அறிந்திருந்தது–விதை சாலுக்கு வெளியே விழுந்திருக்கக் கூடும்.

1940இல் நான் வட்டச் சிதிலங்களை எழுதியபோது, அதற்கு முந்தி என்னை நடத்திச் செல்லாத அளவுக்கு நடத்திச் சென்றது அதற்குப் பிறகும் அப்படி நடத்திச் செல்லுதல் நிகழவில்லை. முழுக் கதையுமே ஒரு கனவு, அதை எழுதும்போது, முனிசிபல் நூலகத்தில் என் வேலை, திரைப்படங்களுக்குச் செல்லுதல், நண்பர்களுடன் உணவருந்துதல் போன்ற தினசரிக் காரியங்கள் ஒரு கனவு போலவே தோன்றின. அந்த ஒரு வார காலத்தில் நிஜமாக இருந்தது அந்தக் கதை ஒன்றுதான்.

மரணமும் காம்பஸ் கருவியும் பற்றிய குறிப்புகள்

1923ஆம் ஆண்டிலிருந்து என்னால் ஆன அனைத்தையும் செய்தும் கூட போனஸ் அயர்சின் கவிஞனாக வெற்றிகரமாக ஆக  முடியவில்லை. 1942இல் இந்த நகரத்து இரவு பீதிக்கனவுப் பதிவினை மரணமும் காம்பஸ் கருவியும் சிறுகதையில் பதிவு செய்தபோது,  கடைசியாக என் சொந்த நகரின் போதுமான அளவு அடையாளப்படுத்தக் கூடிய படிமத்தினை உருவாக்க முயன்றிருக்கிறேன் என்று என் நண்பர்கள் சொன்னார்கள். சில இட அமைப்பியல் சார்ந்த விளக்கமூட்டல்கள் ஒழுங்கமைவில் இருக்கக் கூடும். ஹோட்டல் து நார்ட், நிஜமான பிளாசா ஹோட்டலைக் குறிக்கிறது. அதில் இடம் பெறும் கழிமுகம் ‘ரியோ த லா பிளேட்டா’வாகும். இதை லுகோன்ஸ் “பெரும் சிங்க நிறத்திலான நதி” என்று அழைத்திருக்கிறார். இதுவே எடுவர்டோ மேலியா என்பவரால் “இயக்கமற்ற நதி” என்று இன்னும் சிறப்பான முறையில் சொல்லப் பட்டிருக்கிறது. ‘ரூ த தோலோன்’ நிஜத்தில் ‘பேஸியோ கொலோன்’ ஆகும். அதனுடைய ரௌடித்தனத்தைப் பொருத்தவரை இன்று ‘லியான்ரோ ஆலெம்’ என்று அழைக்கப்படும் பழைய ‘பேஸியோ த ஜூலியோவா’கும். அமாண்டா மோலினா வேடியா கண்டுபிடித்த அழகான பெயர்தான் ‘ட்ரிஸ் லா ராய்’. அது ஆன்ட்ரோக் நகரில் இருந்த, தற்போது இடிக்கப்பட்டுவிட்ட ஹோட்டல் லாஸ் டீலியாஸைக் குறிக்கும். (அமாண்டா அவளுடைய படுக்கையறையின் சுவற்றில் ஒரு கற்பனைத்  தீவின் வரைபடத்தைத் தீட்டியிருந்தாள். அவளுடைய வரைபடத்தில் நான் ட்ரிஸ் லா ராய் என்ற பெயரைக் கண்டுபிடித்தேன்.) யதார்த்தம் பற்றிய எல்லாவிதமான சந்தேகத்தையும் தவிர்க்க விரும்பி, பெயர்களின் திரித்தல்களுடன் கதையை ஒரு காஸ்மாபொலிட்டன் பின்னணியில், எந்தவிதமான குறிப்பிட்ட பூகோள அமைப்பிற்கும் அப்பால் அமைத்தேன். பாத்திரங்களின் பெயர்கள் இதை மேலும் நிரூபணம் செய்யும். ட்ரெவிரேனஸ் என்பது ஜெர்மானியப் பெயர், “அஸிவேடோ யூத மற்றும் போர்ச்சுகீசியப் பெயர். “யார்மோலின்ஸ்கி ஒரு போலந்து யூதப் பெயர். ஃபின்னகன் ஐரிஷ் மொழியிலிருந்து வந்தது, “லோன்ராட் ஸ்வீடன் நாட்டுடையது.

காலம் மற்றும் இடம் பற்றிய அமைவுகள் கதை முழுவதிலும் தொடர்ந்து வருவதைக் காண முடியும். ஒரு முக்கோணம் தெரிவிக்கப்பட்டாலும் அதன் தீர்வு நிஜத்தில் சாய்சதுரத்தின் அடிப்படையில் அமைந்திருக்கிறது. வெளிப்படையாக கடத்தல்காரர்கள் போலத் தோற்றமளிப் பவர்களின் கேளிக்கை உடைகளின் மீதிருந்தும், ‘திரிஸ் லா ராய்’ ஜன்னல்களில் இருந்தும், கடவுளின் நான்கு மடக்குப் பெயரான டெட்ராகிராமட்டான் என்பதிலிருந்தும், இந்த சாய்சதுரம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. கதையின் பக்கங்களின் ஊடாக ஒரு சிவப்பின் சரடும் ஓடுகிறது. ரோஜா நிறத்துச் சுவர்களின் மீது வரும் சூரியாஸ்தமனம், அதே காட்சியில் இறந்த மனிதனின் முகத்தில் சிதறியிருக்கிற ரத்தம் இது போன்றவை. துப்பறிபவனின் பெயரிலும், துப்பாக்கிக் காரனின் பெயரிலும் இந்த சிவப்பைப் பார்க்கலாம்.

கொல்லப்படுபவனும் கொல்பவனும் ஆகிய இருவரின் மனமும் ஒரே மாதிரி இயங்குகின்றன, ஒரு வேளை அவர்கள் இருவரும் ஒரே மனிதனாக இருக்கலாம். தன்னுடைய சாவுப் பொறியிலேயே சென்று மாட்டிக் கொள்ளும் அளவுக்கு, லோன்ராட் , நம்ப முடியாதபடிக்கு முட்டாள் கிடையாது. இது ஒரு குறியீட்டு  வழியில் தற்கொலை செய்து கொள்ளும்  மனிதன் ஒருவனைக் குறிக்கிறது. இது அவர்கள் இருவரின் பெயரிலும் உள்ள ஒத்ததன்மைகளை வைத்துத் தெரிவிக்கப்படுகிறது. “லோன்ராட் என்பதன் இறுதி அசை ஜெர்மன் மொழியில் சிவப்பு என்று அர்த்தப்படுகிறது. ரெட் ஸ்கார்லாக் என்பதும் ஜெர்மன் மொழியில் சிவப்பு ஸ்கார்லெட் என்று அர்த்தப்படுகிறது. யூத இறையியலான கப்பாலாவைப் பற்றித் திரும்பத் திரும்பக் குறிப்பிடுவதற்கு மன்னிப்பு கோர வேண்டிய அவசியம் இல்லை. அது வாசகனுக்கும், மிக நுணுக்கமான துப்பறியும் நிபுணனுக்கும் ஒரு தவறான வழித்தடத்தைத் தருகிறது. கதை, முக்கால்வாசிப் பெயர்கள் தெரிவிக்கிறபடி யூதத்தன்மையானது. கப்பாலா  மர்மம் பற்றிய இன்னும் கூடுதலான அறிதலைத் தருகிறது.

முக்கால்வாசிக் கதைகளைப் போலவே மரணமும் காம்பஸ் கருவியும் அதன் பொதுமையான சூழ்நிலையை வைத்தே நிலைக்க வேண்டும் அல்லது வீழ்ச்சி அடைய வேண்டும். அதனுடைய கதைத் திட்டத்தை வைத்து அல்ல. அது இன்றைக்கு மிகவும் கர்நாடகமாகவும்  அதன் காரணத்தினாலேயே ஈர்ப்பில்லாமலும் இருக்கிறது. போனஸ் அயர்சையும் அதன் தெற்குப் புறநகர்ப்பகுதிகளின் பல ஞாபகங்களையும் இந்த முரட்டுத்தனமான கதையில் பதித்திருக்கிறேன்.  மிகவும் மனோரம்மியமானதும் விசாலமானதுமான ஹோட்டல் லா டீசியாஸின் திரிக்கப்பட்ட உச்ச வடிவமே ட்ரிஸ் லா ராய். பலருடைய ஞாபகங்களில் அந்த ஹோட்டல் இன்னும் வாழ்ந்திருக்கிறது. நிஜமான ஹோட்டல் பற்றி ஒரு மிக நீளமான, “ஆன்ட்ரோக் என்று தலைப்பிடப்பட்ட இரங்கல் பாட்டை நான் எழுதியிருக்கிறேன்.

கதையின் கடைசியில் வரும் நேர்க்கோட்டுப் புதிர்ச் Zeno of Eleatic *. இடமிருந்து பெறப்பட்டது

*கிரேக்க தத்துவஞானி (கி.மு.490-430).

குறுக்கீட்டாளர் கதை பற்றி

1965ஆம் ஆண்டின் இலையுதிர்காலத்தின் போது, போனஸ் அயர்சின் புத்தக நுணுக்கரான குஸ்தாவோ ஃபில்லோல் டே அந்த சிறந்த, மகிழ்ச்சியான, சிலருக்கு மாத்திரமே கிடைக்கக் கூடிய ரகசிய பதிப்புகளில் வெளிவரும் வெளிவரும் ஏட்டில் அவர் வெளியிடும் பொருட்டு என்னிடம் ஒரு சிறுகதை வேண்டுமென்று கேட்டார். அந்த சமயத்தில் நான் கிப்ளிங் எழுதிய Plain Tales from the Hills-ஐ நூலை மறுவாசிப்பு செய்து கொண்டிருந்தேன். நான் ஒரு கதையை மனதில் கொண்டிருந்ததாக ஃபிலோலிடம் சொன்னேன். இளம் கிப்ளிங்கின் சுருக்கத்தன்மையும் நேரடியாகக் கதை சொல்லும் தன்மையும் என்னை சபலத்திற்கு உட்படுத்தின. காரணம், நான் எப்போதுமே பன்முகங்கள் கொண்ட அடர்ந்த விவரணைகளையே எழுதியிருக்கிறேன். சில மாதங்கள் கழித்து நான் வேலைக்கு ஆயத்தமானேன், 1966ஆம் ஆண்டின் தொடக்கத்தில் குறுக்கீட்டாளர் கதையை என் அம்மாவிடம் எழுதிக் கொள்ளச் சொன்னேன்.

நான் எந்த சந்தேகமும் கொள்ளாமலேயே, இந்தக் கதையின் குறிப்பு–ஒரு வேளை நான் எழுதியதிலேயே மிகச்சிறந்தது– இருபதுகளின் கடைசியில் எனது நண்பரான டான் நிக்கலஸ் பாரதெரஸ் இடம் நான் யதேச்சையாகப் பேசிக் கொண்டிருந்த உரையாடலில் இருந்து வந்தது– டேங்கோ பாடல்களின் சீரழிவு பற்றி விமர்சனம் செய்து கொண்டிருந்த போது.  செண்ட்டிமென்டலான அடியாட்குழுத்தலைவர்கள் தங்கள் காதலிகளால் வஞ்சிக்கப்பட்டதால் அவை அப்போதுமே உரத்த கழிவிரக்கம் கொண்டிருந்தன. பாரதெரஸ் வறட்சியாகக் குறிப்பிட்டார். நிதானமாக ஐந்து நிமிடங்களுக்கு ஒரு பெண்ணைப் பற்றிச் சிந்திக்கிற எந்த மனிதனும் ஒரு மனிதனே இல்லை, அவன் விநோதமானவன். அத்தகைய மனிதர்கள் மத்தியில் காதல் என்பது சாத்தியமே இல்லாதிருந்தது. அவர்களின் நிஜமான ஆர்வம் நட்பில்தான் என்று எனக்குத் தெரியும். இந்த மாதிரியான சில அரூபமான கருத்தாக்கங்களில் இருந்து எனது கதையை நான் உருவாக்கினேன். எவருமே அதன் தகவல்களைப் பற்றி வாதிக்க முடியாதபடி எழுபது வருடங்களுக்கு முந்திய போனஸ் அயர்சின் தெற்குப் பகுதியில் ஏறத்தாழ ஒரு பெயரற்ற நகரத்தில் இந்தக் கதையை நான் அமைத்தேன். நிஜத்தில் இரண்டு சகோதரர்களைக் கொண்ட இரு பாத்திரங்கள் மாத்திரமே உள்ளன. அவர்களில் பெரியவன் என்ன சொல்கிறான் என்பதைக் கேட்கவே நாம் அனுமதிக்கப்பட்டிருக்கிறோம். அவன்தான் எல்லா முடிவுகளையும், இறுதி முடிவினைக் கூட எடுப்பவன். உள்ளபடி எசகு பிசகான புரிந்து கொள்ளல்களைத் தவிர்க்கும் பொருட்டு சாத்தியத்தின் வகையிலே அவர்கள் இருவரையும் நான் சகோதரர்களாக்கினேன்.

கிறிஸ்டியன் எத்தகைய வார்த்தைகளைச் சொல்ல வேண்டும் என்பது உறுதியில்லாமல் கதையின் இறுதியில் எனக்குத் தடங்கல் ஏற்பட்டுப் போயிற்று. ஆரம்பத்திலிருந்தே, அந்தக் கதையை முற்றிலுமாக வெறுத்த என் தாயார், அந்தக் கட்டத்தில் எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் எனக்குத் தேவைப்பட்ட வார்த்தைகளைத் தந்தார்.

குறுக்கீட்டாளர் கதைதான் என்னுடைய நேரடியாகக் கதைகள் சொல்லும் புதிய முயற்சியில் முதலாவது. இந்தத் தொடக்கத்திலிருந்து பிற கதைகள் எழுதச் சென்றேன். இறுதியாக அவற்றை Doctor Brodie’s Report என்ற தொகுதியாக சேகரித்தேன்.


ரோசென்டோவின் கதை பற்றிய குறிப்புகள்

இந்தக் கதை என்னுடைய மற்றொரு கதையான தெருக்கோடி மனிதன் என்ற கதையின் தொடர்ச்சியாகவும் அதன் முறிப்பானாகவும் நான் எழுதியது. தெருக்கோடி மனிதன் தவறுதலாக ஒரு யதார்த்தக் கதையாகப் படிக்கப் பட்டிருந்தது. ரோசென்டோவின் கதை, ஃபிரான்சிஸ்கோ ரியால் கொலை செய்யப்பட்ட இரவு, உள்ளபடியே நிகழ்ச்சிகள் எவ்வாறு நடந்திருக்கலாம் என்பதைப் பற்றிய வலிந்த யூகித்தலாக அமைகிறது. தெருக்கோடி மனிதனை நான் எழுதியபோது, நான் அந்த சமயத்திலே சுட்டிக் காட்டியபடி, அதன் நாடகத்தனமான பொய்த்தன்மையைப் பற்றி முழுவதும் உணர்ந்திருந்தேன். வருடங்கள் கடந்த பிறகு, எவ்வாறாயினும் அந்தக் கதை நான் தர்மசங்கடம் அடையும்படிக்கு பிரபலமாயிற்று.  மதிப்பு வைத்து மரியாதை செய்யப்பட்ட-  அந்த சரியான முட்டாள் நானில்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்பினேன்.

ஆங்கிலக் கவிஞரான ராபர்ட் ப்ரௌனிங்கை நான் மறுவாசிப்பு செய்து கொண்டிருந்தேன். அவருடை Ring and the Book லிருந்து, ஒரு கதையானது, பல வேறுபட்ட பார்வைத் தளங்களில் இருந்து சொல்லப்பட முடியும் என்று தெரிந்து கொண்டேன். முதல் வடிவத்தின் கோழை போல வெளித்தோற்றத்தில் தெரியும் ரோசென்டோ யூவரஸ் அவன் வழியில் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்று நினைத்தேன். தெருக்கோடி மனிதனில் வறட்டு வீரம் பேசிக் கொண்டிருக்கும் மனிதனிலிருந்து நமக்கு, ரொமாண்டிக் அர்த்தங்கெட்டதன்மையிலிருந்தும், சிறுபிள்ளைத்தனமாக கத்திச் சண்டையிடுவதில் கிடைத்த தற்பெருமையிலிருந்தும் வெளிவந்து, இறுதியாக மனிதத்தன்மையையும் ஸ்வாதீனத்தையும் அடையும் ஒரு விதமான, பெர்னாட் ஷா தன்மையான கதாபாத்திரம் நமக்குக் கிடைக்கிறது. முதல் தரம் சொல்லிய போது, ஃபிரான்சிஸ்கோ ரியால் நெஞ்சில் குத்துப் பட்டு இறந்து போகிறான் என்று எழுதினேன். வருந்தற்குரிய விதத்திலும், நிஜமாகவும், அவன் லா லூஜனேராவுடன் ஒரு சாக்கடையில் புணர்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது முதுகில் குத்தப்பட்டு இறந்தான்.

கதை நடந்த காலத்தில், அடியாட்களுக்கும் கொலைகாரர்களுக்கும் அதிகாரிகள் உதவி செய்தார்கள். குற்றம் புரிய உதவி செய்தார்கள் அதிகாரிகள். காரணம், அதில் முக்கால்வாசிப் பேர் முன்னணி அரசியல்வாதிகளின் அதிகாரபூர்வமான மெய்க்காப்பாளர்களாக இருந்ததுதான். தேர்தல்கள் நடக்கும் சமயத்தில் ஓட்டுப் போட வருபவர்களை பயமுறுத்தி அனுப்புவதற்கும் அவர்கள் பயன்படுத்தப் பட்டார்கள். போலீசின் பக்கபலம் இருப்பதால் சட்டத்தில் சிக்காமல் செயல்பட முடியும் என்று அவர்கள் நன்றாகவே அறிந்திருந்தார்கள்.  எப்போதுமே அவர்கள் வெளியேற்றப்பட்டவர்கள் கிடையாது. எளிமைப்படுத்திச் சொல்வதானால் வலுவான கரம் கொண்ட மனிதர்கள் அவர்கள். ஆன்ட்ரோக் நகரில் பாதிரியார் ஒருவர் கூறிய சம்பவத்தை நினைவு கூர்கிறேன். ஒரு தேர்தல் சமயத்தில் பாதிரியார் வாக்குச் சாவடிக்குச் சென்றபோது, அங்கிருந்த உள்ளுர் ரௌடியால் இப்படிச் சொல்லப்பட்டார்: “ஃபாதர். நீங்கள் ஏற்கனவே உங்கள் ‘ஓட்டைப்’ போட்டாகிவிட்டது.”

கதையில் கறுப்பு உடையணிந்து பாரெதஸூக்கான கடிதத்தினை எழுதும் அந்த இளைஞன் எவரிஸ்டோ காரிகோ என்ற நிஜக்கவிஞன்.



Posted in translated short story | Tagged: , , | Comments Off

மொழிபெயர்ப்பாளர்களும் சமூக மறதியும் :Translators and Social Amnesia-Remebering M.S.Ramaswamy

Posted by brammarajan on November 25, 2008

m.s.ramaswamy_hermin_abramovitchமொழிபெயர்ப்பாளர்களும் சமூக மறதியும் :Translators and Social Amnesia-Remebering M.S.Ramaswamy

எம்.எஸ்.ராமசாமியை முன் வைத்து சில சிந்தனைகள்.

பிரம்மராஜன்

எம்.எஸ்.ராமசாமி தமிழ் இலக்கியத்திற்குத் செய்திருக்கிற சேவையை யாரும் எடுத்துச் சொன்னால் ஒழிய பொது வாசகர்கள் அறிவது சாத்தியமில்லாதிருக்கிறது. தமிழ்க்கலாச்சாரத்தின் மீது கிஞ்சித்தும் அக்கறையற்ற அரசு நிறுவனங்கள் மற்றும் மொழிபெயர்ப்புத்துறைகளால் சாதிக்க முடியாத காரியங்களை தனி ஆளாக இருந்து சாதித்தவர் எம்.எஸ்.ஆர். எவ்வளவுதான் சிறப்பான எழுத்தாக இருந்தபோதிலும் இந்தியாவின் பிறமொழியில் எழுதுபவர்களுக்கும், பிறமொழி விமர்சக-வாசகர்களுக்கும் தெரிய வேண்டுமானல் தமிழில் எழுதுபவர்களின் எழுத்துக்கள் ஆங்கிலத்திலோ அல்லது ஹிந்தி மொழியிலோ மொழியாக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். சிருஷ்டிபரமான கலைஞர்களுக்குத் தர வேண்டிய மரியாதையை எல்லாம் தமிழ்ச்சூழலில் சினிமாக்காரர்களும் அரசியல்காரர்களுமே பெற்றுக்கொண்டிருப்பதை அறியாமலே தமிழ்ச் சமூகம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. பணம், அந்தஸ்து போன்றவற்றில் இல்லாவிட்டாலும் கூட,  தீவிரமான தமிழ் எழுத்தாளன் அவன் எழுத்துக் காலத்திற்குள்ளாகவாவது அங்கீகாரம் கூடப் பெறுவதில்லை. தீவிர கலைஞர்களை (நான் உண்மையிலும் உண்மையாக சிருஷ்டிக் கலைஞர்களை மாத்திரமே குறிப்பிடுகின்றேன்.) புறக்கணிக்கும் சமூகம் வரலாற்றுச் சீரழிவை நோக்கித்தான் செல்லும். தமிழ்ச்சூழலில், நிலைமை எழுத்தாளனுக்கே இவ்வாறிருக்க, மொழிபெயர்ப்பாளனுக்கு என்ன மதிப்பிருக்கிறது என்று வாசகன் யோசித்துப் பார்க்க வேண்டும். பொதுவாக, மொழிபெயர்ப்பாளனின் வேலையை, நன்றி கிட்டாத வேலை (Thankless Job)என்றே கூறுவார்கள். தாஸ்தாயெவ்ஸ்கியை மொழிபெயர்த்த பெண் மொழிபெயர்ப்பாளரைப் பற்றிக் குறிப்பிடும் போது சிலர் “She translates with a tired hand” என்று குறிப்பிட்டதுண்டு. ஆனால் தாஸ்தாயெவ்ஸ்கி யினுடையதைப் போல பெரிய தொகுதிகளை மொழிபெயர்த்தவர் களுக்குத்தான் அதன் சிரமங்கள் தெரியும் வாய்ப்பிருக்கிறது.

எம்.எஸ்.ராமசாமி ( என்.எஸ்.ராமசாமி என்ற பெயரில் இந்தியன் எக்ஸ்பிரசில் எழுதியவரோடு இவரைக் குழப்பிக் கொள்ளக்கூடாது) தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்திருக்கிற நூல்களின் பட்டியல்:

(1) Modern Tamil Poetry (1988),Writers’ Workshop, Calcutta

(2) Tamil Poetry Now (1995),Writers’ Workshop, Calcutta

(3) Modern Tamil Short Stories(1991) [Vol.1] Writers Workshop, Calcutta

(4) Modern Tamil Short Stories (1991) [Vol.2]  Writers Workshop, Calcutta.

இது தவிரவும், நீலபத்மநாபனின் சிறுகதைகளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். தலைப்பு நினைவில் இல்லை.

கல்கியில் தொடங்கி, பாவண்ணன் வரை சிறுகதைகளையும் சி.சுப்ரமண்யபாரதியில் தொடங்கி கோலாகல ஸ்ரீனிவாஸ் (கவிதைகள் தொகுக்கப்பட்ட சமயம் கோலாகல ஸ்ரீனிவாஸ்தான் மிக இளையவர்)வரை கவிதைகளையும் மொழி பெயர்த்திருக்கிறார். சிறுகதைகளை தொகுத்து வெளியிட அவர் அணுகிய வெளியீட்டாளர்கள் நிறைய பேர். சில பதிப்பாளர்கள் கையெழுத்துப் பிரதியை வாங்கி வைத்துக்கொண்டு 2 வருங்டங்கள் கழித்து முடியாது என்று தெரிவித் திருக்கிறார்கள். இறுதியில் கல்கத்தாவைச் சேர்ந்த திரு.பி.லால் என்ற பதிப்பாளர் இவற்றைப் புத்தகமாக ஆக்க முன் வந்தார்.

எம். எஸ். ராமசாமி மூலப்பிரதிக்கு அதிக முக்கியத்துவம் தருபவர். இதனால் சில சமயங்களில் கவிதையில் சில நெகிழ்வுகள் குறைவுபடுகின்றன என்று அவரிடம் குறிப்பிட்டிருக்கிறேன். நல்ல திருத்தங்கள் எவரிடமிருந்து வந்தாலும் மனந்திறந்து ஏற்றுக் கொள்வார். முடிந்தவரை எழுதிய கவிஞரிடம் அவருடைய ஆங்கில மொழிபெயர்ப்பை அனுப்பி அபிப்ராயம் கேட்பார்.  மூலக்கவிஞர் கூறும் திருத்தங்களை ஏற்று இறுதிப்பிரதியை வடிவமைப்பார். எம்.எஸ்.ராமசாமியால் மொழிபெயர்க்கப்பட்டு தொகுக்கப்படாது போன கவிஞர்களில் முக்கியமானவர் பிரமிள். விடுபட்ட முக்கிய சிறுகதை எழுத்தாளர்களில் சாரு நிவேதிதா குறிப்பிடத்தக்கவர். அடுத்து கோணங்கி. நேரில் கேட்ட பொழுது “தயவு செய்து ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புக்கு ஏற்ற ஒரு கதையை நீங்களே(கோணங்கியின் கதைகளிலிருந்து) தேர்ந்தெடுத்துத் தாருங்கள்” என்றார். அதற்குப் பிறகு நான் படித்துப்பார்த்த போதுதான் அவருடைய சிரமம் புரிந்தது. அம்பையையும் அவர் மொழிபெயர்க்கவில்லை. பிரபலமான எழுத்தாளர்களை தீவிரமான எழுத்தாளர்களுடன் சேர்க்கக் கூடாது என்ற என் ஆட்சேபணையை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. ராஜாஜியின் சிறுகதை ஒன்றையும் அவர் மொழிபெயர்த்துள்ளார். அவரைப் பொறுத்தவரை எந்த ஒரு கதை அல்லது கவிதை அவரது மென் உணர்வுகளைப் பாதிக்கிறதோ அதை அவர் தேர்ந்தெடுத்து விடுவார். மேலும் ஒரு படைப்பைத் தமிழில் படிக்கும்போதே அதற்கிணையான ஆங்கில வாக்கியமும் அவரது மனதில் உருவாகிக் கொண்டிருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.

ஏ.கே.ராமனுஜன் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே கூட அமெரிக்கா போன்ற இடத்திலிருந்து கொண்டு மொழிபெயர்க்கும் போது ஏற்படும் தவறான புரிந்து கொள்ளல்களைச் சுட்டிக் காட்டியிருக்கிறார். பாரதியின் ஆங்கில மொழிபெயர்ப்புத் தொகுதியிலேயே தேரக் கூடியவை பத்துப் பக்கங்களுக்கு மேல் இருக்க வாய்ப்பில்லை என்றார். வெறும் மொழியாக்கம் என்பதை விட, ஆங்கிலத்தில் படிக்கும்போது அது Idiomatic Expression  ஆக இருக்க வேண்டும் என்று பிரியப்படுவார். அதற்காக ஆங்கிலத்தில் நிறைய புத்தகங்களைப் படிப்பதோடு மட்டுமில்லாது குறிப்பிட்ட வெளிப்பாடுகளைக் குறித்து வைத்துக் கொள்வார்.

தான் செய்த ஆங்கில மொழியாக்கங்களை இன்னொருவர் கருத்து தெரிவிக்க ஏதுவாக்கினார். நிறைய மொழிபெயர்ப்புக்களை மறுவாசிப்பு செய்து தர நகுலனிடம் அனுப்புவார். நகுலனும் அவரும் நல்ல நண்பர்களாக இருந்தனர். ஆனால் நகுலனும் அவரும் மொழிபெயர்க்கும் அடிப்படையே வேறு வேறானது. நவீன ஆஙகிலப் பெண் கவிஞரான ஆன் ஸ்டீவன்சனும் எம்.எஸ்ஸாரின் மொழிபெயர்ப்பின் மீது தனது சிறந்த கருத்துக்களைக் கூறி உற்சாகப்படுத்தியிருக்கிறார். என் முதல் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து (1980இல்) இந்தியன் லிட்டரேச்சரில் வெளியிட்டது நகுலன்தான் என்பினும் கூட என்னுடைய 100க்கும் மேற்பட்ட கவிதைகளை ஆங்கிலத்திற்கு மொழிமாற்றம் செய்தது எம்.எஸ்.ராமசாமிதான்.

அவருடைய ஈடுபாடுகள் வெறும் இலக்கியத்தோடு நின்று போனவை அல்ல. பல பரிமாணங்கள் கொண்ட மனிதர் அவர். எனக்குத் தெரிந்தவரை அவர் மிகச் சிறந்த இசை மற்றும் நாட்டிய ரசிகர். நாட்டியத்திற்கான பதவர்ணங்கள் கொண்ட மிகப்பழைய புத்தகங்களையும், ராமலிங்க வள்ளலலாரின் தொகுக்கப்பட்ட கவிதைகளும் அவரிடமிடருந்து எனக்குக் கிடைத்திருக்கிறது. பதிவு செய்யப்பட்ட இசைத்தட்டுக்கள் மற்றும் கேசட் டேப்புகளிலிருந்து இசை கேட்பதை விட நிஜமான கச்சேரிகளுக்குச் சென்று இசை கேட்பதையே அவர் விரும்பினார். வள்ளலாரின் குறிப்பிட்ட கவிதைகளை மொழிபெயர்க்க வேண்டுமென்று அவர் குறித்து வைத்திருந்தார். ஆனால் அதை அவர் முடிக்கவில்லை. இவரைத் தவிர வள்ளலார் நல்ல கவிஞர் என்பதை ஏற்றுக் கொண்ட இன்னொருவர், மறைந்த க.நா.சு. இவர்கள் இருவரும் கூறியதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் (வள்ளலார் பொறுத்தவரை) எனக்கு சமீப வருடங்களில்தான் வந்திருக்கிறது. குறிப்பாக சித்தர் பாடல்களை ஆஙகிலத்தில் மொழிபெயர்க்கத் தொடங்கிய பொழுதுதான் வள்ளலார் கவிதைகளின் கவித்துவம் பிடிபட்டது எனக்கு.

இந்திய ஓவியம் என்ற நூலை சாகித்ய அகாதெமிக்காக எழுதினார். இறுதிவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இளைஞர்களை ஊக்குவிப்பதில் அவர் மிக முக்கியமானவராக இருந்தார். ஆத்மாநாமின் நிறைய கவிதைகளை அவர் இறக்கும் முன்னரும், பிறகும் மொழிபெயர்த் திருக்கிறார். அங்கீகாரம் கிடைக்கும் என்றோ, சன்மானத்தை நோக்கியோ அவரது இயக்கம் இருக்கவில்லை. ஒவ்வொரு வெளிநாட்டு இதழுக்கும் கவிதைகளை அனுப்பும் போது அவருக்குத் தான் நிறைய செலவாகும். ஒரு போர்ட்டபிள் டைப்ரட்டைரை வைத்திருந்தார். அவர் பத்திரிகைகளுக்கு அனுப்பிய பிரதிகளை அவரே டைப் செய்து விடுவார். வயோதிகம் வந்த காலத்திலும் இதைத் தொடர்ந்தார்.

தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்த அளவுக்கே நிறைய கவிதைகளை (பாப்லோ நெருடா, எஸ்ரா பவுண்ட், டென்மார்க்கின் நவீன கவிஞரான ஹென்றிக் நார்பிராண்ட், இதாலிய நாவாலாசிரியர்-கவிஞரான பிரைமோ லெவி, டி.எஸ்.எலியட், ஆன் ஸ்டீவன்சன், நவீன ஐரோப்பிய கவிஞரான ப்ளெய்ஸ் சென்றார்ஸ், நவீன ஜெர்மன் கவியான ரில்கே) ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் மொழிபெயர்த்திருப்பதை இங்கு குறிப்பிட வேண்டும். தமிழிலிலும் அவருக்கு நல்ல புலமை இருந்தது. சிறுகதைகளுக்கும் கவிதைகளுக்கும் சரிசம அந்தஸ்தைக் கொடுத்தார். அநேகமாக கட்டுரைகளை மொழிபெயர்க்க அவர் விரும்பியதில்லை. கதைகளை அழகாகச் சொல்லுவார். மொழிப்பிரயோகங்களை அவர் படித்த விதத்தில் ஒவ்வொரு எழுத்தாளரும் எவ்வளவு தனித்தன்மையுடன் பயன்படுத்துகின்றனர் என்பதை நம்முடன் பகிர்ந்து கொள்வார்.  தொகுதியாகச் சேர்க்கப்படாமல் ஆங்காங்கே தனித்தனிக் கவிதைகளாக பல ஆங்கிலப் பத்திரிகைகளான Indian Literature, Debonair, Kavya Bharati, Illustrated Weekly, Fantasy, STAND, Modern Poetry in Translation, P.E.N.India, அவருடைய மொழிபெயர்ப்பபைத் தாங்கி வந்திருக்கின்றன.

எம்.எஸ்..ராமசாமி, 07.07.1916 அன்று, மேலூரில் (செங்கோட்டை) பிறந்தார். தந்தை சுப்பையா தேவர். தாயார் பூத்தாய்.  திருவனந்தபுரம் கலைக்கல்லூரியில் படித்து பி.ஏ.ஆனர்ஸ் பட்டம் பெற்றார். ஆனர்ஸில் தமிழிலும் ஆங்கிலத்திலும் தங்கப்பதக்கம் பெற்றார். நீதித்துறையில் பணி ஏற்றவர் 1971 ஆம் ஆண்டு சென்னையில் இரண்டாவது பிரசிடென்சி மாஜிஸ்ரேட்டாக இருந்து ஓய்வு பெற்றார்.

அவருடைய காசநோயின் காரணமாக மிகுந்த சிரமங்களுக்கு உள்ளானார். பிறகு அல்சரும் சர்க்கரை நோயும் சேர்ந்துகொண்டன. நிறைய வருடங்கள் அவர் திருவனந்தபுரத்திலேயே கழித்தார். 1980களில் இருந்து 1990 வரை மதுரையில் வசித்தார். 1991லிருந்து 1998 வரை கோவையில் வசித்தார். அவருடைய அக்காள் பெண்ணின் குடும்பத்தார் அவரை இறுதிவரை நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள். எம்.எஸ்.ராமசாமி மறைந்த தேதி 02.06.1998.

msramasamy2

Posted in Uncategorized | Tagged: | Comments Off

Why Read the Classics-Italo Calvino-Translated by Brammarajan

Posted by brammarajan on November 23, 2008

ஏன் கிளாசிக்குகளைப் படிக்க வேண்டும்?

இடாலோ கால்வினோ

தமிழில் பிரம்மராஜன்

L’Espresso (Rome),June,28,1981

சில தெரிவிக்கப்பட்ட வரையறைகளிலிருந்து நாம் தொடங்கலாம்.

(1) கிளாசிக்குகள் என்னும் புத்தகங்கள் பற்றி நாம் பொதுவாக மக்கள்  இப்படிச் சொல்லக் கேட்டிருக்கிறோம்: “நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன். . .” என்று சொல்வதற்குப்  பதிலாக “நான் மறுபடியும் வாசித்துக் கொண்டிருக்கிறேன். . . “

இது குறைந்த பட்சம் “மெத்தப் படித்தவர்கள்” என்று தங்களைக் கருதிக் கொள்பவர்களிடத்தில் நடக்கிறது.  முதன் முதலாக இந்த உலகினை எதிர்கொள்ளும் நிலையிலிருக்கும் இளவயதுக்காரர்களுக்கு இது பொருந்தாது. மேலும் கிளாசிக்குகள் அவர்களின் அந்த உலகின் ஒரு பாகமாக இருக்கும்.

வாசித்தல் என்ற வினைச் சொல்லின் முன்னால் இடம் பெறும் அழுத்தத்திற்காக முன்னிடை வேண்டுமானால் ஒரு பிரபலமான புத்தகத்தினை படிக்கவில்லை என்பதை ஒப்புக் கொள்வதற்கு அவமானமாக உணர்பவர்களின் பங்கில் இருக்கும் ஒரு சிறிதளவேயான பாசாங்காக இருக்கக் கூடும். அவர்களுக்கு மறுஉறுதிப்பாடளிக்க, நாம் அவதானிக்க வேண்டியது இவ்வளவுதான்: ஒரு மனிதனின் அடிப்படைப் படிப்பென்பது எந்த அளவு விரிவானதாக இருப்பினும் அவனால் படிக்கப்பட்டிராத அடிப்படைப் புத்தகங்கள் ஏராளமான எண்ணிக்கையில் இன்னும் பாக்கி இருக்கும்.

தூஸிடைடிஸ்1 மற்றும் ஹெரோடோட்டஸ்2 எழுதியவற்றினை முழுமையாகப் படித்தவர்கள் யாராவது இருந்தால் கையை உயர்த்துங்கள். மேலும் செய்ன்ட்-சைமன்3? அப்புறம் கார்டினல் ரெட்ஸ்? அந்த மகத்தான பத்தொன்பதாம் நூற்றாண்டு நாவல் தொடர்கள் கூட அடிக்கடி பேசப்படுகின்றனவேயொழிய படிக்கப்படுவதில்லை. பிரான்ஸ் தேசத்தில் அவர்கள் பால்ஸாக்கை பள்ளிக் காலங்களிலேயே படிக்கத் தொடங்கி விடுகின்றனர். சுற்றில் இருந்து கொண்டிருக்கும் பிரதிகளின் எண்ணிக்கையை வைத்துப் பேசும் பொழுது, பள்ளி முடிந்த பிறகும் அவர்கள் தொடர்ந்து படிக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் ஒரு அரசாங்க கணக்கெடுப்பு நடத்தப்படுமானால், பால்ஸாக்4 கடைசி இடத்தில்தான் இருப்பார் என்று நான் அஞ்சுகிறேன். டிக்கன்ஸின் விசிறிகள், இதாலியில்  படித்தவர்களின் ஒரு சிறிய குழுவாக இருக்கின்றனர். அந்தக் குழுவின் அங்கத்தினர்கள் சந்திக்கத் தொடங்கிய உடனேயே  பாத்திரங்களையும் நிகழ்ச்சிகளையும் ஏதோ அவர்களுக்கு தெரிந்தவர்கள் போல பேசத் தொடங்கி விடுகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்னால், மிஷல் ப்யூட்டர்5 (Michel Butor) அமெரிக்காவில் ஆசிரியராகப் பணியாற்றிய சமயம், எமிலி ஸோலா6 (Emile Zola)பற்றி திரும்பத் திரும்ப கேட்கப்பட்டதால் மிகவும் வெறுத்துப் போனார். ஸோலாவை அவர் அதுவரை படித்ததில்லை. ஆகவே ரூகன்-மாக்வா (Rougon-Macquart)7 தொடர்ச்சி முழுவதையும் படிக்க வேண்டுமென்று தீர்மானித்தார். அதைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருந்தாரோ அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக அந்த அனுபவம் இருப்பதைக் கண்டார். ஒரு நம்புவதற்கியலாத புராணிக மற்றும் இயலுலகத் தோற்ற அமைப்பாக அது இருந்தது. பிறகு இதை ஒரு அற்புதமான கட்டுரையில் அவர் விவரித்தார்.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஒரு மகத்தான புத்தகத்தினை முதல் முறையாக ஒருவரின் முதிர் பிராயத்தில் படிப்பதென்பது அபாரமான சந்தோஷமாக இருக்கும்.  இது ஒருவருடைய இளவயதில் படித்திருப்பதற்கான அனுபவத்திலிருந்து (கூடுதலானது குறைச்சலானது என்று ஒரு கூற முடியாதெனினும்) வேறுபட்டது. வேறு எந்த அனுபவத்திற்கும் போலவே, வாலிபம் வாசிப்பிற்கும் ஒரு விதமான சுவையைக் கொண்டு வருகிறது. மாறாக முதிர் பிராயத்தில் ஒருவர் கூடுதலான பல நுண்தகவல்களையும் அர்த்த அடுக்குகளையும் சிலாகிக்கிறார் (அல்லது சிலாகிக்கத்தான் வேண்டும்). ஆகவே நாம் அடுத்த வரையறையினை முயன்று பார்க்கலாம்:

(2) சிலரால் படிக்கப்பட்டு, நேசிக்கப்பட்டு, பாதுகாக்கப்படும் அந்தப் புத்தகங்களைக் குறிப்பதற்காக நாம் கிளாசிக் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம்.  ஆனால் அவற்றை முதல் தடவையாக   மிகச் சிறந்த சூழ்நிலைகளில் படித்து சிலாகிக்க முடிந்தவர்களாலும் இதே அளவுக்கு அவை பாதுகாக்கப்படுகின்றன.

பொறுமையின்மையின் காரணமாக இளமையில் படிப்பதென்பது பயனற்றதாக இருக்கக் கூடும், கவனத் திசைதிருப்பல்களால், எப்படிப் படிப்பது என்ற நிபுணத்துவமின்மையால், அல்லது வாழ்வனுபவமே கூட குறைவாக இருப்பதால். அப்பொழுது படிக்கப்படும் புத்தகங்கள் (சாத்தியத்தில் ஒரே சமயத்திலேயே) எதிர்கால அனுபவங்களுக்கு ஒரு வடிவம் கொடுக்கின்றன என்ற அர்த்தத்தில், முன்னுதாரணங்கள், ஒப்பிடுதலின் வரையறைகள், வகைப்படுத்துதலின் திட்டங்கள், மதிப்பீடுகளின் அளவுகள், அழகின் உச்சபட்ச முன்னுதாரணங்கள் ஆகிவற்றைக் கொடுத்தபடி-இந்த எல்லா விஷயங்களும் தொடர்ந்து இயங்கும் ஒருவருடைய இளமையில் படிக்கப்பட்ட புத்தகம் முழுமையாக மறந்து போனாலும். ஒரு முதிர் பிராயத்தில் நாம் ஒரு புத்தகத்தை மறுவாசிப்பு செய்யும் போது, அப்பொழுது நாம் இந்த மாறாத மதிப்பீடுகள் இருப்பதைக் கண்டு பிடித்துக் கொள்ளும் வாய்ப்பிருக்கிறது, இந்த காலகட்டத்திற்குள்ளாக நமது உள்ளியல் இயக்கத்தின் அங்கங்களாக மாறியிருக்கும் அவற்றின் தோற்றுவாய்கள் பற்றி நாம் நீண்ட காலத்திற்கு முன்னரே மறந்திருப்போம். அது இருக்கிறபடியே ஒரு இலக்கியப் படைப்பானது நம்மை வெற்றிகரமாக மறக்கச் செய்யும், ஆனால் அது நமக்குள் அதன் விதையை விட்டுச் செல்கிறது. ஆகவே நாம் இப்போது கொடுக்கும் வரையறை இதுதான்:

(3)கிளாசிக்குகள் என்பவை ஒரு விநோதமான தாக்கத்தினை ஏற்படுத்துபவை, மனதிலிருந்து அகற்றியழிக்கப்பட மறுக்கும் போதும், ஞாபக மடிப்புகளில்  தங்களை மறைத்துக் கொள்ளும் சமயத்திலும், கூட்டு அல்லது தனிமனித நினைவிலி (collective and individual consciousness )என்று தங்களுக்கு மாறு வேடம் போட்டுக் கொண்டு உலவும் போதும்.

ஆகவே முதிர் பிராயத்தில் நமது வாலிப பருவத்தின் மிக முக்கியமான புத்தகங்களை மறு வருகை செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் ஒதுக்க வேண்டும். புத்தகங்கள் மாறுதலடையாமலிருந்த போதிலும் கூட(மாறுதலடைந்த வரலாற்று உள்பார்வையின் புதிய வெளிச்சத்தில் அவை கண்டிப்பாக மாறியிருப்பினும் கூட), நாம் கண்டிப்பாக மாறியிருப்போம், நம் எதிர்கொள்ளலும் முழுமையான புதிய விஷயமாக இருக்கும்.

எனவே, வாசிக்கிறேன் என்ற அல்லது மறுவாசிப்பு செய்கிறேன் வினைச்சொல்லைப் பயன்படுத்தினாலும் அது முக்கியமில்லை. வாஸ்தவமாக நாம் இப்படிச் சொல்லலாம்:

(4)கிளாசிக்கின் ஒவ்வொரு மறுவாசிப்பும் முதல் வாசிப்பின் கண்டுபிடிப்பு பயணம் போன்றதே.

(5)கிளாசிக்கின் ஒவ்வொரு வாசிப்புமே நிஜத்தில் மறுவாசிப்பே.

நான்காவது வரையறை இந்த அடுத்த வரைறைக்குப் பின்விளைவானதாக இருக்க முடியும்:

(6) ஒரு கிளாசிக் என்பது தனது வாசகர்களுக்குச் சொல்ல வேண்டியதனைத்தையும் என்றுமே சொல்லித் தீர்க்காதிருப்பது.

நம்முடையதிற்கு முந்தியதான வாசிப்புகளின் தடயங்களைத் தாங்கியபடி வந்து சேர்கின்ற புத்தகங்கள்தான் கிளாசிக்குகள். இந்தத் துலக்கமூட்டலின் சமயத்தில் அவை கலாச்சாரத்தின் மீது விட்டிருக்கிற தடயங்களை அல்லது அவை கடந்து வந்திருக்கின்ற கலாச்சாரங்களின் தடயங்களை (அல்லது மிக எளிமையாக, மொழியின் மீதும் பழக்கவழக்கங்களின் மீதும்) கொண்டு வருகின்றன.

இது எல்லாமே புராதன மற்றும் நவீன கிளாசிக்குகளுக்கும் சரிசமமாகப் பொருந்தும். நான் ஒடிசியைப் படித்தால்  ஹோமரின் பிரதியைப் படிக்கிறேன், ஆனால் இந்த நூற்றாண்டுகளின் காலத்தில் யூலிசிஸின் சாகசங்கள் என்ன அர்த்தம் கொடுக்க வந்திருக்கின்றன என்பதை என்னால் மறக்க முடியாது. மேலும் இந்த அர்த்தங்கள் மூலப் பிரதியிலேயே உள்தொனிக்கும்படி இருந்தவைதானா என்பதையும். அல்லது அவை பின் வந்த உறைபடிவுகளா, திரிபுகளா, அல்லது விரிவாக்கல்களா என்பதையும் என்னால் வியக்காமல் இருக்க முடியாது. காஃப்காவைப் படிக்கும் பொழுது, என்னால் காஃப்காத்தன்மையான என்கிற குணச்சொல்லின் நியாயத்தன்மையை நிராகரிக்கவோ அல்லது ஏற்கவோ செய்யாமலிருக்க முடியாது. தவறாகப் பிரயோகிக்கப்படும் இந்த அடைமொழியை ஒவ்வொரு கால் மணி நேரத்திற்குள்ளும் ஒருவர் கேட்க வாய்ப்பிருக்கிறது. நான் தாஸ்தாயெவ்ஸ்கி8யின் The Possessed  அல்லது துர்கனேவின்9 Fathers and Sons  நாவலைப் படித்தால் எப்படி அந்த பாத்திரங்கள் நமது காலம் வரை தொடர்ந்து மறு பிறப் பெடுத்திருக்கிறார் கள் என்பதை என்னால் சிந்திக்காமல் இருக்க இயலாது.

நாம் அது பற்றிக் கொண்டிருந்த கருத்திற்கு நேர் எதிராக ஒரு கிளாசிக்கை வாசித்தல் என்பது நமக்கு ஒன்று அல்லது இரண்டு ஆச்சரியங்களைத் தர வேண்டும். இந்த காரணத்திற்காக, என்னால் வேண்டிய அளவுக்கு  பிரதியை நேரடியாகப் படித்தலை உயர்வாகப் பரிந்துரைக்க முடியாது. எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு உரைகளையும், குறிப்புகளையும், துணை நூற்பட்டியல்களையும் தவிர்த்துக் கொண்டு. வேறு ஒரு புத்தகத்தை விவாதிக்கும் ஒரு புத்தகம் விவாதத்திலிருக்கும் மூலப் புத்தகத்தை விட அதிகம் சொல்லி விட முடியாது என்பதை பள்ளிகளும் கல்லூரிகளும் நமக்கு உணர்த்த வேண்டும். ஆனால் இதற்கு மாறாகத்தான் அவை மெத்தவும் நம்மை முரணாகச் சிந்திக்க வைக்கின்றன.  தலைகீழாக்கப்பட்ட மதிப்பீடுகளின் தன்மை மிகவும் பரவலாக  நிலவுகிறது. அதன்படி முன்னுரை, விமர்சன அணுகல், நூற்பட்டியல் போன்றவை பிரதி என்ன சொல்ல வருகிறதோ அதை மறைப்பதற்கான ஒரு புகைமூட்டத் திரையைப் போலப் பயன்படுத்தப்படுகின்றன. பிரதியை விடக் கூடுதலாகத் தங்களுக்குத் தெரியுமென்று கோருகிற இடையீட்டாளர்களின்றி பிரதி சொல்ல வந்ததை சொல்ல அனுமதிக்க வேண்டும். எனவே நாம் இப்படி முடிக்கலாம்:

(8)நமக்கு ஏற்கனவே தெரிந்திருக்காத எதையும் நமக்கு அவசியமாக கிளாசிக்குகள் சொல்லித் தருவதில்லை. ஒரு கிளாசிக்கில் நாம் எப்போதும் அறிந்திருந்ததை சில சமயம் கண்டுபிடித்துக் கொள்கிறோம்  (அல்லது நமக்குத் தெரியும் என்று நாம் நினைத்ததை), ஆனால் இந்த ஆசிரியர்தான் முதலில் அதைச் சொன்னார் என்பது தெரியாமல், அல்லது குறைந்தபட்சம் அதனுடன் ஒரு பிரத்யேக வழியில் எப்படி சம்மந்தப்பட்டிருக்கிறார் என. மேலும், இதுவும் கூட, நமக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடிய ஒரு ஆச்சரியம்தான், ஒரு தோற்றுவாயைக் கண்டுபிடித்ததில் நமக்கு எப்போதும் கிடைக்கும் சந்தோஷத்தைப் போல, ஒரு உறவினைப் போல, ஒரு பிணைப்பினைப் போல.

இவை எல்லாவற்றிலிருந்தும் நாம் கீழ்வரும் வரையறையினைப் போன்ற ஒன்றினைப் பெறலாம்:

(9)படிக்கப்படும் சமயத்தில் கிளாசிக்குகள் இன்னுமே கூட புத்துணர்ச்சி கூடியவையாக, அதிகம் எதிர்பார்த்திராத, மேலும் அவை பற்றி நாம் கேள்விப்பட்ட போது நாம் எண்ணியிருந்ததை விடவும் அதிகம் அற்புதமாமானவையாக இருக்கின்றன.

இயல்பாக, ஒரு கிளாசிக் நிஜமாகவே, கிளாசிக் பிரதியாக இயங்கும்பொழுதுதான் நடக்கிறது அது-அதாவது, அது வாசகனுடன் ஒரு தனிப்பட்ட மனோபாலத்தை ஏற்படுத்தும்போதுதான். பொறி கிளம்பவில்லை என்றால், அது பரிதாபம். ஆனால் நாம் கடமையுணர்ச்சியினாலோ அல்லது மரியாதையினாலோ கிளாசிக்குளைப் படிப்பதில்லை. காதலினால் படிக்கிறோம். பள்ளிக்கூடத்தில் தவிர. சிறப்பாகவோ அல்லது மோசமாகவோ பள்ளிக்கூடம் குறிப்பிட்ட கிளாசிக்குகளை தெரிந்து கொள்வதற்கு ஏது செய்ய வேண்டும், அவற்றுடன் அல்லது குறிப்புகளை பிறகு நீங்கள் உங்கள் கிளாசிக்குகளைத் தேர்ந்தெடுக்கலாம். ஒரு தேர்ந்தெடுப்பினைச் செய்வதற்குத் தேவையான உபகரணங்களை உங்களுக்குத் தர வேண்டிய கட்டாயத்திலிருக்கிறது பள்ளிக் கூடம். ஆனால் நாம் கருதக்கூடிய தேர்ந்தெடுப்புகளெல்லாமே பள்ளிக் கூடத்திற்குப் பிறகும் வெளியிலும் நடப்பதுதான்.

ஒருபக்க மனச்சாய்வின்றிப் படித்தால் மாத்திரமே உங்களுடைய புத்தகமாகும் ஒரு புத்தகத்தினை நீங்கள் சந்திக்கும் சாத்தியமுள்ளது. மெத்தப் படித்த, ஒரு அபாரமான கலை வரலாற்றாசிரியர் ஒருவரை எனக்குத் தெரியும்.  இருக்கிற சகல புத்தகங்களிலும் அவர் தனது பிரத்யேகக் காதலை பிக்விக் பேப்பர்ஸ்10 மீது குவித்திருந்தார். அவருக்குக் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் டிக்கன்ஸின் புத்தகத்திலிருந்து ஒரு சொற்புதிரைக் கொணர்வார். வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வினையுமே பிக்விக்தனமான வேறு சில நிகழ்வுகளுடன் இணைப்பார். சிறிது சிறிதாக அவரும், இந்தப் பிரபஞ்சமும் அதன் நிஜமான தத்துவமும், ஒரு முழுமையான அடையாளப்படுத்திக் கொள்ளல் எனும் வகையில் பிக்விக் பேப்பர்ஸின் வடிவத்தை எடுத்துக் கொண்டுவிட்டன.

இந்த விதத்தில் நாம் மிகவும் உயர்வான, அதிகம் எதிர்பார்ப்புமிக்க கிளாசிக் பற்றிய கருத்துக்கு வந்து சேர்கிறோம்:

(10) பிரபஞ்சத்திற்கு இணையானதொரு வடிவத்தை எடுத்துக் கொள்ளக் கூடிய புத்தகம் ஒன்றுக்காக நாம் கிளாசிக் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம், புராதன காலத்து தாயத்துக்களுக்கு சமமாக. இந்த வரையறையுடன் நாம் முழுமுற்றான புத்தகம் என்னும் கருத்துருவாக்கலை நெருங்குகிறோம், மல்லார்மே11 கருக்கொண்டதைப் போல.

ஆனால் ஒரு கிளாசிக் ஒரே அளவுக்கு வலுவான மனோ பாலத்தை எதிர்ப்படுத்துதல் வகையில் அல்லது நேர்முறன் வகையிலும் நிறுவுகிறது. யான் யாக்விஸ் ரூஸோ* சிந்திக்கிற, செய்கிற சகலமும் என் மனதிற்கு இனிமையானதாய் இருக்கிறது. இருப்பினும் எல்லாமும் அவனை எதிர்க்க வேண்டும், விமர்சிக்க வேண்டும், அவனுடன் சண்டை போட வேண்டும் என்கிற அடக்க முடியாத ஆர்வத்தை எனக்குள் நிறைக்கிறது. மனரீதியான தளத்தில் ஏற்படும் தனிப்பட்ட எதிர்ப்புணர்வு இது. இதன் காரணமாக நான் அவனைப் படிப்பதைத் தவிர வேறு தேர்வுகள் எனக்கு இல்லாமல் போக வேண்டும். இருந்தாலும் என்னுடைய ஆசிரியர்கள் பட்டியலில் அவனை வைப்பதை என்னால் தவிர்க்க இயலாது.

எனவே நான் சொல்வேன்:

(11)உங்களுடைய கிளாசிக் ஆசிரியர் யாரென்றால் நீங்கள் அவரிடம் பாராமுகமாக இருந்து விட முடியாத ஒருவர், உங்களை அவருடைய உறவின் வாயிலாக வரையறுக்க உதவுபவர், அவருடன் தகராறு செய்வதிலும் கூட.

பழமை, மொழிநடை, அதிகாரத்துவம் இதில் எந்த விதமான வித்யாசப்படுத்தல்களுமின்றி நான் கிளாசிக் என்ற சொல்லைப் பயன்படுத்துவதை நியாயப்படுத்த வேண்டிய கட்டாயமில்லை. (இந்த சொல்லின் அனைத்து அர்த்தங்களின் வரலாற்றுக்கும்  கிளாசிகோ (Classico)என்ற பிரிவில் ஃபிரான்கோ ஃபோர்ட்டினி என்பவரால் எழுதப்பட்ட வரையறை என்சைக்ளோபீடியா என்னவ்டி (Encyclopaedia Enaudi) யின் மூன்றாம் தொகுதியில் காணப்படுகிறது) நான் மேற்கொள்ளும் விவாதத்தில் ஒரு கிளாசிக்கை எது தனித்தன்மையுடையதாக ஆக்குகிறது என்றால் ஒரு விதமான எதிரொலி விளைவாகும். ஒரு கலாச்சாரத் தொடர்ச்சியில் தன்னுடைய இடத்தை ஏற்கனவே சாதித்துக் கொண்ட நவீனமானவற்றுக்கும் புராதனமானவற்றுக்கும் சரிசமமாக இது பொருந்தும். நாம் இப்படி சொல்லலாம்:

(12) ஒரு கிளாசிக் ஆனது மற்ற கிளாசிக்குகளுக்கு முன்னால் வந்து விடக் கூடிய புத்தகமாகும். மற்றவற்றினை முதலில் படித்து விட்ட ஒருவர் பிறகு இதைப் படிக்கும் போது, உடனடியாக அதனுடைய இடத்தினை குடும்ப மரத்தில் அடையாளம் கண்டு கொள்கிறார்.

இந்தப் புள்ளியில் கிளாசிக்குகளைப் படிப்பதை கிளாசிக்குகள் அல்லாத பிற நூல்களைப் படிப்பதுடன் எப்படித் தொடர்புபடுத்த வேண்டும் என்பதை நான் இனியும் தள்ளிப் போட முடியாது. “நமது காலங்களை மேலும் அதிக ஆழமாகப் புரிந்து கொள்வதற்கு உதவக்கூடிய நூல்களில் நாம் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு “ஏன் கிளாசிக்குகளைப் படிக்க வேண்டும்?” அல்லது “நாம் எங்கே போய்க் கண்டுபிடிப்பது காலத்தையும் மனஅமைதியையும் மலையளவு சரிந்து கொண்டிருக்கும் சமகால நடப்புகளினால் நாம் அமிழ்ந்து போயிருக்கும் போது?” போன்ற கேள்விகள் தொடர்பானது இந்தப் பிரச்சனை.

வாஸ்தவமாக, தன்னுடைய படிக்கும் நேரத்தை முற்றிலுமாக லூக்ரெஷியஸ்12, லூசியன்13, மான்டெய்ன்14, எராஸ்மஸ்15, க்வெவேடோ16, மார்லோ17, Discourses on Method,  Wilhelm Meister18, கோல்ரிட்ஜ்19, ரஸ்கின்20, ப்ரூஸ்(ட்)21, மற்றும் வெலரி22 படிப்பதிலும் இவற்றுடன் துணிவான தாக்குதல்களை முராஸாகி23 மற்றும் ஐஸ்லாந்து சாகாக்களிலும்24 செய்யக் கூடிய ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட மனிதனை நாம் கற்பனை செய்யலாம்தான். இது எல்லாமும் கூட சமீப காலத்து வெளியீடுகளுக்குப் புத்தக மதிப்புரை எழுத வேண்டிய கட்டாயமின்றி, அல்லது பல்கலைக் கழகப் பதவிக்குப் போட்டியிட ஆய்வுக்கட்டுரை எழுத வேண்டிய அவசியமின்றி, அல்லது பத்திரிகைகளுக்கு கறாரான காலக் கெடுவில் கட்டுரைகள் எழுத வேண்டிய அவசியமில்லாமல். எவ்வித தொற்றுக்களும் இல்லாத இப்படிப்பட்ட ஒரு உணவினை நிலையாக வைப்பதற்கு, இந்த ஆசீர்வதிக்கப்பட்ட மனிதர் செய்தித்தாள்கள் படிப்பதிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ள வேண்டியிருக்கும், என்றுமே ஒரு சமகால நாவலினாலோ சமீப சமூகவியல் ஆய்வுகளினாலோ சபலமடையக் கூடாது. ஆனால் அப்படிப்பட்ட ஒரு கறார்த்தன்மை எந்த வகையில் நியாயப்படுத்தப்படக் கூடியது அல்லது பயனுள்ளது என்பதை நாம் பார்க்க வேண்டும். மிகச் சமீப செய்தியானது சாதாரணமானதாயும் இழிவுபடுத்தக்கூடியதாகவும் இருக்கலாம். ஆனால் அது நாம் நின்று முன்னும் பின்னும் பார்த்துக் கொள்ளக் கூடிய ஒரு முக்கியமான புள்ளியாக இருக்கிறது என்பதை  மறுக்க முடியாது. கிளாசிக்குகளை படிக்க நீங்கள்  எங்கிருந்து படிக்கிறீர்கள் என்பதைத்  தெரிந்திருக்க வேண்டும். இல்லையானால் புத்தகமும் வாசகனும் ஒரு வித காலாதீத புகைமூட்டத்தில் மறைந்து போய்விடக் கூடிய ஆபத்திருக்கிறது. அப்படியானால், சமகால நடப்புகளைப் படித்தலையும் ஒரு சரியான அளவுக்கும் கிளாசிக்குகளைப் படித்தலையும் மாற்றி மாற்றி செய்யக் கூடிய ஒருவர் கிளாசிக்குகளைப் படிப்பதினால் கிடைக்கக் கூடிய மாபெரும் விளைச்சல்களை அடைகிறார். இது ஒரு இடைஞ்சலுறாத மனஅமைதியை அவசியமாக உள்ளுணர்த்துவதில்லை. அது நரம்புத் தளர்ச்சியின் பொறுமையின்மையின் கனியாகக் கூட இருக்கலாம்,  மனதின் தொடர்ந்த வெடுவெடுத்து சிடுசிடுக்கும் திருப்தியடையாத்தன்மையாகவும்.

லட்சியமானதொரு நடவடிக்கை எதுவாக இருக்குமென்றால், நிகழ்காலத்தை நம் அறையின் ஜன்னலுக்கு வெளியிலிருந்து கேட்கும் இரைச்சலைப் போல கேட்பது–இது நமக்கு போக்குவரத்து நெரிசல்களையும் தட்ப வெப்ப நிலையில் ஏற்படும் மாறுதல்களையும் பற்றி எச்சரிக்கும்–அதே சமயத்தில்  கிளாசிக்குகளின் குரல் நம் அறைக்குள் தெள்ளத் தெளிவாக எதிரொலித்துக் கொண்டிருப்பதை நாம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருப்போம். ஆனால், அறைக்குள் நிகழ்காலமானது, முழு ஒலியில் வைக்கப்பட்ட டிவியைப் போல நிறைந்திருக்கையில் அறையின் வெளிப்புறத்திற்கு மிகவும் அப்பால் கிளாசிக்குகளின் குரலை ஒரு தூரத்து எதிரொலியாகக் கேட்பதென்பதே பலருக்கு ஒரு சாதனையாகத் தோன்றுகிறது.

ஆகவே நாம் இதைச் சேர்த்துக் கொள்வோம்:

(13) ஒரு கிளாசிக் என்பது எதுவென்றால் இந்த கணத்தின் பிரச்சனைகளை பின்னணி இரைச்சலின் நிலைக்குத் தள்ளிவிடக் கூடிய தன்மை வாய்ந்தது. ஆனால் அதே சமயம் இந்தப் பின்னணி இரைச்சல் இல்லாமல் நம்மால் இருந்து விட முடியாது.

(14) ஒன்றுபட்டுப் போகாத அந்த கணத்துப் பிரச்சனைகள் நமது சூழ்நிலையை முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருக்கிற சமயத்திலும் கூட ஒரு கிளாசிக் என்பது பின்னணி இரைச்சலாக தொடர்ச்சியாய் இருக்கக் கூடிய ஒன்று.

(15) இனியும் நீண்ட காலப் பொழுதுகளையோ, விஸ்தாரமான மனிதத்துவ ஓய்வு நேரங்களையோ அளிக்காத நமது அன்றாட வாழ்வின் லயங்களுடன் கிளாசிக்குகளைப் படிப்பதென்பது மோதுகிறது என்ற உண்மை நிலவுகிறது. அது நமது கலாச்சாரத்தின் விரிந்த மனப்பாங்குடன் முரண்படுகிறது. இக்கலாச்சாரம் என்றைக்குமே நமது காலத்தின் தேவைகளுக்கேற்ற கிளாசிக்கலான விஷயங்களைப் பற்றிய ஒரு அட்டவணையை தொகுத்துத் தர தகுதியற்றதாகவே இருக்கும்.

மாறாக இரண்டாவதாகக் குறிப்பிட்ட அம்சங்கள் லியோபார்டி25யின் வாழ்க்கையில் முழுமையாக உணரப்பட்டிருந்தன. அவரது தந்தையின் வீட்டில் (patermo ostello)இருந்த தனிமையான வாழ்க்கையை வைத்துப் பார்க்கும் போது, அவரது கிரேக்க மற்றும் லத்தீன் தொடர்பான பழமை குறித்த ஆராதனை, மற்றும் அவருடைய விருப்பத்திற்கு அவரது தந்தை மோனால்டோவால் விடப்பட்டிருந்த ஒரு வலுவான நூலகம் ஆகியவற்றுடன்  இதாலி மற்றும் பிரெஞ்சு இலக்கியங்களின் முழுமையான தொகுதிகளை நாம் சேர்க்கலாம்–நாவல்களையும், பொதுவான ‘லேட்டஸ்ட் ஹிட்’களையும் தவிர்த்து. இவை அவருடைய சகோதரி பாவோலினா (அவளுக்கு அவர் ஒரு முறை எழுதினார் உன்னுடைய ஸ்டெந்தால்26 என்று) வின் ஓய்வு நேரத்தை திசைதிருப்ப விடப்பட்டன. அறிவியலிலும் வராலாற்றிலும் அவருக்கிருந்த  உக்கிரமான ஈடுபாட்டினை மிஞ்சியும் கூட அவர் முழுமையாய் அந்த நிமிஷம் வரை நவீனமாக்கப்படாத பிரதிகளின் மீது சார்ந்திருக்கத் தயாராக இருந்தார். ஃபூஃபனிடமிருந்து27 பறவைகளின் பழக்கங்கள் பற்றியும்,  Fontanelle28 இடமிருந்து Frederik Ruysch யின் மம்மிகளைப் பற்றியும்  ராபர்ட்ஸனிடமிருந்தும் கொலம்பஸின் பயணங்களைப் பற்றியும் வாசித்துக் கொண்டார்.

இன்றைய நாட்களில் லியோபார்டி அனுபவம் கண்டதைப் போன்ற பேரிலக்கியப் படிப்பு நினைத்துப் பார்க்கவே முடியாதது. குறிப்பாக, பிரபு மோனால்டோவின் நூலகமானது மிகவும் பாழாகிவிட்ட நிலையில். பழைய தலைப்புகளின் தலைமைகள் அழிக்கப்பட்டுவிட்டன. எல்லா நவீன இலக்கியங்களிலும், கலாச்சாரங்களிலும் புதியன பல்கிப் பெருகிவிட்டன. நாம் ஒவ்வொருவரும் செய்யக்கூடியதெல்லாம் அவரவருடைய கருத்தியலான கிளாசிக்குகளின் நூலகத்தினைக் கண்டுபிடிப்பதுதான்.  அதன் ஒரு பாதி நாம் படித்துவிட்ட புத்தகங்களை கொண்டதாகவும், மறுபாதி நாம் படிக்க நினைத்திருக்கும் புத்தகங்களாலும் நிரம்பியிருக்க வேண்டும். நாம்  காலிப் பகுதிகள் நிறைந்த ஒரு பிரிவினை ஆச்சரியங்களுக்கும், தற்செயலான கண்டுபிடிப்புகளுக்குமாக விட்டு வைக்க வேண்டும்.

லியோபார்டியின் ஒரு பெயரை மாத்திரமே இதாலிய இலக்கியத்திலிருந்து குறிப்பிட்டிருக்கிறேன் என்பதை என்னால் கவனிக்க முடிகிறது. இதுதான் நூலகம் சீரழிந்ததன் விளைவு. இப்பொழுது நான் இந்தக் கட்டுரையை மறுஆக்கம் செய்ய வேண்டும். செய்து நாம் யார் என்பதையும் நாம் எந்தப் புள்ளியை சென்றடைந்திருக்கிறோம் என்பதையும் புரிந்து கொள்வதற்கு கிளாசிக்குகள் உதவும் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.  மேலும் இதன் விளைவாக இதாலிய கிளாசிக்குகள் வேற்று நாட்டு கிளாசிக்குகளுடன் ஒப்புமைப்படுத்த தவிர்க்க முடியாத தேவையாக இருக்கின்றன. அந்நிய கிளாசிக்குகள் சரிசமமான முக்கியத்துவமுள்ளவையாகின்றன இதாலிய கிளாசிக்குகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு.

அதன் பிறகு நான் நிஜமாகவே அதை மூன்றாவது தடவையாக திருத்தி எழுத வேண்டும்–ஏதோ ஒரு காரியத்திற்குப் பயன்படுவதால் கிளாசிக்குகளைப் படிக்க வேண்டும் என்பதை மக்கள் நம்பாமலிருக்கும் பொருட்டு. அவற்றின் சார்பாக எடுத்துச் சொல்லக் கூடிய ஒரே காரணம் என்னவென்றால் கிளாசிக்குகளைப் படிப்பதென்பது அவற்றைப் படிக்காமலிருப்பதை விட மேலானது.

மேலும் எவர் ஒருவராவது அந்த அளவுப் பிரயத்தனங்களுக்கு அவை தகுதியற்றவை என்று ஆட்சேபித்தால் நான் சியோரான் என்பவரை மேற்காட்டுவேன். (ஒரு கிளாசிக் அல்ல, குறைந்தபட்சம் இன்னும் அப்படியாகவில்லை, ஆனால் தற்போது இதாலிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு சமகால சிந்தனையாளர்) : ஹெம்லாக் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது புல்லாங்குழலில் சாக்ரடீஸ்  ஒரு புதிய மெட்டினைக் கற்றுக் கொண்டிருந்தார். “அதனால் என்ன பயன் வரும் உனக்கு?” அவர்கள் கேட்டனர்: “குறைந்தபட்சம் நான் இறக்கு முன்னர் இந்த மெட்டினை கற்றுக் கொண்டிருப்பேன்.” •

குறிப்புகள்

1.தூசிடைடிஸ் (471?-400கி.மு)

கிரேக்க வரலாற்றாசிரியர். தூசிடைடிஸ் தளபதியாக இருந்த கடல் படை ஆம்ஃபியோபோலிஸ் என்னுமிடத்தில் தோற்கடிக்கப்பட்டவுடன் அவர் நாடுகடத்தப்பட்டார். அவரது நாடுகடத்தப்பட்ட 20 வருடங்களை பெலோப்னீசியப் போர் பற்றிய ஆய்வில் ஈடுபட்டார். அவருடைய ஒரே நூல் History of the Pelopnnesian War.  “I lived through the whole war”என்று அந்தப் புத்தகத்தில் அவர் எழுதினார். போர்களின் காரணங்களையும், கிரேக்க வரலாற்றினையும், அதில் வேண்டிய ஆவணங்களை ஆராய்ந்தும், நேரில் பார்த்தவர்களைச் சந்தித்தும், வருடாந்திர ஒழுங்கில் கோடை காலங்களையும் குளிர் காலங்களையும் அலசி அவரது தோல்விக்கான காரணங்களுக்கு வந்து சேர்கிறார். போரின் முழு 27 வருடங்களையும் History of the Pelopnnesian War இல் அவர் எடுத்துக் கொண்டிருந்த போதிலும் நூல் முடிவுக்கு வருமுன் இறந்து போனார்.

2.ஹெரோடோட்டஸ்(484-425 கி.மு)

கிரேக்க வரலாற்றாசிரியர். வரலாற்றின் தந்தை என்றழைக்கப்படுகிறார். ஏறத்தாழ கி.மு 457இல்  பாரசீக ஆட்சிக்கு எதிராக சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு நாடு கடத்தப்பட்டவர். ஆசியா மைனர், பாபிலோனியா, எகிப்து வழியாக கிரேக்க நாடுகளைச் சென்றடைந்திருக்க வேண்டும். ஏதென்ஸ் நகரில் இறுதியாகக் குடியேறினார். வாழ்நாள் முழுவதையும் ஹிஸ்டரி என்ற தலைப்பிலான தனது உன்னதப் படைப்பை எழுதுவதில் செலவிட்டார். உரைநடையில் எழுதப்பட்ட முதல் படைப்பாக்கம் ஹிஸ்டரி என்று சொல்லலாம். எல்லாக் காலத்திய விமர்சகர்களின் பாராட்டினைப் பெற்ற இந்தப் படைப்பை பின்னாளில் வந்த புத்தகாசிரியர்கள் ஒன்பது பகுதிகளாகப் பிரித்தனர். முதல் ஆறு தொகுதிகள் உலக மக்களின் சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள், மற்றும் வீரதீரக் கதைகள், சரித்திரம் மற்றும் கலாச்சாரங்களைப் பற்றிப் பேசுகின்றன. கடைசி மூன்று தொகுதிகள் கி.மு. 5ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிரேக்க நாட்டிற்கும் பாரசீகத்திற்கும் நடந்த ஆயுதப் போர்களைப் பற்றிப் பேசுகின்றன.

3.ஸெய்ன்ட் சைமன் (1675-1755)

பாரிஸ் நகரில் பிறந்த பொதுவுடைமைவாதி. பதினாறாவது வயதில் அமெரிக்கப் புரட்சியில் பங்கேற்றுப் போரிட வேண்டி அமெரிக்க நாட்டிற்குச் சென்றார். மீண்டும் பிரான்சுக்குத் திரும்பியவர் தனது பட்டத்தைத் துறந்து பிரெஞ்சுப் புரட்சியை ஆதரித்தார். நவீன பொதுவுடைமைக் கோட்பாட்டின் நிறுவனர்களில் ஒருவராகக் கருதப்படும் இவரது படைப்பாக்கங்கள் அறிவியல் துறையிலும், பிற அறிவுத் துறைகளிலும் சிறந்து விளங்குபவர்களால் மொத்த சமூகத்தின் நலனுக்காகவூமாய் வழிநடத்தப்படும்ó ஒரு சமூக அமைப்பை ஆதரித்து அதற்கான வாதப் பிரதிவாதங்களை முன் வைக்கின்றன. “தொழில்மயமாதல் (Industrialization) என்ற பதம் அவர் அறிமுகப்படுத்தியதுதான். போர் ஒழிப்பு, வறுமை நீக்குதல், சமூகத்தை மேம்படுத்துதல் ஆகிவற்றுடன் கிறித்துவத்தையும் தொழில்மயமாக்கலையும் இவரால் இணைத்துச் சிந்திக்க முடிந்தது. ஸெயின்ட் சைமனின் மாணவர்கள் அவர் இறந்த பிறகு அவரது கருத்துக்களை ஒன்று திரட்டி பிரபலப்படுத்தினார்கள். புதிய கிறித்தவம் (Le Nouveau Chritianisme)1825 அவரது முக்கிய படைப்பாகும்.

4.பால்ஸாக் ஹொனொரே த ( 1799-1850 )

பிரெஞ்சு நாட்டு யதார்த்த நாவலாசிரியர். அவரது வாழ்க்கை புதினம் போலவும் புதினம் வாழ்க்கை போலவும் சில சமயங்களில் அமையப் பெற்றது. பால்ஸாக்கின் புதின உலகம் அவரது நிஜ உலகம் தரத்தவறியவற்றுக்கான ஒரு பதிலீடாக இருந்தது. பணம் பற்றிய கருத்தோட்டம் நாவல்கள் முழுக்கவும் இடம் பெறுகிறது-பிரதான பாத்திரங்கள் அவரைப் போலவே பணத்தையும் சமுதாய அந்தஸ்தைத் தேடியபடியும் சென்று கொண்டிருப்பவர்களாக இருக்கின்றனர். கடன் பட்டு கடன்காரர்களுக்குப் பணம் தர வேண்டியிருக்கும் பொழுது எழுதும் பழக்கம் பால்ஸாக்கிடம் உண்டு. ஒரு வார்த்தை கூட எழுதாமல் வெளியீட்டாளர்களிடமிருந்து பெருந்தொகையை முன்பணமாக வாங்கிவிடுவார். வியாபாரம் குறித்து தனது நாவல்களில் எல்லோரும் நம்பும்படியாக சிறப்பித்து எழுதியபோதிலும் அவரது தனிப்பட்ட பண விவகாரங்களை அவரால் சமாளிக்க இயலவில்லை.  அவரது முதல் நாவலான The Last Chouan, The Human Comedy என்ற நாவல் தொடரின் முதல் நாவலாக அமைந்தது. The Human Comedy என்கிற தலைப்பே மறுமலர்ச்சிக்கால இதாலியக் கவிஞர் தாந்தேவின் டிவைன் காமெடி என்ற காவியத்திற்கு எதிரிடையாகத் தலைப்பிடப்பட்டிருக்கிறது என்பது கவனிக்கப்பட வேண்டும். The Human Comedyயின் பல கதைகள் 1820களில் பாரிஸ் நகரப் பின்னணியில் அமைந்துள்ளன. பல கதாபாத்திரங்கள் நாவல் தொடர்களில் மறுபடி வருகின்றன. அவை இந்தத் தொடர்ச்சியின் வேறு ஒரு நாவலில் உள்ள கதாபாத்திரங்களை அறிந்து வைத்திருப்பது நாவல்களுக்கிடையேயான ஒருமையைத் தருகிறது. இமானுவெல் ஸ்வீடன்போர்க் என்ற ஸ்வீடன் தேசத்திய விஞ்ஞானி-இறையியல்வாதியின் கோட்பாடுகளினாலும், ஆஸ்திரிய நாட்டு மனோவியல் அறிஞரான ஃபிரான்ஸ் மெஸ்மர் என்பவரின் கோட்பாடுகளினாலும் பால்ஸாக்குக்கு ஏற்பட்ட பாதிப்பு அவரது தாயாரிடமிருந்து பெறப்பட்டதாக இருக்கலாம். பால்ஸாக் படிப்பில் நாட்டமில்லாதவராகயிருந்தார். தத்துவார்த்த விசாரணை மிக்க புத்தகங்களைப் படிப்பதில் மனதைப் பறிகொடுத்தார். யதார்த்த இலக்கியத்தின் முன்னோடியாக விளங்கிய பால்ஸாக் அறிவியலில் மிகுந்து ஈடுபாடு கொண்டவராக இருந்தார். பிரெஞ்சு விஞ்ஞானிகளின் மிகச் சீரிய விஞ்ஞானக் கோட்பாடுகளின் தாக்கத்தினை அவரது படைப்புகள் எடுத்துரைக்கின்றன. Madame Hanska என்ற போலந்து நாட்டு சீமாட்டி அவர் வாழ்வில் அவருக்குக் கிடைத்த காதலிகளில் சிறந்தவராகத் திகழ்ந்தார். இறுதியாக அவரது மரணத்திற்கு சிறிது காலம் முன்பாக அவர்கள் மணம் புரிந்து கொண்டனர். பிரெஞ்சு சமூகத்தை விவரிப்பதாகவும், பிரதிபலிப்பதாகவும் தனது புதினங்கள் அமைய வேண்டுமென பால்ஸாக் விரும்பினார். அதற்கேற்ற வகையில் 17 நாவல் தொகுதிகளாலான படைப்பொன்றை உருவாக்கினார். அவரது காலகட்டத்தினைச் சேர்ந்த மனிதர்களின் வகைமாதிரிகளையும், பழக்க வழக்கங்களையும் பதிவு செய்யும்படி தனது புதினங்களை அமைத்தார் பால்ஸாக்.

5.மிஷல் ப்யூட்டர்(1936-)

நவீன பிரெஞ்சு புனைகதையாளர். மரபுசார்ந்த பத்தொன்பதாம் நூற்றாண்டுப் பாணி புதின இலக்கியத்தை மாற்றியமைப்பதற்கு பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்தவர்களில் மிக முக்கியமானவர். சோதனைப் புதின எழுத்துக்களில் அதிகம் ஈடுபட்டவர். சார்ஸ் பாதெலர் பற்றியும் மாண்ட்டெய்ன் பற்றியும் நீண்ட கட்டுரைகளை எழுதியிருக்கிறார். மிக இறுக்கமாகவும், புறவய வஸ்துக்களை மையப்படுத்தியும் (Object-Centereed), மானுடஉருவியல் எதிர்ப்புமிக்க (Anit-Anthropomorphic)சிக்கனத்துடன் எழுதிய பிரெஞ்சு நிவோவ் ரொமான்ஸ் வகை நாவல்களை எழுதிய அலென் ராப்கிரியே, நதாலி சரோ ஆகியோரின் வரிசையில் முக்கிய இடத்தைப் பெறுகிறார் மிஷல் ப்யூட்டர்.

6.ஸோலா, எமில் (1840-1902)

பிரெஞ்சு நாவலாசிரியர், கட்டுரையாளர் மற்றும் விமர்சகர். பிரான்ஸ் தேசத்தில் தோன்றிய நேச்சுரலிசம் என்ற இலக்கிய இயக்கத்தை ஆதரித்துப் பின்பற்றியவர்களில் முதன்மையானவர். பால்ஸாக் எழுதிய The Human Comedy அளித்த தூண்டுதலில் அதைப் போலவே 20 நாவல்கள் அடங்கிய ஒரு தொடரினை Le Rougan Macquart தனது நேச்சுரலிச கோட்பாட்டின் பின்னணியில் உருவாக்கினார். ஸோலாவின் நேச்சுரலிஸம் பற்றிய கருத்துக்களை The Fortune of the Rougans(1871)என்ற நாவலுக்கு எழுதிய முன்னுரையிலும் The Experimental Novel (1880) என்ற புத்தகத்திலும் காணலாம். ஒரு ஆய்வுக் கூடத்தின் அணுகல்களையும் ஆய்வுகளையும்  நாவலானது பிரதிபலிக்க வேண்டும் என்றார் ஸோலா. கதாபாத்திரங்கள்சமூகவியல், மனோவியல் மற்றும் பாரம்பரியத்தின் விதிகளை அனுசரித்து படைக்கப்பட வேண்டுமென்றார்.  தன்னுடைய புத்தகங்களில் இடம்பெறும் பகுதிகளுக்கு நேரில் சென்று மனிதர்களின் நடத்தைகளை ஆராய்ந்து குறிப்பெடுத்துக் கொள்வது இவர் வழக்கம். Le Rougan Macquartதொடரில் உள்ள நாவல்களில் The-Dram Shop (1877) Germinal(1885)ஆகிய இரண்டும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த புதினங்களாகக் கருதப்படுகின்றன. Nana  என்கிற நாவல் அதன் போர்னோகிராஃபித் தன்மைகளுக்காகப் அவர் காலத்தின் பெரிது படுத்தப்பட்டாலும் இன்று அது சாதாரணமாகத்தான் தெரிகிறது. ஒரு வேசியின் வாழ்க்கையை மிகவும் கருணைமிக்க புரிதலுடன் இதில் ஸோலா படைப்பாக்கினார். இதுவும் 1928இல் எழுதப்பட்ட உழ்ன்ய்ந்ஹழ்க் நாவலும் பாரிஸ் சேரி வாழ்க்கையை தத்ரூபமாகப் பிரதிபலிக்கிறது.

7.ரூகன்-மாக்வா (Rougon-Macquart) தொடர்ச்சி

எமிலி ஸோலாவின் நாவல் தொடர்ச்சியான Rougon-Macquart (1871-93)பிரெஞ்ச நேச்சுரலிச இயக்கத்தின் பிரதான நினைவுச் சின்னமாக விளங்குகிறது.  நாவலுக்கு அவர் அளிக்க நினைத்த அறிவியல்பூர்வமான கண்ணோட்டமும், மனித நடத்தையை பாரம்பரியம் மற்றும் சூழ்நிலைகளால் தீர்மானித்து கணிக்கும் விதமும் இதில் ஸோலாவின் பிரதான அக்கறைகளாக இருந்தன.

8.தாஸ்தாயெவ்ஸ்கி ( 1821-1881 )

தலைசிறந்த ரஷ்ய நாவலாசிரியர். அவரது மரணத்திற்குப் பிறகே அவரை ஆங்கிலம் பேசும் உலகம் அவரை அறிந்து கொண்டது. இலக்கிய உலகில் அவரது தாக்கம் நின்று நிலைத்திருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் உலகத்தை, லட்சியக் கனவிற்கு எதிரிடையான பூமியை இவரது எழுத்துக்கள் தீர்க்கதரிசமாக முன்வைக்கிறார். பெயர் பெற்ற உளவியல் நிபுணர் ஸிக்மண்ட் ஃபிராய்ட் தாஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புலகம் முன்வைக்கும் நனவிலி மனதின் இயக்கங்கள், மற்றும் மனித மனதின் நுட்பங்கள், சிடுக்குகள் முதலியவற்றால் ஈர்க்கப்பட்டவர் என்பவர் மிக முக்கியமான செய்தி. எங்ஙனம் ஒரு அறிவுத்துறையை ஒரு படைப்பாளனின் எழுத்துக்கள் பாதிக்கச் செய்ய முடியும் என்பதற்கு மிக முக்கிய எடுத்துக்காட்டாக விளங்குகின்றன தாஸ்தாயெவ்ஸ்கியின் எழுத்துக்கள். கடவுளில்லாத உலகத்தின் இன்னொரு பரிமாணமும் இவரது எழுத்துலகில் காணக்கிடைக்கிறது. 19ஆம் நூற்றாண்டினைப் பின்னணியாக வைத்து உருவானவை என்ற போதிலும் அவரது எழுத்துக்கள் 20ஆம் நூற்றாண்டிற்கும் பொருந்தக் கூடியவையாக இன்றும் விளங்குகின்றன என்பது அவரது படைப்பாக்கத்திற்கு ஒரு சான்று. அந்நியமாதல், சமூகம்சார்ந்த சீர்குலைவுகள், யதேச்சதிகாரம், மனித விடுதலை மீதான அதன் தாக்கங்கள் என அவருடைய படைப்புகள் தற்காலத்திய வாழ்வுச் சிக்கல்கள் பலவற்றை அலசுவதாகத் தெரிகின்றன. The Crime and Punishment, The Posseseed, Brothers Karamazov ஆகியவை அவரது முக்கிய நாவல்களாகும். சிறு கதை எழுத்துக்களிலும் தன் முத்திரையைப் பதித்திருக்கிறார் தாஸ்தாயெவ்ஸ்கி. பெரும்பாலும் மிகுந்த நெருக்கடியில்தான் அவரது எழுத்துக்கள் உருவாயின. கடன்காரர்கள் நெட்டித் தள்ளும் போதுதான் அவர் எழுத்தை உத்வேகத்துடன் எழுதத் தொடங்கினார். பண நெருக்கடியில் எழுதப்பட்டவை என்ற காரணத்தினால் அவை என்றும் கிஞ்சித்தும் தரம் தாழ்ந்து போய்விடாதவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பணத்துக்காக எழுதுதலும் பணநெருக்கடியில் எழுதுதலும் ஒன்றல்ல.

9.துர்கனேவ், இவான் ஸெர்கயேவிச் (1818-1883)

ரஷ்ய எழுத்தாளர், ரஷ்ய எழுத்து நடைக்குப் பெயர் பெற்றவர். தனித்துவமிக்க பாணியின் முன்னோடி என்று கூறலாம். அவருடைய புதினங்கள், கவிதைகள், நாடகங்கள் எல்லாமே நயங்கூடிய செய்நேர்த்தியாலும், விரிந்த, சமனப்பட்ட கண்ணோட்டத்தினாலும், தெளிவான புரிதலாலும் சிறப்புப் பெறுகின்றன. 1818ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி மத்தியா ரஷ்யாவில் உள்ள ஓரெல் பகுதியில் பிறந்த துர்கனேவ், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மற்றும் மற்றும் பெர்லின் பல்கலைக் கழகங்களில் படித்துப் பட்டம் பெற்றார். தனது பிள்ளைப் பிராயத்தில் அடிமைத் தொழிலாளிகளின் கஷ்டங்களை நேரில் பார்த்ததால் அதுவே அவரது பெரும்பாலான படைப்புகளின் முக்கியக் கதைக் கருவாகியது. முழு நேர இலக்கியவாதியாக மாறுவதற்கு முன் சிறிது காலம் அரசுப் பணியில் இருந்தார். முதலில் கவிஞராக அறிமுகமாகிய துர்கனேவ் நாடகங்களையும் எழுதியிருக்கிறார். பிறகுதான் புதின எழுத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். First Love (1850),  Torrents of Spring.(1872) ஆகிய நாவல்கள் காதலைப் போற்றிப் பரவும் அற்புதப் படைப்புகள். எனினும் அவரது தலைசிறந்த படைப்பாகக் கருதப்படுவது 1862ஆம் ஆண்டு வெளிவந்த  Fathers and Sons.. 1883ஆம் ஆண்டு காலமான துர்கனேவின் அனைத்துப் படைப்புகளும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

10.மார்லார்மே, ஸ்டெபன் (1842-1898)

பிரெஞ்சு சிம்பாலிஸக் கவிஞர்களில் (ஆர்தர் ரைம்போ, பால் வெலேரி, பாதெலர்) மிக முக்கியமானவர். எட்கர் ஆலன் போ என்கிற அமெரிக்க எழுத்தாளரின் எழுத்துக்களைப் படிப்பதற்கு வேண்டி ஆங்கிலம் கற்றுக் கொண்டார். அவரது பிரதான வாழ்க்கையை இங்கிலாந்தில் ஒரு ஆசிரியராகக் கழித்தார். 1800ஆம் ஆண்டு காலத்தில் சிறிய இலக்கியக் குழுக்களில் குரு ஸ்தானம் தரப்பட்டவர். பாதெலெர் என்ற பிரெஞ்சுக் கவிஞரின் பாதிப்பலிருந்து மீண்டு தனக்கான ஒரு கவிதை எழுதுதல் முறையை உருவாக்கிக் கொண்டார். குறிப்பாக கவிதையின் மொழிக்கும் இசையின் மொழிக்குமான சில இடைவெளிகளில் தனது கவிதைகளில் முழுமுற்றாக அகற்றப்பார்த்தார். எனவே அவரது கவிதைகள் பல புரியாமல் போயின. அவரது கொள்கைப்படி வார்த்தைகளுக்கான பிரத்யேக இசையை ஒரு கவிஞன் கண்டடைய வார்த்தைகளையும் இசையையும் அவன் தெரிந்திருத்தல் வேண்டும் என்று நினைத்தார் மல்லார்மே. அவரது கருத்துக்களுக்கு விளக்கமூட்டும்படி சிறிய கட்டுரைகளையும் எழுதினார். Afternoon of a Faun (1876) க்கு டெபுஸி என்ற இசை மேதை ஒரு சாகியத்யத்தை எழுதியதை இங்கு குறிப்பிட வேண்டும்.

11.பிக்விக் பேப்பர்ஸ்

பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆங்கில நாவலாசிரியரான சார்ல்ஸ் டிக்கன்ஸ் எழுதிய மிகவும் நகைச்சுவையான நாவல். திருவாளர் பிக்விக் என்பவரின் சாகசங்களை விரிவாகச் சொல்லும் நாவல் இது.

12.லுக்ரெஷியஸ் (95- 55.கி.மு)

ரோமானியக் கவி. அவரது  On the Nature of Thing ஆறு தொகுதிளாலான கவிதைகள். கிரேக்க நாட்டு தத்துவாதியான டெமாக்கிரட்டஸ் மற்றும் எப்பிக்யூரஸ் ஆகிய இருவரின் தத்துவார்த்த மெய்ம்மைகளை விரித்துரைக்கிறது. லுக்ரெஷியஸ் கடவுள்களின் இருப்பை மறுக்கவில்லை என்றாலும் கூட அவர்களுக்கு மனிதர்களின் விவகாரங்களிலோ அல்லது வாழ்வுப் போக்குகளிலோ அக்கறையில்லை என்று கருதினார். On the Nature of Thing என்ற அவரது படைப்பின் மிகப் பெயர் பெற்ற பகுதிகளில் ஒன்று கற்கால மனிதனின் வாழ்க்கையையும் படிப்படியான மனித நாகரீக வளர்ச்சியையும் பதிவு செய்கிறது.

13.லூஸியன் (120 -180 ஏறக்குறைய)

கிரேக்க எழுத்தாளர் மற்றும் பேச்சாளர். அங்கதச் சுவை மிகுந்த உரையாடல் பாணியை கிரேக்க இலக்கியத்தில் கொண்டு வந்ததற்காக பெயர் வாங்கியவர். துருக்கியலுள்ள ஸமோஸோட்டாவில் பிறந்தவர். பேச்சாற்றல் மற்றும் தத்துவம் ஆகியவற்றில் ஆரம்பத்திலிருந்து தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். அவரது அங்கதச் சுவை மிகுந்த எழுத்துக்கள் குறிப்பாக மூடநம்பிக்கைகளயும், போலியான தத்துவார்த்தப் போதனைகளையும் நையாண்டி செய்தன. Dialogue of the Gods , Dialogues of the Dead The Sale of Lives முதலியவை அவரின் மிகச் சிறந்த படைப்புகள். லூஸியனின் எழுத்து ஆற்றொழுக்கான, மணிப்பிரவாளமான கிரேக்க உரைநடையாகத்  திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

14.மாண்ட்டெய்ன் மிஷல் எக்வீம் (1553-1592)

கட்டுரையை ஒரு இலக்கிய வடிவமாக அறிமுகப்படுத்தி அதற்குரிய இலக்கிய அந்தஸ்தத்தைப் பெற்றுத் தந்தவர் மாண்ட்டெய்ன். அவரது இலக்கியப் பங்களிப்பின் பெரும்பகுதி கட்டுரைகளாகவே இருக்கின்றன. 1580இல் அவரது எழுத்துக்களின் முதல் இரண்டு தொகுதிகள் வெளியாகின. பிறகு மூன்றாவது கட்டுரைத் தொகுதி ஒன்றையும் வெளியிட்டார். இவை யாவும் ஊள்ள்ஹஹ்ள் தலைப்பிலான அவரது நூல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

15.எராஸ்மஸ், டெஸிடெரியஸ் (1466? -1563)

டச்சு நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர், அறிஞர் மற்றும் மனிதநேயவாதி மற்றும் இதாலிய மறுமலர்ச்சியின் முக்கிய அறிவார்த்தப் போக்குகளை வடக்கு ஐரோப்பாவிற்கு பொருள்பெயர்த்துத் தரும் பிரதான மொழிபெயர்ப்பாளரும் கூட. எராஸ்மஸின் எழுத்துக்கள் வட ஐரோப்பா முழுவதிலுமாய் வழக்கத்திலிருந்து வந்த கலாச்சாரத்தின் மீது தாக்கம் ஏற்படுத்தி மாற்றங்களைக் கொண்டு வந்தது. The Praise of Folly (1509),Quentin Massys என்ற Flemish ஓவியரின் ஓவியத்திற்குத் தூண்டுகோலாய் அமைந்தது. இது எராஸ்மஸ் பிற படைப்பாளிகளிடம் ஏற்படுத்திய பாதிப்பிற்கு ஒரு சிறந்த உதாரணம்.

16.க்யூவெடோ, வில்லாகாஸ் ஃபிரான்சிஸ்கோ (1580-1645)

ஸபெயின் தேசத்து எழுத்தாளர். 1613 முதல் 1620 வரை இத்தாலிக்கான ராஜதந்திர பணிகளில் ஈடுபட்டிருந்தார். 1623 இல் ஸ்பெயினுக்குத் திரும்பி வந்ததும் 1632இல் நான்காவது ஃபிலிப் மன்னரின் செயலராக நியமிக்கப்பட்டார். ஆனால் மன்னருக்கு எதிராக அரசியல் அங்கத எழுத்துக்களை எழுதியதற்காக 1639 முதல் 1643வரை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். அவருடைய காலத்தின் மிகச் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராய்த் திகழ்ந்த க்யூவெடோ அங்கதச் சுவை மிகுந்த எழுத்துக்களுக்கும் ஒழுக்கவியல் சார் எழுத்துக்களுக்கும் பெயர் பெற்றவர். ..  என்றழைக்கப்படும் அணியலங்கார எழுத்து நடையில் சிறந்த தேர்ச்சி பெற்றவராயிருந்தார். இதில் முரண்களும் சிலேடைகளும் கலந்திருóதன. Life and Adventures of Buscon(1626) மற்றும் Visions(1657) ஆகியவை க்யூவெடோவின் முக்கியப்படைப்புகளில் சிலவாகும்.

17.மார்லோ, கிறிஸ்டோபர் (1564-1693)

ஷேக்ஸ்பியரின் சமகாலத்தவர், ஆங்கிலக் கவி, நாடகாசிரியர். ஒரு நாடகாசிரியராக ஆறு வருடங்கள் மாத்திரமே இயங்கி வாழ்ந்த போதிலும் அவருடைய அளப்பரிய படைப்பாற்றல் காரணமாக தலைசிறந்த நாடகாசிரியராகக் கருதப்படுகிறார். அவருக்கு முந்திய நாடகாசிரியர்கள் நகைச்சுவையில் கவனம் செலுத்தினார்கள். ஆனால் மார்லோ அவலச்சுவையைக் கையிலெடுத்துக் கொண்டு அதை சிறந்த நாடக ஊடகமாக வளர்த்தெடுத்தார். Doctor Faustus என்ற அவருடைய நாடகத்தில் வரும் கதாநாயகன் சகல துறை அறிவினையும் அடைவதற்காய் சாத்தானிடம் தனது ஆன்மாவை அடகு வைக்கிறான். எல்லாவற்றையும் கண்டு, அனுபவிப்பவன் இறக்கும் தருணம் நெருங்க நெருங்க, உயிர் வாழும் ஆசையில் துடித்துப் புலம்புகிறான். இந்தப் பின்புலத்திலான நாடகத்தில் வாழ்க்கை பற்றி தத்துவங்களும் விசாரணைகளும் மிக நுட்பமான கவித்துவத்தோடு இடம்பெற்றிருக்கின்றன. இந்தப் படைப்பு மார்லோவின் எழுத்தாற்றலின் உச்சமாகக் கருதப்படுகிறது.

18.ரஸ்கின், ஜான்(1819-1900)

பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆங்கில விமர்சகர் மற்றும் உரைநடை எழுத்தாளர். ஆங்கில ஓவியரான வில்லியம் டர்னர் என்பவரின் ஓவியங்களால் பாதிக்கப்பட்டவர். காந்தியைப் பாதித்த பொருளாதார சிந்தனையாளர். கலையை மதத்திற்கு பதிலியாக ஆக்க முயன்றவர்களில் முக்கியமானவர் ரஸ்கின். அவரது முக்கியமான உரைநடை Modern Painters, The Seven Lamps of Architecture, The Stones of Venice, Unto this Last.

19.சாமுவெல் டேலர் கோல்ரிட்ஜ் (1772-1834)

ஆங்கிலக் கவி, விமர்சகர், மற்றும தத்துவவாதி. ரொமாண்டிக் இலக்கியத்தின் தந்தை என்று இவரைக் கூறலாம். 1795இல் வொர்ட்ஸ்வொர்த் மற்றும் அவரது சகோதரி டோரதியுடன் ஏற்பட்ட நிலைத்த நட்பு காரணமாக இரு கவிஞர்களுமாக Lyrical Ballads என்ற பின்னாளில் ஆங்கில கவிதை வராலாற்றில் மைல்கல்லாக மாறிய கவிதைத் தொகுதியை வெளியிட்டனர். 1797-98 வருடங்களின் காலகட்டத்தில் குப்லைகான் மற்றும் கிரிஸ்டபல் போன்ற அற்புதமான கவிதைகளை எழுதினார். இலக்கியம் மற்றும் தத்துவம் சார்ந்த சொற்பொழிவுகளையும் 1808-1819 வருடங்களின் போது ஆற்றினார். போதைப் பொருள் சாப்பிடும் பழக்கத்தால் குடும்பத்திலிருந்து பிரிந்து வாழ நேர்ந்த போது தனது வாசகரும் மருத்துவருமாகிய ஜேம்ஸ் கில்மேன் வீட்டில் தங்கி Biographia Literaria(1817) என்ற அற்புதப் படைப்பை எழுதினார். ஏறத்தாழ மிகச் சிறந்த சமூகவியல் விமர்சனம் முதன் முதலாக இங்கிலாந்தில் உருவாவாதற்கு இந்த நூலே காரணமாக இருந்தது எனலாம்.

20.Wilhelm Meister ஜான் கதே(1749-1832) என்ற பத்தொன்பதாம் நுற்றாண்டு ஜெர்மானியக் கவிஞரின் அதிகம் சுயசரிதமாகத் தெரியக் கூடிய முக்கியமான நாவல். வெளிவந்த வருடம் 1795.

21.மார்செல் ப்ரூஸ்(ட்) (1871-1922)

பிரெஞ்சு நாவலாசிரியர். பல தொகுதிகளால் ஆன, சோதனைப் புதினத்திற்கு எடுத்துக் காட்டாகக் காட்டப்படும் Remembrance of Things Pastஎன்ற படைப்பை எழுதியவர். இந்த பலதொகுதி நாவல் உலக இலக்கியத்தின் மிகப் பெரிய சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 1871ஆம் ஆண்டு பிரான்சில் ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்த ப்ரூஸ்ட் சட்டம் பயின்றாலும் இலக்கியத்தையே தனது முழு நேர வேலையாக எடுத்துக் கொண்டார். சிறு வயதிலிருந்தே ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் தனது 35வது வயதில் நோய் முற்றி படுத்த படுக்கையாகினார். எஞ்சிய வாழ்நாள் முழுவதும் அவரது மகோன்னத படைப்பான Remembrance of Things Past எழுதுவதில் முனைந்தார். உயர் சமூகத்தில் ஓய்வாக இருக்கும் ஒரு மனித மூளையின் இயக்கங்கள் மிக நுண்மையாக இவரது படைப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏழு தொகுதிகளான இந்த படைப்பில் உளவியல் மற்றும் தத்துவார்த்த கண்ணோட்டங்கள் முனைப்பட்டுத் தெரிகின்றன. பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது இந்தப் புதினம். 1922ஆம் ஆண்டு ப்ரூஸ்ட் இறந்த போது மேற்சொன்ன படைப்பின் இறுதி மூன்று புத்தகங்கள் கையெழுத்துப் பிரதிகளாகவே இருந்தன.

22.பால் வெலேரி (1871-1945)

நவீன பிரெஞ்சுக் கவிஞர் மற்றும் விமர்சகர். கவிதைக் கொள்கையாளர். கவிதை வடிவிலும் சரி, உரைநடையிலும் சரி, மிகச்சிறந்த நவீன தத்துவார்த்தப் படைப்பாளிகளில் ஒருவராகக் கருதப்படுபவர். சிந்தனைக்கும் செயலுக்குமிடையிலான மோதல் கலாபூர்வமாக தீர்க்கப்படுவதன் மூலம் வாழ்க்கையின் அர்த்தத்தை நாம் பெறும் விதத்தில் அவருடைய படைப்புகள் இயங்குகின்றன. வெலேரி 1892இல் பாரிசில் குடியேறினார். அங்கே சிம்பாலிசக் கவிஞர்களில் முக்கியமானவரான ஸ்டெபென் மல்லார்மே என்பவரின் வட்டத்தில் இணைந்து கொண்டார். 1889-1898 ஆகிய வருடங்களுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் எழுதப்பட்ட வெலேரியின் கவிதைகளில் சிம்பாலிஸ்டுகளின் தாக்கத்தைக் காண முடிகிறது. கவிதையை மிகச் சிறந்த படைப்பாக்க உத்தியாக வெலேரி கருதினார். அரூப சிந்தனைகளுக்கு தனது கவிதைகளில் உருவம்  தர முயன்றார். எனவே வெலேரியின் எழுத்துக்கள் அடர்வு கூடியதாய், எளிய புரிதலுக்கு அப்பாற்பட்டவையாக இருக்கின்றன.

23.லேடி முராஸாகி (அ) முராஸாகி ஷிபுகு (978? -1026)

ஜப்பானியப் பெண் எழுத்தாளரான முராஸாகி ஷிபுகு உலகின் முதல் நாவல் என்று கருதப்படுகிற The Tale of Genji எழுதியவர். இந்த நாவல் 1925-32விற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் ஆர்தர் வாலே என்பவரால் முதன் முதலாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. முராஸாகியின் வாழ்க்கை பற்றி அதிக விவரங்கள் அறியக் கிடைப்பதில்லை. ஃப்யூஜிவாரா நோபுடாக என்பவரை மணந்திருந்தார் என்பதும் அரசவை வாழ்க்கை பற்றிய விவரங்களடங்கிய நாட்குறிப்பு ஒன்றை பராமரித்து வந்திருந்தார் என்பதும், தன் கணவரின் இறப்புக்குப் பிறகு அந்த விவரங்களை புதினமாக வடிவமைத்ததாகவும் தெரிய வருகிறது. அரசி அகிகோவின் ஆட்சிக் காலத்திலான அரசவை வாழ்க்கையைப் பற்றிய துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது இந்த நாவல். இளவரசர் ஜெஞ்சியின் வாழ்க்கையில் இடம் பெறும் பெண்கள் தனித்தனியளவில் நுட்பமாகப் படம் பிடித்துக் காட்டப்படுகிறார்கள். நாவல் இறுதிப் பகுதியை நோக்கி வர வர கதையின் தொனி முதிர்வும், தீவிரமும் கூடியதாகிறது. இகவாழ்க்கையின் கணநேர சந்தோஷங்களைப் பற்றிய பௌத்தமதக் கண்ணோட்டங்கள் கதையின் பிற்பகுதியில் இடம் பெறுகின்றன. இன்றளவும் முராஸாகி ஜப்பானிய இலக்கியத்தின் மிகச் சிறந்த படைப்பாளிகளில் ஒருவராகப் போற்றப்படுகிறார்.

24.சாகாக்கள் (Sagas)

சாகாஸ் என்பவை மத்தியகால கட்டத்தில் ஐஸ்லாந்தில் நூற்றுக் கணக்காகத் தோன்றிய வாய்மொழிக் கதைகள். சாகா என்ற வார்த்தைக்கு “சொல்லுதல்” என்று பொருள். நார்வீஜிய மன்னர்கள் மற்றும் வீரபராக்கிரமங்கள் நிறைந்த நிஜ அல்லது கற்பனைக் கதை மாந்தர்கள், ஐஸ்லாந்து மற்றும் ஸ்காண்டிநேவியாவைச் சார்ந்த மன்னர்களைப் பற்றி உரைநடையில் எழுதப்பட்டவை. இவற்றின் ஆசிரியர்கள் அடையாளம் காணப்படவில்லை. பல கதை சொல்லிகளின் மூலமாகக் சொல்லப்பட்ட பிறகே இவை எழுத்து வடிவத்திற்கு வந்திருக்க வேண்டும். மூலக் கையெழுத்துப் பிரதிகள் ஒன்று கூடி மிஞ்சவில்லை. திருத்தங்களும், இடைச்செருகல்களும் கூடிய பிரதிகள் 13ஆம் நூற்றாண்டிலிருந்து பெறக் கிடைக்கின்றன

25.லியோபார்டி, கியோகோமா (1798-1837)

இதாலியக் கவிஞர், அறிஞர் மற்றும் மாபெரும் படிப்பாளி. இவரது படைப்பாக்கங்களில் நம்பிக்கையின்மை என்கிற அம்சம் தீவிரத்தன்மையுடன் இடம் பெறுகிறது. கூடவே இவரது கவிதைகளில் கச்சிதமான வடிவமைப்பும் நுட்பமான அறிதலும் காணக்கிடைக்கின்றன. ரெக்காண்ட்டி என்னுமிடத்தில் பிறந்த லியோபார்டி பள்ளிக்கு அனுப்பப்படாமல் வீட்டிலேயே ஆசிரியர் வரவழைக்கப்பட்டு கல்வி கற்பிக்கப்பட்டார். ஒரு எல்லைக்குப் பிறகு தனக்குத் தானே லியோபார்டி பயிற்றுவித்துக் கொண்டார். அவரது பலவீனமான உடல்நலம் எல்லையற்ற படிப்பினால் மேலும் சீர் குலைந்தது. லியோபார்டியை தாமதமாக ரொமாண்டிக் காலத்தில் வந்து சேர்ந்த கிளாசிசிஸ்ட் என்று கூறுவது பொருந்தும். காரணம் அவரது எழுத்துக்களில் கட்டுப்பாடும், தெளிவும், உத்திரீதியான பூரணமும் இருந்தது. இவர் தனது தேசப்பற்று மிக்க கவிதையான  All Italia (1818) மூலம் எழுத்துலகத்தின் கவனத்தை ஈர்த்தார். பின் தனது கவித்துவத்தின் மூலம் 19ஆம் நூற்றாண்டின்  தலைசிறந்த உணர்வெழுச்சிக் கவிஞராக உயர்ந்தார். இடைக் கால கவிதையமைப்பை ஒற்றி எழுதப்பட்ட அவரது தீர்க்கதரிசனக் கவிதையான  Approach of Death (1816) அவரது மகிழ்ச்சியற்ற குழந்தைப் பிராயத்தின் அவலமான தனிமையை வெளிப்படுத்துகிறது. காதலில் ஏற்பட்ட ஏமாற்றம் ‘ஸில்வியாவுக்கு’ என்ற ஆரம்பகாலக் கவிதையைத் தோற்றுவித்தது. காதலில் ஏற்பட்ட தோல்வி பின்னாளில் அவரது மிகத் துயரமான கவிதைகளுக்குக் காரணமாகியது. கவிதைகளில் வெளிப்படுத்திய சிந்தனைகளையே சற்றும் குறைக்காமல் தனது கட்டுரைகளிலும் வெளிப்படுத்தினார். அவை ஞல்ங்ழ்ங்ற்ற்ங் ம்ர்ழ்ஹப்ண் (1827) என்ற பெயரில் வெளிவந்தன.

26.ஸ்டெந்தால் (1783-1842) (Stendhal)

இது மேரி-ஹென்ரி பெய்ல் என்ற பிரெஞ்சு நாவலாசிரியர் மற்றும் இலக்கிய விமர்சகரின் புனைப் பெயராகும். 1800களின் மிக முக்கிய பிரெஞ்சு நாவலாசிரியர்களில் ஸ்டெந்தாலும் ஒருவர். அவரது முக்கிய ஆக்கங்களாக The Red and the Black (1830) மற்றும் The Charter House of Parma(1839) ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இரண்டிலுமே அந்நியமாக்கப்பட்ட கதாநாயகர்கள் ஒடுக்குமுறை கூடிய சம்பிரதாயங்கள், பழக்கவழக்கங்களை எதிர்த்தபடியே மகிழ்ச்சியைத் தேடிச் செல்கின்றனர். ரொமாண்டிக் இயக்கத்தின் ஒரு அங்கத்தினராக ஸ்டெந்தால் கருதப்பட்டாலும் இந்த இரு படைப்புகளும் அவரை பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் வரிசை யதார்த்தவாதிகளில் ஒருவராக நிறுவுகின்றன. பெரும் சக்திகளுக்கு எதிராய் தனிமனினின் கையறுநிலை பற்றிய அவரது சிந்தனைகள் அவரது படைப்புகளை செழுமைப் படுத்தின. நீட்ஷே முதலான தத்துவவாதிகள், மார்ஸெல் ப்ரூஸ்ட், ஆல்பெர் காம்யூ முதலான படைப்பாளிகளும் ஸ்டெந்தாலின் எழுத்துக்களாலும் சிந்தனைகளாலும் பெரிதும் எழுச்சியூட்டப்பட்டவர்கள். ஸ்டெந்தாலின் கதாபாத்திரங்கள் அவர் வாழ்ந்த காலத்தை பிரதிபலிப்பபவையாக அமைந்தன.

*ரூஸோ ழீன் ழாக் (1712-1778)

பிரெஞ்சு தத்துவஞானி, சமூக மற்றும் அரசியல் கருத்தியலாளர், இசைக் கலைஞர், தாவரவியலாளர். என்லைட்டன்மென்ட் காலகட்டத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். பிரதானமாக ரூஸோ அரசியல் சிந்தனைப் பாங்கான எழுத்துக்களுக்கு பெயர் பெற்றவர் On Social Contract (1762)என்ற நூலில்  மக்கள் தங்களுக்கிருக்கும் சுதந்திரத்திற்கான, பிரிக்கவியலாத உரிமைகளைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் நேரடி ஜனநாயக ஆட்சி நிலவும் ஒரு கற்பனை உலகத்தைச் சிருஷ்டிக்கிறார். எமிலி(1762) என்ற சீரிய நாவலில் சுய சிந்தனையும், மனச் சமன்நிலையும் உள்ள குழந்தைகளை உருவாக்கவென ஒரு புதிய கல்விக்கோட்பாட்டினை முன் வைக்கிறார். அவருடைய புதுமையான கருத்துக்கள் அவரை பிரெஞ்சு மற்றும் ஸ்விஸ் நாடுகளின் அதிகார வர்க்கதினரின் அதிருப்திக்கு ஆளாக்கின.

27.ஃபொன்டெனெல், பெர்னார்ட் (1657-1757)

பிரெஞ்சு எழுத்தாளர், விஞ்ஞானி. சட்டம் பயின்ற போதிலும் இலக்கியத்தை தனது முழு நேரப் பணியாகத் தெரிவு செய்து கொண்டார். முப்பது வயதை எட்டுவதற்குள் அவர் பல நாடகங்கள், இசைநாடகங்கள், சிறுகதைகள், உரையாடல்கள் மற்றும் விஞ்ஞானம் மீதான ஆய்வலசல் கட்டுரைகள் ஆகியவற்றை எழுதியிருந்தார்.  Dialogues of the Dead(1683)என்ற அவரது படைப்பு அவரை எழுத்துலக மேதையாக நிறுவியது. 1699 முதல் 1739 வரை அறிவியல் கழகத்தின் செயலராகப் பணிபுரிந்த ஃபான்டெனெல் அகாதெமியின் வரலாறு சம்மந்தமான பல ஆக்கங்களை எழுதினார். Discourses on the Plurality of Worlds(1686) என்ற அவரது மிகச்சிறந்த படைப்பில் அவர் கோபர்னிக கோளியங்கு கோட்பாட்டினை மிகச்சிறந்த இலக்கிய வடிவில் வழங்கியிருந்தார்.

28.பஃபன், ஜார்ஜ் (1707-1788)

பிரெஞ்சு நாட்டின் இயற்கையியல்வாதி. (Naturalist)பைபிளை அடிப்படையாகக் கொள்ளாத, உடலியல் மற்றும் பூமி அமைப்பியல் பற்றிய உலகளாவிய வரலாற்றின் மிக ஆரம்பகால எழுத்துக்களை எழுதியவர். மருத்துவம், தாவரவியல் மற்றும் கணிதம் பயின்றவர். 1749க்கும் 1789க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் பிரசுரமான 36 தொகுதிகள் கொண்ட அவரது History Naturelle (Natural History) பஃபனின் தலை சிறந்த படைப்பாகும். பூமியின் வரலாறு பற்றிய முதல் நேச்சுரலிச விவரணைக் குறிப்பேடு இது. தாவரவியல், கனிமவியல், விலங்கியல் போன்றவற்றின் உற்பத்திகளை முழு விவரங்களை இந்தப் புத்தகம் அகல்விரிவாகத் தருகிறது.

Posted in Uncategorized | Tagged: , | Comments Off

ஒரு அசுத்தக் கவிதையை நோக்கி-பாப்லோ நெரூதா-Translated by Brammarajan

Posted by brammarajan on November 23, 2008

pablo_neruda_1966

ஒரு அசுத்தக் கவிதையை நோக்கி-பாப்லோ நெரூதா(Towards An Impure Poetry-Pablo Neruda)

தமிழில் பிரம்மராஜன்

பகல் மற்றும் இரவின் சில மணிநேரங்களில் ஓய்விலிருக்கும் புறப் பொருட்களின்  உலகினைக் கூர்ந்து பார்ப்பது நல்லது. தமது தாவர மற்றும் கனிமச் சுமைகளுடன் தூசிபடர்ந்த நெடுந்தூரங்களைக் கடந்து வந்த சக்கரங்கள், நிலக்கரித் தொட்டிகளிலிருந்து வந்த சாக்கு மூட்டைகள், தச்சு ஆசாரியின் கருவிப் பெட்டிக்கான கைப்பிடிகள் மற்றும் பிடிகள். அவற்றிலிருந்து வழிகின்றன மனிதனின் பூமியுடனான தொடுகைகள், தொந்தரவுக்குள்ளான ஒரு பாட்டுக்காரனின் பிரதியைப் போல. பொருள்களின் பயன்படுத்தப்பட்ட மேற்புறங்கள், பொருட்களுக்கு கைகள் தரும் தேய்மானப் பதிவு, காற்று, சில சமயங்களில் துன்பகரமாகவும், பல சமயம் பரிதாபமாயும், அது போன்ற விஷயங்கள்-எல்லாமுமே உலகின் யதார்த்தத்திற்கு ஒரு விநோத ஈர்ப்பினை நல்குகின்றன-அதை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது.

அவற்றில் மானுட இருப்பின் குழம்பிய அசுத்தத்தை ஒருவர் பார்க்கவியலும், பொருட்களின் அம்பாரங்களில், வஸ்துக்களின் பயன்பாடு மற்றும் பயன்நிறுத்தம், கைரேகைகள் மற்றும் காலடிச்சுவடுகள், உள் மற்றும் வெளிப்புறங்களில் வேலைப்பாடமைந்த கலைப்பொருட்களை மூழ்கடித்தவாறிருக்கும் மானிட இருப்பு.

அது நாம் தேடிக்கொண்டிருக்கும் கவிதையாக இருக்கட்டும்: கைகளின் கடமையுணர்ச்சியால் தேய்ந்து போய், அமிலங்களால் அரிக்கப்பட்டது போல, புகை மற்றும் வியர்வையில் தோய்ந்துபோய், லில்லி மலர்கள் மற்றும் சிறுநீரின் வாசனையடித்தபடி, விதம்விதமாய் நம் வாழ்வுக்கான தொழில்களால் அழுக்குத் தெறிக்கப்பட்டு, சட்டத்திற்கு உள்ளாகவோ அல்லது அதற்கு அப்பாலோ.

நாம் அணியும் உடைகள் போல் அசுத்தமான ஒரு கவிதை, அல்லது நம் உடல்களைப் போல, சூப்கறைபடிந்து, நம் அவமானமிக்க நடத்தையால் அசுத்தப்படுத்தப்பட்டு, நம் சுருக்கங்கள், இரவு விழிப்புகள் மற்றும் கனவுகள், அவதானிப்புகள் மற்றும் முன்கூறல்கள், வெறுப்பு மற்றும் காதல்களின் அறிக்கைகள், எளிய நாட்டுப்புற வாழ்க்கை மற்றும் காட்டுவிலங்குகள், எதிர்பாராச் சந்திப்புகளின் அதிர்ச்சிகள், அரசியல் விசுவாசங்கள், மறுப்புகள் மற்றும் சந்தேகங்கள், ஒப்புதல்கள் மற்றும் வரிகள்.

காதல்பாடல்களின் புனித விதிகள், தொடுதலின் சட்டதிட்டங்கள், நுகர்வு, சுவை, பார்வை, கேட்டல், நியாயத்திற்கான பேருணர்ச்சி, பாலுறவுக்கான விழைவு, கத்திக் கொண்டிருக்கும் கடல்–வேண்டுமென்றே நிராகரித்து, மேலும் எதையுமே ஏற்றுக்கொள்ளாதிருத்தல்: காதலின் போக்குவரவில் நிகழும் பொருட்களின் ஆழ்ந்த ஊடுருவல், புறாவின் கால்களினால் அசுத்தமான மிகப்பக்குவமான கவிதை, பனிக்கட்டியால் குறியிடப்பட்டதும் பற்குறிபட்டதும், ஒருவேளை நமது வியர்வைத்துளிகளால் நுண்மையாய்க் கடிபட்டும் பயன்பட்டும். அவ்வளவு ஓய்வற்று வாசிக்கப்பட்ட வாத்தியம் அதன் மேற்புறங்களின் வசதியை நமக்கு விட்டுத் தருவது போல், மற்றும் காடுகள் காட்டுகின்ற கருவியின் தற்பெருமையால் வடிவமைந்த முடிச்சுகள் நிறைந்த மென்மைகள். மலர் மற்றும் நீர், கோதுமையின் மணி எல்லாம் ஒரே விலைமதிப்பற்ற திட்பத்தைப் பங்குகொள்கின்றன: தொடுஉணர்வின் மட்டற்ற ஈர்ப்பு.

அவற்றை எவரும் மறந்துவிட வேண்டாம். துயரம்,  அசுத்தமான பழைய உணர்ச்சி அருவருப்பு, கேடுறாமல், ஒரு வெறியின் கட்டற்றதன்மையில் தூக்கிவீசப்பட்ட மறதிக்காட்பட்ட வியத்தகு பேரினங்களின் பழங்கள்–நிலவொளி, அடர்ந்து வரும் இருளில் அன்னப்பறவை, பழகிப்புளித்துப் போன விருப்பங்கள் யாவும்: நிச்சயமாய் அதுதான் ஒரு கவிஞனின் அத்தியாவசியமானதும் முழுமுற்றானதுமான அக்கறை.

வஸ்துக்களின் மோசமான சுவையை எவர் ஒருவர் தவிர்த்து ஒதுக்கினாலும்

அவர்கள் பனித்தரையில் வீழ்வார்கள்.

Posted in Uncategorized | Tagged: , | Comments Off

போர்ஹேவின் விநோத விலங்குகள் (A Review of Jorge Luis Borges’s Book of Imaginary Beings :Brammarajan)

Posted by brammarajan on November 23, 2008

bkpicturejlb

போர்ஹேவின் விநோத விலங்குகள்

(A Review of Jorge Luis Borges’s Book of Imaginary Beings :Brammarajan)

பிரம்மராஜன்

“தத்துவத்தின் வரலாற்றிலிருந்து ஒரு காட்சிப் பொருளைப் பற்றி நான் விவாதிக்கவில்லை.” –போர்ஹே

பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து இன்று வரையிலான உலக இலக்கிய வரலாற்றில் அகராதிகள் பெரும் ஈர்ப்பினை படைப்பாளிகளுக்கு அளித்து வந்திருக்கின்ற விஷயம் உறுதிப்படுகிறது. ஆங்கிலத்தின் முதல் அகராதித் தொகுப்பாளர் அல்லது லெக்ஸிகோகிராபர் (Lexicographer) டாக்டர் சாமுவெல் ஜான்சன். கவிஞர், விமர்சகர். கடும் சிரமங்களுக்கிடையியே தனி ஆளாக அவர் ஆங்கிலத்தின் முதல் அகராதியைத் தொகுத்தார். அகராதியின் மூலம் இலக்கிய உலகில் பிரபலம் மட்டுமடையவில்லை, சர்சைக்குரியவராகவும் ஆனவர் டாக்டர் ஜான்சன்.  21 ஆம் நூற்றாண்டில் ராபர்ட்டோ கலோஸோ (Roberto Calasso)என்கிற இதாலியர் ஏறத்தாழ அகராதி வடிவில் புனைகதை எழுதுபவராக இருக்கிறார். ஏற்கனவே மிலோரட் பாவிக் என்பவரின் காஸார்களின் அகராதி (Dictionary of the Kazars) அகராதி வடிவ  பின் நவீனத்துவ புதினம் பற்றிய சிறிய சலசலப்புகள் தமிழ் இலக்கிய உலகில் ஏற்பட்டிருக்கின்றன. ராபர்ட்டோ கலாஸோ இன்று கிரேக்கப் புராணிகத்தை புனைகதையளவுக்கு நிறைவு தரும்படி (The Marriage of Cadmus and Harmony) எழுதுவதற்கும் அவரது மிகச் சமீப நூலான “கா” (Ka)வில் இந்தியப் புராணிகத்தை புனைவளவுக்கு எழுதியிருப்பதற்கும் ஆதர்ச முன்னோடி ஜோர்ஜ் லூயி போர்ஹேவாகத்தான் இருக்க முடியும்.

இந்த சமயத்தில் இது வரை அதிகம் கவனிப்பிற்கு உள்ளாகாதிருக்கும் போர்ஹேவின் புத்தகமான கற்பனை விலங்குகளின் நூல் (The Book of Imaginary Beings )பற்றி இங்கு விவாதிப்பது பொருந்தும்.  ஒரு புதின எழுத்தாளருக்கு அகராதியையோ அல்லது நிகண்டையோ தொகுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏன் ஏற்படுகிறது என்ற கேள்வியை எழுப்பிக் கொள்வோமானால் போர்ஹேவின் காஸ்மாபொலிட்டன் கலாச்சாரம் நம் நினைவுக்கு வரும். அப்படி வந்தாலும் அது போதிய நிறைவளிப்பதாக இருப்பதில்லை. கட்டற்று விரியும் பல் உலகப் புராணிகக் கதைகளை ஒரு அமைவுக்குக் கொண்டுவரும் செயல்பாட்டில் அவர் தன் அறிவுச் சேகரத்திற்கே ஒரு தனிநபரின் கட்டுப்பாட்டினையும் ஒழுங்கினையும் கொண்டு வர முயலும் யத்தனம் தெரிகிறது. மேலும் The Universal History of Infamy என்ற சிறுகதைத் தொகுதியுமே கூட ஒரு விதமான அகராதித்தன்மை நிறைந்ததாய்த்தான் காணப்படுகிறது.

போர்ஹேவின் விலங்குப் பிரபஞ்சத்தில் நிஜ விலங்குகளை விட கற்பனை விலங்குகளுக்கே அதிகப் பிரதானம் தரப்பட்டிருக்கிறது. மேலும் இந்த விலங்குகள் பற்றிய அகராதிக் குறிப்புகள் பெரும்பாலும் கதைகளின் வடிவில் அமைந்திருக்கின்றன.

நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தின் அனுபந்தத்தைப் படிப்பது போலிருக்கிறது “உலுப்பி” பற்றிய குறிப்பு. மகாபாரதக் கதையில் அர்ஜ÷னன் தீர்த்த யாத்திரையின் போது கங்கையில் இறங்கி நீராடிக் கறையேறித் திரும்பும்  பொழுது உலுப்பி என்ற நாக கன்னிகை அவனைப் பற்றி இழுத்து அவன் அவளைப் புணர்ந்து மகிழ்விக்க வேண்டுமென்கிறாள். பிரம்மச்சரிய விரதத்திலிருக்கும் தான் எப்படி அவ்வாறு செய்ய இயலுமென்று அர்ஜூனன் கேட்கிறான். அவனது விரதமும் கெடாமல் அவள் விருப்பமும் பழுதுபடாமல் காரியமாகும்படியான உபாயத்தைச் சொல்லச் சொல்லி கேட்கிறான் அர்ஜூனன். அவளைப் புணர்ந்து காமநோயிலிருந்து அவளை ரட்ஷிப்பதென்பதும் ஒரு தர்மம் ஆதலால் அவனது விரதம் கெடாது என்கிறாள் உலுப்பி. அதற்கிணங்கி அன்றிரவு அவளுடன் கழித்து இரவாந் என்கிற மகனையும் அவளிடத்தில் பிறப்பித்துச் செல்கிறான். (மகாபாரதம்-அத்தியாயம்.234). இதில் போர்ஹே கொடுக்காத ஒரே ஒரு தகவல் உலுப்பி மற்றும் அர்ஜூனன் ஆகிய  இருவருக்குப் பிறந்த குழந்தையின் பெயர் மாத்திரம்தான்.

தனிமையில், ஒரு அத்தி மரத்தடியில் புத்தர் தியானத்திலிருந்த சமயம் அவரை புயலும் மழையும் வலு கொண்டு தாக்கின. அவரைப் பாதுகாக்கும் பொருட்டு ஒரு நாகம்(ர்) தன் உடலைக் கொண்டு ஏழு மடக்கு அணைப்பின் மூலம் அவரைச் சுற்றி அரண் அமைத்ததையும் தன் ஏழு தலைகளைக் கொண்டு அவருக்கு குடையளித்ததையும் கண்ட புத்தர் அந்த நாகரைத் தன் நம்பிக்கையின் வழிக்கு மாற்றுகிறார். நாகர்கள் மேகங்களையொத்த பாம்புகள். அவர்கள் பாதாள லோகத்து அரண்மனைகளில் வசிப்பவர்கள். புத்தர் மனிதர்களுக்கு ஒரு வித அறங்களையும் இன்னொரு விதமான அறங்களை கடவுளர்களுக்கும் போதித்ததாக நம்பப்படுகிறது.  இரண்டாவதாய்ச் சொல்லப்பட்ட ரகசியச் சட்டங்கள் சொர்க்கத்திலும் நாகர்களின் அரண்மனைகளிலும் பாதுகாக்கப்பட்டிருந்தன. நாகர்கள் பல நூற்றாண்டுகளுக்குப் பிற்பாடு இவற்றை பின்னர் வந்த பிக்குவான நாகார்ஜூனனுக்கு வெளிப்படுத்தினர்.  அசோகர் கண்டு இடித்துக் கட்ட நினைத்த மற்றொரு நாகர் அரண்மனை பற்றியும் அங்கே அவர் சந்தித்த பிராமணனுடனான உரையாடலும்  பதிவாக்கப்பட்டிருக்கிறது. நாகர்கள் பற்றிய இந்தக் கதைகளும் குறிப்புகளும் ஒரே ஒரு பக்கத்தில் போர்ஹேவால் சொல்லப்பட்டிருக்கிறது.

கீழை நாடுகள் போர்ஹேவின் மனதில் ஒரு அகலாத ஆக்கிரமிப்பைச் செய்து வந்திருக்கின்றன.  அவற்றில் எகிப்து, இந்தியா, மற்றும் சீனா ஆகிய நாடுகள் பிரத்யேகமானவை. கீழை நாடுகளுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையிலான உரையாடல் போர்ஹேவைப் பொருத்தவரை திருப்தியற்றதாய் இருக்கிறது. சீனாவிலிருந்து வரவழைக்கப்பட்ட மஞ்சள் பட்டுத் துணியால் ஆன புத்தக பைண்டிங் ஒன்றினைத் தொட்டுணர்ந்த கவிஞர் வர்ஜில் அந்த விச்ராந்தியான சீன நாட்டினை கற்பனை மட்டுமே செய்தார். இது தவிர பிளினி எழுதிய இயற்கை விஞ்ஞானம் என்ற நூலில் சீனா பற்றியும், பாரசீகம் பற்றியும், போரஸ் மன்னன் ஆட்சி செய்த இந்தியாவைப் பற்றியும் குறிப்புகள் இருக்கின்றன. பிறகு சிலுவைப் போர்களில் பங்கேற்க வந்தவர்கள் தங்களின் நினைவுகளாக எடுத்துச் சென்ற கீழை நாடுகளின் மனப்பதிவுகள். இதற்கடுத்து மார்க்கோ போலோ. 1704 ஆம் ஆண்டில் ஆயிரத்து ஒரு இரவுகளின் முதல் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்ட பின், ஐரோப்பிய இலக்கியத்தின் ரொமாண்டிக் இலக்கிய காலகட்டத்தின் பொழுது மீண்டும் கீழை நாடுகள் மேற்கு நாடுகளின் பிரக்ஞையை ஆக்கிரமிக்கின்றன. இதில் குறிப்பிடப்பட வேண்டிய இரண்டு பிரதான  இலக்கிய ஆசிரியர்கள்   கவிஞர் பைரன் மற்றும் விக்டர் ஹியூகோ ஆவர்.

போர்ஹேவைப் பொருத்தவரை ஆயிரத்து ஒரு இரவுகள் மொழி பெயர்ப்பு வெளியிடப்பட்டது எல்லா ஐரோப்பிய இலக்கியங்களுக்கும் ஒரு முக்கிய இலக்கிய நிகழ்வாகும். ஆயிரத்து ஒரு இரவுகள் எழுதியவர் ஒரே ஒரு ஆசிரியராக இருக்க முடியாது. அது பலருடைய கூட்டு இலக்கிய இணைவாகத்தான் இருக்க முடியும். ஆயினும் அந்தத் தனித்தனி ஆசிரியர் எவருமே தான் ஒரு உன்னதமான புத்தகத்தின் கட்டுமானத்தில்  உதவுவதாக நினைத்திருக்க மாட்டார். போர்ஹேவே குறிப்பிடுகிற மாதிரி ஆயிரத்து ஒரு இரவுகள் கீழைநாடுகளை விட மேற்கு நாடுகளிலேயே அதிகம் சிலாகிக்கப்பட்டு ஏற்கப்பட்டிருக்கிறது. ஆயிரத்து ஒரு இரவுகள் ஒரு எல்லையற்றதும் முடிவற்றதுமான புத்தகம். அதில்தான் இருக்கிறது அதன் தீராத வசீகரம்.

வருட வரிசையியலும்,வரலாறும் முக்கியமான இரண்டு மேற்கத்திய கருத்துருவாக்கல்கள் அல்லது கண்டு பிடிப்புகளே. இந்தியத் தத்துவ வரலாறுகளையோ, சீன இலக்கிய வராலாறுகளையோ, பாரசீக இலக்கிய வரலாறுகளையோ நாம் பார்க்க முடியாதென்கிறார் போர்ஹே.

பாதி விலங்கு பாதி மனிதன், விலங்கு மற்றும் பறவையினங்கள் பிணைந்த பின்னப் பிணைப்பு, கனிமமாகயிருந்து உயிரியாகி விலங்காகும்  உருவ மாற்றம், மனித இனத்தை வெறுத்தழிக்கும் வன் உயிரிகள், தத்துவவாதி இமானுவெல் ஸ்வீடன்போர்க் என்பவரால் கற்பனை செய்யப்பட்ட மிருகம், பறவைகளின் பேரரசரான சிமுர்க், தன் சாம்பலிலிருந்தே மீண்டும் சுயசிருஷ்டி செய்து கொள்ளும் ஃபீனிக்ஸின் ஆதியாகமம், சிறுத்தை பற்றி லியோனார்டோ டாவின்சி உருவாக்கி யிருந்த படிமம், விலங்குமல்லாத தாவரமுமல்லாத இரண்டும் கெட்டானான மாண்ட்ரேக் வேர், யூத அசுரர்கள், இப்படியாக இந்த சிறு நூல் வெளிக் கொணரும் தகவலடுக்குகளும் அவற்றின் வாயிலாக வெளிக்கொணரப்படும் கதைகளும், புராணிகங்களும் தமிழ்ப் புனைகதையாளர்களால் எழுதப்பட்டிருப்பின் பல தொகுதிகளும் ஆயிரக்கணக்கான பக்கங்களும் ஆக்கிரமிக்கப் பட்டிருக்கும். வெறும் 157 பக்கங்களில் இந்த விநோத விலங்கியல் (Fantastic Zoology) போர்ஹேவுக்கு சாத்தியமாகியிருக்கிறது.

தகவல் தொகுப்பின் வகைப்பாட்டியலில் அகர வரிசை பின்பற்றப்பட்டிருப்பினும் காலங்களையும் தேசங்களையும் இடைவெட்டிச் செல்லும் இந்நூலை வேண்டிய போது படித்து விட்டு வைத்து விடலாம். புராணிகங்கள் உலக மதங்களையும் உள் இழுத்துக் கொள்வது போர்ஹேவைப் பொருத்தவரை பெரிய ஆச்சரியமில்லை. ஏனெனில் போர்ஹேவின் கடவுளாகப்பட்டவர் பிரிவுபடாத  ஒருவர். அந்தக் கடவுள் இன்னும் உருவாக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்.

இந்த இடத்தில் யேசுகிறிஸ்துவை இணைக்கும் இரண்டு பதிவுக் குறிப்புகளை நினைவு கூர்வது பொருந்தும். பெலிகன் மற்றும் சிறுத்தை ஆகிய அடுத்தடுத்த பதிவுகளாகவும் இவை அமைவதும் ஒரு வித ஒற்றுமைதான். யேசுவை ஒரு சிறுத்தை என்று நவீன ஆங்கிலக் கவிஞர் ட்டி.எஸ். எலியட்  Ash Wednesday என்ற கவிதையில் வர்ணிப்பதை நினைவு கூறி பெலிகன் பறவையாகவும் அவர் தாந்தேவின் ‘இன்ஃபர்னோ’வில் அழைக்கப்பட்டிருப்பதையும் நம் கவனத்திற்குக் கொண்டு வருகிறார். அதாவது மனிதஇனத்தின் பெலிகன் பறவை. எகிப்திய பறவையான பெலிகன் பற்றி டாவின்சியின் விலங்குலகத்தில் எத்தகைய சித்திரம் உருவாகியிருக்கிறதென்றும் வாசகன் அறிய முடியும். இலக்கியம், வாய்மொழிக் கதைகள், பிளினி(Pliny) போன்றோரின் இயற்கை வரலாறு (Natural History)வால்ட்டர் ஸ்காட்டின்  Demonology and Witchcraft, இவற்றுடன் நோவா வெப்ஸ்டர் மற்றும் ராபர்ட் பர்ட்டன் ஆகியோரின் அவதானிப்புகள் சேரும் போது கிடைக்கும் அடர்த்தி வியக்க வைக்கிறது. போர்ஹேவுடன் இந்த விநோத விலங்கியல் நூலை எழுத உதவிய பெண் எழுத்தாளர் மார்கரிட்டா கெரோரோ என்பவர்.

விஷ்ணுவின் பக்தராக மாறிய ஹீலியோடோரஸ் என்கிற கிரேக்க தேசத்தவரைப் பற்றி பெரும்பாலான இந்துக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. கருடன் பற்றிய குறிப்பில் போர்ஹே இதைச் சுட்டிக்காட்டுகிறார். கருடனும் பாதி கழுகாகவும் பாதி மனிதனாகவுமிருப்பதாலேயே போர்ஹேவுக்கு ஆழ்ந்த ஈடுபாடு. கருட புராணம் முழுக்கவும் படித்திருப்பாரோ என்ற சந்தேகம் எழுகிற அளவுக்கு இந்தப் பதிவினை செய்திருக்கிறார். பிரபஞ்சத்தின் தொடக்கங்களையும், விஷ்ணுவின் சூர்ய சாராம்சம் என்னவென்பதையும்,  விஷ்ணு வழிபாடு குறித்தும், சூர்யகுலத்தில் (சந்திர குலத்திலும்) உதித்த மாமன்னர்கள் பற்றியும், ராமாயணத்தின் கதைத் திட்டம் பற்றியும், வேறு சில சாதாரண விஷயங்கள் பற்றியும்–அதாவது இலக்கணம், கவிதைக் கலை, மருத்துவம் இப்படி–கருடன் விஷ்ணு புராணத்தில் எடுத்துரைக்கிறார். கருடன் பற்றிய 17ஆம் நூற்றாண்டின் புத்தமதம் தொடர்பான நாடகமான Mirth of the Snakes  ஐயும் போர்ஹே விட்டு வைக்கவில்லை. ஆனால் இந்த நாடகம் (எழுதியவர் பெயரில்லை) புத்தமதத்தை நையாண்டி செய்வதற்காக ஒரு பிராமணனால் எழுதப்பட்டதாக இருக்கும் என்று போர்ஹே சந்தேகிக்கிறார். நிம்பார்க்கன் என்கிற மறைஞானியின் கூற்றினைப் பொருத்தவரை என்றென்றைக்குமாக விமோசனம ளிக்கப்பட்ட ஒரு ஆன்மாதான் கருடன். கருடன் மனந்திருந்தி தான் தினம் ஒவ்வொன்றாய்க் கொன்று தின்ற பாம்புகளின் எலும்புகளை மீண்டும் உயிர்ப்பிப்பதாக வரும் நிகழ்வுக்குக் காரணம் ஒரு புத்த இளவரசன் கொல்லாமை பற்றி கருடனுக்கு உணரச் செய்வதுதான்.

நிலவின் முயல் என்ற குறிப்பிலும் புத்தர் பற்றி தகவல் வருகிறது. அது சாதாரண முயல்தானெனில் எப்படி நிலவில் இடம் பிடித்திருக்க முடியும்? நிலவின் கலங்கத்தைப் பற்றி ஒவ்வொரு சாராரும் ஒவ்வொரு கருத்து கொண்டிருந்ததை இலக்கிய வரலாற்றுப் பதிவுகள் காணத் தருகின்றன. நிலவின் நிழல் பற்றி ஷேக்ஸ்பியரின் நாடகமான ஒரு நடுகோடை இரவுக் கனவு என்ற நாடகத்தில் அது ஒரு மனிதன் என்ற மனப் பதிவு ஏற்படும்படியே இரண்டு முன்று இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. தாந்தேவும் மற்றொரு இதாலியருமான டோமாஸோ கேஸினியும் (Tomasso Casini) நிலவின் நிழல் தன்னுடன் ஒரு சுமை முட்களை எடுத்துச் செல்லுமாறு சபிக்கப்பட்ட கெய்ன் என்ற முடிவுக்கு வந்திருப்பதாகத் தெரிகிறது. லூபோல்டோ லூகோனஸ் (Lupoldo Lugones) தன் காவியத்தில் புனிதக் குடும்பமே (வெள்ளை நிறக் கழுதை உட்பட) நிலவில் இருப்பதாக எழுதியிருக்கிறார். சீனர்கள்தான் முயலுக்குப் புனிதத்துவம் தந்தவர்கள். புத்தர் தன் முற்பிறவிகளில் ஒன்றில் பசியால் வாடியதைப் பார்த்த முயல் தன்னை நெருப்பில் வீழ்த்திக் கொண்டு புத்தருக்கு உணவாயிற்று. இந்த நன்றியை மறவாத புத்தர் முயலின் ஆன்மாவினை நிலவில் சென்று சேரும்படி செய்தார்.

பிரைமோ லெவியின் ‘லிலித்’ (Lilith-[Moments of Reprieve-Primo Levi]) சிறுகதையைப் படித்தவர்களுக்கு போர்ஹேவின் லிலித் குறிப்பு அதிகம் அதிர்ச்சியளிக்காது. (ஆதாமின் முதல் மனைவி லிலித்) ஒரு யூதர் என்ற முதல் நபர் பார்வை மற்றும் அனுபவம் பிரைமோ லெவியின் நம்பகத்தன்மை மிக்க லிலித் கதைக்குக் காரணமாக இருக்கலாம்.

குறிப்பாக இந்த உலகத்தின் கப்பாலிஸ்ட் தன்மையான ஒரு படிமத்தை நம்புவதற்கு முடிகிற அளவுக்கு சில சிறுகதைகளில் பயன்படுத்தினார். இந்த கப்பாலிஸ்டுகளின் மனித இருப்பு குறித்த உச்சமான உருவகம் பற்றி 1914ஆம் ஆண்டு வாக்கிலேயே, போர்ஹே ஜெனிவாவிலிருந்த போதே, குஸ்தாவ் மெரின்க் (Gustav Meyrink )என்பவர் எழுதிய The Golem நாவலைப் படிக்கையில் அவருக்கு தேவையான மனப்பதிவு ஏற்பட்டிருக்க வேண்டும். பிறகு கப்பாலிஸ–யூதப் புலமை வாய்ந்தவரான மாரிஸ் ஆப்ரமோவிச்(Maurice Abramowicz )என்பவருடன் ஏற்பட்ட தொடர்புக்குப் பிறகு இந்த உச்ச உருவகம் முழுமைப் பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. இந்த பிரபஞ்சமே ஒரு மஹா புத்தகம். இதில் இடம் பெறுகிற ஒவ்வொரு வஸ்துவும், மனதின் நிகழ்முறைகளும் அர்த்தம் செறிந்தவை. ஆகவே இந்த நம் உலகமானது மாபெரும் எழுத்து. ஸ்தூல யதார்த்தம், வரலாற்றின் தகவல்கள், எவற்றையெல்லாம் மானுடர்கள் சிருஷ்டித்திருக்கின்றனரோ அவை யாவும் முடிவேயில்லாத செய்திகளாகின்றன. நாம் எல்லையற்ற அர்த்தப்பாடுகளின் தொடர்களினால் சூழப்பட்டிருக்கிறோம். கப்பாலாவின் மொழியியல் ரீதியான கருதுகோள்களின் தெரிவிப்புகள், ரகசியமானதும் மூலாதாரமானதுமான பேச்சு ஒன்றை நிஜமாக்கும் சக்தி மிக்கவை. கோளம்(Golem)பற்றிய போர்ஹேவின் அகராதிக் குறிப்பு மேற்குறிப்பிட்ட விதத்திலும், அவரது சிறுகதைகளின் உலகிலும் கூடுதல் அழுத்தம் பெறுகின்றன.

கட்டுரையின் முகப்பு மேற்கோளில் சொல்லியிருக்கிறபடி போர்ஹே தத்துவத்தின் வரலாற்றிலிருந்து ஒரு காட்சிப் பொருளை வைத்து பேசிக் கொண்டிருப்பதில்லை. மாறாக ஒரு அமைப்பானது அதற்குரித்தான ஒரு பயன்படுதன்மையைக் கொண்டுதானிருக்கும் என்று வாதிடுகிறார். இந்த அமைப்பு(கள்), இந்தப் பிரபஞ்சத்தைப் புரிவதற்கு உதவும்.

கப்பாலிஸ்டுகளுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்ததாகக் கருதப்படும் நாஸ்டிக்குகள் ஒரு தீர்மானிக்கப்பட முடியாத இறைவனைப் பற்றிய கருத்தை முன் வைத்தனர். மகத்தான இறைத்துவத்தின் சாதாரண, எளிய அவதாரங்கள் இருக்க முடியும். இந்த அவதாரங்கள் மகத்தான இறைத்துவத்துடன் ஒப்பிடுகையில் மலினமானவை என்று கருதப்பட வேண்டியிருக்கிறது. நம்முடைய இந்த உலகம் அந்த மகத்தான இறைவனால் அல்லாது அவரின் பிரதி அவதாரங்களில் ஒருவரால்தான் படைக்கப்பட்டிருக்க வேண்டும். ஷோப்பன்ஹர்(Schopenhaever)கூறியது போல குற்றம் மன்னன் மேலில்லை, நிர்வாகத்தை நடைமுறைப் படுத்தும் மந்திரிகள் மேல்தான் இருக்கிறது. இந்தக் கருத்துருவாக்கலின் மூலமே நம்மால் இவ்வுலகில் நிறைந்திருக்கும் தீவினைகளுக்கு சப்பைக் கட்டு கட்ட முடியும்.இறையியல்வாதிகள் பொதுவாகச் செய்யும் நியாயப்படுத்தல் என்னவென்றால் தீவினை என்பது முரண்எதிர் நிலையில் இருப்பது. அதாவது நல்வினையின் இல்லாமை. ஆனால் இந்த வாதம் பொய்மையாய்த் தெரிகிறதென்கிறார் போர்ஹே. ஸ்தூல உடம்பின் வலியானது இன்பத்தை விட விளக்கமானது. லெவியத்தான் என்னும் அரக்க மிருகத்தை பற்றி விரிவாக பழைய வேதாகமம் சொல்கிறது. பெஹிமாத் என்பதற்கு வேர்ச்சொல் அர்த்தம் பல மிருகங்கள் என்பதாகும்.  லெவியத்தான் என்பது முதலை மற்றும் திமிங்கிலம் ஆகிய இரண்டும் இணைந்துருவாகிய ஒரு மிருகம் என தோற்றம் தருகிறது. இவ்விரு விலங்குகளும் எப்படி மனிதனால் புரிந்து கொள்வதற்கு முடியாதவையாக இருக்கின்றனவோ அங்ஙனமே பேரிறைவன் மனிதனால் அளக்கப்பட முடியாதவனாக இருக்கிறான். பெஹிமாத்(பக்: 31–32), ஜோபின் புத்தகம் என்ற பழைய வேதாகமத்தில் குறிக்கப்பட்டிருப்பினும் அது கிறித்தவ சகாப்தத்திற்கு நான்கு நூற்றாண்டுகள் முற்பட்டது. எபிரேய மூலச் சொல் ‘பல விலங்குகள்’ என்று பொருள்படுகிறது.

இந்தியப் புராணிகங்களின் மானஸ புத்திரர்களுக்கும், யூதர்களின் ‘கோளம்’களுக்கும் ஒரு சம்மந்தமிருப்பதால் மீண்டும் கோளம் பற்றிய குறிப்பிற்கு வருவோம். யூத முதன்மைப் பாதிரி ஒருவர் கடவுளின் நாமாவளிகளைக் கண்டு பிடித்துக் கொண்டாலோ அல்லது கற்றுக் கொண்டு பிறகு மனித வடிவில் செய்யப்பட்ட களிமண் பிரதிமை மீது அதை உச்சரித்தாலோ அது உயிர் பெற்று ஒரு கோளமாக ஆகிறது.

இந்த பரம்பரைக் கதைகளில் ஒன்றில் உண்மையைக் குறிக்கும் இமெட் (EMET)என்ற யூதச் சொல் ஒரு கோளத்தின் நெற்றியில் எழுதப்பட்டிருக்கிறது. அந்த கோளம் வளர்கிறது. அதன் எஜமானனால் தொட முடியாத அளவு உயரமாக வளர்ந்து விடுகிறது. எஜமானன் அவனுடைய பூட்சுகளின் நாடாக்களைக் கட்டிவிடச் சொல்லி கோளத்திடம் ஆணையிடுகிறான். கோளம் குனியும் சயமத்தில் அதன் நெற்றியில் உள்ள எழுத்துக்களில் இ(E)என்ற எழுத்தை அழித்து விடுகிறான். மிச்சமிருக்கும் மூன்று எழுத்துக்களான மெட்(MET)என்பதன் அர்த்தம் மரணம். கோளம் மண்ணாகிப் போகிறது. (“The Kabbalah”, in Seven Nights, Jorge Luis Borges, Faber& Faber,(1987), pp.95-106). கோளம் மிகச் சரியாக ஒரு மனிதன் கிடையாது. ஒரு மாதிரியான மங்கலான, பாதி பிரக்ஞையுள்ள தாவர வஸ்துதான். 23 ஃபோலியோ தொகுதிகளால் ஆன நூல்களிலிருந்து பெறப்பட்ட 221 நுழைவாயில் எழுத்துக்கள் பற்றிய அறிவினைப் பயன்படுத்தியும் ஒரு கோளத்தை உருவாக்கலாம். இந்த எழுத்துக்கள் கோளத்தின் ஒவ்வொரு அங்கத்தின் மீதும் உச்சாடனம் செய்யப்பட வேண்டும். Eleazar of Worms என்பவர் தரும் ரகசிய சூத்திரமாகும் இது. (கோளம்: பக் 71–73) இந்தத் தகவல்களைத் தெரிந்து கொண்ட பின் போர்ஹவின்  வட்டச் சிதிலங்கள் கதையைப் புரிந்து கொள்வது எளிமையாக இருக்கும்.

பெஹிமாத்தின் புகழ் அரேபிய தேசத்தை எட்டிய போது அவர்கள் அதிலிருந்து மாற்றியமைக்கப்பட்ட ஒரு விலங்கினைப் படைத்தார்கள். அதன் பெயர் பஹாமுத். நீர் யானை அல்லது யானை போன்றோ இருந்தது இப்போது ஆழம் காண முடியாத கடலில் மிதக்கும் ஒரு மீனாக மாறிவிடுகிறது. மீனின் முதுகின் மேல் ஒரு எருதினை வைத்தனர். பிறகு எருதின் மீது ஒரு ரூபி மலையை வைத்தனர். மலையின் மீது ஒரு தேவதூதனை. தேவதூதன் மீது ஆறு நரகங்களை. நரகங்களின் மீது பூமி வைக்கப்பட்டது. மலையின் மீது ஏழு சொர்க்கங்கள் வைக்கப்பட்டன. அளவிடற்கரிய உருவத்தினைக் கொண்ட பஹாமுத்தின் கண்ணைக் குருடாக்கும் ஒளி மனிதர்கள் தாங்க முடியாதது. இந்த உலகத்தின் சகல சமுத்திரங்களும் இந்த மீனின் ஒரு நாசித் துளையில் வைக்கப்பட்டால் அது பாலைவனத்தில் வைக்கப்பட்ட ஒரு கடுகினைப் போலிருக்கும். அராபிய இரவுகளின் 496வது இரவில் சொல்லப்படும் ஒரு கதையை போர்ஹே திரும்பச் சொல்கிறார். “இஸா” என்றழைக்கப்படும் யேசு கிறிஸ்துவுக்கு பஹாமுத் விலங்கைப் பார்க்க சந்தர்ப்பம் வருகிறது. விலங்கினைக் கண்ணுற்று மயக்கமடைந்து தன் நினைவு திரும்புவதற்கு இஸாவுக்கு மூன்று பகல்களும் மூன்று இரவுகளும் பிடித்ததாகக் கூறப்படுகிறது.

பிரபஞ்சத்தின் கிரகங்கள் யாவுமே உயிர்த்தன்மை மிகுந்த விலங்குகள் என்ற அசாத்திய மனிதக் கருத்துருவத்தின் தந்தை பிளாட்டோதான். இந்த உலகம் மாத்திரமல்ல, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் போன்றவையுமே வாழும் உயிரிகள் என்று பிளாட்டோ அவருடைய Laws (898)  நூலில் அறிவித்தார். மறுமலர்ச்சிக் காலத்தில் லூசியோ வானினி என்பவர் சொர்க்கம் ஒரு உயிருள்ள விலங்கென்று கூறியதையும், கியோர்டனோ பூரோனோ கிரகங்கள் யாவுமே சாதுவான, சண்டையை விரும்பாத விலங்குகள் என்று அவதானித்ததையும் நம் நம்ப வேண்டியிருக்கலாம். 17 ஆம் நூற்றாண்டு ஜெர்மானிய வானவியல் அறிஞரான ஜோஹன்னஸ் கெப்லருக்கும் ஆங்கில மறைஞானியான ராபர்ட் ஃபிளட் என்பவருக்கும் இடையே நடந்த விவாதங்களும் சுவாரஸ்யமானவை.

நூறு தலைகள் என்ற அகராதிக் குறிப்பில் போர்ஹே மீண்டும் சீன பௌத்தத்திற்குத் திரும்புகிறார். இதில் கப்பிலன் என்னும் புத்த பிக்குவைப் பற்றிய கதை இடம் பெறுகிறது. ஒரு சமயம் மீனவர்கள் இழுக்க முடியாமல் இழுத்து மிகுந்த பிரயத்தனத்திற்குப் பிறகு ஒரு அசுர மீனை கரைக்குக் கொண்டு வந்து சேர்க்கின்றனர். அது மீன் அல்ல. மாறாக நூறு தலைகள். ஒன்று மனிதக் குரங்கினுடையதாகவும், மற்றொன்று பன்றியினுடையதாகவும், இன்னொன்று புலியினுடையதாகவும்–இப்படி நூறு தலைகள். புத்தர் அந்த விலங்கினை நோக்கி இப்படி ஒரு கேள்வி கேட்கிறார். “நீ கப்பிலன்தானே?” “ஆம்”, என்று கூறி விட்டு அந்த விலங்கு இறந்து போகிறது. இதன் பிறகு புத்தர் தன் சிஷ்யர்களுக்கு கப்பிலனின் முற்பிறவி பற்றிய கதையைச் சொல்கிறார். பிராமணனாக இருந்து பின் புத்த பிக்குவான கப்பிலனுக்கு பௌத்த மறை நூல்களில் இருந்த அறிவு மிக ஆழமானது மட்டுமன்றி எவராலும் மிஞ்சுவதற்கரியதாயிருந்தது. இருப்பினும் கப்பிலனின் சக சிஷ்யர்கள் ஒரு சொல்லை தவறாகப் படித்த பொழுது மனிக் குரங்குத் தலையனென்றும், நாய்த் தலையனென்றும் அவர் வசைபாடியதால் அவருடைய இறப்புக்குப் பிறகு அவருடைய அவமானச் சொற்களின் கர்மவினையின் விளைவாக அவர் நூறு தலைகளாகப் பிறப்பெடுத்தார். கர்ம வினைகளின் பயன் பற்றிய சாதாரண பௌத்தக் கதை இது.

The King of  Fire and his Steed மற்றும் The Kraken ஆகிய இரண்டு பதிவுகளும் கவிதைகளை மேற்கோள் காட்டும் இலக்கியக் கலைக் களஞ்சியங்களை நினைவூட்டுகின்றன. இவ்விரு பதிவுகளிலும் கதை சொல்வது தவிர்க்கப்பட்டிருப்பது கவனத்திற்குரியது.

ஒரு மரத்தில் பறவைகள் வந்தமர்கின்றன. பறவைகள் பறந்து போகா வண்ணம் மரம் அவற்றைப் பிடித்து உறிஞ்சிக் கொன்று விடுகிறது. அதற்குப் பிறகு வரும் வசந்த காலத்தில் அந்த மரம் இலைகளுக்குப் பதிலாக சிறகுகளை வளர விடுகிறது. இது ஏதோ ‘திகில்’ காட்சி போலத் தோன்றினாலும் ஜி.கே.செஸ்ட்டர்டன் என்கிற ஆங்கில நாவலாசிரியர் எழுதிய கதையில் வரும் ஒரு நிகழ்ச்சி. விலங்குப் பிரஞ்சத்திற்கும் தாவர உலகத்திற்கும் நெருக்கமான உறவினை உண்டாக்கக் கூடிய வேறு சில குறிப்புகள் மாண்ட்ரேக் வேர் மற்றும் பாரோமெட்ஸ் என்கிற ‘காய்கறி ஆடு’ ஆகும். பாரோ மெட்ஸ் ஆட்டைப் போல வடிவமுள்ள ஒரு தாவரம். நான்கு அல்லது ஐந்து வேர்களின் சார்பில் நிற்கிறது. இதை ஓநாய்கள் விரும்பிச் சாப்பிடுகின்றன. இதன் தாவர சாரம்  ரத்தத்தைப் போலிருக்கிறது.

வேதாகம காலத்திலிருந்தே மாண்ட்ரேக் வேரைச் சுற்றி நிறைய கதைகள் உலவி வந்திருக்கின்றன. மாண்ட்ரேக் பற்றி ஆங்கில நாடகாசிரியர் மற்றும் கவிஞரான வேஷக்ஸ்பியர் தனது நாடகத்தில் (Romeo and Juliet)குறிப்பிடுகிறார். இதுவும் பாதித் தாவரமாகவும் பாதி மனிதனாகவும் இருந்ததற்கு இலக்கியத்தில் அத்தாட்சிகள் உண்டு. பொதுவாக மாண்ட்ரேக் வேரை பூமியிலிருந்து பிடுங்கி எடுப்பது பற்றி பயன்படுத்துவோர் கையேடு போல சிலர் எழுதியிருக்கின்றனர். பூமியிலிருந்து பிடுங்கப்படும் போது அது ஒரு மனிதனைப் போலக் கூக்குரலிடும் என்ற குறிப்பு இரண்டு மூன்று ஆவணங்களில் காணப்படுகிறது. பாதி மனிதத்தன்மைக்குக் காரணம் இல்லாமலில்லை. மாண்ட்ரேக் வேரானது தூக்கிலிடப்படும் மனிதன் உயிர் பிரியு முன் வெளியேற்றும் விந்துத் துளிகள் நிலத்தில் வீழ்ந்து அதிலிருந்து உருவாவதான ஒரு புராதன மூடநம்பிக்கை நிலவி வந்திருக்கிறது. (தாமஸ் ப்ரௌன்-Pseudodoxia Epidemica 1646) அப்படிப்பட்ட ஒரு மனிதனிலிருந்து சேகரிக்கப்பட்ட விந்து ஒரு பரத்தைக்கு செலுத்தப்படுகிறது. அவள் ஒரு அழகிய பெண்ணைப் பெற்றெடுக்கிறாள். இதை பதினெட்டாம் நூற்றாண்டில் Hans Heinz Ewers என்பவர் Alraune(1913) என்ற நாவலில் எழுதியிருக்கிறார். மானிட வடிவம் கொண்டதாய் மாண்ட்ரேக் வேர் இருப்பதாக பித்தாகரஸ் எழுதியிருக்கிறார். ரோமானிய மண்ணியல் ஆய்வாளர்(Agronomist) லூசியஸ் காலுமெல்லா அதை அரைþமனிதன் என்று சொன்னார். பிறப்புறுப்புகளைப் பிரித்தறியுமளவுக்கு மாண்ட்ரேக் மனிதனைப் போலவே இருக்கிறது என்று ஆல்பர்ட்டஸ் மேக்னஸ் குறிப்பிட்டதையும் கவனிக்க வேண்டும். ஆயினும் பிளீனிதான் மாண்ட்ரேக் வேர்களில் வெண்ணிறத்தில் இருப்பது ஆண் என்றும் கறுப்பு நிறத்திலிருப்பது பெண் என்றும் வித்தியாசப்படுத்திச் சொன்னவர். அந்த வேரைப் பிடுங்க விரும்புபவர் அதைச் சுற்றி தன் உடை வாளால் மூன்று வட்டங்களைக் கீறிவிட்டு மேற்கு நோக்கிப் பார்க்க வேண்டும். அதன் இலைகளின் வலுமிக்க வாசனை ஒருவரைப் பேச்சிழக்கச் செய்துவிடும். அதைப் பிடுங்கி எடுக்கத் துணிபவன் பேரழிவுகளைச் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும். ஃபிளாவியஸ் ஜோசப் (Flavius Josephus: History of the Jewish Wars) என்பவர் இதற்கு ஒரு பயிற்றுவிக்கப்பட்ட நாயைப் பயன்படுத்தலாம் என்றார். வேர் பிடுங்கப்பட்ட  உடன் நாய் இறந்து போய் விடும். போதைக்கும் மந்திரத்திற்கும் வேர் பயன்பட்டிருக்கக் கூடும். ஹோமர் எழுதிய ஒடிசி காவியத்திலும் மாண்ட்ரேக் வேர் பற்றிய குறிப்பு உள்ளது.

மனிதனுக்கும் விலங்குக்குமான உறவுகள் பற்றிய ஆக்கிரமிக்கும்  சிந்தனை அது தொடர்பான ஒரு விலங்கினை உருவாக்குவதற்குத் தூண்டுதலாக அமைந்திருக்க வேண்டும். மனிதனும் குதிரையும் இணைந்த ஒரு மனித விலங்கான செண்ட்டார் கிரேக்கப் புராணிகத்தில் முக்கிய இடம் வகித்திருக்கிறது. அவ்வாறே கடல் கன்னிகள் என்றழைக்கப்பட்ட மீன் கன்னிகள் பற்றி உலக இலக்கியங்கள் பலவற்றில் நிலவும் கதைகள் மற்றும் கவிதைகள் ஏராளம். ஆயினும் ஆங்கிலக் கவிஞரான டென்னிசன் மாத்திரமே கைவிடப்பட்ட கடல் மனிதன் பற்றிக் கவிதை எழுதியிருக்கிறார். பாதி மனிதன்-பாதி எருதாக இருந்ததாகக் கருதப்படும் மினோட்டார் மிகவும் பிரசித்தமான ஒரு இலக்கிய கதாபாத்திரம். செண்ட்டார் மற்றும் மினோட்டார் ஆகிய இரண்டு இலக்கியப் பாத்திரங்களைப் பற்றிய குறிப்புகளில் மாத்திரமே கிரேக்கப் புராணிகத்திற்கு முக்கியத்துவமளித்திருக்கிறார் போர்ஹே. மற்றபடி விநோத விலங்குகளை ஆராயும் பொருட்டு உலக இலக்கியத்தில் அதிகம் பேசப்படாத நூல்களை மற்றும் கலாச்சார ஆவணங்களை, மானிட ஆய்வியல் தகவல்களை போர்ஹே தீவிரமான ஆய்வுக்குட்படுத்தி இந்த அகராதியைத் தொகுத்திருக்கிறார்.

போர்ஹே வெறும் சர்வதேசவாதியல்ல. மாறாகப் பிரபஞ்சவாதி. ஆகவேதான் பிரபஞ்சத்தின் அனைத்துக் கலாச்சாரங்களும் அவரது எழுத்துக்களில் ஐக்கியமாகின்றன. சாத்தியமிக்க வேறு உலகங்களின் வடிவத்திற்குள் மறு ஒழுங்கு செய்யும் பொருட்டே அவரது கற்பனையான குறுக்குக் குறிப்புகளையும், கண்டுபிடிக்கப்பட்ட புத்தகத் தலைப்புகளையும், எவருமே எழுதியிராத நூல் தொகுதிகளையும், கற்பனையான இலக்கியவாதிகளையும் (அப்படியா?) உருவாக்கினார் என்பது புரிந்து கொள்ளப்படுதல் அவசியம்.

22

Posted in Uncategorized | Tagged: | Comments Off