Brammarajan’s Polyphonic poems

A unique blog about Tamil poetry and Tamil culture, with translations in English

The Adventure of Life and the Death of poetry-Rimbaud/Introduced by Brammarjan

Posted by brammarajan on January 8, 2009

கவிதையின் மரணமும் வாழ்க்கையின் சாகசமும் -பிரம்மராஜன்


ஐரோப்பிய பொது வாழ்க்கையையும் அதன் கலாச்சார மதிப்பீடுகளையும் மாற்றியமைத்த மகத்தான சக்தி படைத்ததாய் அமைந்த சிம்பாலிசக் கவிதை இயக்கத்தின் பிதாமகராகக் கருதப்படுபவர் சார்ல்ஸ் பாதலெர். பாதலெரிடமிருந்துதான் பிரெஞ்சுக் கவிதை இறுதியாகத் தன் தேசீய எல்லைகளைக் கடந்து விரிந்து சென்றதென்றும் அது சகல இடங்களிலும் வாசகர்களைப் பெற்று நவீன காலத்தின் பிரத்யேகக் கவிதையாகத் தன்னை ஸ்தாபித்துக் கொண்டதென்றும் பால் வெலரி ஒரு முறை குறிப்பிட்டதை இங்கு நினைவு கூறலாம். பாதலெருடன் இணைத்தே சொல்லப்படும் பிற கவிஞர்களில் ரைம்போவும் (Rimbaud)மல்லார்மே (Mallarme)வும் சம முக்கியத்துவம் பெறுபவர்களாக இருக்கின்றனர். வெர்லெய்ன் என்ற மற்றொரு கவிஞர் இதே குழுவினைச் சேர்ந்தவராயிருந்த போதிலும் தவறான காரணங்களுக்காகப் பிரபலமானார். இருபதாம் நூற்றாண்டின் பல நவீன கவிஞர்களின் அரசியல் நிலைப்பாடுகளில் பாதலெரின் தாக்கத்தை ஊன்றிக் கவனிக்க முடிகிறது. அவர்கள் எடுத்த அரசியல் நிலைப்பாடுகள் அவர்களின் படைப்பாக்கத்தினை வேண்டிய அளவு பாதித்து மாற்றங்களை உருவாக்கின. இதற்கு இரண்டு முக்கிய இலக்கியவாதிகளை எடுத்துக் காட்டாகச் சொல்லலாம்.

1. எஸ்ரா பவுண்ட்.

பவுண்டின் பொருளாதாரக் கொள்கைகளும் அவரது நீண்ட பகுதிகள் கொண்ட கேண்ட்டோக்களும்.

2. பெர்டோல்ட் ப்ரெக்ட்.

ப்ரெக்டின் கம்யூனிசமும் அவரது செயல்படு கவிதைகளும் (functional poems).

நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்த இரு பெரும் சர்வதேசக் கவிஞர்களின் மூல மாதிரியாக அமைகிறார் பாதலெர். பாதலெரின் சில தேர்ந்தெடுத்த கவிதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. (பிரமிள் என்கிற தர்மு அரூப் சிவராம் மற்றும் தேவ தேவன்). மிகவும் பிரசித்த பெற்றதும் தடை செய்யப் பட்டதுமான தீவினையின் மலர்கள்(Flowers of Evil) என்ற தலைப்பிலான கவிதைகளை எழுதியவர் சார்ல்ஸ் பாதெலர். கலை கலைக்காகவே என்ற இலக்கியக் கொள்கை வலுப்பெறுவதற்கு பெரிதும் காரணமாக இருந்தவர். இந்தக் கொள்கையின் மூலம் கவிதையின் சுயாட்சியை வலுப்படுத்தி அதற்கான ஸ்தானத்தை மீட்டுப் பெற்றார் பாதலெர். மிகச் சிறந்த கலை மற்றும் ஓவிய விமர்சகராக விளங்கியவர். ஆயினும் பாதலெர் மிகவும் கலைத்துவமான சூழ்நிலைகளில் வாழ்வதாகக் குற்றம் சாட்டினார் இளைய தலை முறையைச் சேர்ந்த ஆர்தர் ரைம்போ. பாதலெர் புதிய கவிதை வடிவங்களைக் கண்டுபிடிக்கத் தவறிவிட்டார் என்றும் கண்டனம் செய்தார் ரைம்போ. எனினும் ரைம்போ அளவுக்கு பாதலெரை வேறு எந்த சக கவிஞனும் போற்றிப் புகழ்ந்திருக்க முடியாது. பாதலெரைக் குறித்து ரைம்போ சொன்னது.

“the first of seers, king of poets, a true God”.

தீர்க்க தரிசியாகக் கவிஞன் செயல்பட வேண்டுமென்கிற ரொமாண்டிசிசக் கோருதலை சிம்பலிஸ்டான ரைம்போ முன் வைப்பது சற்று ஆச்சரியமாகக் கூடத் தோன்றலாம். கவிஞன் தீர்க்கதரிசியாக இருக்கிறான் என்பதை வலியுறுத்திக் கூறியவர் ஆங்கில ரொமாண்டிக் கவியான வில்லியம் வோட்ஸ்வொர்த். அவர் கவிஞனை “a seer into the life of things” என்று வரையறுத்தார். கவிஞனை தீர்க்கதரிசியாகக் காணும் தன்மை வேறெந்த சிம்பாலிசக் கவிஞனிடம் விடவும் ரைம்போவிடம் கூடுதலாகக் காணப்படுவதை பார்க்கலாம். இதை ரைம்போவின் வார்த்தைகளிலேயே (அவரது கவிதைகள் மற்றும் கடிதங்கள் வாயிலாக) நாம் அறிய முடியும்.

The Poet makes himself a seer by a long, gigantic and rational derangement of all the senses. All forms of love, suffering, and madness. He searches himself. He exhausts all poisons in himself and keeps only their quintessences.

(Letter to Paul Demny 15 May 1871)

Illuminations (1886)என்ற தொகுப்பில் அடங்கும் ரைம்போவின் கவிதைகளைப் படிக்கும் போதும் இந்தக் கடித வரிகளில் அவர் குறிப்பிட்டதை ஒருவர் உணர முடியும். பெரும்பாலான இலக்கிய விமர்சகர்களாலும் வரலாற்றாசிரியர்களாலும் குமரக் கவிஞன் (boy-poet) என்று குறிப்பிடப் பட்டார் ரைம்போ. இதற்குக் காரணம் இல்லாமலில்லை. பதினாறு வயதில் தொடங்கிய படைப்பு வாழ்க்கையை ரைம்போ பத்தொன்பது வயதில் முடித்துக் கொண்டார். அவரது குமரப் பருவத்தில் சாத்தியமாகிய கவிதைச் சாதனைகள் எவ்விதத்திலும் சாதாரணப்படுத்தி விட முடியாதவை. ஒரு சாதாரணக் கவிஞன் (முதல் தரமில்லாதவன்) இந்தக் கவிதைகளை அவனது முதுமையிலும் சாத்தியப்படுத்த வாய்ப்பில்லை. அக்கவிதைகள் அடர்த்திச் செறிவினாலும் அவற்றின் ஸர்ரியல்தன்மைகளாலும் இன்றும் மிக நவீனமாகவே விளங்குகின்றன. (இளம் சாப்பாட்டு ராமன் என்ற தலைப்பிலான ரைம்போவின் கவிதையை ஆத்மாநாம் மொழிபெயர்த்திருக்கிறார்.) பல அம்சங்களில், விதங்களில் சர்ரியலிஸ்டுகளின் முன்னோடியாகக் கருதப்படுகிறார் ரைம்போ. ரைம்போவைப் பற்றி நவீன செக்கஸ்லோவிய கவிஞரான டேட்யூஸ் ரோஸ்விக்ஸ் எழுதிய கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு பின் வருமாறு.

டேட்யூஸ் ரோஸ்விட்ஸ்

தீர்வுகள்

ஸ்திரமின்றி நாம் வாழ்கிறோம்

முகங்களின்

சொற்களின்

பெயர்களின்

மூடப்பட்ட ஒரு சுழல்வட்டப்பாதையில்

பிறர் நம்மை விவரிக்கின்றனர்

வகை பிரிக்கின்றனர்

நிலைப்படுத்துகின்றனர்

நமக்குத் தெரியும் நாம் அந்தப் பொய்யான வட்டத்தைக் கடக்க

உடைத்துக் கொண்டு

வெளியேற வேண்டுமென்று

ஆனால் நாம் இருக்கிறோம்

1880இல் ஏடன் நகரில்

ரைம்போ

பல் வேறு புத்தகங்களுக்கு ஆர்டர் கொடுத்தார்

The Perfect Metal worker

The Pocket Carpenter

இவற்றையும் சேர்த்து

அல்லது இது போன்றவற்றுக்கு

வழிகாட்டி நூல்கள்

செங்கல் சுடுவது பற்றியும் பீங்கான் உருக்குவது பற்றியும்

மெழுகுவர்த்தி செய்வது

சுரங்க வேலை

உலோகப் பற்ற வைப்பு

செங்கல் அறுப்பது

சாக்கடை அமைப்பது

ஆம் அவர் நிஜமாகவே

விடைபெற்றுக் கொண்டார்

ஆனால் அவரும் கூட

சேமித்தார்

கவிதையின் மரணத்திற்குப் பிறகு

வீடு திரும்புவதற்கு

ஒரு நிஜமான முழுக் குடும்பத்தைத்

தொடங்கத் திட்டமிட்டார்

ஒரு மகனை ஆளாக்குவதற்குத்

தன்னை அர்ப்பணித்துக் கொள்ள

(அவன் இயல்பாகவே வீரமான புதிய தலைமுறை

மனிதனாக இருப்பான்)

அவர்

ராணுவப் பணிக்குத் தன் அணுகுமுறையை நிலைநாட்டிக் கொள்ளத்

திட்டமிட்டார்

ஒரு திடமான ஸ்திதியில்

மேலும் இப்படியாக

மேலும் இப்படியாக

அது சிறப்பானதுதான்

ஆனால் எனக்குச் சொல்

ஒரு ஐம்பது அறுபது

எண்பது வயதான

ரைம்போ

செய்ய வேண்டியது

என்ன

என்ன புத்தகங்கள்

அவர் ஆர்டர் செய்ய வேண்டும்

எங்கே அவர் செல்ல வேண்டும்

எதை அவர் எரிக்க வேண்டும்

எதைக் கைவிட வேண்டும்

(Taduesz Rosewicz: Selected Poems/Solutions / [Penguin Modern European Poets] pp.115-116)

டேட்யூஸ் ரோஸ்விட்ஸின் கவிதை மிக இறுக்கமாகவும் மிகச் சிக்கனமாகவும் ரைம்போவின் முழு வாழ்க்கையையும் அவர் தொடராமல் போய்விட்ட கவிதைப் படைப்பாக்க இருப்பினையும் அடிப்படையாக வைத்து சில உறுத்தும் கேள்விகளை முன் வைக்கிறது. ஆனால் இவை பதில்களற்ற கேள்விகள். கவிதை இல்லாத உலகில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை ரைம்போவின் கவிதைக் காலத்திற்குப் பிறகான வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தால் புரியும். கவிதை மற்றும் இலக்கியம் பற்றிய எந்தப் பின் வருத்தங்களும் இல்லாமல் வாழ்ந்தார் ரைம்போ என்று அவர் தன் வீட்டு அங்கத்தினர்களுக்கு எழுதிய கடிதங்களிலிருந்து தெரிய வருகிறது. இந்தக் கடிதங்கள் வாயிலாக நமக்குத் தெரிய வருகிற ரைம்போவிற்கும் கவிதை மூலமாக நமக்குத் தெரிய வருகிற ரைம்போவிற்கும்தான் எத்தனை வேறுபாடுகள்?

அவர் வாழ்வின் ஒரு கட்டத்தில் ‘‘இலட்சிய வாழ்க்கையின் சாகசக்காரன் நிஜ வாழ்க்கையின் சாகசக்காரனால் பதிலி செய்யப்பட்டான்” என்பது பிரத்யட்ச உண்மை. இளமையின் ஆரம்ப கட்டத்திலேயே ரைம்போவிடம் தெரிந்த நாடோடித்தன்மையின் காரணமாக அவரது சிறிய கிராமப் பகுதியிலிருந்து (Charlesville) பாரிஸ் நகருக்கு ரயிலில் வரும்போது ரயில் கட்டணம் சரிவர செலுத்தாததால் தண்டனைக்காக இரண்டு நாட்கள் காவல் நிலையத்திலிருக்க வேண்டி வந்தது. தொடக்கதிலிருந்தே அவர் ஒரு வக்கிரத்தன்மை மிக்க கலகக்கார மேதையாக இருந்தார் என்பதை வாழ்ந்த வாழ்வும் சரி, எழுதிய எழுத்துக்களும் சரி, நிரூபிக்கின்றன. கலகத் தன்மைதான் A Season in Hell நூலின் அடிப்படையாக இருக்கிறது. கவிதைகள் எழுதாத காரணத்தால் அவரது இருபதாம் வயதிலிருந்து முப்பத்தி ஏழு வயதில் அவர் மரணம் வரையிலான வாழ்க்கையைப் படம் பிடிக்க அவர் எழுதிய கடிதங்களையே அடிப்படை ஆவணங்களாகக் கொள்ள வேண்டி இருக்கிறது. டேட்யூஸ் ரோஸ்விட்சுமே கூட மேற்காட்டிய தீர்வுகள் கவிதைக்கு அடிப்படையாக ரைம்போவின் கடிதங்களைத்தான் எடுத்துக் கொண்டிருக்கிறார். இலக்கியப் புகழ் மற்றும் படைப்பு போதை ஆகியவை என்றுமே ரைம்போவின் சிந்தையை மயக்கி விடவில்லை என்று தெரிகிறது. எனினும் இலக்கியம் குறித்தும் அவர் கவிதை எழுதாமல் விட்டுவிட்டது குறித்தும் எவ்வித பின்வருத்தங்களும் அவருக்கு இருக்கவில்லை என்பதை அறிய முடிகிறது.

அவரது இலக்கிய அல்லது இலட்சிய வாழ்வு திடீரென்று ஒரு முடிவுக்கு வந்ததற்கு அவருக்கும் கவிஞர் வெர்லெய்னுக்கும் ஏற்பட்ட நட்பும் நட்பு முறிவுமே காரணமாக இருந்தன என்று சொல்லலாம். வெர்லெய்னுக்கும் ரைம்போவிற்குமிடையில் இருந்தது நட்பு என்று குறிப்பதை விட உறவு என்று குறிப்பிடுவதே சாலப் பொருந்தும். இந்த உறவு காரணமாக வெர்லெய்னின் மணவாழ்க்கையில் கசப்பு ஏற்பட்டது. ரைம்போவின் உறவு ஏற்பட்ட பிறகு வெர்லெய்ன் பெல்ஜியத்திலும் ஃபிரான்சிலும் நாடோடி வாழ்க்கை மேற்கொண்டார் சாக்கடைக்கும் மதுபான விடுதிக்கும் இடையிலாய் அலைக்கழிந்தபடி. ஏனென்றால் அலைக்கழிப்பு என்பதே ரைம்போவின் வாழ்க்கைக்கு ஆதார ஸ்ருதியாய் இருந்தது. அலைக்கழிக்கப்படாமல் ரைம்போ சொற்ப காலம் கூட இருக்கவில்லை. பெல்ஜியத்தில் இருந்த சமயத்தில் ரைம்போவின் பிரிவைத் தாங்கவியலாத வெர்லெய்ன் இரண்டு முறை ரைம்போவைக் கொல்ல முயன்றார். இரண்டாவது முறை ஒரு மதுபான விடுதியில் ரைம்போவைக் நோக்கி துப்பாக்கியால் சுட்ட போது இடது கையில் குண்டு பாய்ந்தது. ரைம்போவைக் கொலை செய்ய முயன்றதற்காக சில காலம் வெர்லெய்ன் சிறையிலிருந்தார். இந்தக் கசப்பான அனுபவங்கள்தான் ரைம்போவின் உரைநடை எழுத்தான A Season in Hell என்ற நூலை எழுதத் தூண்டின. இந்த உறவு முறிவிற்குப் பிறகும் கூட ரைம்போ வெர்லெய்னுக்கு இரண்டு கடிதங்கள் எழுதியிருக்கிறார் பயனின்றி. இலக்கற்ற அலைதல்களும் நோக்கமற்ற பயணங்களும் ரைம்போவை எகிப்து நோக்கிப் பயணிக்க வைத்தன. இதற்கு முன் ரைம்போ ராணுவத்தில் சேர்ந்த நிகழ்ச்சி நினைவு கூறப்பட வேண்டும்.

1876ஆம் ஆண்டின் வசந்த காலத்தின் போது ரைம்போ டச்சு ராணுவத்தில் சேர்ந்து பாட்டாவியா என்ற பிரதேசம் வரை பயணம் செய்யவும் செய்தார். ஆயினும் ராணுவத்திலிருந்து ஓடிப்போய் ஐரோப்பாவை நோக்கி நடந்தே திரும்பினார். வியன்னாவில் 1877ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் அவரது உடைமைகள் கொள்ளையடிக்கப்பட்டு ஆஸ்திரியாவிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஸ்வீடன் தேசத்தையும் டென்மார்க்கையும் பயணம் செய்து கடந்த பிறகு எகிப்து செல்ல பயனின்றி முயற்சி செய்தார். 1878இல் சைப்ரஸ் தீவில் ஒரு கல் உடைக்கும் குவாரியில் சிறிது காலம் மேஸ்திரியாக பணியாற்றினார். இத்தகைய நிலைமைகளில் வேறு விதமான இலக்கியவாதியாக இருந்திருப்பின் கழிவிரக்கம் கொண்டிருக்கும் எண்ணற்ற சாத்தியங்கள் உள்ளன.

பிறகு சைப்ரசிலிருந்து 1880ஆம் ஆண்டு எகிப்துக்குப் பயணமானார். எகிப்திலிருந்து ஏடனுக்குச் சென்றார். ஏடன் நகரில் காஃபிக் கொட்டை கொள்முதல் செய்யும் ஒரு ஏற்றுமதிக் கம்பெனியில் பணி புரிந்தார். அந்தக் கம்பெனியின் கொள்முதலாளராக சோமாலியா நாட்டிற்குச் சென்று சோமாலியாவை ஆய்வு செய்தார். இந்த ஆய்வுப் பயணங்களைப் பற்றி The Geographic Society க்கு அறிக்கை எழுதி அனுப்பினார். ரைம்போவின் ஆய்வுப் பயணங்கள் மேன்மேலும் ஆபத்தானவையாக மாறின. 1887ஆம் ஆண்டு சோவா(Choa) நாட்டு அரசரான மெனலிக்கிற்கு (Menelik)பழைய துப்பாக்கிகளை ஐரோப்பாவிலிருந்து கொள் முதல் செய்து விற்றார். ஆனால் மெனிலிக் பணம் தராது ஏமாற்றியதால் பெரும் பண நஷ்டம் அடைந்தார் ரைம்போ. இது மட்டுமன்றி இந்த வியாபாரத்தில் அவரது கூட்டாளி இறந்து போனதும் அவரது நஷ்டத்திற்குக் காரணம் என்று ரைம்போ குறிப்பிட்டார்.

இந்தப் பயணக் காலங்களிலும் சரி, அரேபியப் பாலை வனங்களில் அவர் பணியாற்றிய காலத்திலும் சரி அவரது இலக்கிய மற்றும் கவிதை வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கவே இல்லை. பின் வருத்தம் கொள்ளவுமில்லை. இந்த காலகட்டத்தில் அவர் எந்த வித இலக்கியப் புத்தகங்களையும் படிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை. தன் குடும்பத்தினர் வழியாக அவர் ஆர்டர் செய்த புத்தகங்கள் சகலமும் செய்முறைப் பயிற்சி விளக்க ஏடுகள். பெரும்பாலும் அவர் ஆர்டர் செய்த புத்தகங்கள் புதுவித அறிவியலையோ, தொழில் நுணுக்கத்தையோ கற்றுத் தரும் நூல்களாக இருந்தன. ஒரு சமயம் பாரிஸ் நகர தொலை பேசி புத்தகத்தை அனுப்பச் சொல்லி ஒரு கடிதத்தில் கேட்டிருக்கிறார். ஒரு முறை அவரது குடும்பத்தினர் அவருக்கு ஃபிரெஞ்சு அரசியல் பற்றி கடிதம் வாயிலாக ஏதோ செய்தியை எழுதியிருக்க ரைம்போ அதற்குப் பதில் எழுதுகிறார்.

“You write to me about political news. If you knew how indifferent I am all to that. For more than two years I haven’t touched a newspaper. All these debates are for the present without meaning for me. Like the Moslems, I know that what happens happens, and that is all.”

(6 May 1883)

1888லிருந்து 1891வரையில் மீண்டும் காஃபி ஏற்றுமதி செய்யும் வேறு ஒரு நிறுவனத்திற்காக ஹாராரில் வேலை பார்த்தார். மூட்டு வாதத்தினாலும் கால் பகுதியில் வீங்கிப் பெருத்த ரத்தக் குழாய்களினாலும் பெரும் அல்லல் பட்டார். அவர் பணியாற்றிய முஸ்லிம் நாடுகளில் நீக்ரோக்கள் வசித்த பிரதேசத்தில் மருத்துவர்கள் யாரும் இருக்கவில்லை. அரேபிய மொழி கற்றுக் கொள்வதற்கு முயன்று அதற்கான துணை நூலை வாங்கி அனுப்பும்படி தன் குடும்பத்தாரிடம் வேண்டினார். ஒரு கடித்தை அனுப்பிப் பதில் பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு மேலாகிறது என்று மற்றொரு கடிதத்தில் எழுதினார். தொடக்கத்தில் எகிப்தில் அவருக்குக் கிடைத்த குறை ஊதியங்களைப் பார்க்கையில் அவர் வாழ்வின் இறுதி வருடங்களில் சொல்லிக் கொள்ளும்படியான ஊதியம் கிடைத்ததால் சிறிது பணத்தை அவர் சேமிக்கவும் செய்தார். திருமணம் செய்து கொள்வது பற்றி அவரது தாயாருக்கு ஒரு தனிக்கடிதம் எழுதி இப்படி அலைக்கழிப்புக்கு ஆளாகும் ஒருவனைக் கல்யாணம் செய்து கொள்ள எந்தப் பெண்ணும் முன்வருவாளா என்றும் கேட்டார். ராணுவ சேவை பற்றியும் பிறிதொரு கடிதத்தில் குறிப்பு காணப்படுகிறது..

பன்னிரண்டிலிருந்து பதிமூன்றாயிரம் ஃபிரான்க்குகளை தங்கக் காசுகளாக அவரது இடுப்பு பெல்ட்டிலேயே வைத்து சுமந்து செல்ல வேண்டிய இக்கட்டான சூழ்நிலை. இந்த சேமிப்புப் பணமும் கூட அவருக்கு தொடர்ச்சியான இடர்களைத்தான் கொணர்கிறது என வருந்தி எழுதினார். (எட்டுக் கிலோ தங்க நாணயங்களை இடுப்பில் கட்டிச் சுமந்து வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது) யாரையும் நம்புவதற்கில்லை என்பது ஒரு புறம், மறுபுறம் உள்ளூர் கருவூலத்தில் வட்டி இல்லாமல் மாத்திரமே பணத்தை இட்டு வைக்க முடியும் என்கிற நிலை.

உலகிலே வேறு எந்தப் பகுதியையும் விட ஏடனில்தான் கோடை காலத்தின் கடுமை அதிகம். ஐரோப்பிய சீதோஷ்ணத்தில் வாழ்ந்து பழகிய ரைம்போ அந்தக் கோடையை எப்படி எதிர் கொண்டிருப்பார் என்று கற்பனை செய்து மாத்திரமே பார்க்க முடியும். ஒரு தீவிரமான கவிஞன் கோந்துப் பிசின், நெருப்புக் கோழியின் இறகுகள், தந்தம், பதனிடப்பட்ட தோல், கிராம்பு ஆகிய பொருள்களை ஒரு ஏற்றுமதி கம்பெனிக்காக வாங்குவதை கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள். உலகின் வேறு பிரதேசங்களில் ஐந்து வருடங்களில் ஏற்படும் முதுமையானது ஒரு வருடத்தில் ஒருவருக்கு வந்து விடும் அளவு மோசமான சீதோஷ்ணம் ஏடனில் நிலவியது. ஆயினும் ரைம்போ தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தார் அங்கே. ஒரு சமயம் அவரது வாழ்க்கை நிஜமாகவே ஒரு பீதிக்கனவாய் இருப்பதாக உணர்ந்து எழுதினார். மேலும் இவ்வளவு வெப்பத்தில் (செங்கடல் பகுதியில்) இருந்து பழகிய ஒருவர் ஐரோப்பாவிற்குத் திரும்பிச் சென்றால் ஐரோப்பாவின் கடுங்குளிர் காலத்தில் நுரையீரல் வியாதி வந்து விரைவில் இறந்து விடும் ஆபத்து இருக்கிறது. வணிகவியல் அகராதியையும் கடல் பிரயாண அகராதியையும் புனித குர்ஆனையும் 1885ஆம் ஆண்டு வாக்கில் ரைம்போ படித்துக் கொண்டிருந்திருக்கிறார்.

1887ஆம் ஆண்டு வாக்கில் கெய்ரோ நகருக்கு வந்து சேர்ந்த ரைம்போ மூட்டு வாதத்தினால் மிகுந்து சிரமத்திற்குள்ளாகிறார். இடது கால் அவருக்கு பெரும் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறது. நீக்ரோக்களின் மத்தியில் அவர்களின் அசுத்தமான உணவை சாப்பிட்டபடி, அவர்களின் விசுவாசமின்மையாலும் மடத்தனங்களாலும் உண்டாகும் அசௌகரியங்களைப் பொறுத்துக் கொண்டு ரைம்போ வாழ்ந்து கொண்டிருந்தார். அந்த நீக்ரோக்களின் நிலை மேம்பட ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தார். ஆனால் அந்த நீக்ரோக்கள் ரைம்போவை சுரண்டப் பார்த்ததாய் எழுதினார்.

“… how wretched my life is without a family, without intellectual occupation, lost in the midst of Negroes whose fate I would like to improve, but who try to exploit you and make it impossible for you to carry out your business swiftly.”

4 August 1988

ஆறு மாதங்கள் மழை பெய்து பாக்கி ஆறு மாதங்கள் எரிக்கும் கோடை காலமாய் இருக்கக் கூடிய பிரதேசங்களுக்கெல்லாம் எவ்வித வெளிப்படையான இலக்குமின்றி பயணித்துக் கொண்டிருந்தார். நாம் போக விரும்பாத இடங்களுக்குத்தான் செல்கிறோம், நாம் செய்ய விரும்பாத காரியங்களைத்தான் செய்கிறோம், நாம் விரும்பிய விதத்தை விட வித்தியாசமாக, எந்த வித நம்பிக்கையுமின்றி, ஆறுதலுமின்றி இறக்கிறோம் என்று குறிப்பிட்டார் ரைம்போ. அது அவரின் விதியைப் பொறுத்து 100 சதவீதம் நிஜமாக இருந்தது.

வலது காலில் தொடர்ந்து உபத்திரவம் கொடுத்தது மூட்டு வலி. அவருக்கு ஏடனிலோ, ஹாராரிலோ உரிய மருத்துவ உதவி கிடைக்கவில்லை. மேலும் அவரது வலது கால் முட்டியில் ஒரு புற்றுக் கட்டி உண்டாகி அதன் காரணமாய் சொல்லொனாத் துயரத்தையும் வலியையும் அனுபவித்தார். இறுதியில் ஃபிரான்சுக்குத் திரும்பி வந்து மார்செய்லில் உள்ள கன்செப்ஷன் மருத்துவ மனையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. அறுவைச் சிகிச்சையின் போது அவரது வலது கால் வெட்டி எடுக்கப்பட வேண்டியதாயிற்று. இருப்பினும் சிறிது கால சிகிச்சைக்குப் பிறகு ரைம்போ நவம்பர் 10ஆம் தேதி 1891ஆம் ஆண்டு இறந்து போனார். அவரது முப்பத்தி ஏழாவது வயதில். சரியான உணவின்மையாலும் கால் நடையாகவும் குதிரை மீதும் தொடர்ந்து பாலை வனங்களில் பயணம் செய்ததாலும், சீதோஷ்ணத்திற்குத் தகுந்த உடைகள் இல்லாததாலும் அவரது உடல் நலம் இந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கிறது.

ஃமீண்டும் ரோஸ்விட்ஸின் கவிதைக்குத் திரும்புவோம். கவிதையின் முதல் பகுதி ரைம்போ தேர்ந்தெடுத்து வாழ்ந்த அலைச்சல் மிகுந்த வாழ்க்கையைச் சிலாகித்துச் சொல்வதாகத் தெரிகிறது. நாம் வாளாவிருக்கிறோம் என்று கவிதை குற்றம் சாட்டுகிறது. ரோஸ்விட்ஸ் கவிதையின் மையப் பகுதி, கவிதையைப் புறக்கணித்து ரைம்போ வாழ்ந்த வாழ்க்கையைச் சித்தரிக்கிறது. மென்னுணர்வு மிகுந்த இலக்கியவாதி கவிஞனுக்கு இப்படித் தலை கீழாக்கப்பட்ட ஒரு வாழ்க்கை எண்ணிப் பார்க்கவே இயலாதது. கவிதையின் மரணத்திற்குப் பின்னான வாழ்க்கை என்று ரோஸ்விக்ஸ் இதைக் குறிப்பிடுகிறார். நிறைய விஷயங்கள் ரைம்போவின் வாழ்வில் தலைகீழான மாதிரி கவிதைக்கும் மீண்டு திரும்பியிருக்க மாட்டாரா என்ன அவரது ஐம்பது வயதில்?க்ஷ

***

25-03-2003 அன்று மரபு இலக்கிய அமைப்பும் அலயன்ஸ் ஃபிரான்சேஸூம் இணைந்து பாண்டிச்சேரியில் ஏற்பாடு செய்திருந்த ஒரு நாள் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரையின் வடிவம்.

Posted in introduced by brammarajan, translated Poems | Tagged: , , , , , | 7 Comments »

யாசுனாரி கவாபட்டாவின் தூங்கும் அழகிகளின் இல்லம்

Posted by brammarajan on January 7, 2009

kawabatanobel1யாசுனாரி கவாபட்டாவின் தூங்கும் அழகிகளின் இல்லம்

பிரம்மராஜன்

நவீன ஜப்பானிய இலக்கியத்தில் தனித்துவமான இடத்தைப் பெறும் யாசுனாரி கவாபட்டா (1899-1972). ‘‘ஒரு குடும்பமோ வீடோ இன்றி” வளர்ந்தவர். இளையதலைமுறை நாவலாசிரியரான யூகியோ மிஷீமா, கவாபட்டாவை ‘‘நித்திய பயணி” என்று குறிப்பிட்டார். டோக்கியோ இம்பீரியல் பல்கலைகழகத்தில் படித்து பட்டம் பெற்றவர் கவாபட்டா. அவரின் நாவல் உலகு மனிதனின் தனிமைப்படுத்தலை சில்லிடும் கவித்துவத்துடன் வெளிப்படுத்துகிறது. 1968 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கவாபட்டாவுக்கு வழங்கப்பட்டது. ஐந்து நாவல்களையும் இரண்டு சிறுகதைத் தொகுதிகளையும் எழுதியிருக்கி றார்.
யூகியோ மிஷீமா, கவாபட்டாவின் ‘‘தூங்கும் அழகிகளின் இல்லம்” நாவலை “esoteric masterpiece” என்று சொன்னதோடன்றி, அதை நீர்மூழ்கிக் கப்பலுக்கு ஒப்பிடவும் செய்தார். பொய்யான கூச்சத்தையும், அசூயையும் விலக்கிவிட்டு கவாபட்டா என்ற கலைஞன் எழுதிய மிகச்சிறந்த நாவல் இது. மிக நுண்ணிய விவரணைகள், மற்றும் கச்சிதத் தன்மை ஆகியவை இந்த நாவலை கவாபட்டாவின் பிற நாவல்களில் இருந்து வேறுப்பட்டுத் தெரியவைக்கின்றன. கழுத்தை நெரிக்கும் இறுக்கத்துடன் கதை சொல்லப்பட்டிருக்கிறது.
நூறு பக்கங்கள் கொண்ட இந்த நாவல் அலாதியான வாசிப்புத்தன்மை கொண்டது. தூங்கும் அழகிகளின் இல்லம் வயோதிகர்களுக்கான பிரத்யேகமான விடுதி. இதில் நிர்வாணமாய் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் அழகிய பெண்கள் இருப்பர். விடுதிக்கு வரும் வயோதிகர்கள், தூங்கும் பெண்களுடன் ஓர் இரவு தூங்கலாம். அவளை எழுப்புவதோ மோசமான ரசனையில் அவளை ஏதும் செய்ய முயல்வதோ கூடாது. சக்தி வாய்ந்த தூக்க மாத்திரையாலோ அல்லது போதைப் பொருளாலோ இந்தப் பெண்கள் உறங்க வைக்கப்படுகின்றனர். உறங்குவதற்கு முன் அவர்கள் என்னமாதிரி உடை அணிந்திருந்தனர் என்பதை அறிய முடியாது. எல்லோருமே கண்ணிப் பெண்கள். நீங்கள் யாருடன் உறங்குறீர்களோ அந்தப் பெண்ணை அடுத்து ஏதோ ஒரு நாளில் சந்திக்க நேர்ந்தால் அவளை அடையாளம் கண்டு பேசுவது குற்றம். அந்தப் பெண்களும் தாங்கள் எவருடன் உறங்கினர் என்பதை அறியமாட்டார்கள். உறங்க வைப்பதற்கு முன் எந்த வயோதிகனும் அவர்களைப் பார்த்ததில்லை- பார்க்கவும் கூடாது என்பது விடுதியின் சட்ட திட்டங்களில் ஒன்று. விடுதியில் எவரும் மது அருந்தக்கூடாது.
67வயதாகும் எகுச்சி இந்த விடுதியைப் பற்றி அவருடைய நண்பரான கிகோ மூலமாக அறிகிறார். விடுதிக்கு வருகை தரும் வேறு நபர்களைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள முயற்சி செய்யக் கூடாது. நாவலில் எகுச்சி, கிகோ, மற்றொரு ஃபுக்குரோ தவிர வேறு எவருக்கும் பெயர் தரப்படவில்லை. எகுச்சியின் மூன்று மகள்கள், அவரது மனைவி, எகுச்சியின் காதலிகள், தூங்கும் பெண்கள் எவருக்குமே பெயரில்லை.
சாவின் அருகாமையால் உந்தப்பட்டு உருவாகும் காமத்தின் பயங்கரம் எகுச்சியின் மூலம் பதிவு செய்யப்படுகிறது. பாலியல் தன்மைக்கும் மென்மையானதொரு கவித்துவத்தைத் தருகிறது கவாபட்டாவின் நடை. ஐந்து இரவுகளில் எகுச்சி சந்திக்கும் பெண்களை வைத்து எகுச்சியின் சிந்தனைப் பாதைகளை பதிவு செய்கிறது நாவல். ஃப்ளாஷ்பாக்கும் நனவோடையும் (stream of Conciousness) கலந்த உத்தி பயன்படுத்தப்படுகிறது. பாலியல் தன்மை(Sexuality)மற்றும் இறப்பு பற்றிய இரட்டைத் தியானங்கள் நாவலின் கருக்களம்.
முதன் முறையாக விடுதிக்கு வருகை தரும் எகுச்சியை நாற்பது வயது மிக்க யுவதி வழிநடத்துகிறாள். தேவைக்கு அதிகமான ஆர்வத்தில் கேட்கப்படும் எந்தக் கேள்விக்கும் அவள் பதில் அளிப்பதில்லை. விடுதியின் மாடி அறையில் வெல்வெட் திரைச்சீலைகளால் சூழப்பட்டு நிர்வாணமாய் இளம் பெண் ஒருத்தி உறங்கிக் கொண்டிருக்கிறாள். அறையை அடைந்து, உடைகளைக் களைந்து அந்தப் பெண்ணின் படுக்கையில் சாய்ந்து கொள்ளும் எகுச்சிக்கு விநோதமான உணர்வு தோன்றுகிறது. தாயின் மார்பிலிருந்து பாலருந்தும் குழந்தையின் மீது வீசும் வாசம் வருவதாக அவர் உணர்கிறார். போர்வையை விலக்கிப் பார்க்கும் போது உறங்கும் அந்தப் பெண் ஒரு குழந்தைக்குத் தாயாகி இருக்க முடியாது என்பதை நிச்சயப்படுத்திக் கொள்கிறார் எகுச்சி. அவரது மூன்றாவது மகள் குழந்தையாக இருந்தபோது அவளை தூக்கி வைத்திருந்த பின், உடையை மாற்றிக் கொள்ளாமல் ஒரு கெய்ஷாப் பெண்ணிடம் செல்கிறார். அவரிடம் பால் வாசனையை முகர்ந்த மலட்டு கெய்ஷா எகுச்சியை மறுத்து அனுப்பி விடுகி றாள். பிஸினஸ் எக்சிகியூட்டிவ்வின் மத்திய வயது மனைவியுடன் எகுச்சி நடனமாடிக் கொண்டிருக்கிறார். தன்னை முத்திமிடக்கூடிய நெருக்கமுள்ள ஆண்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிப் பார்த்தபின் அவள் உறங்குவது வழக்கம் என்று கூறுகிறாள். விரல்விட்டு எண்ணினால் மனம் அந்த ஆண்களை வடிவப் படிமமாகக் கொண்டு வராதா? வெறும் எண்ணிக்கையுடன் நின்று விடுமா என்று தனக்குள் கேட்டுக் கொள்கிறா.
அவருடன் உறங்கும் இந்த இளம் பெண் எகுச்சியின் நினைவுச் சங்கிலியில் அவர் சந்தித்த பிற பெண்களை பிணைத்து விடுகிறாள். விடுதிக்கு வெளியே கடல் அலைகள் மோதி உடைகின்றன. காற்று ஊளையிடுகிறது. கியோடோவில் தனது கல்லூரிப்படிப்பு முடிந்து வேலைக்குப் போகத் தொடங்கிய சமயம் இளம் பெண் ஒருத்தியுடன் ஓடிப் போக திட்டமிடு கிறார். ரயில் பாதை வழியாக தப்பித்துச் செல்லும் போது பல சின்னச் சின்ன குகைகளைக் கடந்து வெளியே வருகிறார்கள். ஒவ்வொரு முறை வெளியே வரும்போதும் அந்த மலைப் பகுதியில் ஒரு வானவில் தோன்றுகிறது. வானவில்களை ஒவ்வொரு முறையும் வியக்கிறாள் அந்தப் பெண். தன்னுடைய 67வருட வாழ்க்கையில் சந்தித்த பெண்களில், அந்தப் பெண்ணுடையதைப் போன்றதான மிகச்சுத்தமான உடல் உட்பாகங்களைப் பார்த்ததில்லை என்று இப்போது நினைவு கூர்கிறார். இவ்வளவு மென்மையான நினைவுகளை துவக்கி விட்ட உறங்கும் இந்தப் பெண்ணை நன்றியுடன் நோக்குகிறார். விடுதியில் தரப்படும் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு உறங்கப் போகிறார்.
இரண்டு வாரங்கள் கழித்து விடுதியில் இருந்து தொலைபேசியில் பேசுகிறாள் விடுதியின் மத்திய வயதுப் பெண். எகுச்சியை இரவு பதினொரு மணிக்கு மேல் வரும்படி சொல்கிறாள். அவருடைய முதல் வருகை எவ்விதமான அசிங்கமான நினைவுகளையும் உண்டாக்கவில்லை என்பதால் இரண்டாம் முறை போகத் தீர்மானிக்கிறார். உறங்கும் பெண்ணுடன் உறங்குவது மனிதத்தன்மையானதே அல்லவென்று வாதிடுகிறார். வயோதிகர்கள் இந்த விடுதியைத் தேடிவரக் காரணம் உறங்கும் இந்தப் பெண்கள் வயதே ஆகாத விடுதலையைத் தருவதுதான் என்று நினைக்கிறார் எகுச்சி. அவர்கள் உறங்கியபடி இருந்தாலும் வயோதிகர்களின் கீழ்த்தன்மையையும், இயலாமையையும் நினைவுறுத்தும் சின்னங்களாக இருக்கின்றனர். இருப்பினும் இப்பேர்பட்ட இளமை மற்றும் தூய்மையின் முன்னிலையில் வயோதிகர்கள் அடையும் அவமானத்தை அப்பெண்களால் அறிய முடியாது. வயோதிகர்களுக்கு இது ஒரு பாதுகாப்பு உணர்வைத் தருகிறது. சென்ற வருடம் இதே நேரத்தில் வெள்ளை கெமிலியா கோவிலுக்கு தனது மூன்றாவது மகளுடன் சென்றார் எகுச்சி. அவளுக்குத் திருமணம் நடப்பதற்கு இன்னும் ஒரு மாதம் இருந்தது. மிக புத்திசாலியான அவரது மகள் பல இளைஞர்களுடன் பழகுவதை எகுச்சியோ எகுச்சியின் மனைவியோ கண்டிப்ப தில்லை. எதிர்பாராத விதமாக அவரது மகள் யாரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று நினைக்கிறா ளோ அந்த இளைஞனால் அவளது கன்னித்தன்மையை இழக்கி றாள். இந்நிகழ்ச்சியினால் பெரிதும் பாதிக்கப்படுகிற தனது மகளை ஒரு மாற்றத்திற்காய் வெள்ளை கெமிலியா மரக்கோயி லுக்கு அழைத்து வருகிறார். அந்தக் கோயில் நகரின் மிக இரைச்சலான, மோசமான பகுதியில் அமைந்திருக்கிறது. நானூறு வருடம் முதிர்ந்த அந்த மரம் ஐந்து நிறங்களில் பூக்கிறது. அந்தப் புராதன மரத்திற்குள் என்னவிதமான கதகதப்பு இருக்கக்கூடும் என்று வியக்கிறார்.தேனீக்களின் கூட்டமொன்று மரத்தண்டிற்குள் இருப்பது போல மென்மை யான கர்ஜனையும் மரத்திற்குள்ளிருந்து வருவதாக அவருக்குத் தோன்றுகிறது.
எட்டே நாட்களில் மூன்றாவது வருகை தருகிறார். இம்முறை அதிகப் ‘‘பயிற்சி இல்லாத” இருபது வயதிற்கும் குறைவான பெண் அறையில் உறங்கிக் கொண்டிருக்கிறாள். கோபே நகரில் ஒரு இரவு விடுதியில் நடனப் பெண் ஒருத்தியை அழைத்துக் கொண்டு ஹோட்டல் அறைக்கு வந்தது எகுச்சிக்கு ஞாபகம் வருகிறது. நிறைய குடித்து விட்டு அவர் உறங்கி விடுகிறார். குடித்தும் தூங்க முடியாத அவள் எகுச்சியின் பயன்படுத்திய அழுக்கான உள்ளாடைகளை சுத்தமாக மடித்து வைத்து விட்டு அதிகாலையில் விடைபெறுகிறாள். அவள் இரண்டு குழந்தைக்குத் தாய் என்பதை எகுச்சியால் நம்ப முடியவில்லை. கோபே நகருக்கு மீண்டும் வந்தால் தன்னைச் சந்திக்கும்படி வேண்டியவள் பிறகு சந்திக்க வேண்டாம் என்று கடிதம் எழுதி விடுகிறாள். எகுச்சியிடம் அவள் பழகும் போது குற்ற உணர்வோ மன உறுத்தலோ இன்றி நடந்து கொண்டது ஆச்சரியத்தைத் தருகிறது. தன்னருகில் உறங்கும் தன் மகள் வயதே இருக்கும் இந்தப் பெண்ணைப் பார்க்கையில் ஆவள் புத்தனின் ஒரு அவதாரமாக இருக்கலாம் என்று நினைக்கிறார். ‘‘இந்தப் பெண்களுடன் உறங்குவது ஒரு ரகசிய புத்தனுடன் உறங்குவது போன்றது” என்று நண்பன் கிகோ சொல்லி இருக்கிறான்.
இதற்கிடையில் விடுதியில் தங்கிய ஃபுக்குரா என்ற ஆள் இறந்து போன செய்தியை அறிகிறார் எகுச்சி. எனினும் ஐந்தாம் முறையாக விடுதிக்கு வருகை தருகிறார். விடுதியில் ஒரு ஆள் இறந்ததால் ஏற்பட்ட பயத்தின் காரணமாக தனியாக உறங்க மறுக்கின்றனர் பெண்கள். எனவே எகுச்சி இன்று இரண்டு பெண்களுக்கிடையில் உறங்குகிறார். கறுப்புப் பெண் சற்று வயது முதிர்ந்தவள், சிவப்புப் பெண் இளையவள். அதிகாலை நான்கு மணிக்கு விழிப்புக் கொள்ளும் எகுச்சி, கறுப்புப் பெண் இறந்து போயிருப்பதை அறிகிறார். அவளுக்குத் தரப்பட்ட தூக்க மாத்திரையின் அளவு அதிகமாகப் போயிருக்கலாம். விடுதியின் மத்திய வயதுப் பெண் இறந்துப் போனவளை அறை யிலிருந்து அகற்றுகிறாள். இன்னொரு பெண்தான் இருக்கி றாளே அவளுடன் தொடர்ந்து உறங்கலாமே என்று மத்திய வயதுப் பெண் எகுச்சியிடம் சொல்கிறாள். எகுச்சிக்கு தூங்கு வதற்கு தூக்கமாத்திரை தரப்படுகிறது. கொஞ்ச நேரத்தில் கீழே ஒரு கார் புறப்பட்டுச் செல்கிறது.
இம்மாதிரியான கதைக் கருவை விரசத்தின் சாயல் சிறிதும் விழுந்து விடாமல் எழுத கவாபட்டா போன்ற பெரும் கலை ஞர்களால் தான் முடியும். முதற்பதிப்பு 1969ஆம் ஆண்டு வெளி வந்தது. Edward Seidensticker ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.

282

Posted in introduced by brammarajan | Comments Off

தமிழ்ச் சிற்றேடுகளும் ஏ4 அளவு ஏடுகளும்

Posted by brammarajan on January 6, 2009

Perfect targetதமிழ்ச் சிற்றேடுகளும் ஏ4 அளவு ஏடுகளும்

பிரம்மராஜன்

தமிழ்ச் சிற்றேடுகள் என்று குறிப்பிடும் போது இனி அவற்றை ஏ4 அளவு மத்திய ஏடுகளிலிருந்து பிரித்தறிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ”மீடியம் ஈஸ் த மெஸேஜ்’” என்று என்னதான் மக்லூஹன் சொன்னாலும் அது தமிழ்ச்சூழலில் இன்று விஷய கனம் என்பதற்கு பதிலாக மேலோட்டமான தளுக்கு என்றே அறியப்பட்டுள்ளது. குறிப்பாக எழுதுவதற்கு ஏதுமில்லாதபோது சில ”பிளாக்’”(வலைப்பூ) எழுத்தாளர்கள் செய்வது போல ”மொக்கை”ப் பதிவுகளைச் செய்து அவைதான் இன்றைக்கு இன்றியமையாத எழுத்து என்று கதைகட்டிவிட சில ஏ4 ஏடுகள் முயல்கின்றன. ஆனால் இந்த வணிக உத்தியை ஊடுருவி பார்க்கத் தெரியாத அந்தகன் அல்ல நவீன வாசகன். உற்பத்திசாதனங்களின் உபரிநன்மைகளால் அவை பார்வைக்கு மட்டுமே பளிச்சென்று தெரிகின்றன.

ஏ4 அளவு ஏடுகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதற்குக் காரணம் அச்சகங்களினால் ”சும்மாயிருக்க” முடிவதில்லை என்பது மட்டுமல்ல. எதை வேண்டுமானலும் எழுத வைத்து அதற்கு இலக்கிய சாயம் பூசிவிட முடியும் என்கிற துணிச்சலும் காரணம். மீண்டும் உபரி மதிப்பு குறித்து ஆழ்ந்து அலச வேண்டிய அவசியம் வந்துவிட்டது போல் தெரிகிறது. ”வெட்டி ஒட்டுதல’” மற்றும் வையக வலைத்தளம் அனைவருக்கும் கிடைக்கும்படியாகியிருக்கும் நிலையுடன் இதை வைத்து ஆய்வோமானால் இன்றைய இலக்கிய வெறுமைக்கு நிறைய பதில்கள் கிடைக்கும். ”சும்மா”வுக்காக விசைப்பலகையை நோக அடிப்பவர்கள் பீதிதரும் அளவுக்கு அதிகரித்திருக்கின்றனர். 1990களின் தொடக்கத்தில் ஐபிஎம் சாஃப்வேர் நிறுவனம் “பொயட்’” என்றொரு கையடக்கமான கவிதை எழுதித் தரும் மென்பொருளைத் தந்தது. அதில் நீங்கள் செய்ய வேண்டியது இவ்வளவுதான். கவிதை யாருக்கு? ஆண்ஞிபெண் காதல், பிரிவு, போன்ற ஏதாவது ஒரு கவிதைக் கருவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பெண் எங்கே வாழ்கிறாள்-மலையகமா கடற்கரைப் பகுதியா? இந்தத் தகவல்களைக் கொடுத்துவிட்டால் போதும் ஒரு நிமிடத்தில் ஒரு கவிதையை ”பொயட்’” நமக்குத் தயாரித்துக் கொடுத்துவிடும். இன்றைக்கு எழுதப்படும் பல கவிதைகள் ”பொயட்” மென்பொருளால் எழுதிவிட முடியும் அளவான தரத்தை மனதில் வைத்து எழுதப்படுவதாகத் தெரிகின்றன. எனவேதான் இன்றைக்கான கவிதைகள் ஏ4 அளவு இதழ்களின் நிரந்தர ”ஃபில்லர்’”களாகப் பங்காற்றுகின்றன. கவிஞன் என்ற உபரிப் பெயரடையை(அ)விருப்புமிக்க முள்கிரீடத்தை ஏற்க விரும்பும் கவிதை உற்பத்தியாளனும் ”மொக்கை’”அரட்டை இதழைத் தாங்கி நிற்கும் தூணாக மாறிவிடுகிறான்.

சரி. இவ்வளவு அபரிமிதமாக உரைநடை(அதிலும் தரப்படுத்தப்பட்டது-அந்த காலத்து சிற்றிதழ்(குறிப்பாக ”பிரக்ஞை’”யில் எழுதப்பட்டது போன்ற உரைநடையன்று) எழுதப்பட்டாலும் நல்ல சிறுகதைகள் கிடைப்பது அரிதாக இருக்கும் காரணம் என்ன? ”நல்ல” என்பதற்கான வரையறை கிளாசிக் என்றே நம்புவோம். நல்ல என்பதைக் கூட விட்டுவிடுவோம். சிறுகதைக்கான குறைந்தபட்ச அலகுகள் கூட வளமான மொழிக்கு தேவையில்லாமல் போய்விடுகிறதா? மயக்கமான சொல்லாடல்களும் ஜடத்துவமான கூறுமுறைகளும்தாம் இன்று சிறுகதைகளின் பண்புகளாகி இருக்கின்றன. ”சீனியர் ரைட்டர்ஸ்” என்று பிதற்றும் எழுத்தாளர்களுக்கு சிறுகதையின் விஷய கனம் புரியாமல் தடுமாறும் போது இளம் படைப்பாளிகள் நிலை பரிதாபத்திற்குரியது. அவர்களை ஏ4 அளவு இதழ்கள் காப்பாற்றாது.காரணம் இல்லாமல் இல்லை. வெறும் சிறுகதைகள் எழுதினால் பிரபலத்தின் சிகரத்தை அடைய முடியுமா?  விசைப்பலகையை சிரமப்படுத்தி, உங்களுக்கு வந்த ”சேட்’” அரட்டைகளை தமிழ்ப்படுத்தி, “வெட்டி ஒட்டி’” தலையணை சைசுக்கு செய்யப்படும் நாவலுக்குத்தானே விருதுகள் எல்லாம் தருகிறார்கள். எதைக் குறி வைத்து எழுதுவான் இன்றைய உரைநடைக்காரன்? உரைநடை எழுதுவதற்கும் பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்படுகின்றன என்பதைக் கேட்டு உச்சி குளிர்ந்தது. படைப்பூக்கத்திற்கான பூடக வழிகளை கிறிஸ்டியன் சயன்ஸ் மானிட்டர்-க்கு எழுதும் உரைநடையை வைத்து கண்டுபிடிக்க இயலாது.

Posted in Uncategorized | 2 Comments »

சேஸரே பவேசேவின் கவிதைகள்/The Poetry of Cesare Pavese

Posted by brammarajan on January 6, 2009

pavese-llarge

சேஸரே பவேசேவின் கவிதைகள்

பிரம்மராஜன்

அமெரிக்க இலக்கியத்தின் மிகச்சிறந்த இதாலிய மொழிபெயர்ப்பாளராகவும், நவீன இதாலிய நாவலாசிரியர்களில் குறிப்பிடத் தகுந்தவராகவுமிருந்த சேஸரே பவேசே அடிப்படையில் ஒரு கவிஞர். அதிலும் இடதுசாரிக் கவிஞர். போருக்குப் பின்னான இதாலிய யதார்த்தத்தின் பிரதானமான தோற்றுவாய்களாக அவரது புனைகதைகள் கருதப்படுகின்றன. (The Moon and The Bonfire, The Devil in The Hills) சேஸரே பவேசேவைப் பொருத்தவரை யதார்த்தம் என்பது மீட்டுக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புராணிகமாக இருந்தது. அவரைப் பொருத்தவரை ஞாபகம் கொள்வதென்பதே ஒரு வஸ்துவை முதன்முதலாகப் பார்ப்பதைப் போன்றதென்றார். அதனால்தான் அவரது படைப்புகளில் திரும்பத் திரும்ப இடம் பெறும் படிமங்களான மலைகளும், நாட்டுப்புறச் சாலைகளும், வெறிச் சோடிய நகரத்து ரோடுகளும் யதார்த்தமல்லாத ஒரு இலக்கியப் பயன்பாட்டையே பெறுவதாகின்றன.

இதாலியின் பய்ட்மாண்ட் பகுதியில் பிறந்த சேஸரே பவேசேவின் தந்தை ஒரு நீதித்துறை அதிகாரி. ட்யூரின் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற சேஸரே பவேசே படித்தது ஆங்கிலம் மற்றும் அமெரிக்க இலக்கியம். வால்ட் விட்மேன் பற்றி ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினார். மாணவப் பருவத்திலிருந்தே தற்கொலை எண்ணங்கள் அவரை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தன. இதன் காரணமாக அவரால் அவர் சந்தித்த பெண்களுடன் மனநிறைவுள்ள, அர்த்தமுள்ள உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளவியலாது போயிற்று. அமெரிக்காவின் கொலம்பியப் பல்கலைக் கழகத்தில் படிப்பு ஊக்கத்தொகை பெற முயன்றது வீணாய்ப் போயிற்று. பிறகு பகுதி நேர ஆசிரியர் வேலை பார்க்கத் தொடங்கி அவர் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்த பெண்ணைக் கண்டுபிடித்து விருப்பத்தையும் சொன்னார்–திரும்பத் திரும்ப. ஒரு இலக்கியப் பத்திரிகையைத் தொடங்கி நடத்தி, பின் என்னவ்டி (Ennaudi) என்னும் பிரபல வெளியீட்டு நிறுவனத்தில் சிறிது காலம் பணியாற்றினார். பாஸிச எதிர்ப்புச் செயல்பாடுகளுக்காக 1935ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். கெலாப்ரியா என்னுமிடத்தில் ஓராண்டு சிறை வைக்கப்பட்டார். சேஸரே பவேசே தனது பெரும்பான்மையான கவிதைகளையும் டயரியையும் இந்த காலகட்டத்தில்தான் எழுதினார்.

அமெரிக்க நடிகை  Constance Dowlingவுடனான உறவுச் சிக்கல்களின் விளைவாக ட்யூரின் ஹோட்டல் ஒன்றில் அளவுக்கதிகமான தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன்னால் தான் திருமணம் செய்து கொள்ள விரும்பிய பெண்ணுக்கு தொலை பேசியில் பேசியது ஒரு நாடகத்தை அவர் நிறைவூட்டுவது போல நிஜவாழ்க்கையில் அமைந்து போயிற்று.

கவிதை மற்றும் புனைகதை ஆகிய இரு துறைகளிலும் இயங்கிய பலருக்கு நிகழ்ந்தது போல சேஸரே பவேசேவுக்கும் அவரின் கவிதை சார்ந்த முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. அல்லது அவரது புனைகதைகள் அவரது கவிதைகளுக்கான புகழை அபகரித்துக் கொண்டன எனலாம். குறிப்பாக The Moon And The Bonfires, Among Women Only  ஆகிய இரு நாவல்களும் நவீன ஐரோப்பிய நாவல்களில் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. அவர் 1935ஆம் ஆண்டிலிருந்து  அவர் தற்கொலை செய்து கொண்ட 1950ஆம் ஆண்டு வரையில்  எழுதிய டயரி இந்த நாவல்கள் அளவுக்கு பிரபலமடைந்தது.

ஆனால் சேஸரே பவேசேவின் ஆதி மற்றும் இறுதி படைப்புத் தூண்டல்கள் யாவும் கவிதை சார்ந்தவையே. இது மட்டுமின்றி கவிதைக்கலை பற்றி இரு முக்கிய கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதில்  The Poet’s Craftஎன்ற கட்டுரையில் வால்ட் விட்மனின் Leaves Of Grass பற்றியும் பாதலெரின் (Baudelaire) Flowers of Evil பற்றியும் கொண்ட ஆரம்ப காலப் பொறாமைகளை மனம் விட்டு ஒப்புக் கொள்கிறார். ”ஒவ்வொரு கவிதைத் தூண்டுதலும், அது எவ்வளவு உன்னதமானதாய் இருந்த போதிலும், அறம் சார்ந்த கோரிக்கைகளை எதிர் கொள்ளும் முயற்சியே” என்று குறிப்பிட்டார். அவரது கவிதை மொழி ஒரு தெளிவான, தனித்துத் தெரிகிற வலுவான மொழி. அவர் எந்த அம்சத்திற்காக வால்ட் விட்மனைச் சிறப்பித்து எழுதினாரோ அதே அம்சம் அவர் கவிதைகளினூடாய் வெளிப்பாடு காண்கிறது இரட்டை தீர்க்கதரிசன நோக்கு. ஐரோப்பிய மறைபொருள்தன்மையான தாக்கங்களிலிருந்து தப்பிக்கவே அவர் அமெரிக்க நேச்சுரலிஸ இயக்கத்து படைப்பாளிகளுடன் தன்னைப் பிணைத்துப் பார்த்துக் கொண்டார். இயற்கையை அனுபவம் கொள்வதன் மூலமாகக் கிடைக்கும் ஒரு ஆன்மீக  உணர்வு அவருக்கு உவப்பாக இருந்தது. புராணிகமே அவரைப் பொருத்தவரை சாதாரண ஜட உலகத்திலிருந்துதான் உருவாகிறதென்ற கருத்துக் கொண்டிருந்தார் சேஸரே பவேசே. இந்த அனுபவத்தில் தனக்கு சோதனையாளர்கள் மற்றும் துணிகரச்செயல்காரர்களுடன் பகிர்ந்து கொள்ள ஏதுமில்லை என்றறிவித்தார். வியத்தலுணர்வு பெற்று ஒரு அற்புத அனுபவ கணத்தை அடைய ஒரு வஸ்துவை பயமின்றி வெறித்துப் பார்த்தலே போதுமானது என்றார்

“I have nothing in common with experimentalists, adventurers, with those who travel in strange regions. The surest, and the quickest way for us to arouse the sense of wonder is to stare, unafraid, at a single object. Suddenly-miraculously-it will look like something we have never seen before”.

இந்த மேற்கோளில் தெரிவது என்னவென்றால் சேஸரே பவேசே புனைவை விட நிஜத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறார் என்பதே. ஆனால் அவரது நேச்சுரலிசம் தொடக்க காலத்தியது என்றால் அவரது முதிர்ச்சிக் கட்டம் ஸிம்பலிஸம் என்பதைத் தெளிவாக்கிவிட வேண்டிய அவசியமுள்ளது. அவரது இரட்டை தீர்க்கதரிசனப் பார்வைக்கும் இந்த நேச்சுரலிஸ-ஸிம்பலிஸ இருமைக்கும் தொடர்பிருப்பதை  உணர முடியும். பெரும்பான்மைக் கவிதைகள் சேஸரே பவேசேவின் பிள்ளைப்பிராய நினைவுகளை அசைபோடுகின்றன. முதிர்ச்சிக் காலத்தவை ஒரு மனிதனின் முதிர்ச்சி பற்றிய கேள்விகளை உள்ளடக்கியவை. பெரும்பாலும் எல்லாக் கவிதைகளும்  கிராமப் புற நேச்சுரலிஸ பின்னணியில் விவரிக் கப்பட்டிருக்கின்றன.

காலத்தின் தொடர்ச்சி பற்றிய கூர்ந்த பிரக்ஞையும் அவர் கவிதைகளில் காணப்படுகின்றன. ”காலத்தின் வெளியிலாகப் பேசுவது” பற்றிய குறிப்பொன்று அவரது டயரியில் உள்ளது.

பெண்கள் குறித்தான சேஸரே பவேசேவின் அணுகு முறை பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்திய ஒன்று. ஒரு குறுகிய மனப்பான்மை கொண்ட பெண்ணியவாதிக்கு அவரது அணுகல் உவப்பானதாய் இருக்க முடியாது. எது எப்படி இருந்தாலும் கூட அவரது நாவலான (Among Women Only) 1931ஆம் ஆண்டு எழுதப்பட்ட கவிதையான (Fallen Women)யும் பெண்ணிய பலம் மற்றும் பலவீனங்களைப் பற்றிய கூர்மையான மதிப்பீடுகள் கொண்ட படைப்புகள். விலைமாதர்களைப் பற்றி அவர் எழுதிய கவிதைகள் (Deola’s Thinking, Deola’s Return) சுவைக்கேடு மிக்கவை என சில விமர்சகர்களால் அன்றைய காலகட்டத்தில் கருதப்பட்டவை. சேஸரே பவேசேவின் கவிதையில் இடம் பெறும் நபர்களும் சரி புனைகதை மாந்தர்களும் சரி தனிமையாகவே இருக்கின்றனர்.

அசிரத்தை

இந்த வெறுப்பு மலர்ந்திருக்கிறது வாழும் காதலைப் போல,

துக்கித்துக் கொண்டு, தள் களைப்பை கவனித்துபடி.

அது ஒரு முகத்தைத் தேடுகிறது, அது தசையைத் தேடுகிறது, ஏதோ அதுவே காதல் போல.

இந்த உலகியல் தசை மற்றும் பேசிய அந்தக் குரல்கள்

மரித்துவிட்டன, சகலமும் அஞ்சி நடுங்கி ஒதுங்கியாயிற்று,

சகல வாழ்வும் ஒரு குரலின் மீது தொங்கிக்கொண்டிருக்கிறது.

நாட்கள் செல்கின்றன ஒருவித சோகப் பெருமகிழ்வில்

அந்த துக்கக் குரலின் வருடலில் அது திரும்புகிறது

மற்றும் நமது முகங்களின் குருதியை வடித்தபடி.

இனிமை இல்லாமல் இல்லை

அந்தக் குரல் மனதிடம் வருகிறது களைத்துப் போய்

நடுக்கத்துடன். ஒரு முறை எனக்காய் நடுங்கிற்றது.

ஆனால் தசை நடுங்குவதில்லை. காதல் மாத்திரமே

அதை ஒளிப்படுத்த முடியும்,

இந்த வெறுப்பு அதைத் தேடிப்பிடிக்கிறது.

உலகின் உடமை அனைத்தும், தசைகள் யாவும், குரல்கள் யாவும்

அவ்வுடல் மற்றும் கண்களின் எரிக்கும் அணைப்புக்கு இணையாக முடியாது. அந்தக் கசந்த பெருமகிழ்வில்

அது தன்னையே மாய்க்கிறது,

இவ்வெறுப்பு இன்னும் கூட கண்டுபிடிக்கிறது

ஒவ்வொரு நாளும் ஒரு பார்வையை,

ஒரு உடைந்த வார்த்தையை.

பிறகு அவற்றைப் பற்றிக் கொள்கிறது,

பசியுடன், காதலைப் போல.

இரவு சந்தோஷங்கள்

நாங்களும் கூட இரவினை முகர்வதற்கு நிற்கிறோம்

காற்று மிகவும் மோசமாக இருக்கையில். சாலைகள்

காற்றால் ஜில்லிட்டிருக்க, ஒவ்வொரு வாசனையும் உலர்ந்து விட்டது.

எங்கள் நாசிகள் மினுங்கும் வெளிச்சத்திற்கு உயர்த்தப் பட்டுள்ளன.

இருளில் காத்திருக்கும் ஒரு வீடு நம் அனைவருக்கும் உண்டு திரும்புவதற்கு. இருட்டில் ஒரு பெண் நமக்காகக் காத்திருக்கிறாள் படுத்துறங்கியபடி வாசனைகளால் அறை வெதுவெதுக்கிறது.

உறங்கியபடி ஸ்வாசித்துக்கொண்டிருக்கும் பெண் காற்றினைப் பற்றி ஏதும் அறிந்திலாள், அவள் உடலின் கதகதப்பு நமக்குள் முணுமுணுக்கும் குருதியை ஒத்ததே.

காற்று நம்மைக் கழுவுகிறது, இருளில் திறந்தபடி கிடக்கும் சாலைகளின் ஆழத்திலிருந்து வருகிறது அது.

மினுங்கும் வெளிச்சங்கள் மற்றும்

நமது விடைத்த நாசிகள் ஒன்றையொன்று

நேராக எதிர்கொள்கின்றன.

ஒவ்வொரு வாசனையும் ஒரு ஞாபகம்.

அப்பால் இருளிலிருந்து காற்று நகரில் கிடக்கும் ஏதொன்றையும் இடம் மாற்றுகிறது.

கீழே வயல்கள் மற்றும் மலைகள்

அங்கே சூரியனால் எரிக்கப்பட்ட புல் மாத்திரமே உண்டு.

மற்றும் ஓதத்தால் கறுத்துப் போன மண்.

நம் ஞாபகம் ஒரு கசந்த சுவை, பிளக்கப்பட்ட பூமியால் குளிர்காலத்தில் வெளியேற்றப்படும் ஒரு சிறு இனிமை

கீழிருந்து வரும் ஒரு மூச்சு.

எல்லா வாசனையும் உலர்ந்து விட்டது இருளில்

மற்றும் நகரினுள் காற்று மாத்திரமே நம்மை அடைய முடியும்.

இன்றிரவு நாம் திரும்பிச் செல்வோம்  உறங்கும் அந்தப் பெண்ணிடம்

சில்லிடும் விரல்களால் அவளின் உடலை ஆராய்ந்தபடி,

மேலும் வெப்பம் நமது குருதியை உலுக்கும்.

பூமியின் வெப்பம்

ஓதத்தால் கறுப்பாக்கப்பட்டு வாழ்வின் ஒரு மூச்சு.

அவளும் கூட சூரியனால் வெதுவெதுப்பாக்கப்பட்டிருக்கிறாள்

மேலும் இப்போது அவளது நிர்வாணத்தில்

அவளின் உச்ச இனிமை வாழ்வு

பகலில் அது மறைந்து விடுகிறது,

அது மண் ருசியுடன் இருக்கிறது.

சந்திப்பு

அந்தக் கடினமான மலைகள் என் உடலை உருவாக்கின

அவை அதை பலவிதமான ஞாபகங்களினால் உலுக்குகின்றன, தந்தன எனக்கு

அந்தப் பெண்ணின் அற்புதத்தினை நான் சிருஷ்டிக்கிறேன் எனபதை அவள்

அறியாள், ஆனால் நான் அவளைப் புரிந்து கொள்ளவில்லை.

ஒரு நாள் மாலை அவளை நான் சந்தித்தேன்.

இரு அர்த்தம் கொண்ட நட்ஷத்திரங்களின் கீழே

அவள் ஒரு லேசான வடிவம்,

கோடையின் பனிப்படலத்தில்.

சுற்றிலுமாக இந்த மலைகளின் முணுமுணுப்பு,

நிழலை விட ஆழமாக,

ஒரே நேரத்தில் அந்த மலைகளிலிருந்து வருவது போல ஒரு ஓசை,

ஒரு குரல் ஒரே சமயம் தெளிவாகவும்  கடூரமாகவும்,

இழந்து போன காலங்களிலிருந்து வந்த ஒரு குரல்.

சில சமயங்களில் நான் காண்கிறேன் அவளை,

மேலும் அவள் என் முன்னே வாழ்கிறாள்

தெள்ளத் தெளிவாக, மாறுதலேயில்லாது,

ஒரு ஞாபகத்தைப் போல.

அவளை எப்போதும் என்னால் மறக்க முடிந்ததில்லை. அவளின் நிஜம்

எப்பொழுதுமே என்னிடமிருந்து நழுவுகிறது.

என்னை வெகு தொலைவிற்குக் கொண்டு செல்கிறது.

அவள் அழகானவளா என்று எனக்குத் தெரியாது. பெண்களுக்கிடையில் அவள் இளையவள்.

அவள் பற்றிய சிந்தனை ஒரு தூரத்து ஞாபகத்தினை நினைவு கூர்கிறது

மலைகளுக்கு இடையே வாழப்பட்ட குழந்தைப்பிராயம்,

அவள் அவ்வளவு இளையவள். அவள் விடியலைப் போலிருக்கிறாள்.

தொலைவான காலைகளின் எல்லா தூரத்து வானங்களும்

அவள் கண்களிலிருந்து எனக்கு அழைப்பு விடுக்கின்றன.

அந்தக் கண்கள் ஒரு தெளிவு கூடிய ஒளியை வெளிப்படுத்துகின்றன

இந்த மலைகளின் மீது விடியல் வெளிப்படுத்தியதை விட.

எனக்கு அத்யந்தமான இந்த விஷயங்களின் ஆழங்களிலிருந்து அவளை உருவாக்கினேன்,

நான் புரிந்து கொள்ளாத ஏதோ ஒன்றாகவே அவள் இருக்கிறாள்.

டி.க்கான இரு கவிதைகள்

ஏரி மருங்கின் மரங்கள் கண்டன

உன்னை ஒரு காலைப் போதில்

கூழாங்கற்கள் ஆடுகள் வியர்வை

எல்லாம் காலத்தின் வெளியில்,

ஏரியின் நீரைப் போல்.

நாட்களின் துக்கமும் குமுறலும்

ஏரியை அசங்குவதில்லை.

காலைப் போதுகள் கடந்து விடும்

துயரம் மறைந்து விடும்,

பிற கற்கள் வியர்வை

உன் குருதியுள் கடிக்கின்றன-

இவை நீடிக்கா மாட்டா.

நீ மீண்டும் எதையாவது கண்டுபிடிப்பாய்,

காலையொன்று வரும்

அப்போது குமுறலுக்கப்பால்

நீ தன்னந்தனியாய் ஏரி மீதிருப்பாய்

நீ காதலும் தான்

பிறரைப் போலவே குருதியாலும் மண்ணாலும்

ஆகியிருக்கிறாய்

வீட்டின் வாசலைக் கடக்காத யாரோ ஒருவரைப் போல

நீ நடக்கிறாய்

நீ காத்திருப்பது போல பார்க்கிறாய்

ஆனால் பார்ப்பதில்லை

துக்கித்து பேச்சற்றிருக்கும் பூமிதான் நீ

நொதித்தல் சோர்வு நீ அறிவாய்

உன்னிடம் சொற்களுண்டு–நீ நடக்கிறாய்

மற்றும் காத்திருக்கிறாய்.

காதல்தான் உன் குருதி–வேறெதுவுமல்ல.

வேசிப் பெண்கள்

அவர்களை அப்படி நடத்துவது சரியே.

நிச்சயமாக அவர்களுக்காகப் பரிதாபப்பட்டு

பின் படுக்கைக்கு அழைத்துச் செல்வதை விட.

”அது நம் வாழ்வனைத்திலும் மிக வலுவான தேவை”-

ஆனால் சொல்லுங்கள் பதிலாய் ”நாம் இதில் தீர்த்தொதுக்கப்பட்டுள்ளோம்

ஆயினும் தொழிலில் அந்தப் பெண் நுழைந்தால் நான் கடுங்கோபத்தால் தொண்டை அடைத்துப் போவேன் அல்லது வஞ்சந்தீர்ப்பேன்”

கருணை எப்போதும் கால வீணடிப்பு,

வாழ்க்கை பெரியது, கருணை அதை மாற்றாது,

மௌனத்தில் உங்கள் பற்களை நரநரத்துக் கடிப்பது மேல்.

ஒரு மாலைப்போதில்

பயணம் செய்தேன் ரெயிலொன்றில்

அதில் அமர்ந்திருந்தாள்

அந்த யுவதி, கௌரவமாய் உடையணிந்து, மேக்கப் செய்து,

முகத்தில் ஒரு தீவிர பார்வையுடன்.

வெளியில், வெளிர் விளக்குகளும் சாம்பல்-பச்சை பூமியும்

உலகினை தேய்த்தழித்தன. நாங்கள் தனித்திருந்தோம்

மூன்றாம் வகுப்புப் பெட்டியில், நானும் அந்தப் பெண்ணும்,

நான் இளையவனாய்.

அந்த பிராயத்தில் எப்படிப் பேசுவதென எனக்குத் தெரியவில்லை

மேலும் நானழுதேன் பெண்களைப் பற்றி எண்ணும் போது. இவ்வாறு நான்

பயணம் செய்தேன், கவனமாய் படபடப்புடன்,

மேலும் அவள்

சிலநேரம் என்னைப் பார்த்தாள் புகைத்தாள். நான் பேசவில்லை,

நிச்சயமாய் நான் எண்ணவில்லை, ஆனால் என் குருதியில்

இன்னும் உணர்கிறேன் அந்த ஊடுருவும் பார்வையை,

கடுமையாய் உழைத்து வாழ்க்கையை அது கிடைத்தவாறு ஏற்ற

யாரோ ஒருவரின் ஒரு கண நகைப்பை.

ஒரு நண்பன், சொல்ல ஏதாவது வைத்திருக்கும் ஒருவன்,

ஒரு பெண்ணைக் காப்பாற்ற விரும்புவான், அவள் கண்ணீரைத் துடைத்து,

சந்தோஷப் படுத்துவான்.

”இல்லை, நம் வாழ்நாள் அனைத்திலும் அது வலுவான தேவை

கடின இதயம்தான் நம் ஒரே வலிமை என்றால்

மேலும் பயனற்றது எனின், நாம் நாசமாய்ப் போவோம்”.

நீங்கள் ஆயிரக்கணக்கில் பெண்களைக் காப்பாற்ற இயலும்,

ஆனால் நான் பார்த்த

புகைக்கும் அந்த எல்லோரும், தற்பெருமை கொண்ட பார்வை அல்லது சலித்த புன்னகை–

என் நல்ல நண்பர்கள்–எப்போதும் இருப்பார்கள்

மௌனமாய் துன்பப்பட்டு எல்லோருக்காகவும் கடன்தீர்ப்பார்கள்

மரணம் வரும், உன் கண்களைக் கொண்டு

மரணம் வரும், உன் கண்களைக் கொண்டு-

காலையிலிருந்து இரவுவரை நம்முடனிருக்கும் மரணம், உறக்கமற்று,

மூடத்தனமான தீயொழுக்கம் அல்லது

பழைய கழிவிரக்கத்தைப் போலோ. உன் கண்கள்

ஒரு வெற்றுச் சொல்லாகும்,

அமுக்கப்பட்ட ஒரு கதறலாகும்.

இப்படி ஒவ்வொரு நாள் காலையிலும்

நீ பார்க்கிறாய், நிலைக் கண்ணாடி மீது நீ சாய்கையில்.

போற்றிப் பேணிய நம்பிக்கையே,

அந்த நாளில் நாமும் கூட அறிவோம்

நீயேதான் வாழ்வும் வெறுமையும் என்பதை.

ஒவ்வொருவருக்கும் ஒரு தோற்றம் தருகிறது மரணம்.

மரணம் வரும், உன் கண்களைக் கொண்டு.

அது தீயொழுக்கத்தை நிறுத்துவது போலிருக்கும்,

கண்ணாடியிலிருந்து வெளிக்கிளம்பும்

ஒரு மரண முகத்தை கண்ணுறுவது போலிருக்கும்,

மூடிய உதடுகள் பேசுவது போலிருக்கும்.

நாம் மௌனத்தில் இறங்குவோம்.

0161

Posted in translated Poems | Tagged: , , , , , | Comments Off

அமி லோவல்/கவிதை உருவாக்கும் முறை

Posted by brammarajan on January 5, 2009

amy_lowellஅமி லோவல் (1874-1925)

1914-ல் எஸ்ரா பவுண்டினால் துவங்கப்பட்ட படிம இயக்கம் (Imagist Movement)கவிதையில் சாதாரண மொழியின் பயன்பாட் டையும் புதிய ஓசைமைகளையும் துல்லியமான படிமங்களை யும் வலியுறுத்தியது.

அமி லோவல் (1874-1925) என்ற பெண் கவிஞர் அமெரிக்க இமேஜிஸ்ட்டுகளில் மிக முதன்மையானவர். கவிஞர் என்பதை விடவும் அமெரிக்க கவிதை இயக்கத்தின் நடைமுறையாள ராகவே பிரபலமாக அறியப்பட்டிருக்கிறார். இவர் அமெரிக்கக் கவிதை இயக்கத்தின் மீது ஏற்படுத்திய பாதிப்பு, மிக பரந்து பட்டதாகவும் குறிப்பிடத்தகுந்ததாகவும் இருந்தது. எஸ்ரா பவுண்டின் கோபத்திற்கு உள்ளாகி இவ்வியக்கம் Amygists களின் இயக்கம் என்று பவுண்டால் பரிகாசத்துடன் அழைக்கப்பட் டது. ஏனென்றால் இமேஜிஸ இயக்கத்தின் தேக்கத்தையும் எல்லைப்பாடுகளையும் ஏற்கனவே உணர்ந்தறிந்துவிட்ட பவுண்ட் வோர்ட்டிஸிஸம் என்ற இயக்கம் மிகுந்த படிமக் கவிதையை நோக்கிச் சென்றுவிட்டார். அமிலோவல் எழுதிய புத்தகங்களில் முக்கியமானவை Tendencies in Modern American Poetry மற்றும் Poetry of John Keats.

கவிதை உருவாக்கும் முறை

தமிழில் பிரம்மராஜன்

கவிதைகள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்ற கேள்விக்குப் பதில் அளிக்கும்போது என் உள்ளுணர்வு பூர்வமான பதில் ஒரு தட்டையான ‘‘எனக்குத் தெரியாது” என்பதுதான். அவை எவ்வாறு உருவாகின்றன என்று சிறிதும் தெரியாதிருப்பினும் அதே போல் மற்றவர்களின் கவிதை உருவாக்கம் பற்றித் தெரியாத போதிலும், என்னைக் கேட்கப்பட்ட கேள்வி முழுவதும் என் கவிதைகள் சம்மந்தப்பட்டது என்றாலும் அவை எந்த வேறுபாட்டினையும் ஏற்படுத்துவதில்லை. அதைப் பற்றி எனக்குத் தெரிந்திருப்பது, தெரிந்து கொள்ளப்பட வேண்டியதின் ஒரு மில்லியன் பகுதியில் ஒரு பகுதிதான். என் பிரக்ஞைநிலையைத் தொடும்பொழுதுதான் நான் கவிதைகளைச் சந்திக்கிறேன். அது அதற்குள்ளாக அதன் பரிணாமப் பாதையில் வேண்டிய தூரம் வந்துவிட்டிருக்கும்.

திருவாளர் க்ரேவ்ஸ் கூறுவது போல கவிதை எதிரிடையான கருத்தாக்கங்களின் ஒருங்கிணைப்பு என்றாலும், உணர்ச்சிகளின் உறுத்தல்களுக்கும் Tensionக்கும் வடிகால் தருவதாய் ஏற்படும் விளைவு என்று Sara Teasdaleகூறியபோதிலும், பகற்கனவின் எல்லைக் கோட்டினைத் தொடும் ஒரு மனோவியல் நிலைக்கு நம்மை உட்படுத்துதல் என்று (பேராசிரியர் ப்ரெஸ்காட்) ஒரு முழு புத்தகமே எழுதி நிரூபித்த போதிலும் இறுதியான வரையறை தருவதற்கு யாராலும் இயலாது. தன்னம்பிக்கையு டன் என்னுடைய அனுபவங்களிலிருந்து அழுத்தமாக நான் கூறுவதெல்லாம், கவிதை ஒரு பகற்கனவு அல்ல என்பதே–மாறாக மிகவும் வித்தியாசமான, தனக்கே உரித்தான ஒரு மனோவியல் நிலை.

உண்மை என்னவென்றால் ஒரு மர்மம் இங்கு இருக்கிறது. கவிஞன் அளவுக்கு இதைப்பற்றி பிரக்ஞை எவருக்கும் இருக்க முடியாது. கவிஞன் ஒரு ரேடியோ ஏரியலைப் போன்றவன் என்பதை உடனே நாம் ஒப்புக்கொள்வோம்-ஒருவித அலைவரிசைகளில் செய்திகளைப் பெற்றுக்கொள்ளும் தகுதி அவனுக்கு இருக்கிறது. ஆனால் அவன் ஏரியல் என்பதற்கும் மேற்பட்டவன். இது ஏனெனின் இந்தச் செய்திகளை அந்த வார்த்தைகளின் அமைவுகள் என நாம் கூறும் கவிதைகளாக  மாற்றும் சக்தி படைத்தவனாகவும் கவிஞன் இருக்கிறான்.

ஒரு கவிஞனைப் பற்றிய அறிவியல் ரீதியான வரையறையை ஏறத்தாழ நாம் இவ்வாறு கூறலாம் என்று நினைக்கிறேன்: அதீதமான உணர்வுமிக்க ஒரு மனிதன், இயக்க பூர்வமான அடிமன ஆளுமை உடையவன், எதிர்ப்பற்ற பிரக்ஞையால் போஷிக்கப்பட்டும் அதற்கு உயிரளித்தபடியும் இருப்பவன். கவிஞர்களிடையே ஒரு பொதுவான சொல் வழக்கு உண்டு. ‘‘அது என்னிடம் வந்தது” என்பார்கள். இந்தப் சொற்பிரயோகம் சீரழிக்கப்பட்டுவிட்டதால் ஒருவர் கவனத்துடன் இதைத் தவிர்க்க முயல்கிறார். ஆனால் நிஜத்தில் ஒரு கவிதையின் பிரக்ஞைபூர்வமான வரவினைப் பற்றி எனக்குத் தெரிந்ததில் இதுதான் மிகச்சிறந்த விளக்கம்.

சிலசமயங்களில் ஒரு கவிதை உருவாக்கிய புறவயத் தூண்டுதல் தெரியும் அல்லது கண்டுபிடிக்கலாம். இரு ஒரு காட்சியாகவோ, அது ஒரு சப்தமாகவோ, ஒரு சிந்தனையாகவோ அல்லது ஒரு உணர்ச்சியாகவோ இருக்கலாம். தொடக்கத் தூண்டுதலைப் பற்றி சில நேரங்களில் நினைவு மனத்திற்கு ஒரு பிரக்ஞையும் இருக்காது. இந்தத் தூண்டுதல் மறக்கப்பட்டிருக்கலாம், அல்லது ஆழ்ந்த அறிந்து உணரப்பட்டிராத நினைவுகளிலி ருந்து எழலாம். இது என்னவாக இருந்தபோதிலும், உணர்ச்சி அறியப்பட்டிருந்தாலும், மறைக்கப்பட்டிருந்தாலும், இது அதன் ஒரு பகுதி. ஏனெனில் உணர்ச்சி மட்டுமே அடிமனதைச் செயலுக்குத் தூண்டுவது. எவ்வளவு கவனமாகவும், கச்சிதமா கவும் அடிமனம் இயங்குகிறது என்பதற்கு நானே என் எழுத்துக் களில் ஒரு காட்சியாக இருந்திருக்கிறேன். எந்த வெளிப்படை யான காரணத்துக்காகவுமின்றி ஒரு கருத்தாக்கம் என் சிந்தனைக்குள் வரும். எடுத்துக்காட்டாக The Bronze Horsesகுதிரைகளை ஒரு கவிதைக்கான விஷயமாக நான் மனதில் புரிந்து கொண்டேன். அவற்றை அவ்வாறு பதிவு செய்த பின்னர் இந்த விஷயம் பற்றி வேறு எதையும் நான் பிரக்ஞைபூர்வமாகச் சிந்திக்கவில்லை.  ஆனால் உண்மையில் நான் செய்தது என்னவென்றால் என் கருப்பொருளை ஆழ்மனத்திற்குள் போட்டு வைத்து விட்டதுதான்-தபால் பெட்டியில் ஒருவர் கடிதத்தைப் போடுவது போல. ஆறுமாதங்களுக்குப் பிறகு, அந்தக் கவிதையின் சொற்கள் என் மண்டைக்குள் வர ஆரம்பித்தன-அந்தக் கவிதை என் தனிப்பட்ட சொற்களைப் பயன்படுத்துவோமானால் ‘‘அங்கே இருந்தது”.

சில கவிஞர்கள் ஒரு குரல் அவர்களுடன் பேசுவதாகச் சொல்கிறார்கள். மேலும் அக்குரல் உச்சரிக்கும் வார்த்தைகளை அப்படியே எழுதுவதாகவும் கூறுகிறார்கள். இந்த முறை என்னுடையதிலிருந்து வேறுபடுவதாலோ அல்லது என் ஆரம்பகால அறிவியல் பயிற்சியின் காரணமாகவோ எனக்குத் தெரியவில்லை-எது குறைவான காட்சிபூர்வமான வார்த்தை களை பயன்படுத்துவதற்குக் காரணம் என- நான் குரல் எதையும் கேட்பதில்லை, ஆனால் வார்த்தைகள் உச்சரிக்கப்படுவதைக் கேட்கிறேன். உச்சரிப்பு மட்டுமே சப்தமற்றது. ஆனால் யாராலும் பேசப்படாமல் அவ்வார்த்தைகள் என் மண்டைக்குள் உச்சரிக்கப்படுகின்றன. இந்த விளைவு எனக்குப் பரிச்சயமான ஒன்று. ஏனென்றால் என் மனதிற்குள் நான் படிக்கும் பொழுது கூட நான் எப்போதும் வார்த்தைகளைக் கேட்கிறேன். கொஞ்சம் அதிகமாக நான் எழுதும் நேரத்தில் (இது அவசியமில்லை என்றாலும் கூட) எழுதும்போதும், பலசமயம் நான் எழுதியதை உரக்கப் படிப்பதற்கு நிறுத்தும் போதும். அவ்வளவு தெளிவாய் வார்த்தைகள் என் மண்டைக்குள் ஒலிக்கின்றன.

எனினும் இந்த ஆழ்மனம், மிகவும் தன் இஷ்டப்படி நடந்து கொள்ளும் ஒரு கூட்டாளி. நிறைய சமயங்களில் அது  தீவிரமான சூழ்நிலையில் வேலை நிறுத்தம் செய்யும். அதற்குப் பின் எந்த ஒரு சொல்லையும் அதனிடமிருந்து பெறுவதற்கு இயலாது. இங்குதான் கவிஞனின் பிரக்ஞைபூர்வமான பயிற்சி தேவையாகிறது. காரணம் ஆழ்மனம் விட்டுவிட்ட விஷயங்களை அவன் நிரப்ப வேண்டும். மற்ற வார்த்தைகளின் தன்மைக்கு ஒத்தவாறு, முடிந்தவரை நிரப்பவேண்டும். ஒவ்வொரு நீண்ட கவிதையும் இம்மாதிரியான இடைவெளிகளால் தெளிக்கப்பட்டிருக்கும். இந்தக் காரணத்தினால்தான் பெரும்பாலான கவிதைகள் எண்ணற்ற திருத்தங்களுக்கு உள்ளாகின்றன. சில நேரங்களில் இந்த கள்ளத்தனமான ஆழ்மனக் கூட்டாளி சிரமம்படும் கவிஞன் மீது கருணை கொண்டு அவனின் உதவிக்குத் திரும்பும். அந்தக் குறிப்பிட்ட பகுதியுடன் பல சமயங்களில் மீண்டும் எந்தத் தொடர்பும் இருக்காது அதற்கு. இக்காரணத்தினால்தான் ஒரு கவிஞன் என்பவன் பிறக்கவும், உருவாக்கப்படவும் வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அவனுக்காக எப்போதும் உழைக்கக்கூடிய ஒரு ஆழ்மனத் தொழிற்சாலையுடன் அவன் பிறக்க வேண்டும். இல்லையென்றால் அவன் என்றும் கவிஞனாக முடியாது. திருவாளர் க்ரேவ்ஸின் வெளிப்பாட்டு முறையைப் பயன்படுத்தினால்-அவனின் ஓட்டைகளை மெழுகி அடைக்க அறிவும் திறமையும் வேண்டிய அளவுக்கு இருக்க வேண்டும். இந்த (மெழுகி) அடைக்கும் முறையை யாரும் தாழ்வாக மதிப்பிட்டுவிட வேண்டாம். நல்ல கவிதையில் ஒரு நிலை இது. கடந்த 25 ஆண்டுகளாக என் கைகளுக்கு எட்டிய பல பெரும் கவிஞர்களின் முதல் கையெழுத்துப் பிரதிகளில் நான் ஒன்றிலும் ‘‘மெழுகி அடைத்தல்” பங்கினை பார்க்காமல் இல்லை. இதில் மிகவும் அடித்து எழுதப்பட்டிருந்தது கீட்ஸின் The Eve of St.Agnes.

நீண்ட கவிதைகள் ஆழ்மனதில் உருவாக மாதங்கள் ஆகும். சிறிய கவிதைகளைப் பொறுத்தவரை ஆழ்மனதில் கருக் கொள்ளும் காலம் ஒரு நாளாகவோ, ஒரு கணமாகவோ இருக்கலாம். திடீரென்று சில சொற்கள் அங்கே இருக்கும்  ஒரு வித ராஜரீகமான வற்புறுத்தலுடன் அவை எந்த தாமதத்தையும் பொறுக்காது. அவை உடனடியாக எழுதப்பட வேண்டும் இல்லையென்றால் ஒரு தீவிரமான துன்புறுதல் நேரும்–ஒரு உடல்ரீதியான வலி அளவுக்கு இது இருக்கும். கவிதைக்கு வழி கொடுத்தால் ஒழிய இந்த வலியிலிருந்து நிவாரணம் கிடைக்காது. கவிதைகள் வரும் காலத்தில் நான் அவற்றை நிராகரிப்பது கிடையாது. நான் என்ன செய்து கொண்டிருந்தாலும், நான் என்ன எழுதிக் கொண்டிருந்தாலும் அவற்றை விலக்கி வைத்துவிட்டு கவிதையின் வரவை நான் கவனிக்கிறேன். என்னுடைய இயல்பின் காரணமாக, நான் நண்பர்களுடன் இருக்கும்போதோ, வீட்டுக்கு வெளியில் உள்ளபோதோ கவிதைகள் வருவதில்லை. ஆனால் தனியாக இருக்கும்போது, நான் பார்த்த, அல்லது செய்த ஏதோ ஒன்றின் தொடர்பான கருத்தாக்கம்–வெளியில் இருந்த பொழுது தன்னை அறிவித்துக் கொள்ளும்–ஏதோ நான் மோனத்திலும், ஏற்புத்தகுதியுடனும் இருக்கும் காலத்திற்காகக் காத்திருந்தது போல்.

என் மண்டைக்குள் நான் உருவாக்குவது குறைவு. ஒரு கவிதையின் வருகை பற்றிய பிரக்ஞையை நான் அடையும்போது நான் செய்யும் முதல் காரியம் பேப்பரையும் பென்சிலையும் தேடிப் போவதுதான். ஒரு துண்டு வெள்ளைத் தாளை வெறுமனே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்ததே ஆழ்மனம் பற்றிய பிரக்ஞைக்கு ஹிப்நாட்டைஸ் செய்து விடுவதுபோலத் தோன்றுகிறது. அதே காரணத்துக்காக, நான் நடந்து கொண்டிருக்கும்போதோ, கார் ஓட்டிக் கொண்டிருக்கும் சமயத்திலோ கவிதைகளைத் திருத்தம் செய்வதில்லை. இதற்குத் தேவைப்படும் கூர்ந்த கவனம் ஒரு தியானத்தின் தன்மையதாய் இருக்கிறது. (இதற்கு இந்த வார்த்தை சற்று அதிகபட்சமானது என்றாலும் கூட) இந்தக் கூர்ந்த கவனம் (அ)தியானம் நான் எங்கே போகிறேன் அல்லது எந்த நிலையத்தில் இறங்க வேண்டும் என்பது பற்றிய அக்கறைகளால் சிதைக்கப்படுகிறது.

இந்த அரைத்தியான நிலை நாம் சிறிய கவிதைகளைப் பற்றிச் சிந்திக்கும்பொழுது ஆச்சரியப்படுத்துவதில்லை. விநோதம் என்னவெனில் இந்தத் தியானம் போன்ற நிலை நீண்ட கவிதைகளைப் பொறுத்தவரை, குறுக்கீடுகளுக்கு மேலாகத் தாக்குப் பிடிக்கக் கூடியது.  பல நாட்கள் அல்லது வாரங்கள் எழுதத் தேவைப்படும் அளவுக்கு ஒரு கவிதை நீளமாக இருக்கும் போது, அதைத் தொடர உட்காரும் ஒரு செயலே அதற்குத் தேவையான மனநிலையை உருவாக்குகிறது- இந்நிலை (நான் குறிப்பிட்ட இடைவெளிகள் தவிர) கவிதையின் திருத்தங்கள் வரை தாங்குகிறது.

அதற்கு மாறாக, ஆழ்மனநிலை மட்டும் தயாராக இல்லை என்றால் எந்த சக்தியாலும் அந்த நிலையை உருவாக்க முடியாது. எனவே சிருஷ்டி இல்லாத காலங்கள் எல்லாக் கவிஞர்களுக்கும் இருப்பது சகஜம்தான்.

கவிஞனால் முடிந்த எல்லாவற்றையும் அவன் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். எந்த துறையும் அவனுக்கு  அந்நியமானதல்ல. எந்தத் திசையிலும் அவன் அறிவு ஆழமானதாக இருந்தால், அவனுடைய கவிதைக்கும் நல்ல ஆழமிருக்கும். புதிய மற்றும் பழைய கவிதை வடிவங்களில் அவனுக்கு முழுமையான, அடிப்படையான பரிச்சயம் இருக்க வேண்டும். ஆனால் தீர்மானமாக என் நம்பிக்கை என்னவென்றால் பாரம்பரியத்திற்கு அவன் தன் உள்ளுணர்வின் சுயத்திற்கு மேலாக மரியாதை தரக்கூடாது. எல்லாவற்றுக்கும் மேலாக தன்னுடைய சுயநேர்மை பற்றி உறுதியாக இருக்க வேண்டும். பொது அங்கீகரிப்புகளுக்கு அவன் தலை பணியக்கூடாது-எவ்வளவு கவர்ச்சிகரமான வையாக அவை இருந்தபோதிலும். அதன் பின் அவனின் ஆழ்மனம் எதை உணர்த்துகிறதோ அதை அவன் சகல தைர்யத்துடன் எழுதட்டும்.

0161


Posted in translation-Essay | Comments Off

Contemporary World Poetry vs World Poetry (Samakala Ulagakavithai versus Ulagakavithai)

Posted by brammarajan on October 25, 2008

Contemporary World Poetry is an anthology of world poetry representing 48 poets from all the continents. There are of course some omissions. No English poet from England finds a place here and no representation for Australia and North America have been made. The common(shrewd) reader will easily manage poems of these countries because of the availability of texts. Zeroing on Central and Western Europe for poems by contemporary/modern seems to be a formidable task. Garnering information about their life or texts of their English translation is also a challenge with regard to poets of central Europe. Contemporary World Poetry is not an impetuous project. Its origins lie in the original anthology in Tamil published way back in 1989 when World Poetry Festival was conducted in Bharat Bhavan (Bhopal,MP) for the first time. World Poetry Project’ s seeds were strewn well in advance to the event. The then Cultural Secretary Shri. Ashok Vajpeyi had requested all those willing publishers of little magazines from Indian languages to prepare a sampler for the historic event. We all agreed to lend a hand. Shri Ashok Vajpeyi was gracious enough to send Xeroxed materials of full collections of poems of the participating poets. That is how we got the full text of Ernesto Cardinal and Miroslav Holub’s poems. While in some Indian languages the end product was just a skimpy pamphlet/booklet, it ended up as massive volume in Tamil. The Defacto Edition of Contemporary World Poetry is World Poetry (Ulagakkavithai) anthology published by Meetchi Books in 1989. When we attended the festival we were disappointed because of the absence of Tanikawa Shuntaro of Japan and Tadeuz Rosewicz of Poland.

On the third day of the function copies of World Poetry from regional languages were presented to the participating poets. This is the real story behind the current Contemporary World Poetry. For the original edition there were more than a dozen translators who worked for more than 6 months on the selections of single poet. All the scripts were collected and rechecked for errors by the Meetchi editorial members. For some reason even in the original anthology we had left out poets from Australia and England. The original World Poetry would not have been possible but for the magnanimous help from the Madhyapradesh government. We were supplied with good quality paper and partial printing assistance. I still feel thankful to those who worked for the World Poetry anthology.


Posted in Uncategorized | Tagged: , , , , , , | Comments Off

Nadodi Manam e-book (downloadable)

Posted by brammarajan on October 27, 2008

Nadodi manam-in e-book format(pdf)

This is the pdf form of the full book titled Nadodi Manam. Since the book is out of print for the past 4 years I am offering this download for a limited period of time for the readers who do not have a hard copy. I haven’t included the cover page since I didn’t design it.

Rough Index of Authors discussed:

1.Franz Kafka 2.T.S.Eliot.[Tradition and the Individual Talent] 3.Four Quartets(T.S.Eliot) 4.Ocatvio Paz (Poetry and History) 5.Amy Lowell and the process of creating poetry 6.Paul Valery and his poetics 7.Miraslav Holub 8.Antonin Bartusek 9.Cesar Pavese 10.Charles Bukowsky 11.Ivan Goncharov(Oblavmov) 12.Yasunari Kawabatta (The House of Sleeping Beauties) 13.Gabriel Garcia Marquez (General in the Labyrinth) 14.Herman Hesse (The Steppenwolf) 15.Albert Camus (The Plague) 16.Samuel Beckett(Watt) 17.William Faulkner (Sound and the Fury) 18.Alexander Solzhenitsyn (Cancer Ward) 19.Andre Gide(The Counterfeiters) 20.Primov Levi (The Periodic Table) 21.Jean Genet(works) 22.Henrich Boll 23.Salvador Dali 24.Poets,lovers and madmen 25.Arthur Koestler

NadodiManam-BklT


Posted in Uncategorized | Tagged: | Comments Off

Remebering poet Malathy(sathara)

Posted by brammarajan on October 27, 2008

,,,

Rememebering poet Malathi(sathara)
Some writers hone their skills in the little magazines and then sell them in the mass media market. Again the criteria is fame and money. But in the present situation excepting a few old writers no one seems to amaze money through writing. Perhaps this is very special to the Tamil language magazines and publications.There are a few exceptions like Malathi(sathara) who had strayed into the mass media magazines and after getting fed up with the insipidity and mediocrity of the mass magazines they find out the route to serious literature. So Malathi came to serious literature after writing potboilers in popular weeklys and monthlys. But she had no regrets about her literary past.I knew here from 1997 when we first arranged the Women Writers’s Meet in Dharmapuri during that winter. She couldn’t attend that meet for personal reasons and apologized for more than half an hour.
I had not met her. But we continued our conversations over phone. Discussions rambled from recipes to mythology and feminism. She was a postgraduate in Chemistry from Presidency college Madras. Though she was proficient in English often she would say that she preferred reading a translated book in Tamil than reading the original. She said she was saving time on dictionary consultations. She had expressed her strong opinions on womanist poets, feminist poets and women poets. She was perfectly aware of the nuances of these categories and would defend a male point of view if it is sensible. She was a feminist without the anti-male stance.Ofcourse she had so many grudges against men-especially middle class men-but expressed them without the least hostility.
When I anthologized Atamanam’s Complete works for a publisher, I decided to meet Atmanam’s family in person and get the agreement form signed for the publisher. Only this time I sought Malathi’s help to locate Atamanam’s brother Mr.Ragunandhan’s residence. We spent the evening with Atmanam’s brother and his daughters and his ageing mother.
In the mean while Malathy had put together her second book of poems(Thanal Kodi Pookkal) and wanted my introduction. Though I had accepted the assignment I was a bit hesitant because of the mixed quality of her diction and and uneven quality of her poems. But I did like atleast a bunch of them from that collection. But I had inordinately delayed writing the introduction becaue of my mood swings. I felt sorry that I had not done full justice to her work. But she said she was happy.
Before she left for Sathara(Maharashtra) on transfer she had given me a wonderful oppurtunity of listening to Andal’s Thiruppavai everyday over phone during Margazhi. I think we never missed a day or a pasuram. Her enunciation part of Andal will be more lively and enthralling. I heard that the recorded version of her rendering is available in cassette form. But I failed to get one from her. Now someone should enquire either her husband Mr.Valeeswaran or her daughter Ms.Chandni.
When she returned to Bangalore telephones circle after 3 years her health had deteriorated. She had nephrological complications and there were so many proscriptions in her diet. I felt sorry for her for she was a gourmet.
Her mother is a writer and an excellent cook. Her mother’s short stories can be read even now without the feeling of staleness.She is also a great host.
Before her last days she bought a flat in Bangalore and our families frequently met in her house. On one those evening meetings in her house she made me sit after coffee and read that small review she wrote for my book Nadodi Manam.
But I still feel sorry for missing her funeral.
*I should personally thank Mr.Taj for making me write this blog since I read Malathy’s review of my book which Mr.Taj re-blogged from Thinnai.

Posted in Uncategorized | Tagged: | Comments Off

Samakala Ulaga Kavithai-Contemporary World Poetry in Tamil Translation

Posted by brammarajan on November 6, 2008

சமகால உலகக் கவிதை

இந்தப் புத்தகத்தில் இடம்பெறும் கவிஞர்களின் பட்டியலை மட்டுமே இங்கே தர முடிகிறது. புத்தகம் 2007 புத்தக சந்தையில் வெளிவந்தது. ஏதோ காரணத்தால் அது வேண்டிய வாசகர்களைச் சென்றடைய வில்லை. இது போன்ற புத்தகங்களுக்கு மதிப்புரை எழுத ஆட்களும் குறைவு. தயக்கமும் அதிகம். 400 பக்கங்களும் கெட்டி அட்டையும் நல்ல தாள்களும் கொண்ட உருவாக்கம். வெளியீட்டாளரின் இணைய இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.

(1)பெர்டோல்ட் ப்ரக்ட்(ஜெர்மனி) (2)குந்தர் கூனர்ட்(கிழக்கு ஜெர்மனி) (3)பால் ஸெலான்(ரொமானியா) (4)டாமஸ் ட்ரான்ஸ்ரோமர்(ஸ்வீடன்) (5)செஸ்வா மிவோஷ் (6)ஸ்பிக்நியூ ஹெர்பர்ட்(போலந்து) (7)ததயூஸ் ரோஸ்விட்ஸ்ச்(போலந்து) (8)விஸ்லாவா ஸிம்போர்ஸ்கா(போலந்து)(9)அன்னா ஸ்வர்ஸைனிஸ்கா(போலந்து) (10)இங்போர்க் பாக்மன்(ஆஸ்திரியா)(11)வாஸ்கோ போப்பா(செர்பியா)(12)மிராஸ்லாவ் (13)ஹோலுப்(செக்கஸ்லோவாகியா) (14)யான் காப்லின்ஸ்கி(எஸ்டோனியா)(15)மாரின் ஸோரெஸ்க்யூ(ரொமானியா)(16)நினா கேஸியன்(ரொமானியா) (17)பிரைமோ லெவி(இதாலி) (18)பியர் பாவ்லோ பாஸோலினி(இதாலி) (19)ஃபெர்னான்டா பெசோவா(போர்ச்சுகல்) (20)ஃபிலிப் ஜக்கோட்டே(ஃபிரான்ஸ்) (21)ஹைன்ரிக் நார்பிராண்ட்(டென்மார்க்) (22)ஓசிப் மெண்டல்ஷ்டாம(ரஷ்யா) (23)மரீனா ஸ்வெட்டயேவா(ரஷ்யா)(24)ஆக்னநெஸ் நெமிஸ் நேகி(ஹங்கேரி) (25)பெரன்ஸ் யூஹாஸ்(ஹங்கேரி) (26)பாப்லோ நெருடா(சிலி)(27)ஆக்டேவியோ பாஸ்(மெக்ஸிகோ) (28)ராபர்ட்டோ யூவாரோஸ்(அர்ஜன்டீனா) (29)நான்சி மோர்யோன்(கியூபா) 30)டி மெலோ நேட்டோ(பிரேஸில்) (31)எஹூதா அமிக்ஹாய்(இஸ்ரேல்) (32)தாஹ்லியா ராவிகோவிச்(இஸ்ரேல்) (33)டேன் பேகிஸ்(இஸ்ரேல்) (34)மொஹமத் தர்வீஷ்(பாலஸ்தீனம்) (35)அடோனிஸ்(லெபனான்) (36)நஸீம் ஹிக்மெத்(துருக்கி) (37)கோஃபி அவூனோர்(கானா) (38)பெர்டோல்ட் ப்ரக்ட்(ஜெர்மனி) (39)பிரேட்டன ் பிரேட்டன்பாஹ்(தென்னாப்பிரிக்கா) (40)டென்னிஸ் ப்ருட்டஸ்(தென்னாப்பிரிக்கா) (41)டெரக் வால்காட்(கரீபியா) (42)யாங் லி யூஹாங்(சீனா)(43)சப்பார்டி ஜோக்கோ தமோனோ(இந்தோனீசியா)(44)ஸோ சோங் ஜு(கொரியா) (45)சோங் ஹ்யோன் ஜோங்(கொரியா) (46)ஏ.கே.ராமானுஜன் (இந்தியா) (47)ஜெயந்த மகாபாத்ரா(இந்தியா)(48)மைக்கேல் ஓன்யாட்டே(கனடா)

www.uyirmmai.com/


Posted in Uncategorized | Tagged: | Comments Off

ஆர்க்கிபால்ட் மேக்லீஷ்-கவிதைக் கலை(Archibald Macleish-Ars Poetica)

Posted by brammarajan on November 9, 2008

archibald-macleish2

Archibald Macleish

ஆர்க்கிபால்ட் மேக்லீஷ் (அமெரிக்கா)

கவிதைக் கலை-Ars Poetica

ஒரு கவிதை இருக்க வேண்டும்

உணர முடிவதாய்

உருண்டு திரண்ட பழம் போல மௌனமாய்

பேச்சற்று

புராதனப் பதக்கங்கள் கட்டைவிரலுக்குத் தட்டுப்படுவது போல்

பாசி வளர்ந்து படிந்த

கைப்பகுதிகளால் தேய்ந்த ஜன்னல் விளிம்புகளைப்

போல மௌனமாய்

ஒரு கவிதை வார்த்தையற்றிருக்க வேண்டும்

பறவைகளின் பறத்தல் போல

நிலா உயர்வதைப் போல்

காலத்தினுள் கவிதை இயக்கமில்லாதிருக்க வேண்டும்

இரவு பின்னலிட்ட மரங்களை குறுங்கிளை அடுத்த குறுங்கிளையாக நிலா

விடுவிப்பது போல

பனிக்காலத்து இலைகளின் பின்புறமிருந்து நிலா

ஞாபகம் ஞாபகமாக மனதை விடுவிப்பது போல

ஒரு கவிதை காலத்தினுள் சலனமில்லாதிருக்க வேண்டும்

நிலா உயர்வது போல்

ஒரு கவிதை சமானமாய் இருக்க வேண்டும்

நிஜத்திற்கு இணையாய் அல்ல

எல்லாத் துயரத்திற்கும்

ஒரு வெற்று வாசலைப் போல

மேப்பிள் மர இலையைப் போல

காதலுக்கு

தலைசாயும் புற்கள் மற்றும் கடலுக்கு மேலாக இரணடு வெளிச்சங்களைப் போல

ஒரு கவிதை அர்த்தம் தரக்கூடாது

இருக்க வேண்டும் கவிதையாக.


Posted in Uncategorized | Tagged: | 1 Comment »

நான்காம் பாதை 2வது இதழ் வெளிவந்துவிட்டது.(Nangam Pathai issue No.2 is out)

Posted by brammarajan on November 19, 2008

nangam-pathai-cover-final-2008-page1a1

நான்காம் பாதை 2வது இதழ் வெளிவந்துவிட்டது.
இதழின் சிறப்பம்சங்கள்
1.கர்னாடக இசைக்கலைஞர் நெய்வேலி சந்தானகோபாலனுடன் பேட்டி.
(பேட்டி கண்டவர்கள்-பிரம்மராஜன், ஆனந்த்,மையம் ராஜகோபால்,பழனிவேள்)
2.ரெய்னர் மரியா ரில்கே கவிதைகள்-அறிமுகக் கட்டுரையும் தேர்ந்தெடுத்த கவிதைகளின் மொழிபெயர்ப்பும்-பிரம்மராஜன்
3.கிளாட் லெவிஸ்ட்ராஸின் தக்சசீலம்-அறிமுகமும் மொழிபெயர்ப்பும்-ஆர்.முத்துக்குமார்
4.கவிதைகள்-குலசேகரன், கணேசசூரர்பதி, பழனிவேள்.
5.தேர்ந்தெடுத்த நூல்களின் விமர்சனம்-கண்மணி குணசேகரனின் நடுநாட்டு சொல்லகராதி(பழனிவேலு) தமிழவனின் வார்சாவில் ஒரு கடவுள் (ப.வெங்கடேசன்)
6.சிறுகதை-இரவு நடனம்-ஜே.கே.பிரதாப்

Editor:Brammarajan

Periodicity:Quarterly

Price(in India) per issue:Rs.50

Courier charges Rs.50 per issue
Annual subscription Rs.250+courier charges

Posted in Announcement(s) | Tagged: , , , , , , , , | Comments Off

ரெய்னர் மரியா ரில்கே: நாடற்ற-வீடற்ற ஒரு சர்வதேசக் கவி

Posted by brammarajan on November 20, 2008

ரில்கே கவிதைகள்-

மொழிபெயர்ப்பு பிரம்மராஜன்

rilke2

Rainer Maria Rilke-A short introduction to Tamil readers

ரெய்னர் மரியா ரில்கே:

நாடற்ற-வீடற்ற ஒரு சர்வதேசக் கவி

தலைசிறந்த ஜெர்மன் மொழிக் கவிஞரான ரெய்னர் மரியா ரில்கே ஒரு வீடில்லாதவராகவும் நாடில்லாதவராகவும் தன் வாழ்க்கையை வாழ்ந்து முடித்தார். சர்வதேசக் கவிஞர்களிலேயே மிகவும் சர்வதேசீயமானவர் ரில்கே. சகல எல்லைகளையும் கடந்த ஆனால் எந்த ஒரு நாடும் தனக்கென ஸ்வீகரித்துக் கொள்ளாத கவிஞனின் நிலைதான் ரில்கேவினுடையது. நவீன கவிஞர்களில் டி.எஸ்.எலியட் மற்றும் ஐரிஷ் கவிஞர் டபிள்யூ.பி.ஏட்ஸ்-க்கு இணையான சாதனையாளர். பிராக் நகரில்(ஆஸ்திரியா)1875ஆம் ஆண்டு தன் பெற்றோருக்கு ஒரே மகனாகப் பிறந்த ரில்கேவுக்கு தொடக்கத்தில் அவரது தாயார் பெண் பெயரை வைத்ததுடன் அல்லாமல் ரில்கேவுக்கு முன் பிறந்து இறந்து போன பெண் குழந்தையின் ஏக்கத்தினால் தன் மகனை ஒரு பெண் குழந்தையாகவே பாவித்து வந்தார்-இது எந்த அளவு அவரது ஆளுமையப் பாதிக்கப் போகிறது என்பதை அறியாமல். ரெனே கார்ல் வில்ஹெல்ம் ஜோஹன் ஜோஜப் ரில்கே. பெயரின் தொடக்கத்தில் உள்ள ரெனே இரு பாலருக்குமானது. இதுமட்டுமன்றி ரில்கேவுக்கு முடிந்த வரை பெண் பிள்ளைகளின் உடைகள் உடுத்தி சந்தோஷப்பட்டார் அவர் தாயார்.

ஒரு ‘டேன்டியின் அழகியல் பாரம்பரியத்தில் தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார் ரில்கே. ஆயினும் கவிதை வாழ்க்கையை மாற்றியமைக்கும் என்கிற உண்மை ஒரு வேளை ரில்கே என்கிற ஒரே ஒரு கவிஞனிடத்தில் மட்டுமே நம்மால் பார்க்க முடியும். தனக்கென்று ஒரு வீடில்லாதிருப்பதும் ஏறத்தாழ ஓய்வு ஒழிச்சலற்ற பிரயாணமும்தான் ரில்கே என்ற மனிதனிட மிருந்து அத்தகைய உள்மனப் பிரயாணக் கவிதைகளைத் தந்தது என்று சொல்லலாம். ஒரு வெளியாளின் வாழ்க்கை முறை அமைந்த காரணத் தினால் அவருக்கு பிறரின் வாழ்க்கையையும் தனது வாழ்க்கை யையும் அந்நியமான பார்வையுடன் அணுக முடிந்தது. பெரும்பான்மையான அவரது புரவலர்கள் பெண்கள் என்பதும் குறிப்பிடத் தகுந்த தகவல்.

ரில்கேவை ஒரு சிறந்த ஐரோப்பியர் என்று அவரது வார்த்தைகளிலேயே சொல்லலாம். ஆங்கில மொழியை வெறுத்த ரில்கே தனது வாழ்வின் மத்தியகாலங்களில் பிரெஞ்சுக் கவிஞர் பால் வெலேரியைச் சந்தித்த பிறகு தன்னை ஒரு பிரெஞ்சு எழுத்தாளராக ஆக்கிக் கொள்ளக் கூட முயன்றார். உரையாடல் மற்றும் கடிதங்களில் பிரெஞ்சு மொழியைக் கையாண்டார். இந்த நடவடிக்கை ஜெர்மானியர்களுக்கு வேண்டிய எரிச்சலைத் தந்ததால் ரில்கேவை ஜெர்மன் இலக்கியப் பத்திரிகைகள் ஒரு கலாச்சாரத் துரோகி என்று முத்திரை குத்தின. அவர் தான் ஒரு சிறந்த ஐரோப்பியனாக இருப்பதற்கு மாத்திரமே முயல்வதாகப் பதில் கூறினார். நிஜத்தில் ஐரோப்பியர் என்கிற அர்த்தத்தை முழுமனதுடன் கூறினாரா என்பது சந்தேகமே. அவர் பிறந்த ஆஸ்திரியாவை அவருக்குப் பிடிக்கவில்லை. பிராக் நகரம் ஆஸ்திரிய-ஹங்கேரியப் பேரரசின் ஒரு பிரதான நகரமாக அப்போதிருந்தது. அதன் பிரத்யேக குணாம்சங்களாய் இருந்தவை அதன் கலவையான தேசீய இனங்கள், மொழிகள், மக்கள். ஜெர்மானியர்கள், யூதர்கள், ஸெக்கஸ்லோவாகியர்கள். ஜெர்மன்மொழி அரசாங்க மொழியாக இருந்தது மட்டுமன்றி மேல்தட்டு மக்களின் மொழியாகவும் இருந்தது. இத்தகைய ஒரு காலகட்டத்தில் ஸெக்கஸ்லோவாகியர்கள் ஒரு படி கீழாக வைத்து நடத்தப் பட்டார்கள். ஏன், இளம் வயது ரில்கேவுக்கு ஸெக் நாட்டவர்கள் மீது கீழ்மையான அபிப்பிராயம் உருவாக அவரது பெற்றோர் காரணமாக இருந்தனர் என்பது ஒரு உறுத்தும் உண்மை.

ஒரு ஜெர்மானியராக இருப்பதையும் அவர் விரும்பவில்லை. ஒரு ஸெக் நாட்டவராக இருப்பதும் அவருக்கு உவப்பாக இருக்கவில்லை. ஒரு எதிர்முரண் என்னவென்றால் முதல் உலகப் போருக்குப் பிறகு அவர் பிறந்த இடம் ஸெக்கஸ்லோவாகியாவில் சேர்க்கப்பட்டு சிறிது காலம் ஸெக் பாஸ்போர்ட்டில் அவர் பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டார். ஒரு இளைஞனாக இருந்த போது ஒரு heimatlos (homeless)என்று தன்னை சொல்லிக் கொள்ள ஆசைப்பட்டார். இந்த சொல் நாடற்றவர்-வீடற்றவர் என்ற இரு அர்த்தங்களையும் உள்ளடக்கி யதாக இருந்தது. தன் பூர்வீகத்தை உறுதிப்படுத்திக் கொள்ளும் உரிமை ஒரு கவிஞனுக்கு உண்டு என்கிற உரிமையை அழுத்தம் திருத்தமாகக் கூறினார்:

ஒரு பேச்சுக்கு சொல்வதானால், நாம் பிறக்கிறோம், புரொவிஷனலாக, எங்கே என்பது ஒரு பொருட்டல்ல. நமக்குள்ளாக நாம் சிறிது சிறிதாய் நம்மை கம்போஸ் செய்து கொள்கிறோம், நமது பூர்வீகத்தின் நிஜமான பிறப்பிடத்தை-அதன் மூலம் நாம் பிறகு பிறந்து கொள்ளும்படியாக.

ரில்கேவின் கல்வி சரியாகத் திட்டமிடப்படாததும் கூறுபட்டதாகவும் அமைந்தது. ஒரு ராணுவ அதிகாரி ஆக முயன்று முடியாமல் போன அவரது தோல்வியைச் சரி செய்யவும் வீட்டின் நிதிநிலைமைகளை அனுசரித்தும் ரில்கேவின் பூர்ஷ்வா தந்தை ஜோஸப் ராணுவப் பள்ளியில் மகனைச் சேர்த்தார். அவர் அப்போது ஒரு மிகச் சாதாரண ரெயில்வே அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். St.Polten மற்றும் Mahrisch-Weisskrichen ஆகிய இடங்களில் செப்டம்பர் 1886ஆம் ஆண்டிலிருந்து ஜுன் 1891வரை மொத்தம் 5 வருடங்களை ராணுவப் பள்ளிகளில் அடிப்படைக் கல்வியும் பள்ளிக் கல்வியும் பயில வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்தப் பள்ளிகளில் ரில்கே எதையும் கற்கவும் இல்லை எந்த நண்பர்களையும் உருவாக்கிக் கொள்ளவுமில்லை என்பதை தன் வாழ் நாளில் பிறகு நினைவு கூர்ந்தார்-மனதில் வடுக்களை உண்டாக்கிய அந்த ராணுவப்பள்ளி அனுபவங்களை. தொடர்ந்த உடல்நலக்குறைவு காரணம் காட்டப்பட்டு பள்ளியிலிருந்து நீக்கப்பட்டார். அவர் தந்தையுடன் வாழ்ந்த காலங்களில் தனிப்பயிற்சி அளிக்கப்பட்டு பல்கலைக் கழகத்தில் சட்டத்துறையில் பட்டம் பெற தயாரானார். ஆனால் அவர் தன் விதி கவிதை என்பதை மறந்துவிடவில்லை.

அவரது தந்தையைக் காட்டிலும் ஒரு அறிவுஜீவி என்கிற வகையில் ரில்கேவின் தாயார் ஃபியா என்கிற சோஃபியா தேவையான அளவு பாதிப்பைச் செலுத்தினார். மிக இளையவராக இருந்தபோதே ரில்கே பிரெஞ்சு மொழியைக் கற்கக் காரணமாக இருந்தார். மலிவான ஸெக் மொழிக்குப் பதிலாக எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் பிரெஞ்சு மொழியைப் பயன் படுத்தும்படி மகனுக்கு அறிவுறுத்தினார் ஃபியா. அவர் நடவடிக்கையில் ஒருவித பகட்டுக்காரியின்தன்மை இருந்த போதிலும் இளம் ரில்கேவின் அழகியல் மற்றும் இலக்கிய ஈடுபாடுகளுக்கு ஃபியாதான் காரணம். ஒருவித ரொமாண்டிக் மதத்தன்மையையும், புனிதர்களின் வாழ்க்கை பற்றிய ஈடுபாடும், புனிதச் சின்னங்களைப் பற்றிய மரியாதையையும் குழந்தையின் மனதில் பதியக் காரணமாக இருந்தார் ஃபியா.

ஆங்கில மொழி அவருக்கு உவப்பானதாய் இருக்கவில்லை என்பதை விட அமெரிக்காவை அவர் ஒரு நாடாகக் கருதவில்லை என்பது இன்னும் தீவிரமான ஒரு கொள்கை நிலைப்பாடு. திரள் உற்பத்தியில் பொருள்களைத் தயாரித்து நம் மீது வீசும் ஒரு நாடாகவே அவர் அமெரிக்காவைக் கண்டார். தொழில்மயமான-முதலாளீய சமுதாயத்தை அவர் விளாசிய விதத்தில் ஒன்றும் புதுமையில்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும் அதற்குக் காரணமாக இருந்த சிந்தனையாளர்கள் ஆங்கிலக் கலை விமர்சகர் ஜான் கால்லைல், நீட்ஷே, ஜான் ரஸ்க்கின், வால்டர் பேட்டர் மற்றும் ஜேகப் பக்கார்ட். இந்த விமர்சன சிந்தனைகள் வெறும் கருத்துத் துருத்தல்களாகவன்றி நிஜமான கவித்துவ வரிகளாக அவரது கவிதைகளில் இடம் பெற்றன. இந்த சிந்தனையாளர்கள் தவிர ரில்கே, குறிப்பாக அந்த காலகட்டத்தில் லூ ஆன்ரியாஸ்-சலோமி என்ற பெண்ணின் ஆளுமைப் பிடியில் இருந்தார்.

லூ ஆன்ரியாஸ்-சலோமி(1861-1937) ஒரு ரஷ்ய ராணுவ படைத்தளபதிக்கு மகளாகப் பிறந்தவர். தத்துவம், இறையியல் மற்றும் கலை வரலாறு போன்ற பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த சலோமி உடல்நலக்குறைவு காரணமாக ஜுரிச் நகரிலிருந்து இதாலிக்கு இடம் பெயர வேண்டியதாயிற்று. ரோம் நகருக்கு வந்த சிறிது காலத்திலேயே அவருக்கு நீட்ஷேவுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். 1882ஆம் ஆண்டு வரை நீட்ஷேவுக்கும் சலோமிக்கும் ஒரு இனிமையான நட்பு தொடர்ந்தது. 1894ஆம் ஆண்டு நீட்ஷேவைப் பற்றிய ஒரு ஆய்வு நூலை வெளியிட்ட போதிலும் அவர் நீட்ஷேவின் காதலை நிராகரித்தார். 1887ஆம் ஆண்டு எஃப்.சி.ஆன்ரியாஸ் என்ற கீழைநாட்டு அறிஞரைத் திருமணம் செய்து கொண்டார். இதன் மூலம் அவருக்கு பெர்லினில் நிலையாகத் தங்குவதற்கு ஒரு வீடு கிடைத்தது. பெர்லினில் ஹாப்ட்மேன் உட்பட பல எழுத்தாளர்களுடன் சலோமி நல்ல உறவு ஏற்படுத்திக்கொண்டார். இரண்டு நாவல்களை வெளியிட்டதன் மூலம் (பெரும்பாலும் சுயசரிதம் சார்ந்தவை) தன்னை ஒரு நாவலாசிரியராகவும் ஸ்தாபித்துக்கொண்டார். தவிரவும் அவர் பெண்விடுதலை தொடர்பான இயக்க ரீதியான சில கட்டுரைகளையும் வெளியிட்டார்.

ரில்கேவைச் சந்தித்தபோது சலோமிக்கு வயது 36. சலோமிக்கு அருகாமையில் இருக்கும் பொருட்டு பெர்லின் நகருக்கு தன் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டார் ரில்கே. 22வயதான ரில்கேவுக்கு நம்பகமான ஆலோசகராகவும் பிறகு ரில்கேவின் முதல் காதலியாகவும் ஆனார். ஒரு காதலி என்கிற ஸ்தானத்தை விட ரில்கேவுக்கு ஒரு தாயாய் இருந்து அவரது வளர்பிராய இலக்கியக் கல்வியையும் பாதிப்புகளையும் நெறிப்படுத்தியவர் சலோமி. 1900ஆம் ஆண்டுக்குப் பிறகு சலோமியுடனான நெருக்கம் குறைவதை ரில்கே உணர்ந்தார். ஆனால் இதற்குப் பிறகும் தன் மனநெருக்கடிகளைப் பகிர்ந்து கொள்வதற்கும் கடிதங்கள் எழுதுவுதற்குமான ஒரு நம்பகமான ஆலோசகராக சலோமி தொடர்ந்து செயல்பட்டார். 1911ஆம் ஆண்டு ஸிக்மண்ட் ஃபிராய்டைச் சந்தித்த சலோமி தீவிரமாக மனோவியல் பகுப்பாய்வு பற்றிய புரிதலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். ஃபிராய்டுடனான சலோமியின் உறவு இறுதி வரை தொடர்ந்து நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. தவிரவும் மூன்றவாது சர்வதேச மனோவியலாளர்களின் மாநாட்டின் போது ஸிக்மண்ட் ஃபிராய்டைச் சந்திக்கும் வாய்ப்பினை ரில்கேவுக்கு ஏற்படுத்தித் தந்தார். ரில்கே ரஷ்ய இலக்கியங்களிலும் வரலாற்றிலும் ஆழ்ந்த படிப்பும் ஈடுபாடும் கொள்ளவேண்டும் என்றும் சலோமி வற்புறுத்தினார். இருபால் பெயர் தொனிப்பு கொண்ட ‘ரெனே என்ற பெயர்ப்பகுதியை ஆண்தன்மையான ரெய்னர் என்று மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும் என்று ரில்கேவை வற்புறுத்தியவர் சலோமிதான். திருமணமான இந்தப் பெண்ணுடனான தீவிரமான உறவு ஒரு வருடம் நீடித்தது.

சலோமியின் துணையுடன் 1899ஆம் ஆண்டின் வசந்தகாலத்தின் போது ரஷ்யாவுக்கு சென்றார் ரில்கே. அங்கே தால்ஸ்தாயுடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். இந்த முறை சலோமியின் கணவரும் அவர்களுடன் பிரயாணம் செய்தார். இந்தப் பயணத்தைப் பற்றி பிறகு நினைவு கொள்ளும் போது “முதல் முறையாகத் தன் வாழ்வில் சொந்த இடத்தில் இருப்பது போலவும், யாருடனும் சேர்ந்திருப்பது போன்ற உணர்வும் ரஷ்யாவின் பரந்த நாட்டுப்புறப் பகுதிகளும் அதன் கிறித்தவக் கோயில்களும் அளித்ததாகப் பதிவு செய்தார் ரில்கே. மீண்டும் அடுத்த வருடமே(1900) ரஷ்யாவுக்கு இன்னொரு பயணம். இந்த முறை சலோமி ரில்கே இருவர் மாத்திரம். இரண்டாம் ரஷ்யப் பயணத்தின் போது போரிஸ் பேஸ்டர்நாக் குடும்பத்துடன் ஒரு அரிய சந்திப்பு ஏற்பட்டது. (சலோமி ரில்கேவைப் பற்றிய தனது நூலை ரில்கேவின் மறைவிற்குப் பிறகு 1928ஆம் ஆண்டு வெளியிட்டார். அதே போல அவர்கள் இருவருக்குமிடையிலான கடிதங்களையும் நூலாக வெளியிட்டார்.)

இதைத் தொடர்ந்த இலையுதிர்காலத்தின் போது உண்டான எதிர்பாராத உத்வேகத்தினாலும் அதன் தொடர்ச்சியினாலும் The Book of Monastic Life என்ற கவிதை நூலைப் படைத்தார் ரில்கே. இந்நூலே பிறகு The Book of Hours என்றழைக்கப்பட்டது. இதில் 67 சிறிய, கையடக்கமான கவிதைத்-தியானங்கள் அடங்கியிருந்தன. இவை ஒரு ரஷ்ய-கிறித்தவ பிக்குவுக்கு சொந்தமானவை என்று வாசிக்கப்பட வேண்டும்.

இதாலிய மறுமலர்ச்சிக்கால ஓவியங்களைப் பரிச்சயம் கொள்ளும் வகையில் ஃபிளாரென்ஸ் நகரில் ஒரு வருட காலத்தைக் கழித்தார் ரில்கே. இந்த அனுபவம் ரஷ்யப் பயணம் அளவுக்கு புத்துணர்ச்சி அளிக்கக்கூடியதாக இல்லையெனினும் ரஷ்யப் பயண அனுபவத்துடன் ஒன்றிணைந்து போகும் தகுதி வாய்ந்ததாய் அமைந்தது. கலையை வாழ்க்கையின் அதிசயம் அல்லது மர்மமாகப் பார்க்கும் தளைகளற்ற பார்வையை வளர்த்துக் கொள்ள ஃபிளாரென்ஸ் நகரம் உதவிற்று. குறிப்பாக ஓவியர்களும் கவிஞர்களும் நிஜமான வெளிப்பாட்டாளர்களாக(Revealers), ஒரு வகையில் சொல்லப் போனால் கடவுளர்களாக ஆகும் நிலை பற்றிய உள்ளுணர்வையும் நம்பும் உணர்வையும் பெற்றார். வாழ்வின் அருமையை அதிகரிக்கச் செய்யும் இவ்வுலக வாழ்வைப் பற்றிய அனுபவத்தையும் சொல்வதால் இந்தக் கவிதைகளில் ஒரு கிறித்தவனுக்கு தூய இறையனுபவமோ அல்லது மத அனுபவமோ கிடைக்க வாய்ப்பில்லை. காரணம் ரில்கேவின் கடவுளும், பிக்குகளும், தேவதூதர்களும் மதம்சாராதவர்கள்.

ரில்கேவின் தாயார் பாதிப்பு செலுத்திய குறுகிய எல்லைகள் கொண்ட கத்தோலிக்க மதக் கட்டுப்பாடுகளை உதறி எறிய நீட்ஷேவின் சிந்தனைகள் உதவின. சகலமும் அனுபவப்பட்டு அறியப்பட வேண்டியது இந்த உலகத்தில்தான்-இறந்த பிறகான உலகில் இல்லை என்பதை ரில்கேவின் சமகாலக் கலைஞர்கள் நீட்ஷேவின் உதவியுடன் நிரூபித்துக் கொண்டிருந் தனர். ரில்கே குறிப்பிடும் கடவுள் மதம் சாராதவர், மேலும் அவர் ‘பிரார்த்த னைகள் என்று குறிப்பிடுவது அவர் தனக்குத் தானே சொல்லிக் கொண்டவை.

1900ஆம் ஆண்டு மே-விலிருந்து ஆகஸ்ட் வரையிலான மூன்று மாதங்களை இரண்டாவது ரஷ்யப் பயணத்தில் கழித்தார் ரில்கே. இந்தப் பயணத்தின் முடிவில் வடக்கு ஜெர்மனியின் ஓவியக் குடியிருப்பு ஒன்றில் ப்ரெம்மன் என்ற இடத்தில் ஒரு ஓவிய நண்பருடன் தங்கிச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ப்ரெம்மன் என்ற நாட்டுப்புற பிரதேசத்திற்கருகில் Worpswede என்ற அந்த சிறிய கிராமத்தில்தான் அவரது எதிர்கால மனைவியையும் மற்றொரு காதலியையும் (பாவ்லா பெக்கர்)சந்தித்தார். தன் மென் உணர்வு களுடன் ஒத்திசைவு கொண்ட கலைஞர்களும் ஓவியர்களும் வாழும் அந்த கலைக்கிராமத்தின் புதிய வாழ்க்கை முறைகள் தன் கவிதை வாழ்வுக்கு இசைவாக இருக்கும் என்று ரில்கே நம்பினார். இந்த ஓவிய கிராமத்தில் ஆகஸ்ட் ரோதான்-இன் மாணவியும் சிற்பியுமான கிளாரா வெஸ்ட்டாஃப் என்ற பெண்ணைச் சந்தித்து திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார். 1901இல் திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. என்ற போதிலும் தொடக்கத்திலிருந்தே இந்தத் திருமணம் அவரது வாழ்க்கையில் ஒரு சொற்பமான நிகழ்வாகத்தான் இருந்தது. இருவருக்கும் குடும்ப வருமானத்தின் பொருட்டு மிக அற்பமான வேலைகளையும் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இந்த நெருக்கடி கணவன்-மனைவி இருவரின் கலை வாழ்க்கையின் ஆன்மாவை அழித்துவிடும் என்று நம்பியதால் நட்பு முறையில் கிளாராவும் ரில்கேவும் மணவாழ்க்கையில் பிரிந்தனர்.

William H.Gass என்ற மொழிபெயர்ப்பாளர்-படைப்பாளர் ரில்கேவின் தனிநபர் உறவுகள் பற்றிய ஒரு சர்ச்சையை அவரது குறிப்பிடத்தக்க நூலான Reading Rilke(1999))வில் பதிவு செய்திருக்கிறார். ரில்கே பெண்களை அணுகும் விதத்தில் ஒரு குறிப்பிட்ட முறைமை இருக்கிறது. அவர்களைக் காதலிக்கத் தொடங்கி அந்தப் பெண்கள் அவர் மீது ஈடுபாடு காட்டத் தொடங்கிய உடன் ரில்கே பின்வாங்கி விடுவது ஒரு மனோவியல் சிக்கல் என்றும் அவர் அந்தப் பெண்களில் அவர் தேடியது ஒரு “காதலியை அல்லவென்றும் தனது அம்மாவையே அவர்களில் தேடினார் என்றும் காஸ் வாதிட்டார். ஆனால் இந்த நோய்க்கூற்றுத் தன்மை பற்றிய சுயப்பிரக்ஞை ரில்கேவுக்கே இருந்திருக்கிறது. 1902ஆம் ஆண்டிலிருந்து 1910வரை அவர் ரோதானின் நேரடி பாதிப்பிலும் பிறகு ஓவியர் செஸான்-இன் பாதிப்பிலும் இருந்தார். ஆனாலும் தன் எந்தவித பிணைப்புகளுக்கும், தனிநபர் உறவுகளுக்கும், சொந்தங்களுக்கும் மட்டுமீறிய மதிப்பளிக்க இயலாது என்றார் ரில்கே. இவ்விதமான உறவுகள் மற்றும் பந்தங்களின் துறப்பினை அவரது கலை வேண்டி நிற்கிறது என்றார். தான் யாரிடமிருந்தும், எதையும் எதிர்பார்க்கவில்லை என்றும் அதனால் முன்பு எப்போதையும் விட மிகப் பெரிய காரியமாக இந்த உலகம் தன்னை நோக்கிப் பாய்ந்து வருகையில் அதற்கேற்ற தெளிவானதும் உறுதியானதுமான பதில்களை அளிக்க முடிந்தது என்றும் கூறினார் அவர். ரில்கே பீத்தோவனின் சொற்களை மேற்காட்டினார்:

எனக்கு நண்பர் எவருமில்லை. நான் என்னுடன் தனியாகத்தான் வாழ வேண்டும். ஆனால் என் கலையில் கடவுள் வேறு எவரிடமும் விட மிக நெருக்கமாக இருக்கிறார் என்பதைப் பற்றிய அறிதலுடன் இருக்கிறேன்.

பின்வாங்கல் என்பது பிரதானமாய் ஒரு அணுகு முறையாக ரில்கே என்ற மனிதனிடமும் கவிஞனிடமும் சரிசமமாய் இருந்தது.

இளம்பெண்களின் மரணம் ரில்கேவை சில சிறந்த நினைவாஞ்சலிக் கவிதைகளை எழுத வைத்திருக்கிறது. ஒன்று Requiem என்ற கவிதை. இந்தக் கவிதை ஓவியர்களின் கிராமத்தில் ரில்கே கிளாரா வெஸ்டாஃப்-உடன் சந்தித்த Paula Medorshon Becker என்ற இளம் பெண் ஓவியரின் நினைவில் எழுதப்பட்டது. கிளாராவும் பாவ்லாவும் மிக நெருக்கமான நண்பிகளாகவும் இருந்தனர். பாவ்லா பெக்கர் ஒரு குறிப்பிடத்தக்க ஜெர்மன் ஓவியராக இருந்தார். பாவ்லா பெக்கருக்கு ஓவியர் Otto Medorshon என்பவருடன் திருமணம் ஆனபின் ரில்கே கிளாராவிடம் தன் விருப்பத்தை வெளிப் படுத்தினார். ஆனால் இருவர் மீதுமே ரில்கே காதல் வயப்பட்டிருந்தார். பாவ்லாவின் வாழ்க்கைத் திசை வேறுமாதிரியாகச் சென்றது. அவர் திருமணம் செய்து கொண்ட Otto Medorshon ஒரு பெரிய ஓவியர். Otto Medorshon அந்த ஓவிய இயக்கத்தின் இயக்குநர். பாவ்லா தன் கணவரின் நிழலில்தான் வாழ முடிந்தது. பிறகு வீட்டு வேலைகளில் மூழ்கிப் போனவரானார். பாவ்லாவுக்கு ஏற்பட்ட அவரது கலைப் பயணத்திற்கான இக்கட்டைச் சரிசெய்ய வேண்டி ஒரு வருடம் வீட்டு வேலைகளிலிருந்து விடுவித்துக் கொண்டு பாரிஸ் நகருக்குச் சென்று தன் ஆத்மதிருப்திக்கு ஓவியங்கள் வரைந்து கொண்டிருந்தார். ஆனால் அந்த வருடமே அவரது கணவர் ஓட்டோ மெடோர்ஷான் மற்றும் பாவ்லாவின் பெற்றோர்கள் கடிதங்கள் எழுதி அவர் வீடு திரும்ப வேண்டுமென்றும், வீட்டு வேலைகளையும் ஒரு மனைவிக்கான பொறுப்புகளையும் ஏற்றுச் செய்ய வேண்டுமென்றும் நச்சரிக்கத் தொடங்கினர். இந்த வேண்டுதல்களையும், கெஞ்சுதல்களையும் நிராகரிக்க இயலாத பாவ்லா Worpswede திரும்பினார். கொஞ்ச நாட்களிலேயே கர்ப்பமாகி 1907ஆம் ஆண்டு ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து குழந்தைப் பிறப்பில் இறந்து போனார். Worpswedeஇல் இருந்த காலங்களில் ரில்கே பாவ்லாவுடன் நீண்ட நேரம் கலை மற்றும் ஓவியங்கள் பற்றிய விவாதங்கள்-பகிர்தல்களில் ஈடுபட்டிருப்பினும் கூட அவரது ஓவியங்களை சரிவரப் புரிந்து கொள்ளவில்லை. வெளிப்படை யாகவே பாவ்வலா இறந்த வருடத்தின்(1907) கோடை காலத்தில் நடத்தப்பட்ட செஸான்-இன் எல்லா ஓவியங்களும் அடங்கிய கண்காட்சிக்குச் சென்றார். செஸானின் இறுதிக்கட்ட ஓவியங்களைப் பார்த்த பிறகுதான் பாவ்லா எவ்வளவு சிறந்த ஓவியர் என்பது ரில்கேவுக்கு உதயமாயிற்று. பாவ்லாவின் இறப்பு அவருக்குள் மிக ஆழ்ந்த அதிர்ச்சிகளையும் தாக்கங்களையும் ஏற்படுத்தியது.

1902 ஆம் ஆண்டு பாரிஸ் நகருக்கு வருவதற்கு ஒரு மாதம் முன்னர் Book of Images என்ற கவிதை நூலை வெளியிட்டார். இக்கவிதைகள் 1898ஆம் ஆண்டுக்கும் 1901ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் எழுதப் பட்டவை. இக்கவிதைகளில் ஒருவித நியோ-ரொமாண்டிக்தன்மை காணப் பட்டது. அவற்றின் உச்சபட்சமான சில கவிதைகளில் விவரிப்புகளையும் குறியீடுகளையும் பிணைக்கும் தன்மையும் காணப்பட்டது. இந்த மாதிரியான கவிதைகளை அப்பொழுதைக்கப்பொழுது எழுதிவந்தார். இதன் இரண்டாவது பதிப்பில் கூடுதலாக 37 கவிதைகளைச் சேர்த்தார். ஆனால் பாரிஸ் நகர் வந்தடைந்தவுடன் பிரெஞ்சுக் கவிஞர் பாதலெர் மற்றும் சிற்பி ரோதான் ஆகியோரின் பாதிப்பிலும் பிரெஞ்சு உழைப்பின் அடிப்படையிலும் பிரெஞ்சு மொழியின் புறவயத்தன்மையிலும் மிகவும் வித்தியாசமான கவிதைகளை எழுதிப்பார்க்கத் தீர்மானித்தார்.

1902ஆம் ஆண்டு ஜெர்மன் பதிப்பு நிறுவனம் ஒன்றுக்காக ஆகஸ்ட் ரோதான்-இன் வாழ்க்கை பற்றிய சிறுநூல் ஒன்றை எழுதும் பணியை மேற்கொண்டு பாரிஸ் நகருக்குச் சென்றார். அவரது மாணவியும் தனது முன்னாள் மனைவியுமான கிளாரா வெஸ்டாஃபின் மூலம் ரோதான் பற்றி அவர் அறிந்து வைத்திருந்த தகவல்கள் ரில்கேவுக்கு ரோதானிடம் அளவற்ற மதிப்பை உண்டாக்கியிருந்தன. மேலும் அந்தக் காலகட்டத்தில் ரோதான் உலகப் பிரசித்திபெற்ற சிற்பியாக விளங்கினார் என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஒப்பிட்டுப் பார்க்கையில் ரில்கே இப்போதுதான் எழுதத் தொடங்கியிருக்கும் ஒரு ஆரம்ப கட்டக் கவிஞர். ரோதான் என்ற கலைஞனையும் ரோதான் என்ற மனிதனையும் நெருங்கிப் புரிந்து கொண்டு தகவல்களைப் பதிவு செய்ய அவருக்கு அருகாமையில் இருப்பதற்காக பாரிஸ் பயணம் உதவிற்று. ஹெமிங்வே போன்ற பிற எழுத்தாளர்கள் பாரிஸ் நகர் பற்றிக் கொண்டிருந்த ரொமாண்டிக் மனப்பதிவு சிறிது கூட ரில்கேவுக்கு இருக்கவில்லை என்பது பிறகு தெரிந்தது. வாழ்க்கைக்கும் கலைக்குமிடையிலான எதிரிடைகளைப் பற்றிய அதீதப் பிரக்ஞையுடனிருந்த ரில்கேவுக்கு ரோதான் அவ்விரு எதிரிடைகளை இணைப்பவராகத் தோன்றினார்.

1902லிருந்து அடுத்த 12 வருடங்களில் ரில்கேவுக்கு பாரிஸ் நகர்தான் பூகோள மையமாக இருந்தது. ஆனால் 1903ஆம் ஆண்டு தொடங்கி அடிக்கடி பிற ஐரோப்பிய நகரங்களுக்கும் நாடுகளுக்கும் சென்று திரும்பியதற்கான காரணம் பாரிஸ் நகரின் பிறர் மீது அக்கறையற்ற வாழ்க்கைதான். அதன் குரூரத்தைத் தாங்கவியலாமல் மத்திய இதாலியின் ஒரு பகுதியான வியரெஜியோ பகுதியில் தங்கினார். வியரெஜியோவில் தங்கியபோதுதான் The Book of Hours இன் இறுதிப் பகுதியான The Book of Poverty and Death The Book of Hourஐ எழுதினார். 1903ஆம் ஆண்டு ரோம் நகரிலும் 1904ஆம் ஆண்டு ஸ்விட்சர்லாந்திலும் இருந்தார். 1906லும் 1908லும் திரும்பத் திரும்ப இதாலியத் தீவான கேப்ரிக்குச் சென்றார். பிறகு ஃபிரான்சின் தென் பகுதி, ஸ்பெயின், எகிப்து என பல பயணங்கள் மேற்கொண்டார்-நண்பர்களைச் சந்திக்க ஜெர்மனிக்கும் ஆஸ்திரியாவுக்கும் சென்று வந்தார்.

அவரே தேர்ந்தெடுத்துக் கொண்ட இரண்டாவது வீடாக பாரிஸ் அமைந்தது என்று சொல்வது மிகையாகாது. அதன் காட்சிபூர்வமான தன்மைக்கும் அறிவார்த்த சவால்களுக்கும் அது ரஷ்யாவுக்கு சமமாக ரில்கேவுக்கு இருந்திருக்க வேண்டும். சௌகரியங்களும் புலன் தூண்டுதல்களும் நிறைந்த கலாச்சாரத் தலைநகராக பாரிஸ் அவருக்குத் தோன்றவேயில்லை. பாரிஸ் நகர் வயோதிகர்களாலும், நோயாளிகளாலும், இறந்து கொண்டிருப்பவர் களாலும், முகமற்றவர்களாலும், வீடற்றவர்களாலும் நிறைந்த மனிதமை இழந்த நகரமாக இருந்தது ரில்கேவுக்கு. அது பீதியின், வறுமையின், மரணத்தின் தலைநகரமாய் காட்சியளித்தது. கலை மற்றும் படைப்பாக்கம் பற்றிய ரில்கேவின் கருத்துருவங்கள் அபார வளர்ச்சி பெற்றது ரோதான்-உடன் ஏற்பட்ட நெருக்கத்திற்கு பிறகு என்பதை ரில்கேவே ஒப்புக் கொண்டார். ரோதானுடனான இந்த நட்பு 1906ஆம் ஆண்டு வரை நீடித்தது. “இடைவிடாத கடின உழைப்பு என்ற கலையறம் பற்றிய தன் கருத்துக்களை இளம் ரில்கேவுக்கு தனது ஓய்வற்ற சிற்ப வேலைகள் மூலம் ரோதான் புரிய வைத்தார். ரோதானின் அணுகுமுறை மரபான படைப்பு உத்வேகம் கலைஞனை வந்தடையும் வரை கலைஞன் காத்திருக்க வேண்டும் என்கிற கருத்துருவாக்கத்துடன் அடிப்படையில் முரண்பட்டது. சார்ட்(ஸ்) திருக் கோயிலின் பொக்கிஷங்கள், லூவர் மியூஸியத்தின் பொக்கிஷங்கள் பற்றி சிறந்த அணுகல்கைளத் தந்தார் ரோதான். இலக்கிய முன்மாதிரியாக ரில்கே வுக்கு இருந்தவர் சார்ல்ஸ் பாதலெர். ரோதான் அளித்த உணவுக்கும் உறைவிடத்திற்கும் கைம்மாறாக அவருக்கு வரும் கடிதங்களுக்கு பதில் எழுதும் உதவியாளராக இருந்து பணி புரிந்தார் ரில்கே. ஆனால் ஒரு தவறான புரிந்து கொள்ளலினால் தவிர்க்க இயலாத பிரிவு இருவருக்கும் ஏற்பட்டது. குறிப்பாக ஒரு கடிதத்திற்கான பதிலை ரோதானைக் கேட்பதற்குப் பதிலாய் தானே முடிவெடித்து எழுதிவிட்டார் ரில்கே.

பாரிஸ் காலகட்ட வாழ்க்கையின் போது ரில்கே புதுவிதமான உணர்ச்சி வெளிப்பாட்டுக் கவிதைகளை உருவாக்கி வளர்த்தெடுத்தார். இவை பிறகு “வஸ்துக் கவிதைகள் (அ) “காணும் கவிதைகள் என்றும் அழைக்கப்பட்டன. ரில்கே தனது கவிதை இல்லாக் காலங்களைப் பற்றியும் கவிதை உருவாகும் மனநிலை வாய்க்காதிருப்பது பற்றியும் ரோதானுடன் பகிர்ந்து கொண்டார். பாரிஸ் நகரின் Jardin des Plantesக்கு சென்று அங்கே ஏதோ ஒன்றை- எடுத்துக் காட்டாக ஒரு விலங்கினைக்-கூர்ந்து பார்த்து அதிலிருந்து ஏன் ஒரு கவிதையை உருவாக்கக் கூடாது என்று கேட்டார் ரோதான். இந்த அறிவுரையை மதித்து ரில்கே Jardin des Plantesக்கு சென்று ஒரு சிறுத்தையைப் பார்த்ததன் விளைவாய் உருப்பெற்றதுதான் Panther என்ற அதிகம் மேற்கோள் காட்டப்படும் ஓர் அழகிய கவிதை.

இவற்றில் பல வெற்றிகரமான கவிதைகள் காட்சிக் கலைப் படைப்புகள் சிலவற்றின் கற்பனை ரீதியான சொற்களால் ஆன மொழிபெயர்ப்புகளாய் அமைந்தன. பிற கவிதைகள் நிலக்காட்சிகளையும், உருவப்படங்களையும், விவிலிய மற்றும் புராணிக அம்சங்களை கவிதைக் கருவாகக் கொண்டிருந்தன. 1907-08ஆம் ஆண்டு New Poems என்ற பெயரில் வெளிவந்த இந்தக் கவிதைகள் பாரம்பரிய ஜெர்மன் ‘லிரிக் கவிதையிலிருந்து முற்றிலும் தளையறுத்துக் கொண்டவை மட்டுமல்லாது நவீன ஜெர்மன் கவிதைக்கு புதிய திசைகளைக் காட்டின. அவ்வளவு தீவிர எல்லைகளுக்கும் நுட்பங்களுக்கும் ரில்கே தனது மொழியை நுண்மைப்படுத்தி வனைத்து வடிவமைத்துக் கொண்டதால் அப்போது புழங்கிய ஜெர்மன் இலக்கிய மொழியிலிருந்து முற்றிலும் புத்துணர்ச்சி கொண்டதாய் அமைந்திருந்தது. ஒரு கடிதத்தில் செஸானின் கலை முறை பற்றிக் குறிப்பிடுகையில் ரில்கே எழுதிய வார்த்தைகள் Using up of love in anonymous labour ரில்கேவின் கவிதைக் கலைக்கும் முற்றிலும் பொருந்தக் கூடியதாய் இருந்தது. making objects out of fearஎன்றும் சலோமிக்கு எழுதிய கடிதம் ஒன்றில் 1903ஆம் ஆண்டு குறிப்பிட்டார்.

New Poems தொகுதிக்கு இணையானதொரு உரைநடைப் படைப்பாக எழுதத் திட்டமிட்ட ரில்கேவின் நாவலின் பெயர் The Notebook of Malte Laurids Brigge . 1904ஆம் ஆண்டிலிருந்து இந்நூலை எழுதத் தொடங்கினார். கவிதைகளுக்குப் பின்னாலிருந்து இந்நூல் ஒரு கழுகு போல வட்டமிட்டுக் கொண்டிருந்தது. இது ஒரு தனிநபரைப் பற்றிய-குறிப்பாக பாரிஸ் நகரில் ஹோட்டல் அறையில் வசிப்பவன் ஒருவனின் பயங்கள், பீதிகள் பற்றிய பதிவாக இருக்கிறது. New Poems சிம்பலிஸ்டுகளின் “தூய கவிதைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்குமானால் ஒரு எக்ஸிஸ்டென்ஷியலிஸ்டின் உரைநடை எழுத்தாக அமையும் அந்த குறிப்பேடு. புலம்பெயர்ந்து பாரிஸ் நகர் வந்து வசிக்கும் ஒரு டேனிஷ் நாட்டவரின் நினைவுக் குறிப்புகளாய் விரிகிறது அந்த நூல். ரில்கேவின் பிரதான கருப்பொருள்களான காதல், மரணம், குழந்தைப் பருவக்காலத்து பயங்கள், பெண்களைப் போற்றுதல், மற்றும் கடவுள். மேலும் பாரிஸ் வாழ்க்கையைப் பற்றி கவிதையில் எழுத இயலாத விஷயங்களையெல்லாம் உரைநடையில் பதிவு செய்ய முடிந்தது. குறிப்பாக பாரிஸ் நகரில் அவர் கண்டவை அவரை ஏன் மிரள வைத்தன என்பதைப் புரிந்து கொள்ளும் ஒரு முயற்சியாக இந்த உரைநடைப் படைப்பு அமைகிறது. முகங்கள் தேய்ந்தழியக் கூடியவை என்பதை ரில்கே உணர்ந்து கொண்டதும் பாரிஸ் நகரில்தான். கடந்த காலங்களில் ஒரு வாழ்க்கை முழுவதற்கும் நீடிக்கக் கூடிய முகங்கள் இருந்தன. நவீன காலங்களில் அவை மெலிதாகத் தேய்ந்து முகமற்ற முகங்களாகி அவற்றின் பின்புறம் இருப்பவை தெரிய ஆரம்பிக்கின்றன. தொழில் புரட்சியைப் பற்றியும் அதன் தயவால் கிடைத்த தயார்-மரணங்களைப் பற்றியும் ஆழ்ந்து தியானித்தார்.

ஒரு விநோத வாழ்க்கை முறையை பாரிஸ் நகர் அவருக்கு வாழக் கற்றுத் தந்தது. செல்வந்தர்களின் கோட்டைகள் மற்றும் அவர்களின் வீடுகளுக்கு வருகை தரும் வழக்கம் ரில்கேவுக்கு உண்டு. இவை தவிர்த்து அந்தப் பெரிய நகரில் போதுமான வருமானமின்றி ஒரே ஒரு மரியாதையான உடையை மாத்திரம் உடுத்திக் கொண்டு, மிகவும் சந்தடியும் சப்தமும் நிறைந்த ஒரு தெருவில் ஒரு மிகச்சிறிய வாடகை அறையில் தங்கியபடி காலம் கழித்தார். ஏனென்றால் ஓசையின்மையை விலை கொடுத்துத்தான் வாங்க வேண்டிய கட்டாயம் அவருக்கு இருந்தது. மிகச் சாதாரண பால்பொருட்கள் விற்கும் ஒரு உணவுவிடுதியில் தனியாக உணவருந்தியபடி, ஒரு வெளியாளாக, வேட்டையாடப்படும் விலங்காக அவர் பாரிஸில் வாழ்ந்தார். அவர் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தங்கினால் அதன் பக்கத்து அறையில் வசிப்பவன் இரவில் மிக அகாலமாக வயலின் வாசிப்பான். இந்த அனுபவம் அவருக்கு பல நகரங்களில் ஏற்பட்டிருக்கிருக்கிறது:

விநோத வயலினே நீ என்னைப் பின்தொடர்கிறாயா?

எத்தனை தூரத்து நகரங்களில் ஏற்கனவே

உன் தனிமை இரவு என்னிடம் பேசியிருக்கிறது?

நூற்றுவர் உன்னை வாசிக்கின்றனரா? அல்லது ஒரே ஒருவரா? . . .

தம் பயத்தில் உன்னை வாசிக்கச் செய்து

இப்படி ஏன் எப்போதும் நான் அத்தகு மனிதர்களுக்கு அண்டையில்

இருப்பவனாகிறேன்: வாழ்வின் கனத்தன்மை

வஸ்துக்களின் கனத்தை விடக் கூடுதலானது.

ரில்கே இப்போது வஸ்துக்களில் பொதிந்த கனத்ததன்மையை கவனிக்கத் தொடங்கினார். ஒரு பார்வையற்றவனின் ஊன்றுகோலில் எத்தகு கோபமான, தீங்குத்தன்மையான சக்தி நிறைந்திருக்கிறது? மரச்சாமான்களுடன் அமைந்த ஒரு அறையை ஸ்வீகரித்துக் கொள்ளும்போது அதில் உள்ள நாற்காலியில் எத்தனை தொற்றிக்கொள்ளும்படியான மனக்கசப்பு நிரம்பியுள்ளது?-குறிப்பாக நாற்காலியின் பளபளக்கும் முதுகில், தோல்வியடைந்த பல உள்வயமான மனிதர்கள் தமது தலைகளைச் சாய்த்திருக்கின்றனர்? ஒரு நடுத்தர வர்க்க வாழ்வறையில் கொஞ்சமும் பொருத்தமற்றவராகிவிடுகிறார் ரில்கே. இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக ரில்கேவின் The Soliltary Personஎன்ற கவிதையை மேற்காட்டலாம்.

பாரிஸ் வாழ்க்கையின் முதல் நான்கு வருடங்களில் ஒரு தீவிரக் கவிதை நூலை எழுதுவதில் முனைந்தார். The Book of Images என்ற அத்தொகுதியில் சித்திரங்களைப் பற்றிய ஒரு இலக்கிய நூலை எழுத முயலவில்லை. அது ஒரு ஓவியத்தன்மையான நூல்-இதில் ஓவியத்தின் ஒழுங்குகளையும் சட்ட திட்டங்களையும் ரில்கே கைக்கொள்கிறார். இத் தொகுதியில் இடம்பெறும் From Childhood என்ற தலைப்பிலான கவிதை சிறுவயதில் அவர் அம்மாவுடனான பிணைப்பை சித்தரிக்கிறது- இதில் ஓவியர் ரெம்ராண்ட் எப்படி தன் ஓவியத்தை அமைப்பாரோ அப்படித் தன் கவிதையை அமைத்திருக்கிறார் ரில்கே. இந்தக் கவிதையில் ஒரு அம்மாவும் மகனும் உள்ளனர். அறையில் எத்தனையோ மரச்சாமான்கள் இருந்த போதிலும் ஒரு கண்ணாடித் தம்ளர் மீதும் ஒரு கரியநிற பியானோவின் மீது மாத்திரம் தன் குவிமையத்தை வைக்கிறார். தாயார் அவரது பெரிய விரல்களில் மோதிரங்களுடன் பியானோவை வாசிக்க ஆரம்பிக்கிறார்-சிறுவன் கவனிக் கிறான்.

இதை எழுதுவதற்கு அவர் நிறைய விலை கொடுக்க வேண்டியிருந்தது. ஏறத்தாழ 10 வருடங்கள் கவிதையில்லாக் காலத்தைக் கடத்த வேண்டி வந்தது. இந்த காலகட்டத்தில் ஒட்டுமொத்தமாக எழுதுவதையே நிறுத்து விடலாம் என்று கூட யோசித்துக் கொண்டிருந்தார். New Poems தொகுதிக்குப் பிறகு அவர் குறிப்பிடத்தக்க கவிதை என்று எதையும் எழுதவில்லை. 1902ஆம் ஆண்டுக்குப் பிறகு 1912ஆம் ஆண்டுதான் கவிதை வந்தது.

The Notebook of Malte Laurids Brigge நாவலை எழுதி முடித்த 1910ஆம் ஆண்டின் குளிர்காலத்தில் அவரின் பாரிஸ் நகர வாழ்க்கை ஒரு முடிவுக் கட்டத்தை நெருங்கியது. அடுத்த நான்கு வருடங்களில் அவர் சுமார் 18 மாதங்களே பாரிஸில் தங்கினார். நிலைகொள்ளாத்தன்மையும், மனச்சோர்வும், உள்மன உளைச்சல்களும் அவரை ஒரு நாடு அடுத்த மற்றொரு நாடாக அலைய வைத்தன. புதிய பிராந்தியங்களை ஆராயும் பதற்றத்தில் அவர் வடக்கு ஆப்பிரிக்க கண்டத்தின் அல்ஜியர்ஸ், டூனிஸ், மற்றும் எகிப்து போன்ற பிரதேசங்களில் அலைந்து கொண்டிருந்தார். 1912லிருந்து 1913வரை ஸ்பெயனில் வசித்தார். இந்த வருடங்களின் ஆழ்ந்த நம்பிக்கையின்மை மற்றும் காரியமுனைவழிவுகள் இவற்றுக்கிடையே ஒரு நிகழ்வு அவரது இலக்கிய வாழ்க்கையையே மாற்றியமைக்கும்படியாக அமைந்தது. Princess Marie of Thurn and Taxis என்ற இளவரசி டால்மேசிய கடற்கரைப் பகுதியில் தனது டியூனோ கோட்டையில் ரில்கே தங்கி எழுதுவதற்கு வகை செய்தார். 1912ஆம் ஆண்டு டியூனோவில் அவர் இரங்கற்பாடல்களின் தொடர் ஒன்றினை எழுதத் தொடங்கினார். டியூனோ இரங்கற் பாடல்கள் ரில்கேவின் உச்சபட்ச கவிதைச் சாதனை என்று கருதப்படுகிறது. ஆனால் டியூனோ இரங்கற் பாடல்கள் எழுதி முடிக்கப்பட அடுத்த 10 ஆண்டுகள் தேவைப்பட்டன.

1914ஆம் ஆண்டு முதல் உலகப்போர் தொடங்கியவுடன் ரில்கே லீப்ஸிக் நகரில் சிக்கிக் கொண்டார். ராணுவ சேவைக்கு அழைக்கப்பட்டு 7 மாதத்திற்குப் பிறகு சிவில் வாழ்க்கைக்குத் திரும்பிய போதிலும் அவர் மியூனிக் நகர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலேயே இருக்க வேண்டி வந்தது. தொடக்கத்தில் 5 தேசாபிமான பாடல்களை எழுதிய போதிலும் போர் முடியும் தறுவாயில் ஜெர்மானியப் போர் யத்தனங்களுக்கு எதிராக அவர் மனம் திரும்பியது.

1919ஆம் ஆண்டு ஜுன் மாதம் ஸ்விட்சர்லாந்து நாட்டில் உரையாற்று வதற்கான அழைப்பினை ஏற்றார். இதாலிக்கும் ஜெர்மனிக்கும் வந்து போதல்களைத் தவிர்த்து அவர் தன் இறப்பு வரை ஸ்விட்சர்லாந்திலேயே இருந்தார். இந்த காலகட்டத்தில் அவர் தொடங்கி வைத்து இன்னும் முற்றுப்பெறாதிருக்கும் அந்தக் கவிதைத்(டியூனோ எலிஜி) தொடரை முடித்துவிட ஒரு புகலிடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். 1921ஆம் ஆண்டின் கோடை காலத்தில் அவர் “முஸோவைக் கண்டுபிடித்தார். அது வசிப்பதற்குத் தகுதியற்ற ஒரு மத்தியகாலக் கோட்டை. ஸ்விஸ் புரவலரின் விருந்தினராக ரோன் பல்லத்தாக்கில் அமைந்த Château de Muzot வில் குடியேறினார். தெற்கில் இதாலிக்கும் மேற்கில் பிரான்ஸ் தேசத்திற்கும் இடையில் அமைந்தது இந்தப் பிரதேசம். 1922ஆம் ஆண்டு பெப்ருவரி மாதத்தில் சில நாட்களிலேயே அவர் 1912இல் தொடங்கிய டியூனோ இரங்கற்பாடல்களை மீதிப் பகுதிகளை எழுதி முடித்தார். அவரது படைப்பாக்கத் திறன்கள் மீண்டும் அவரின் கட்டுப் பாட்டுக்குள் வந்தன. இந்தக் கவிதைத் தொடர்ச்சியை அவரது நலவிரும்பியும் உறைவிடம் அளித்து உதவியவருமான இளவரசி மேரிக்கு அர்ப்பணம் செய்தார். டியூனோ என்ற அவரது கோட்டையில் தொடங்கப்பட்டதால் ஒரு நன்றி உணர்வுடன் “டியூனோ எலிஜி என்றே பெயரிட்டார். முஸோவிலியே எதிர்பாராத விதமாகவும் ஏறத்தாழ யத்தனம் ஏதுமின்றியும் Sonnets to Orpheus என்ற தலைப்பிலான அற்புதமான கவிதைகளில் 55 எழுதி முடித்தார். 1922 பெப்ருவரியில் நிகழ்ந்த இந்தக் கவிதைப் பெருக்கெடுப்பு அவரது 10வருடக் காலக் காத்திருப்பு வீண் போகவில்லை என்பதை நிரூபணம் செய்தது.

இந்த நீண்ட கனமான கவிதைகளைத் தவிர சிறியதும் எளிமையானதுமான சில பாடல்களை அவர் தங்கியிருந்த முஸோவின் முன் விரிந்த Valais பள்ளத்தாக்கிற்கு நன்றி தெரிவிக்கும் முகமாக எழுதினார். முஸோ அவரது வீடாகத் தொடர்ந்து இருந்தது. ஆனால் அவரது பயணங்களை இப்போது ஸ்விட்சர்லாந்துக்குள் வைத்துக் கொண்டார். நண்பர்களைப் பார்க்கச் சென்றார்-அவரது பிரசித்தி பெற்ற கடிதங்களை எழுதுவதைத் தொடர்ந்தார். 1925ஆம் ஆண்டு தொடக்கத்தில் மீண்டும் பாரிஸ் நகருக்குச் சென்றார்-அதன் இலக்கிய வாழ்க்கையுடன் மிக நெருக்கமான தொடர்பைப் பேணிவந்தார். அவரது பழைய நண்பர்களான அந்ரே ழீத் மற்றும் பால் வெலரியும் மற்றும் புதிய ஆர்வலர்களும் அவருக்கு ராஜரீகமான வரவேற்பளித்தனர். அவர் வாழ்நாளிலேயே முதல் மற்றும் கடைசியாக ஐரோப்பியப் பெருநகரில் அமைந்த இலக்கிய சீஸனில் தன்னை ஒரு மையமாகக் கண்டார். ஆனால் இந்த வருகையின் சிரமங்கள் அவரது நொய்மையான ஆரோக்கியத்தை மிகக் கடுமையாகப் பாதித்தது. ஆகஸ்ட் 18ஆம் தேதி யாருக்கும் சொல்லிக் கொள்ளாமலேயே பாரிஸ் நகரிலிருந்து கிளம்பிச் சென்றார். அவர் 1923ஆம் ஆண்டிலிருந்தே உடல்நலம் சரியில்லாமலிருந்த போதிலும் அதன் காரணம் இன்னதென்று கண்டுபிடிக்க முடியாமலேயே இருந்தது. 1926ஆம் ஆண்டு அவரது இறப்புக்கு சில வாரங்களுக்கு முன்னரே அவரது நோய் குணப்படுத்த வியலாத லுக்கேமியா என்று கண்டுபிடிக்கப்பட்டது. ஜெனிவா ஏரியின் கரையில் அமைந்த Territet என்ற உடல்நலக் காப்பகத்தில் அவர் காலமானார்.

ரில்கே பல சமயங்களில் பரிசுகளைப் பெறுபவராக இருந்திருக்கிறார். அதில் குறிப்பிடத்தக்கது லாஜிக்கல் பாஸிட்டிஸவிச தத்தவவாதியான இளம் லுட்விக் வேன் விக்கென்ஸ்டீன் தன் பெயரை அறிவிக்காமல் அளித்த 20,000 க்ரோனன் தொகை. ஆனால் அத்தனை நலவிரும்பிகள் இருந்த போதும் அவர் என்றுமே பணவிஷயத்தில் பாதுகாப்பான உணர்வுடன் இருந்ததில்லை. தனக்கென்று ஒதுங்க ஒரு வீடு இருந்ததில்லை. அவரது கடைசி தனிமை வருடங்களை வாழ்ந்து முடித்த “முஸோவே கூட Weiner Reinhart என்பவருக்குச் சொந்தமானது. அதை ரில்கேவின் பொறுப்பில் அவரது வாழ்நாளுக்குப் பயன்படுத்திக் கொள்ள மட்டுமே ஒப்புவித்திருந்தார்.

உள்மன அமைதியையும் தனிமையும் தேடி அலைந்து கொண்டிருந்த ஓய்வில்லா நித்திய பயணி அவர். அவரது உள்மன உலைச்சல்களின் வெளிப்பாடுகளே அவரின் யாத்திரைகளாயின. புற உலகில் அவர் தேடியது உள்ளார்ந்த ஒத்திசைவின் ஒரு நிலை-ஆனால் இந்த ஒத்திசைவின் நிலையை அவர் கவிதை என்ற ஊடகத்தின் வாயிலாகவே எட்ட முடிந்தது. ஆனால் இது ஒரு நழுவலானதும் பிடிகொடுக்காததுமான நிலை. அதன் உக்கிரம் உள்வயமாய் அடர்த்தியும் செறிவும் பெற்றது. இக்காரணத்தினாலே கவிஞன் அதை அடைய முயலும் போது தொடர்ச்சியான தோல்விக் குள்ளாகிறான். அதிர்வுகளின் ஸ்தாயியை கவிஞன் விளிம்பெட்டித் தொட்டவுடன்தான் விஷயங்கள் ஆரம்பமாகும். முடுக்கி வைக்கப்படும் கணமும் அதிர்வுகளின் ஸ்தாயியும் ஒன்றுக்கொன்று ஒத்திசைவு கொண்டதாய் இருந்தால் மாத்திரமே புற உலகுகள் மற்றும் அக உலகுகளின் அதிர்வுகள் ஒன்றுபடும். கவிஞனின் உள்வயமான ஆன்டென்னா ஒரு ராடார் திரையைப் போல் இயங்க வேண்டும். ஒரு ‘ஸ்கேன் வெளியில் எங்கோ இருக்கும் கவிதையின் இருப்பிடத்தையும் கவிப்பிரக்ஞையின் ஓடுபாதையில் அது வெட்டிக் கொள்ளும் சாத்தியத்தையும் சொல்லும். கவிஞன் தன் உள் மனத்திரையில் நிகழ்சிகளை ஆராய்ந்து படித்துணர்ந்து அர்த்தம் விளங்கிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அந்தப் பெரிய வெளிச்சச் சிதறல்கள் எப்போதும் முன்னெச்சரிக்கை இல்லாமல் தோன்றி மறையக் கூடியவை. அப்பொழுதுதான் மறைவாய்ப் படிந்திருக்கும் அனுபவ அடுக்குகளைப் பற்றிய பிரக்ஞையும் அறிதலுமே தோன்றுகின்றன. இவ்வனுபவ அடுக்குகள் கவிதையின் உருவாக்கத்தில் நனவிலி நிலையில் தொழிற்பட்டிருப்பவை. இந்த வெளிச்சச் சிதறல்களை ரில்கே quiet flashesஎன்றழைத்தார்.

ரில்கே, ஆழமானதும் இடைவெட்டுக்கள் இல்லாததுமான ஒரு நிச்சலனத்தைத் தேடிக் கொண்டிருந்ததால் அதைக் கவிதையின் ஆழ்குரல்களில் மாத்திரமே கண்டுபிடிக்க முடியும் என்று நம்பினார். மேலும் அந்த நிச்சலனத் திலிருந்துதான் கவிதையின் குரல் எந்தத் தடைகளும் கட்டுப்பாடுகளுமின்றி தன்னிச்சையாக வெளிப்பாடு காண்பதற்கு இயலும். ஆனால் நிச்சலனம் நிறைந்த தனிமை அவ்வளவு எளிதாய் கிடைப்பதில்லை. இது கவிஞனின் பதற்றத்தை அதிகரிக்கிறது. ரில்கேவிலும் சரி, அவர் மொழிபெயர்த்த பாதலெர் மற்றும் பால் வெலேரியிலும் சரி, கவிதை என்பது நுட்பமும் தூய்மையும் ஆக்கப்பட்ட சுயப்பிரக்ஞையின் கலையாக ஆகிறது.

ரில்கேவைப் பொறுத்தவரை ஞாபகம் ஒரு தனித்த செயல்பங்கினை ஏற்கிறது. அது ஒரு பண்புநிலை மாற்றத்தக்க ஒரு கருவியாக செயலாற்றுகிறது. அனுபவத்திற்குள் வந்து அனுபவமயமான விஷயங்களும் உட்கிரகிப்பட்ட விஷயங்களும் பிறகு கவிதையில் விவரிக்கப்படும் விஷயங்களாக மாற்றப்படும் தகுதியைப் பெறுகின்றன. மீள்வாழ்தலில் அனுபவத்தைப் பிரித்து ஒரு படி உயர்த்தி கவிதையாக்கும் இறுதிக் காரணிகளாகவே வார்த்தைகள் மாறுகின்றன.

இது தவிரவும் ரில்கே கவிதையாக்கம் பற்றிக் கூறும் கருத்துக்கள் ரஸவாதம் பற்றிய கருத்துக்களுடன் ஒத்துப் போகின்றன. கவிஞனால் பெறப்பட்ட விஷயங்கள் ஒரு குறிப்பிட்ட வேதிமாற்றத்தை அடைந்த பிறகே அவன் மனதிலிருந்து கவிதையாக வெளிப்படுத்தப்பட அனுமதிக்கப்படுகின்றன. உள்வயமாக நிகழும் இந்த உருமாற்றம் என்பது அனுபவரீதியாக அர்த்த முள்ளதற்கும் அற்பமானவற்றுக்கும் உள்ள வேறுபாட்டினை அழுத்தமாக்கி ஒரு கவிதையின் வெற்றியைத் தீர்மானிக்கின்றன.

ஆனால் இப்படிப்பட்ட கவிதைக்காக காத்திருக்கும் காலங்களில் ஒரு கவிஞன் என்ன செய்ய வேண்டும்? பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். அறையில் குறுக்கும் நெடுக்கமாக நடக்கலாம். இரவிலும் மழையிலும் நனையலாம். புத்தகங்களில் தஞ்சமடையலாம். கவனத்திசைதிருப்பல் எங்கெல்லாம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் செல்லலாம். ஆனால் உறுத்தல் சற்றும் குறையாது. யேட்ஸ் கவிதை எழுதுவதின் மன-உடல்வலிகளிலிருந்து தப்பிக்க விரும்பினார். கவிதை எழுதுவதை காலவரையறையின்றி ஒத்திப் போட முயல்வார். அதன் கரு தாங்கும் அழுத்தம் அவ்வளவு தொடர்ச்சியாக உண்டாகும்போது கவிதையை உரக்க ஓங்கிச் சொல்வார். ரில்கேவைப் பொறுத்தவரை கவிதை தோன்றும் காலத்தின் போது எவ்வித முன்னறிவிப்பும் இராது. ஆனால் அதன் வருகை அத்தனை தீவிரமாய், தொடர்ச்சியாய் இருந்தாலும் அதன் நீட்டிப்பு மிகச் சொற்பமாய் இருக்கும்.

ரில்கே அளவுக்கு உள்மன யாத்திரை பற்றிய பிரக்ஞை கொண்ட கவிஞர்கள் மிகச் சொற்பமே. எந்தத் தடைகளுமில்லாது, சுதந்திரமாக எழுதுவதற்கான திறன் மீது சுமத்தப்படும் மனோவியல் ரீதியான கட்டுப்பாடுகளை உடைத்து வெளியேற அவர் கடிதங்களைப் பயன்படுத்தினார். கடிதங்கள் எழுதுவதே கூட சில சமயம் அவரை கவிதை எழுதவிடாமல் தடுத்தது. எனவே கடிதங்கள் என்பவை கவிதைகளுக்கான மறைமுக பதிலிகளே. கவிதையின் மொழியில் நமக்குக் கிடைத்திருக்கும் மிக ஆழமானதும் அழகானதுமான கடிதங்கள் மட்டுமல்லாது அவை கவிதை உருவாவது பற்றிய சூழ்நிலைகளை எதிரொலிக்கும் அதிகபட்ச பிரக்ஞையை வெளிப்படுத்துகின்றன. ஆங்கிலக் கவிஞர் கோல்ரிட்ஜைப் போல உள்மனக் கண்காணிப்பு கொண்டவராக இருந்தார் ரில்கே. அவ்வளவு உள்மன ஜாக்கிரதை உணர்வும் கூட ரில்கேவுக்கு கவிதையில்லாக் காலங்களைத் தந்திருக்க வேண்டும். இருவருமே கவிதைக்கே பிரத்யேகமான ஒரு பிரக்ஞைப் பிரதேசத்தைப் பற்றி நன்கு அறிந்திருந்தனர். ரில்கே தன் கவிதைக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளித்தாரோ அதே அளவு முக்கியத்துவத்தை தன் கடிதங்களுக்கு அளித்தார். கடிதங்களும் கவிதைகளும் தனித்தனியாகப் பிரிக்க இயலாதவை:

எந்த ஒரு கடிதமும் எழுத வேண்டும் என்ற வெறும் நோக்கத்தினால் எழுதப்படுவதல்ல. ஒரு கடிதம் உங்களுக்கு ஒரு ஆச்சரியத்தைப் போல நிகழ வேண்டும், எங்கே பகலில் அதை எழுதுவதற்கு நேரம் இருந்தது என்று நீங்கள் யூகிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கக் கூடாது.

குறிப்பு-

இந்த அறிமுகக் கட்டுரை கூட முழுமை பெறாதது என்பதை மனந்திறந்து நான் ஒப்புக் கொள்கிறேன். விவாதிக்கப்பட வேண்டிய பல விஷயங்களும், சேர்க்கப்பட வேண்டிய தகவல்களும் மிச்சமிருக்கின்றன. இது ஒரு தொகுதியாக உருப்பெறும் சமயம் எல்லாவற்றையும் இணைத்து சரி செய்துவிட முடியும் என்ற நம்பிக்கையுடன்-பிரம்மராஜன்.

ரில்கே கவிதைகள்

ஒரேயொரு கவிதையின் பொருட்டு

, கவிதைகள் உங்கள் வாழ்வின் மிக ஆரம்பத்தில் நீங்கள் எழுதும்போது அவ்வளவு குறைவாக ஆகிவிடுகின்றன. ஒரு வாழ்நாள் முழுவதற்குமான உணர்வையும் இனிமையையும் சேகரித்துக் காத்திருக்க வேண்டும், முடிந்தால் ஒரு நீண்ட வாழ்நாள். பிறகு அதன் கடைக் கோடியில் ஒரு வேளை நீங்கள் எழுதக் கூடும் பத்து நல்ல வரிகளை. மனிதர்கள் எண்ணுவதைப் போல கவிதைகள் வெறும் உணர்ச்சிகளல்ல (ஆரம்பத்திலிருந்தே ஒருவருக்கு தேவையான அளவு உணர்ச்சிகள் உண்டு), அவை அனுபவங்கள். ஒரேயொரு கவிதையின் பொருட்டு நீங்கள் பல நகரங்களைப் பார்க்க வேண்டும், பல மனிதர்களை, மற்றும் பொருள்களை. நீங்கள் விலங்குகளைப் புரிந்து கொள்ள வேண்டும். எப்படிப் பறவைகள் பறக்கின்றன என்பதை உணர வேண்டும். சிறிய மலர்கள் விடியலில் மலர்கையில் செய்யும் இயக்கங்களை அறிய வேண்டும். முன்பின் தெரியாத தெருக்களுக்கு பின்னோக்கி யோசிக்க முடியவேண்டும், எதிர்பாராத சந்திப்புகளுக்கு, நீண்ட காலமாய் நீங்கள் வருமெனப் பார்த்திருந்த பிரிவுகளுக்கு. இன்னுமே விளக்கமூட்டப்படாத குழந்தைப் பிராய நாட்களுக்கு, ஒரு சந்தோஷத்தைக் கொணர்ந்த போது, அதை ஏற்காது நீங்கள் காயப்படுத்த வேண்டியிருந்த அந்தப் பெற்றோர்களுக்கு (அது வேறு எவருக்கோவான சந்தோஷம்) அத்தனை ஆழ்ந்த, கடின உருமாற்றங்களுடன் விநோதமாய்த் தொடங்கிய குழந்தைப் பிராய நோய்களுக்கு, அமைதியான நாட்களுக்கு, கட்டுப்படுத்தப்பட்ட அறைகள், கடல் மருங்கில் காலை வேலைகளுக்கு, கடலுக்கென்றே, பல கடல்களுக்கு, உங்கள் தலை மீது விரைந்தோடி எல்லா நட்சத்திரங்களுடன் கூடிய அந்த இரவுகளின் பயணங்களுக்கு,–ஆனால் இன்னும் கூட போதுமானதாய் இல்லை அவை பற்றியெல்லாம் எண்ணிப்பார்க்க. உங்களுக்கு அவசியம் தேவை பல இரவுகளின் காதல்கள், ஒவ்வொன்றும் மற்றவற்றை விட மாறுபட்டதாய், பிரசவ வலியில் வீறிடும் பெண்கள் பற்றிய நினைவுகளுக்கு, மேலும் லேசான, வெளுத்த, இப்போதுதான் பிரசவித்து மீண்டும் மூடிக் கொள்ளும், உறங்கும் இளம் பெண்களுக்காக. ஆனால் நீங்கள் இறப்போரின் அருகில் இருந்திருக்க வேண்டும், திறந்த கதவும் சிதறலான சப்தங்களும் கொண்ட ஒரு அறையில் இறந்தவரின் அருகில் அமர்ந்திருந்திருக்க வேண்டும். ஞாபகங்கள் கொள்வது மாத்திரம் இன்னும் போதுமானதாய் இல்லை. அவை கூடுதலாய் இருக்கையில் அவற்றை உங்களால் மறக்க இயல வேண்டும், மேலும் உங்களுக்கு அபாரப் பொறுமை வேண்டும் அவை திரும்பி வரும் வரை. ஞாபகங்கள் தம் அளவிலேயே முக்கியமானவையல்ல. அவை நம் குருதியாய் மாற்றப்பட்ட பிறகே, நம் பார்வையாய், அங்க அசைவுகளாய் மாற்றப்பட்டு, பெயரற்றதாகி, நம்மிலிருந்து இனி வேறுபடுத்த முடியாதிருக்க வேண்டும்–அப்பொழுதுதான் அது நிகழும், ஒரு அபூர்வ நேரத்தில் ஒரு கவிதையின் முதல் வரி அவற்றினிடையே உதிக்கிறது, அவற்றிலிருந்து கிளம்பிச் செல்கிறது

பிரார்த்தனை மணி நேரங்களின் புத்தகம்

1.

என் வாழ்வை வாழ்கிறேன் வளரும் சுழல்வட்ட பாதைகளில்

அவை உலகின் வஸ்துக்களின் மேலாக நகர்கின்றன.

ஒரு வேளை என் இறுதியை நான் அடையாமல் போகலாம்

ஆனால் அதுவே என் முயற்சியாய் இருக்கும்.

நான் கடவுளைச் சுற்றிச் வட்டமிட்டுக்கொண்டிருக்கிறேன்,

புராதன கோட்டையைச் சுற்றி,

நான் ஓராயிரம் ஆண்டுகளாய் வட்டமிட்டுவருகிறேன்

ஆனால் இன்னமும் நானறியேன்

நானொரு வல்லூறா, புயலா

அன்றி

ஓர் உன்னதப் பாடலாவென.

17.

திராட்சைத் தோட்டக் காவல்காரன் தன்கென ஒரு

குடிசை வைத்திருந்து கண்விழித்துக் காத்திருப்பது போல்

நான் உமது கைகளின் குடிசை இறைவா,

எனது இரவு உனது இரவிலிருந்து பெறப்பட்டது.

திராட்சைத் தோட்டம், புல்படுகை,

நேர்த்தியான சீதோஷ்ணநிலை கண்ட ஆப்பிள் தோட்டம்

ஒரு வசந்தத்தையும் கடந்துவிடாது வைத்திருக்கும்

வயல்

பூமியில் பளிங்கின் அளவு கடினமாய் வேர்பிடித்திருக்கும்

அத்தி மரம்,

இருப்பினும் நூறு அத்திப் பழங்களைத் தாங்கி நிற்கிறது.

உமது கிளைகளிலிருந்து வாசனை ஊற்றுகிறது,

ஆனால் நீரோ என்றுமே கேட்பதில்லை

நான் காவல் காக்கிறேனா இல்லையா என;

தன்னம்பிக்கையுடன், சாரங்களினால் கரைக்கப்பட்டு,

உமது ஆழங்கள்

என்னைக் கடந்து ஓசையின்றி மேலேறியபடி இருக்கின்றன.

20.

இந்த உலகின் வேந்தர் வயோதிகமடைகின்றனர்

வாரிசுகள் யாருமிலாது போகட்டும் அவர்கள்

பையன்களாயிருந்த போதே மரித்தனர் அவர் மகன்கள்saracen

அவர்தம் நரம்புநோயுற்ற மகள்கள் துறந்தனர்

சலித்த கிரீடத்தை ஜனத்திரளிடம்.

ஜனத்திரள் உடைக்கிறது அதை சின்னஞ்சிறு துண்டுகளாய்.

உலகின் உய்விப்பாளர், காலத்தின் எஜமானன்

அவற்றினை நெருப்பில் உருக்குகிறார் யந்திரங்களாய்.

தாழ்ந்த உறுமல்களுடன் கட்டளைகளை நிறைவேற்றுகின்றன அவை.

ஆனால் அதிர்ஷ்டம் அவை பக்கமில்லை.

வீட்டுக்கான ஏக்கம் கொள்கிறது உலோகத் தாது

அது காசடிக்கும் ஆலைகளையும்

அவ்வளவு சொற்ப வாழ்வே அளிக்கும் சக்கரங்களையும்

கைவிட்டு விட விரும்புகிறது.

உற்பத்திச் சாலைகளிலிருந்தும் பட்டுவாடா பெட்டிகளிலிருந்தும்

திறந்து கிடக்கும் மலைகளின் நரம்புகளுக்கு

திரும்பிச் செல்ல விரும்புகிறது.

அம்மலை மீண்டும் தனக்குப் பின்னால் மூடிக் கொள்ளும்.

23.

அந்த மாபெரும் நகரங்கள், இறைவா, என்ன அவை?

கைவிடப்பட்ட சிதைவுறும் இடங்கள்.

நானறிந்த நகரம் நெருப்பிலிருந்து தப்பியோடும் மிருகங்களை

ஒத்திருக்கிறது

அது தந்த தங்கிடம் இப்போது காப்பிடமல்ல

மேலும் நகரங்களின் காலம் முடிந்து விட்டது ஏறத்தாழ.

ஆண்களும் பெண்டிரும் வசிக்கின்றனர் திகைத்து, மெலிவடைந்து,

இருட்டறைகளில்,

எந்த மனித உடலசைவுக்கும் அஞ்சி

ஓராண்டிலே காயடிக்கப்பட்ட எருதுகளை விட பயங்கரமாய்.

உனது பூமி திறந்து கொள்கிறது கண்களை,

ஸ்வாசிக்கிறது

ஆனால் அவர்கள் இனியும் அறிவதில்லை அந்த ஸ்வாசிப்பை.

ஒரு குழந்தை தன் வளர் வருடங்களை வாழ்கிறது ஜன்னல்-பலகணி விளிம்பில்

நிழல் அதே கோணத்தை ஒவ்வொரு நாளும் போடுகிறது அங்கே

அது காட்டு ரோஜாக்களின் அழைப்பினை அறிவதில்லை

திறந்த இடங்களின் தினத்திற்கு — மற்றும் காற்றுக்கு.

அது குழந்தையாய் இருக்க வேண்டியதால்

சோகமான குழந்தையாய் ஆகிறது.

இளம்பெண்கள் மேல்நோக்கி மலர்கின்றனர் அறிந்திராதவற்றை நோக்கி

குழந்தைப் பிராயத்தின் அமைதிக்கான ஏக்கமுணர்கின்றனர்

எவ்வாறாயினும், அவர்கள் எதற்காகத் தகிப்பது எதற்கென்றால்

அது இவ்வுலகில் இல்லை

அவர்கள் உடல் மறுபடி மூடிக்கொள்ளும் போது நடுங்குகிறது

தாயாக இருந்து ஏமாற்றமடைந்த ஆண்டுகள்

கடந்து செல்கின்றன அபார்ட்மெண்ட்டுகளில் வெளிச்சத்திற்கப்பால்

இரவடுத்து இரவாக அவர்களுக்கெந்த விழைவுமில்லை

அழுகின்றனர்

எந்த நிஜமான போருமின்றி

உறைந்த ஆண்டுகள் கடக்கின்றன சக்தியற்று

மரணப்படுக்கை காத்திருக்கிறது இன்னும் இருண்ட அறையில்

அவர்கள் அதற்குள்ளாய் விழைகின்றனர் சிறிது சிறிதாய்

மேலும் நீண்ட காலம் எடுத்துக் கொள்கின்றனர் இறக்க

ஏதோ சங்கிலியால் பிணைக்கப்பட்டது போல்

பிச்சைக்காரர்கள் போல இறக்கின்றனர்

இன்னும் பிறரைச் சார்ந்து.

தனித்த ஒரு நபர்

தமது இல்லங்களில் ஆறுதலாய் இருக்கும் அத்தனை மனிதரிடையே

நானிருக்கிறேன் தூரத்து சமுத்திரங்களை ஆராயும் மனிதனென.

நிறை வயிற்றுடன் நாட்கள் அவர் தம் மேஜைகளின் மேல் நிற்கின்றன

நானொரு தொலை தேசத்தைக் காண்கிறேன் காட்சிகளால் நிறைந்து.

ஒரு வேளை நிலவில் வாழப்பட்டதை விட கூடுதலாய் வாழப்படாத

வேறொரு உலகினை உணர்கிறேன் என்னருகில்

எனினும் அவர்கள் ஓர் உணர்வினை சும்மா விடுவதில்லை

மேலும் அவர்களின் சொற்கள் பழகிச் சலித்தவை.

அவர்களின் உடைமைப் பொருள்களை ஒப்பு நோக்க

நான் என்னுடன் கொண்டு வந்த வாழ் உயிர்கள்

வெளியில் எட்டியும் பார்ப்பதில்லை.

அவற்றின் சொந்த தேசத்தில் அவை காட்டு ஜாதிஙீ

இங்கே அவை அவமானத்தில் மூச்சைப் பிடித்துக்கொள்கின்றன.

இலையுதிர் காலம்

இலைகள் வீழ்கின்றன, மேலே அப்பாலிலிருந்து வீழ்வது போல்

ஏதோ வானின் உயரத்தில் தோட்டங்கள் மரிப்பது போல்.

இல்லை என மறுக்கும் இயக்கத்துடன்

ஒவ்வோர் இலையும் வீழ்கிறது.

இன்றிரவு கனத்த இந்த பூமியும் பிற நட்சத்திரங்களிடமிருந்து

அப்பால் விலகி வீழ்கிறது தனிமையில்

நாம் எல்லோரும் வீழ்கிறோம். இங்கே இந்தக் கையும் வீழ்கிறது.

மற்றதைக் கவனி. . . . அவை எல்லாவற்றிலும் அது உள்ளது.

என்றாலும் யாரோ ஒருவர் இருக்கிறார்

அவர் கைகள் எல்லையில்லா அமைதியுடன்

இந்த சகல வீழ்வுகளையும் நிறுத்தி வைக்கின்றன.

பழம்

பூமியிலிருந்து புலனாகாது அது உயர்ந்தது மேலே மேலே

மேலும் தனது ரகசியத்தை வைத்துக் கொண்டது மௌனமான தண்டில்

தெளிந்த மலரில் ஒரு தீம்பிழம்பாய் ஆயிற்று

பிறகு தொடர்ந்தது தனது ரகசியத்தை.

முழுநீளக் கோடையினூடாய்க் கனிந்தது

பகலிலும் இரவிலும் மகப்பேறு வலிகொண்ட மரத்தினுள்

தன்னையே உணர்ந்தது

விடாப்பிடியான படுவிரைவாய்

எதிர்வினை தரும் புறவெளியைச் சந்திக்க.

அந்த முற்றுப் பெற்ற அழகிய வளைவினை மிச்சமும் புதியதாய்,

இப்போது அது அத்தனைப் பளபளப்புடன் புலப்படுத்தி னாலும்

அதன் புறத்தோலுக்குள் சரிகிறது விட்டுக்கொடுத்து

மீறி வளர்ந்த மையத்தை மீட்டு நோக்கியவாறு.

அடுத்த அறைவாசி

விநோத வயலினே என்னைப் பின்தொடர்கிறாயா?

எத்தனை தூரத்து நகரங்களில் ஏற்கனவே

உன் தனிமை இரவு எனதுடன் பேசியிருக்கிறது?

நுற்றுவர் உன்னை வாசிக்கின்றனரா? அல்லது ஒருவரா?

எல்லா ராட்சத நகரங்களிலும்

இப்படிப்பட்ட மனிதர் உண்டோ

நீயில்லாது போயின் ஏற்கனவே ஆற்றில் மறைந்திருப்பர்?

மேலும் நானொருவனே அதைக் கேட்பவனாயிருக்கிறேன்?

பயத்தில் உன்னைப் பாடக் கட்டாயப்படுத்தும்

அம்மனிதர்களுக்கு ஏன் எப்போதும்

நானே அடுத்த அறைவாசியாயிருக்கிறேன்?

அவர்கள் சொல்வர் வாழ்வின் பாரம்

வஸ்துக்களின் பாரத்தை விட அதிகம்.

பிணத்தைக் குளிப்பாட்டுதல்

அவர்கள் அவனுக்குப் பழகிவிட்டிருந்தனர்

ஆனால் இருண்ட காற்றில் சமையலறை விளக்கு

தாறுமாறாய் எரியத் தொடங்கிய சமயம்

அந்நியன் முற்றிலும் விநோதமானான்.

அவன் தொண்டையைக் குளிப்பாட்டினர்.

அவன் விதியைப் பற்றி ஏதும் அறியாததால்

பொய்கள் மூலம் வேறொன்றை உருவாக்கினர்

குளிப்பாட்டியபடி.

ஒருத்திக்கு இரும வேண்டியிருந்தது

இருமியபடி கனத்த வினிகர் பஞ்சிலிருந்து

சொட்டி விட்டாள் அவன் முகத்தின் மேல்.

இது ஓர் இடைவெளியை உருவாக்கியது இரண்டாமவளுக்கு.

விரைப்பான தேய்க்கும் பிரஷ்ஷிலிருந்து

துளிகள் பட்டென்று சொட்டியபோது

தான் இனியும் தாகமாயில்லையென

அந்த அறையை அறியச் செய்ய விரும்பியது போலிருந்தது

அவனது கோரமாய் விரைத்த கை.

அவன் அதை நிரூபித்தான்.

ஒரு சிறிய இருமலுடன்

அசௌகர்ய உணர்வடைந்தவர்கள் போல்

இப்போது இன்னும் கூடுதல் வேகத்துடன்

தொடர்ந்தனர் வேலையை

அதன் மூலம் அவர்களின் வளைந்த நிழல்கள்

சுவர்மறை காகிதங்களின் மேல்

துடித்துப் பின்வாங்கி வலையில் சிக்கியது போல்

அவனைக் குளிப்பாட்டி முடிக்கும் வரை

திரைச்சீலையற்ற ஜன்னல் சட்டத்தில்

இரவு கருணையற்றதாயிருந்தது.

பெயரற்றவன் அங்கே கிடந்தான்

சுத்தமாயும் நிர்வாணமாயும்

கட்டளையிட்டபடி.

பாண்ட் டு கேரூஸல்

கைவிடப்பட்ட ராஜ்யமொன்றின் சாம்பல் நிற எல்லைக்கல் போல்

கண்ணில்லாதவன் நின்றிருந்தான் பாலத்தின் மேல்

மாறுதலே இல்லாதிருக்கும் ஒரு பொருள்

ஒரு வேளை அவனாகத்தானிருக்கும்.

அதைச் சுற்றியே சுழல்கின்றன

நட்சத்திரங்கள் தம் நேரத்தை

நட்சத்திரக் கூட்டங்களின் நிச்சலன மையம் அவன்தான்–

காரணம் அவனைச் சுற்றிலும்

நகரம் தடுக்கி விழுந்தலைகிறது

தன் பிரம்மாண்டத்தைக் காட்டிக் கொண்டு.

பின்னலிட்டுக் கிடக்கும் பல தெருக்களினிடையில் பதிக்கப்பட்டு

அவன்தான் இயக்கமற்ற நியாயவாதி

மேலோட்டத் தலைமுறை மனிதரிடையே

அவன் பாதாள உலகின் இருண்ட வாசல்

சிறுத்தை

கம்பிகளைப் பார்த்துப் பார்த்து அதன் நோக்கு

அத்தனைக் களைப்புற்றதால் அது எதையும் இனி காண்பதில்லை.

நூறாயிரம் கம்பிகள்

கம்பிகளின் அப்பால் உலகம் ஏதுமில்லை அதற்கு.

லயமிகு எளிய நடையின் லகுவான அசைந்தாட்டம்

சின்னஞ்சிறிய மையம் வரை சுழன்றடைகிறது

ஒரு புள்ளியைச் சுற்றி சக்தியின் நடனத்தை அது நிகர்த்திருக்கிறது

அதில் ஓர் மகத்தான மனத்திட்பம் திகைத்து நிற்கிறது செயலற்று.

சிலநேரங்களில் கண்ணின் கருமணியின் திரைகள் உயர்கின்றன

ஓசையின்றி. . . பிறகு ஒரு உரு உள்நுழைகிறது

தோள்களின் இறுகிய மௌனத்தினூடாய் நழுவி

இதயத்தை அடைந்து மடிகிறது.

இசை

இசை-சிலைகளின் ஸ்வாசிப்பு.

ஒருவேளை-ஓவியங்களின் மௌனம்.

மொழி எங்கே முடிகிறதோ அங்கேயுள்ள மொழி நீ,

அநித்திய இதயங்களின் இயக்கத்தின் மீதாய்

செங்குத்து சமனில் நிற்பெறும் காலம் நீ.

யாருக்கான உணர்வுகள்? , மாறுதலே நீதான்

எதுவாய் ஆகும் உணர்வுகள்?–காதுணரும் நிலக்காட்சிவெளி?

அந்நியனே நீ : இசை.

எம்மை மீறி வளர்ந்து விட்ட வெளி,

இதய-வெளி.

எமக்குள்ளிருக்கும் படுஆழப் பிரதேசம்.

அது எம் எல்லைகளைக் கடந்து,

தன் வழியை வலிந்து வெளிப்படுத்துகிறது–

மிகுபுனித விடைபெறல்:

பயிலப்பட்ட தொடுவானாய்

எம் உள்ளாழ்ந்த புள்ளி எம்மை சூழ்ந்திருக்கும் அங்கே

காற்றின் வேறுபுறமாய்

தூய்மையாய்,

கட்டற்று

இனியும் உள் வாழப்படாததாய்.

ஸ்பானிய நடனக்காரி

அதன் மினுங்கும் வெண்ணிற நாக்குகள் தீப்பிழம்பாய் வெடிக்குமுன்

தீக்குச்சியின் எல்லாப்புறமிருந்தும் பாய்வது போல்

துரிதமாகி, வெப்பமாய், பார்வையாளர்கள் அவளைச் சூழ்ந்திருக்க

அவள் நடனம் இருட்டறையில் மினுங்கத் தொடங்குகிறது.

ஒரே சமயத்தில் எல்லாமும் முற்றிலும் தீயாகிறது.

மேல்நோக்கிய ஓர் பார்வை வீச்சில்

அவள் தன் கூந்தலைப் பற்ற வைக்கிறாள்

இன்னும் இன்னும் துரித கதியில் சுழன்றாடி

தன் உடையை உணர்ச்சிமிகு பிழம்புகளால் விசிறுகிறாள்

அது ஓர் உலைக்களமாய் ஆகும்வரை–

அதிலிருந்து திடுக்கிட்ட சங்கிலிப் பாம்புகளென

நீண்ட அம்மணக் கைகள் சுருள்விரிகின்றன

உணர்ச்சியேறி, சொடுக்கிக் கொண்டு.

பிறகு மிகவும் பிடிப்பாய் அந்த நெருப்பு அவள் உடலைச் சுற்றி

இருப்பது போல்

அதை எடுத்து வீசியெறிகிறாள்

திமிராய்,

ராஜரீக அங்க அசைவுடன் கவனிக்கிறாள்

அது கிடக்கிறது தரை மேல் சீறியபடி

இன்னும் பிழம்பு உயர்ந்து

மேலும் பிழம்புகள் சாக மறுக்கின்றன–

முழுமையான தன்னம்பிக்கையுடன்

இனிய, திளைப்புறும் புன்னகையில்

அவள் ஏறிட்டுப் பார்க்கிறாள் கடைசியில்

மிதித்தணைக்கிறாள்

சக்தி வாய்ந்த சிறி கால்களால்.

புலம்பல்

சகலமும் தொலைவாய்

நெடுங்கால முன்பே கடந்து போனது போல்.

என் மேல் மின்னும் அந்த நட்சத்திரம்

ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே

மரித்துவிட்டதென எண்ணுகிறேன்.

என்னைக் கடந்து சென்ற காரில்

கண்ணீர்த் துளிகள் இருந்ததென்றும்

ஏதோ பயங்கரமானது சொல்லப்பட்டதென்றும்

நினைக்கிறேன்.

சாலையின் அப்பக்கமிருக்கும் வீட்டில்

ஒரு கடிகாரம் ஓய்ந்துவிட்டது. . . .

எப்போது அது ஆரம்பித்தது?. . . .

என் இதயத்திலிருந்து கீழிறங்கி

பிரம்மாண்ட வானின் கீழ் நடந்து செல்லவும்

பிரார்த்தனை செய்யவும் விரும்புவேன்.

நெடுங்கால முன் மரித்த நட்சத்திரங்கள் அனைத்திலும்

ஒன்று இன்னும் உயிர்த்திருக்கிறது.

அது எதுவென

எனக்குத் தெரியுமென எண்ணுகிறேன்–

வானில் அதன் ஒளிக்கற்றையின் இறுதியில்

எதன் மேல் ஒரு வெண்ணிற நகர் அமைந்துள்ளதோ

அது. . . .

நேற்றின் மாலை

இரவு மற்றும் தூரத்து குமுறலோசை: இப்பொழுது

ராணுzxவத்தின் சரக்கு ரயில் வெளிக்கிளம்புகிறது, போருக்கு.

நவீனயாழிசைக் கருவியிலிருந்து தலையுயர்த்திப் பார்த்தான் அவன்,

அவன் வாசித்துச் செல்கையில் அப்புறம் அவளை நோக்கினான்.

ஏறத்தாழ ஒருவர் நிலைக்கண்ணாடியில் ஆழ்ந்து நோக்குவது போல்ஙி

அவளது ஒவ்வொரு அம்சமும் அவ்வளவு ஆழமாய்

அவனது இளமையான அம்சங்களால் நிறைந்தன

அவை அவன் வலியையும் கொண்டிருந்தன

ஒவ்வொரு ஓசைக்கும் அவை இன்னும்

அழகாயும் தீக்கவர்ச்சியுடனும் விளங்கின.

பிறகு திடீரென சிதைவுற்றது அக்காட்சி.

அவள் எழுந்து நின்றாள், கவனச்சிதைவுற்றவள் போல

ஜன்னலருகில்

தன் இதயத்தின் வன்முறையான மத்தள ஓசைகளை உணர்ந்தாள்.

அவன் வாசிப்பு நின்றது.

வெளியிலிருந்து புதிய காற்று வீசியது.

விநோத அந்நியத்துடன் நிலைக்கண்ணாடி-மேஜை மேல்

நின்றது கரிய ராணுவத் தொப்பி

அதன் பளிங்கு மண்டையோட்டுடன்.

கோடைமழைக்கு முன்

திடீரென, உங்களைச் சுற்றிலுமுள்ள எல்லாப்பச்சைகளிலிருந்தும்

ஏதோ–உங்களுக்குத் தெரிவதில்லை என்னவென்று–

காணாமல் போய்விட்டது.

முழுமையான மௌனத்தில்

ஜன்னலருகில் அது ஊர்ந்து வருவதாய் நீங்கள் உணர்கிறீர்கள்.

அருகாமைக் காட்டிலிருந்து நீங்கள் கேட்கிறீர்கள்

புலோவர் பறவையின் அவசர விசில் ஓசையை,

யாரோ ஒருவரின் ‘புனித ஜெரோமை அது நினைவூட்டுகிறது:

அத்தனைத் தனிமையும் பேருணர்வும்

அந்த ஒற்றைக் குரலிலிருந்து வந்ததென,

அதன் ஆக்ரோஷமான கோரிக்கையை

கடுமழை பூர்த்தி செய்யும்.

அந்த திரையோவியங்களுடன் சுவர்கள்

நம்மிடமிருந்து நழுவிச் செல்கின்றன

கவனத்துடன்

நாம் சொல்வதை அவை கேட்கக் கூடாததென்றபடியாய்.

இப்போது

சாயம்போன திரையோவியங்களில் பிரதிபலித்தவை:

கடுங்குளிர்,

நீங்கள் அவ்வளவு பயந்து போயிருந்த

அந்த நீண்ட குழந்தைப் பிராய நிச்சயமற்ற சூரிய ஒளி.

மீண்டும் மீண்டும்

மீண்டும் மீண்டும், காதலின் நிலப்பரப்பினை எவ்வளவு நன்றாய்

நாம் அறிந்த போதிலும்,

அதன் புலம்பும் பெயர்களுடன் மிகச் சிறிய கல்லறைக்காடு

மற்றும்

மேலும் மேலும் பீதியூட்டும் மௌனத்துடனிருக்கும்

சகலரும் சென்று முடியும் பாழ்வெளியைத் தெரிந்திருந்தாலும்

நாம் இருவரும் இணைந்து நடக்கிறோம்

புராதன மரங்களின் கீழே

மலர்களிடையே,

மீண்டும் கீழே படுக்கிறோம்

வானத்தை நோக்குகிறோம்.

தலைப்புக் கவிதை

செல்வந்தரும் அதிர்ஷ்டக்காரரும் சும்மா இருப்பது சரிதான்

யாரும் அவர்களைப் பற்றி அறிய விரும்புவதில்லை.

தேவை உள்ளோர் ஓரெட்டு முன்னெடுத்து வைக்க வேண்டும்

சொல்ல வேண்டும்: நான் கண்ணற்றவன்,

அல்லது நான் குருடாகப் போகிறேன்,

அல்லது எனக்கு ஒன்றுமே சரியாய் நடப்பதில்லை,

அல்லது எனக்கு சீக்காளிக் குழந்தை இருக்கிறது,

அல்லது இப்போது அங்கே ஒரு விதமாய் கெட்டியாய் ஒட்டியிருக்கிறேன். . .

சாத்தியத்தில் அதுவெல்லாம் எதையும் மாற்றிவிடுதில்லை.

அவர்கள் பாடவேண்டி இருக்கிறது

அவர்கள் பாடவில்லையென்றால்

எல்லோரும் வேகமாய்க் கடந்து விடுவர் நடந்து

அவர்கள் ஏதோ விளக்குக் கம்பம் அல்லது வேலி என்பது மாதிரி.

அங்கேதான் நீங்கள் நல்ல பாடலைக் கேட்க முடியும்.

மக்கள் நிஜமாகவே விநோதமானவர்கள்:

சிறார்களின் கூட்டுக்குரலிசையில் ‘கேஸ்ட்ரேட்டோக்களைக்

கேட்க விரும்புகின்றனர்.

ஆனால் கடவுளே வந்து

நீண்ட நேரமிருக்கிறார் சேர்ந்தாற்போல்

அரை-மனிதர்களின் உலகம் அவருக்கு சலிப்பைத் தர ஆரம்பிக்கையில்.

பறவைத்தீனி அளிப்பவர்கள்

நான் அதைக் குறைத்து மதிப்பிடவில்லை. அதற்கு தைர்யம் தேவை என்று நானறிவேன். ஒரு கணம் யாரோ ஒருவருக்கு அப்படி அது இருப்பதாய் நாம் கருதுவோமானால், இந்த டீலக்ஸ் துணிச்சல், எங்கே அவர்கள் ஊர்ந்து செல்கின்றனர் என்பதை என்றென்றைக்குமாய்த் தெரிந்து கொள்ள (யார் மீண்டும் அதை மறக்கவோ அல்லது மற்ற எதனுடனோ குழப்பிக் கொள்ள இயலும்) மேலும் நாளின் பாக்கி நேரங்களில் அவர்கள் என்ன செய்கின்றனர் மற்றும் இரவில் எங்கே உறங்குகின்றனர் என்பது போல. குறிப்பாக இது நிச்சயப்படுத்தப்பட வேண்டும்: அவர்கள் உறங்குகிறார்களா என. ஆனால் அதற்கு துணிச்சலை விடக் கூடுதலான ஒன்று தேவைப்படுகிறது. காரணம் அவர்கள் பிற மனிதரைப் போல வந்து போவதில்லை. இவர்களைப் பின்தொடர்வது ஒரு சிறுபிள்ளை விளையாட்டு. அவர்கள் இங்கேதானிருக்கின்றனர் ஆனால் திடீரென காணாமல் போய் விடுகின்றனர், வைக்கப்பட்டு வெடுக்கென எடுத்துக் கொள்ளப்பட்ட பொம்மை வீரர்களைப் போல. அவர்கள் இருக்குமிடம் கொஞ்சம் வழியிலிருந்து விலகியதானது, ஆனால் எந்த விதத்திலும் மறைக்கப்பட்டதில்லை. புதர்கள் பின் சென்றுவிடுகின்றன, புல்தரையைச் சுற்றி வழி வளைந்து செல்கிறது: அங்கேதான் அவர்கள் இருக்கின்றனர் அவர்களைச் சுற்றிலுமுள்ள ஒளி ஊடுருவம் இடப்பரிமாணத்துடன், அவர்கள் ஏதோ குவிமாடத்தினடியில் நின்றிருப்பது போல். தம் சிந்தனையில் ஆழ்ந்து அவர்கள் சென்று கொண்டிருப்பதாய் நீங்கள் எண்ணலாம், இந்த முக்கியத்துவமற்ற மனிதர்கள், அந்த அவ்வளவு சிறிய, எல்லா விதத்திலும் தற்பெருமையற்ற உடல்கள். ஆனால் நீங்கள் எண்ணுவது தவறு. அந்த இடது கை பழைய கோட்டின் சாய்வான பாக்கெட்டிலிருந்து எதையோ பற்றிக்கொள்வதை உங்களால் பார்க்க முடிகிறதா? எப்படி அது அதைக் கண்டு பிடித்து, வெளியே எடுத்து, சிறிய பொருளை காற்றில் நீட்டுகிறது, தடுமாற்றத்துடன், கவனத்தை ஈர்த்தபடி? ஒரு நிமிடத்திற்குள்ளாய் இரண்டு மூன்று பறவைகள் வருகின்றன, ஊர்க்குருவிகள், வருகின்றன ஆர்வத்துடன் தத்தித்தாவி. அவற்றின் இயக்கமறுதன்மையின் மிகக் கச்சிதமான கருத்தாக்கதிற்கு அம்மனிதன் ஒத்துப் போவதில் வெற்றியடைந்தால், அவை ஏன் இன்னும் கொஞ்சம் அருகில் வராமலிருக்கக் காரணமில்லை. கடைசியில் அவற்றில் ஒன்று உயரப் பறக்கிறது, கை உயரத்தில் சிறிது பதற்றத்துடன் சிறகடிக்கிறது, அந்தக் கையில் என்னவிதமான பயன்படுத்தப்பட்ட ரொட்டிப் பொருக்குகள் உள்ளன என்று கடவுளுக்குத்தான் தெரியும்-அந்த பாசாங்கற்ற, வெளிப்படையாய் துறக்கும் விரல்களில். எவ்வளவு கூடுதலாய் ஜனங்கள் அவனைச் சுற்றி கூடுகின்றனரோ–ஒரு பொருத்தமான தூரத்தில், வாஸ்தவமாக–அவர்களுடன் அவன் குறைவாய்த்தான் பொது அடையாளம் கொண்டவனாய் இருக்கிறான். ஏறத்தாழ தீப்பிடித்து அதன் சிறிய திரிகளின் மிச்சங்களுடன் எரியும் ஒரு மெழுகுவர்த்தி போல அவன் அங்கே நிற்கிறான், மற்றும் சகலமும் வெதுவெதுப்புடன் இருக்கிறது என்றுமே அகலாமல். அந்த எல்லா மடத்தனமான பறவைகளும் புரிந்து கொள்வதில்லை அவன் எப்படி அவற்றை ஈர்க்கிறான் என, எப்படி அவற்றைச் சபலப்படுத்துகிறான் என. பார்வையாளர்கள் எவரும் இல்லாது போனால், அங்கே அவன் நீண்ட நேரம் நிற்க அனுமதிக்கப்பட்டால், ஒரு தேவதூதன் தோன்றி, தன் அருவருப்பை வென்று, அந்த பழைய இனிக்கும் ரொட்டித் துணுக்குகளை அந்த வளர்ச்சி குன்றிய கையிலிருந்து உண்ணுவான் என்று நிச்சமாய் நான் எண்ணுகிறேன். ஆனால் இப்பொழுது, எப்போதும் போல, ஜனங்கள் அதை நிகழ விடுவதில்லை. பறவைகள் மாத்திரமே வர வேண்டுமென்பதை அவர்கள் நிச்சயப்படுத்துகின்றனர். வேறெதை இந்த வயோதிக மழைவெய்யிலில் தாக்குண்ட, ஒரு சரிவான கோணத்தில் பூமியில் சிக்குண்ட சீதோஷ்ணத்தில் சீரழிந்த பொம்மை எதிர்பார்க்க முடியும்? கப்பல் தலைவனின் தோட்டத்தில் தீட்டப்பட்டுள்ள தோணிமுகப்பு உருவங்களைப் போலிருக்கும் இவை எதிர்பார்க்க முடியும்? அது அப்படி நிற்கக் காரணம் அதுவும் கூட ஒரு காலத்தில் எங்கோ அதன் வாழ்க்கையின் முன்னோக்கிய நுனியில் வைக்கப்பட்டிருப்பதாலா? எந்த ஒரு புள்ளியில் இயக்கம் மிக அதிகமாய் உள்ளதோ அதில்? இப்போது அது சாயம் போயிருக்கக் காரணம் அது ஒரு காலத்தில் பளிச்சென்றிருந்ததுதானா? அதனிடம் சென்று நீங்கள் கேட்பீர்களா?

அவர்கள் பறவைக்கு இரையளிக்கும் போது அந்தப் பெண்களிடம் மாத்திரம் கேட்காதீர்கள். நீங்கள் அவர்களைப் பின்தொடரக் கூட செய்யலாம். அவர்கள் அதைக் கடக்கும் போது செய்கின்றனர். அது எளிமையாய் இருக்கும். ஆனால் நாம் அவர்களைத் தனிமையில் விடுகிறோம். அவர்களுக்குத் தெரிவதில்லை அது எப்படி நிகழ்கிறதென. திடீரென ஒரு பர்ஸ் நிறைய ரொட்டி அவர்களிடமிருக்கிறது. அவர்களின் லேசான சால்வைகளினடியிலிருந்து அவற்றை நீட்டுகின்றனர், சிறிதே மெள்ளப்பட்டதும், சொதசொதப்பதுமான துண்டுகள். இந்த உலகினுள் அவர்களின் உமிழ்நீர் பரவுகிறது என்பது அவர்களுக்கு நன்மை செய்கிறது, அந்த சிறிய பறவைகள் தம் வாய்களில் அந்த சுவையுடன் பறந்து செல்லுமென்பது. பிறகு இயல்பாக அவை அதை மீண்டும் மறந்து போனாலும் கூட.

முகங்கள்

ஏற்கனவே நான் அதைச் சொல்லியிருக்கிறேனா? நான் பார்க்கக் கற்றுக் கொள்கிறேன். ஆம், நான் ஆரம்பிக்கிறேன். இன்னும் மோசமாகத்தான் அது போய்க்கொண்டிருக்கிறது. பெரும்பான்மை நேரத்தை பயன்படுத்திக் கொள்ள உத்தேசிக்கிறேன்.

எடுத்துக்காட்டாக, முன்பு எனக்குத் தோன்றியதில்லை எத்தனை முகங்கள் இருக்கின்றனவென. எண்ணற்ற மனிதர் உள்ளனர், ஆனால் அதை விட அதிகமான முகங்கள் உள்ளன, காரணம் ஒவ்வொரு நபருக்கும் பல முகங்கள் உள்ளன. ஒரே முகத்தைப் பல ஆண்டுகளாய் அணியும் மனிதர்கள் உண்டு இயல்பாகவே அது தேய்மானமடைகிறது, அழுக்கடைகிறது, விளிம்புகளில் வெடிக்கிறது, ஒரு நீண்ட பயணத்தில் அணியப்பட்ட கையுறைகள் போல் விரிந்து விடுகிறது. அவர்கள் சிக்கனமானவர்கள், சிக்கலில்லாத மனிதர்கள் அவர்கள் என்றும் அதை மாற்றுவதில்லை, அதைச் சுத்தம் கூட செய்வதில்லை. அது போதுமானது என்றவர் சொல்கின்றனர், அதற்கு மாறுபட்டு யாரவர்க்கு நம்பச் செய்யவியலும்? வாஸ்தவமாய், அவர்களிடம் பல முகங்கள் உள்ளதால் நீங்கள் வியக்கலாம் பிறவற்றை என்ன செய்வரென்று? அவற்றை அவர்கள் சேமிப்பில் வைக்கின்றனர். அவர்களின் குழந்தைகள் அவற்றை அணிவார்கள். ஆனால் சில நேரங்களில் அவர்களின் நாய்கள் அவற்றை அணிவதும் நடக்கிறது. மேலும் ஏன் கூடாது? ஒரு முகம் முகம்தானே.

வேறு மனிதர்கள் நம்ப முடியாத வேகத்தில் முகங்களை மாற்றுகின்றனர், ஒன்றன் பின் ஒன்றாய், தேய்த்து பழையதாக்குகின்றனர். தொடக்கத்தில் அவர்களுக்கு முடிவற்ற அளிப்பு இருக்குமென எண்ணுகின்றனர் ஆனால் நாற்பதே வயதாகு முன்பே அவர்களின் கடைசி முகத்திற்கு வந்து சேர்கின்றனர். நிச்சயமாக இதில் வருந்தத்தக்க ஏதோ விஷயம் உண்டு. அவர்களுக்கு முகங்களைப் பாதுகாத்து பழக்கமில்லை ஒரு வாரத்தில் கடைசி முகம் தேய்ந்தவுடன், மெல்லிய தாளில் பல இடங்களில் உருவாவது போல் அதில் ஓட்டைகள் உண்டான பின், சிறிது சிறிதாய் ஓரத்தையல்கள் தெளித் தெரியத் தொடங்கி, அ-முகம் தோன்றுகிறது. அவர்கள் இதையணிந்து சுற்றி வருகின்றனர் நடந்து.

ஆனால் பெண்கள் பெண்கள்தான் அவள் முற்றிலுமாய் தனக்குள் விழுந்துவிட்டாள், முன்னோக்கி தனது கைகளுக்குள். அது .. .. .. .. தெருவின் திருப்பத்தில் உள்ளது. நான் அவளைப் பார்த்த மாத்திரத்தில் அமைதியாய் நடக்கத் தொடங்குகிறேன். ஏழை மக்கள் சிந்திக்கும் போது அவர்களை இடைஞ்சல் செய்யக் கூடாது. இன்னும் கூட ஒரு வேளை அவர்களின் கருத்தாக்கம் அவர்களுக்கு உதிக்கக் கூடும்.

தெரு மிகவும் வெறிச்சோடியிருந்தது. அதன் வெறுமை சலித்திருந்தது. அது என் காலடி எடுப்புகளை என் காலடிகளிலிருந்து இழுத்துவிட்டது அதில் சத்தமிட்டது சடசடத்து, தெரு முழுவதிலும், அவை ஏதோ மரமிதியடிகள் போல. அந்தப் பெண் எழுந்து நின்றாள், பீதியடைந்து, அவள் தனக்குள்ளிருந்து அவளைப் பிடுங்கிக் கொண்டாள், மிக விரைவாகவும், மிக மூர்க்கமாகவும், அதன் விளைவாய் அவள் முகம் அவளின் இரு கைகளில் விடப்பட்ட மாதிரி. அது அங்கே கிடப்பதை நான் கண்டேன் அதன் உள்ளீடற்ற வடிவம். அந்தக் கைகளுடனிருக்க விவரிக்கவொன்னாத யத்தனம் எனக்கு ஏற்பட்டது–அவற்றிலிருந்து எது பிடுங்கப்பட்டதென பார்க்காதிருப்பதற்கு. உள்புறம் ஒரு முகமிருப்பதைக் கண்டு திகைப்படைந்தேன். ஆனால் இன்னும் கூடுதலாய் பயந்திருந்தேன் முகமிழந்து காத்திருக்கும் தோலுரித்த தலைக்காக.


jeanbaptiste_monge

Note:

I have been keeping the drafts of Rilke’s poems with me for the past 5 years. Since I wasn’t satisfied with some of the renderings into Tamil I kept on revising them. A few of my friends might have the hard copies of the older versions of what has been posted here. They should tear off the older versions.

To be honest I tried my hand with the translations of Rilke’s poetry in 1982 when I bought a copy of J.B.Leishman’s book released in the Penguin Modern Poets series. But I couldn’t with confidence translate a single poem from J.B.Leishman’s collection.(Of course I did but tore them off because of utter dissatisfaction)  Even after reading C.M.Bowra’s The Heritage of Symbolism I didn’t dare touch a single poem. I felt more diffident after reading C.M.Bowra’s introduction to Rilke.

What ultimately triggered me to start the translations was Robert Bly’s book: Selected Poems of Rainer Maria Rilke. Bly’s translations gave me the confidence which I couldn’t get from J.B.Leishman.

Most of the poems from The Book of Hours are from Robert Bly. I acknowledge this with gratitude.

The rest are from Stephen Mitchell’s equally accessible book-The Selected Poetry of Rainer Maria Rilke

Though I got Galway Kinnell’s The Essential Rilke I have not used his book for translating any of these poems


Posted in Uncategorized | Tagged: , , , , , | Comments Off

James Joyce-The Writers’s writer: introduced by Brammarajan(ஜேம்ஸ் ஜாய்ஸ்-எழுத்தாளர்களின் எழுத்தாளர்)

Posted by brammarajan on November 21, 2008

jamejoyce1-introduced-by-brammarajan

ஜேம்ஸ் ஜாய்ஸ்-எழுத்தாளர்களின் எழுத்தாளர்

பிரம்மராஜன்

இருபதாம் நூற்றாண்டு ஆங்கில இலக்கியத்தில் மட்டுமன்றி பிற உலக இலக்கியங்களிலும் ஜேம்ஸ் ஜாய்ஸ் எழுத்தாளர்களின் எழுத்தாளர் என்று கருதப்பட்டதில் நியாமிருக்கிறது. இன்றைய பார்வையில் சம்பிரதாய மற்றும் நவீனத்துவ அடைமொழிகள் அவருக்குப் பொருந்தாதவை போலத் தோன்றினாலும் டி.எஸ்.எலியட்டுக்கு ஜாய்ஸ் நவீனராகத் தோன்றியதால்தான் பத்தொன்பதாம் நூற்றாண்டை துவம்சம் செய்த மனிதன்என்று எலியட் 1922ஆம் ஆண்டு எழுதினார். 1931ஆம் ஆண்டு அமெரிக்க விமர்சகரான எட்மண்ட் வில்ஸன் அவரது நூலான Axel’s Castle இல் ஜாய்ஸை மானுடப் பிரக்ஞையின் புதிய கட்டத்து மஹா கவிஞன் என்று வர்ணித்தார். மேலும் வில்சனுக்கு ஜாய்ஸ் ஒரு நவீன விஞ்ஞானியின் இணையுருவாய்த் தோன்றினார். 1920களிலும் 30களிலும் விளக்கமூட்டும் ஒப்புமைகளைத் தேடிக் கொண்டிருந்த பிற விமர்சகர்கள் ஜாய்ஸின் கலையை விவரிக்க க்யூபிஸம், மனோவியல் ஆய்வலசல், திரைப்படம், மற்றும் ஜாஸ் இசை போன்றவற்றை நாடினர். ஹங்கேரிய ஓவியர் மோஹோலி நேகி (Moholy Nagy) ஜாய்ஸை மெஷின் யுகத்து எழுத்தாளரென சிலாகித்துக் கூறினார்–அதாவது மொழியை நெறிப்படுத்தி தொழில்நுட்ப வல்லுநனைப் போல வார்த்தைகளைக் கையாண்டதற்காக. ஐய்ன்ஸ்டீனிய கால-வெளி குறித்த இயற்பியல் ஒற்றுமையும் ஜாய்ஸின் இரண்டாம் நாவலான ஃபின்னகன்ஸ் வேக் (Finnegan’s Wake)-குக்குப் பயன்படுத்தப்பட்டது.

யூலிஸிஸ் ஒரு நாவல் என்பதை விடக் கூடுதலாகக் கவிதை என்று சொல்லப்படுவது பொருந்தும்–அல்லது ஒரு நாவலுக்குள் வைக்கப்பட்ட மாபெரும் கவிதை என்று கூறுவது சிறப்பாக இருக்கும். இன்றைய தீவிர வாசகர்களுக்கு ஜாய்ஸின் உரைநடை அத்தனை சிரமத்தையும் தடங்கல் களையும் தராது. ஆனால் 50 வருடங்களுக்கு முன்னால் புத்திக்கூர்மையுள்ள வாசகர்களுக்கும் பிற படைப்பாளிகளுக்கும் தலைவலி கொடுத்தது. பெர்னாட் ஷா, ஹெச்.ஜி.வெல்ஸ், யேட்ஸ் போன்ற ஆங்கில எழுத்தாளர்களால் யூலிஸிஸ் நாவலைப் படிக்க முடியவில்லை. தாமஸ் உல்ஃப்-ம் விண்ட்ஹேம் லூயிஸும் படித்து தவறாக அர்த்தம் புரிந்து கொண்டனர். நோபல் விருது பெற்ற நவீன ஜெர்மானிய நாவலாசிரியர் தாமஸ் மன் அதைப் படிக்கப் பெரிதும் விரும்பினார். யூலிஸிஸ் நாவலில் இருந்த ஃபிளாபர்தன்மையான குணாம்சங்களில் எஸ்ரா பவுண்ட்டுக்கு இருந்த தொடக்ககால துருதுருத்த உத்வேகம் விரைவில் மறைந்து போயிற்று.

ஜாய்ஸ் தனது இரண்டாவது நாவலான யூலிஸிஸ்-ஐ(Ulysses) ஊலிசேஸ் (OOlysaze) என்றுதான் உச்சரித்தார் என்றறிகிறோம். மேலும் நீங்கள் யூலிஸிஸ் நாவலைப் படிக்க முடியாது. மாறாக வார்த்தைகளை உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கலாம்–உங்களால் ஜாய்ஸின் எழுத்து உத்திகளைக் கற்றறிந்த பின்னரே படித்தலும் படித்ததை கிரஹித்தலும் சாத்தியம். ஒவ்வொரு சொல்லும் பல அர்த்தங்களின் உருகிய வார்ப்பின் விளைவால் உண்டான சித்திரமாய் நிற்கிறது. இருபொருட்தன்மைகளின் இருள், எதிர்மறைநிறைந்த இரட்டிப்பு, அர்த்தம் உலர்ந்து போன சொற்களுக்கு மறுஉயிர்ப்பூட்டல், அர்த்தம் தேங்கிய குறியீடுகள் ஆகியவை விதைகளென சரியான பருவகாலத்திலும் பொருத்தமான இடத்திலும் உயிர் பெறுகின்றன.

ஜாய்ஸ் தொடக்கத்தில் தன்னை ஒரு கவிஞன் என்றே எண்ணினார். வேறு எந்த இருபதாம் நூற்றாண்டு எழுத்தாளரை விடவும் உரைநடையின் கவித்துவ சாத்தியங்களை விஸ்தரிக்க ஜேம்ஸ் ஜாய்ஸ் பங்களித்தது அதிகம். Chamber Musicஎன்ற கவிதைத் தொகுதியை 1907ஆம் ஆண்டு வெளியிட்டார். இத்தொகுதியில் காணப்படும் ஒருவித மினுங்கும் அழகுக்கு அப்பால் அவற்றின் புராதனத்தன்மை உறுத்துவதாய் இருக்கிறது. அவை சம்பிரதாயமான, நன்கு வரையறுக்கப்பட்ட உணர்ச்சிப்பாடல்கள். ஆனால் அயர்லாந்தை விட்டு வெளியேறி ஐரோப்பாவுக்கு சென்ற சமயத்திலேயே அவரது வெளிப்பாட்டு ஊடகம் கவிதையல்ல என்றும் புனைகதைதான் என்றும் உள்ளுணர்வுபூர்வமாக உணர்ந்து கொண்டார். அவரது பிரதான படைப்புகளுடன் ஒப்பிடும் போது சுயசரிதைத்தன்மை நிறைந்த கவிதை களடங்கிய (Pomes Penyeach(1927)இரண்டாவது கவிதைத் தொகுதி–மார்ஜின் ஓரத்துக் குறிப்புகள் போலிருக்கிறது. ஜாய்ஸ் தன் இருபதாம் வயதிலேயே ஐரிஷ் கவிஞர் யேட்ஸ், பிரெஞ்சுக் கவிஞர் வெர்லெய்ன் மற்றும் மரபான ஆங்கிலக் கவிஞர்களின் தொழில்நுட்பங்களைக் கற்றறிந்தார்.

ஜாய்ஸின் இலக்கியப்பயணத்தின் தொடக்கத்தில் நார்வே நாடகாசிரியரான இப்ஸன்-ஐ முன்னுதாரணமாகக் கொண்டு ஐரிஷ் இலக்கியத்தை ஐரோப்பிய மயமாக்க நினைத்தார்.–அந்த மாபெரும் வெளிஉலகத்தைப் பற்றி அயர் லாந்து கூடுதல் தன்னுணர்வு பெறட்டும் என எண்ணினார். இந்தக் காரியம் ஜாய்ஸூக்கு இருபக்கச் சாத்தியங்கள்மிக்கதாய் அமைந்து விட்டது. அந்த மாபெரும் வெளிஉலகம் அயர்லாந்தை அறியச் செய்ய வேண்டிய பெருங்கடமை ஜாய்க்கு விதிக்கப்பட்டது. இது வேறெந்த ஐரிஷ் எழுத்தாளரும் இதுவரை சாத்தியப்படுத்தாத ஒன்று. அயர்லாந்து--குறிப்பாக தலைநகர் டப்ளின், அதன் தெருக்கள், துறைமுகங்கள், மக்களின் பழக்கவழக்கங்கள், வதந்திகள், வரலாறு மற்றும் நிலஅடையாளங்கள் போன்ற வற்றை தன் நாவலில் கொண்டு வருகிறார். ஜாய்ஸின் டப்ளின் நகரம் சார்ல்ஸ் டிக்கின்ஸின் லண்டன் போலவும், தாஸ்தாயெவ்ஸ்கியின் மாஸ்கோ போலவும் ஸ்தூலமானது, வலுவானது, செறிவானது. ஆனாலும் ஜாய்ஸ் அளிக்கும் அயர்லாந்தின் சித்திரம் பாரபட்சமானது. தனது பூர்வீக நகரத்து சமூக-பொருளாதார, கலாச்சார மற்றும் கட்டிடவியல் அம்சங்களைக் குறைத்து விடுகிறார் அல்லது புறக்கணித்துவிடுகிறார்.

ஜேம்ஸ் ஜாய்ஸ் டப்ளினிலிருந்து அவரது 22ஆம் வயதில் சுயமாய் சுமத்திக்கொண்ட வெளியேற்றத்தில் பல ஐரோப்பிய நகரங்களில் வசித்தார். ஆனாலும் அவரது படைப்புக்கு மையமாய் விளங்கியது டப்ளின் நகரம்தான். அவரது பாத்திரங்கள் அனைவரும் டப்ளின்காரர்கள். கதைகளின் பின்னணி டப்ளின். அவர் இளைஞனாய் இருந்த போது கைவிட்டுச் சென்ற நகரத்தின் சாராம்சத்தை சிம்பலிஸ யதார்த்தம் மூலமாய் உருவாக்க அசாத்தியமான மொழித்திறன்களைப் பயன்படுத்தினார்.

ஒரு எழுத்தாளன் என்ற வகையில் ஜாய்ஸின் வாழ்க்கையை நான்கு கட்டங்களாகப் பிரிக்கலாம். முதலாவது கட்டம் அவர் இன்னும் ஒரு பாத்திரமாகவும் பங்காகவுமிருந்த வாழ்க்கைச் சூழ்நிலைக்கு சிறுசிறு வடிவம் கொடுத்த Dubliners காலகட்டம். Dubliners இல் சித்தரிக்கப்பட்ட

அயர்லாந்தின் ஒரு பங்காய் ஜாய்ஸ் இருப்பது எப்படியென்றால் செகாவ் தான் சித்தரித்த நாடகங்கள் மற்றும் கதைகளின் ஊடாய் ஒரு அங்கமாய் இருக்கும் ஒரு மங்கலான வழியில் இருப்பது போல.

இரண்டாவது கட்டத்தில் தன் சுயசரிதைத்தன்மை மிகுந்த நாவலான Portrait of the Artist as a young Manஐ எழுதினார். தன்னை உருவாக்கிய சக்திகளுடனான அவரது உறவுகளை ஒளிவுமறைவின்றி அலசினார்.மூன்றாவது கால கட்டம் போர்ட்ரெய்ட் நாவலின் இறுதிப் பகுதி

தொடர்பானது. இதில் மொழியை மறுஉருவாக்கம் செய்யும் அவரது சுதந்திரத்தை உணரத் தொடங்குகிறார். அவர் கைவிட்ட வாழ்க்கையை யதார்த்த மற்றும் குறியீட்டுத்தளங்களில் எழுதிப் பார்க்கிறார். அந்தக் கைவிடலும் தியாகமும் ஒரு கலைஞனின் நேர்மைக்கு அத்தியாவசி யமானவை--அவருக்கு உணர்ச்சிக்கலப்பற்ற புறப்பார்வையை அளிக்கக்கூடியவை.

நான்காவது காலகட்டத்தில் அவரது படைப்பின் உச்சமென ஜாய்ஸ் கருதிய ஃபின்னகன்ஸ் வேக் (Finnegan’s Wake)-நாவலை எழுதினார். இதில் யூலிஸிஸ் நாவல் உருவான யதார்த்த தளத்தை முற்றிலுமாய் நிராகரித்து விட்டு ஆங்கில மொழியை ஆழப்படுத்தி அதன் உச்சபட்ச சாத்தியங்களை எட்டினார். ஆனால் விளாதிமிர் நபோகோவ் ஃபின்னகன்ஸ் வேக் பற்றிய மிக மோசமான கருத்தினைக் கொண்டிருந்தார். அவரது கருத்துப்படி வேக் நாவல்

. .author’s [Joyce] next and last novel, Finnegan’s Wake (1939), one of the greatest failures in literature

Vladimir Nabokov, Lectures on Literature, Picador(1983), p.349

ஜாய்ஸ் தன் இளமைக்காலத்திலேயே குறுகிய எல்லைப்பாடுகள் கொண்ட, பிற ஐரிஷ் இலக்கியவாதிகளான ஜே.எம்.ஸிஞ்ச், யேட்ஸ், போன்றோர் முனைப்பாகப் பங்கேற்றுக் கொண்ட ஐரிஷ் இலக்கிய மறுமலர்ச்சி இயக்கங்களில் சம்மந்தப்பட மறுத்ததோடு மட்டுமன்றி, அவர் அறிந்திருந்த ஐரோப்பிய இலக்கிய கலாச்சாரம் குறித்த பிரக்ஞை பற்றி தற்பெருமை கொண்டிருந்தார். ஒரு படைப்பாளி என்ற வகையிலும் ஒரு தனிநபர் என்ற வகையிலும் கலாச்சார-அரசியல் நிலைப்பாடுகளில் அவர் அதீதத் தனிமை கொண்டிருந்தார். அயர்லாந்துக்காரர்களுக்கு ஆங்கில மொழி

அந்நியமானது என்ற கருத்தை அவர் சிறிது காலம் கொண்டிருந்த போதிலும் ஜாய்ஸ் அன்றைக்கு ஃபேஷனாக இருந்த ஐரிஷ் மொழி கற்கும் விஷயத்தில் சிறிதும் ஈடுபாடு காட்டவில்லை. இதற்கு எதிர்நிலையில் நின்று அவரது ஆதர்ச நாடகாசிரியரான இப்ஸன் (Ibsen)-னின் நாடகங்களை மூலமொழியில் படிப்பதற்காக நார்வேஜிய மொழியைக் கற்றார். கத்தோலிக்க மதத்தைக் கைவிட்டு சிறிது காலம் பாரிஸ் நகரில் வசித்தார். சமரசம் செய்து கொள்ளத் தயாரில்லாத ஒரு பிடிவாத மனநிலையில், ஜாய்ஸின் தாயார் மரணப்படுக்கையிலிருந்த சமயம், அயர்லாந்துக்கு மறுவருகை புரிந்த போதிலும் கூட தாயாரின் இறுதி விருப்பத்தை நிறைவேற்ற மறுத்துவிட்டார். இந்தக் குற்றவுணர்ச்சியே ஜாய்ஸின் முதல் நாவலான Portrait of the Artist as A young Man க்கு வித்திட்டது. 1904ஆம் ஆண்டு நோரா பார்னகிள் என்ற பெண்ணுடன் பாரிசுக்குக் கிளம்பிச் சென்றார். நோரா ஒரு ஹோட்டலில் பணிப்பெண்ணாக வேலை பார்த்தவர். இலக்கிய ஈடுபாடுகளற்றவர். நோராவுக்கு ஜாய்சைப் புரிந்து கொள்ள முடியாத இயலாமை இருந்தது. நோரா அவரது இலக்குகளைச் சரிவரப் புரிந்து கொள்ளாதது அவருக்குப் பெரும் சுமையாக இருந்திருக்க வேண்டும். நம்பிக்கை வறண்டுபோயிருந்த ஒரு காலகட்டத்தில் ஜாய்ஸ் வாழ்ந்த போது, நீங்கள் ஏன் மக்கள் புரிந்து கொள்ள முடிகிற அர்த்தமுள்ள புத்தகங்களை எழுதக்கூடாது? என்று கேட்டிருக்கிறார். ஜாய்ஸ் தன் குடும்பத்தைக் காப்பாற்ற டிரியஸ்ட் மற்றும் ஜுரிச் நகரங்களில் சிரமப்பட்டு உழைக்க வேண்டியிருந்தது. வறுமை எப்போதும் அவர் வாசலை எட்டிவிடக் கூடியதாகவே இருந்தது. அவரது புத்தகங்களின் காப்புரிமைப் பணமும் பிற இலக்கியப் புரவலர்களின் ஆதரவும் அவரது பின்கட்ட வாழ்வில்தான் வந்தடைந்தன.

ஜாய்ஸ் தனக்களிக்கப்பட்ட ரோமன் கத்தோலிக்க கல்வி மற்றும் ஒழுக்கப் பயிற்சி பற்றிப் பெருமை கொண்டிருந்தார். ஜீஸஸ் சங்க(Jesuit)ரோமானியத் திருச்சபையினரில், குறிப்பாக புனித தாமஸ் அக்வினாஸ் என்பவரின் இறையியல் சட்டதிட்டங்களின் கடுமைக்குத் தன்னை உட்படுத்திக் கொண்டவர். ஒரு கவிஞன் என்ற முறையில் ஜாய்ஸ் வால்ட்டர் பேட்டரின்(Walter Pater) கலைக் கொள்கையைப் பின்பற்றினார். பேட்டர் சமூகத்தில் கூடுதல் சலுகைகள் உடைய தனிநபராக மாத்திரமின்றி கலைஞனை சமூக மற்றும் அறவியல் பொறுப்புகளுக்கும் கடமைகளுக்கும் அப்பாற்பட்டு இயங்குபவனாக எண்ணியவர். எனினும் தனிமைப்படுத்தப்பட்டுத் தெரியும் அறிவுநிலைவாதம் அவரது சிக்கலான ஆளுமையின் ஒரு பகுதிதான். ஐரிஷ் தேசீயவாதத்தின் புராணிகங்களுக்கு ஊட்டமளிக்கும் பொருட்டு ஒரு செயற்கையான கலாச்சாரத்தை உருவாக்க முனைந்த செல்டிக் மறுமலர்ச்சிக்கென்று ஒதுக்குவதற்கு ஜாய்ஸுக்கு நேரமிருக்கவில்லை. போர்ட்ரெயிட் நாவலின் நாயகனான ஸ்டீவென் டெடாலஸின் அழகியல் செவ்வியல் மரபிலிருந்து வேறுபடுகிறது. நாவலின் இறுதியில் குடும்பம், தந்தைநிலம், தேவாலயம் ஆகியவற்றின் கோருதல்களை நிராகரிக்கும் போது இதே விஷயங்களை முதன்மைப்படுத்தியும் பேசுகிறான் டெடாலஸ். குறிப்பாக அதில் மதம் பற்றிய கருத்துக்கள் சிக்கல் நிறைந்து காணப்படுகின்றன. மதம் மற்றும் குடும்பம் ஆகிய நிறுவனங்களின் மீதான கருத்துக்களில் ஜாய்ஸின் தாயார் ஒரு பிரதான பாதிப்பு செலுத்தினார். ஜாய்சின் ஏசுசங்கத்திய (Jesuit) பள்ளியாசிரியர்கள் ஜாய்ஸுக்கு தீர்க்கமானதொரு கத்தோலிக்க வளர்ப்பை உறுதிப்படுத்தினர். வளர்பிராயத்தின் போது அவர் ஒரு பாதிரியாக ஆவதற்கான தயாரிப்பு ஏற்பாடுகளிருந்தன. எனவே ஜாய்ஸின் முழுமொத்த மனோஇயங்கு முறையில் யேசுசங்கத்தினரின் பாதிப்பு வெளிப்படையாகத் தெரிந்தது. ஆனால் பள்ளியை விட்டு வெளியேறிய போதே மதம் மீதான நம்பிக்கையை முற்றிலுமாய் இழந்துவிட்டார் ஜாய்ஸ். நேச்சுரலிஸ விவரணையின் அடிப்படையிலமைந்த போர்ட்ரெயிட் நாவலில் அதன் மையப்பாத்திரமான ஸ்டீவென் மூலமாக இலக்கியம் மற்றும் கலை ரீதியான கோட்பாடுகளுக்கு வடிவம் கொடுத்தார் ஜாய்ஸ். கலைஞன் எப்படி இருக்க வேண்டும் என்று ஜாய்ஸ் நினைத்ததை ஸ்டீவென் தன் சிந்தனையில் எதிரொலிக்கிறான்:

The artist, like the God of creation, remains within or behind or beyond or above his handiwork, invisible, refined out of existence, indifferent, paring his fingernails (Portrait of the Artist)

கலை ரீதியான இந்த வரையறையை நோக்கித்தான் ஜாய்ஸின் படைப்புகள் நகர்கின்றன. கலைஞன் கடவுள் மாதிரி இருக்க வேண்டும். அவனது படைப்பிலிருந்து பின்னாலோ, அப்பாலோ, மேலோ, அதற்கு உள்ளூடாகவோ இருக்க வேண்டும். ஆனால் இருப்பது புலனாகாமல் இருக்க வேண்டும். அவன் இருப்பு இந்த வாழ்விலிருந்து சுத்திகரிக்கப்பட்டிருக்க வேண்டும். வேறெதிலோ கவனம் கொண்டு அவன் தன் படைப்பு பற்றி விட்டேற்றியாக-சிரத்தையற்றவனாய் இருக்க வேண்டும். நாவலின் வேறு ஒரு இடத்தில் ஸ்டீவென் தன் அழகியல் கோட்பாடு பற்றிக் குறிப்பிடும் பொழுது அது ஒரு நடைமுறை அக்வினாஸ் தத்துவம் என்கிறான். அரிஸ்டாட்டில் மற்றும் அக்வினாஸ் ஆகியோரின் விமர்சன முறைகளுக்கு ஸ்டீவென் தன் தனிமுத்திரையை இடுகிறான். மிகக் குறைவான உருமறைத்தல் தவிர்த்து ஜாய்ஸின் முதல் இருபதாண்டு வாழ்க்கையை நேரடியாகப் பிரதிபலிக்கிறது போர்ட்ரெயிட். சுயசரிதைகளை விட கூடுதல் மனந்திறப்பு கொண்டதாயிருக்கிறது. நாயகனின் உணர்ச்சி ரீதியானதும் அறிவார்த்த ரீதியானதுமான துணிகரச் செயல்களுக்கு அழுத்தம் கொடுக்கும் விதத்தில் நாவல் சுயசரிதையிலிருந்து உயர்ந்த கலைப்படைப்பாக வெகுவாய் மேலெழும்புகிறது. இந்த நாவலை அவர் 1904ஆம் ஆண்டு டப்ளினில் எழுதத் தொடங்கினார். டிரியஸ்ட் நகரில் 1914ஆம் ஆண்டு வரை சீர்திருத்தி எழுதியவண்ணமிருந்தார். இந்தச் செயல்பாட்டின் விளைவாய் ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்கங்களை கூடுதலாய் சேகரித்திருந்தார். ஸ்டீவெனை பாரிஸ் செல்வதற்குத் தயார்ப்படுத்தும் வரை. அந்த சமயத்தில் போர்ட்ரெயிட் நாவலின் பெயர் Stephen Hero என்றுதானிருந்தது.

நனவோடை (Stream of Consciousness)உத்தியை அவர் தீவிரமாகக் கையாள்வதற்கு முன்னர் Epiphany என்ற கருத்தாக்கத்தினை தன் படைப்புகளுக்கு அடிப்படையாக முன்வைத்தார். எப்பிஃபனிக்கு ஒரு எளிய எடுத்துக்காட்டு கிறிஸ்து அந்த மூதறிஞர்களுக்கு காட்சியளித்த விதம். இது போன்ற கணத்தோற்றங்கள் அல்லது கணங்கள் நம் அனைவருக்கும் வெளிப்பட்டு தெரியத் தயாராய் இருக்கின்றன. ஆனால் நாம் அவற்றை உணர்வதில்லை. சில நேரங்களில் மிகவும் சிரமமான தருணங்களிலும் கூட அவை திடீரென நிகழ்ந்து தம் முகத்திரையை விலக்கிக் காட்டுகின்றன. மர்மத்தின் சுமை விலகி வஸ்துக்களின் உச்சபட்ச ரகசியம் வெளிப்படுத்தப் படுகிறது. ஒரு கோப்பை லிண்டன் தேநீரில் மேடலெய்ன்என்ற பெயர் கொண்ட ஸ்பாஞ்சு கேக்கை முக்கி எடுத்த போது நவீன ஃபிரெஞ்சு நாவலாசிரியரான மார்சல் ப்ரூஸ்ட்டுக்கு இது அனுபவமாயிற்று. இம்மாதிரியான கணத்தோற்றங்கள் ஸ்டீவெனுக்கு போர்ட்ரெயிட் நாவலில் நிகழ்கின்றன–குறிப்பாக எக்லஸ் தெருவினைக் கடந்து செல்கிற போது. இது போன்ற நொய்மையான, கணத்தில் நிகழ்ந்து முடிகிற மனநிலைகளைப் பதிவு செய்வது ஒரு எழுத்தாளனின் பிரதான கடமை என்றார் ஜாய்ஸ். இது போன்ற கணத்தோற்றங்களைத்தான் Epiphany என்றழைக்கிறார்கள். புதினங்களில் மட்டுமன்றி தனித்த அனுவத் தொகுதிகளாக இவற்றை ஜாய்ஸ் சேகரித்தார். ஒரேயொரு வார்த்தை ஒரு முழுக்கதையையும் சொல்லிவிட முடியும். ஒரு சிறு உடலசைவு மிகவும் சிக்கலான உறவுகளின் திட்டத்தை வெளிப்படுத்தி விட இயலும். ஒரு படைப்பாளன் ஒரு யோகி அளவுக்கே இந்த வெளிப்படு தோற்றங்களை கிரஹித்துக் கொள்ளத் தன்னை ஏதுவாக வைத்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு அற்பத்தகவல்கள் போலத் தோன்றக்கூடியவை படைப்பாளனுக்கு விசேஷ நிகழ்வுகளின் குறியீடுகளாக மாறிவிட முடியும். ஜாய்ஸ் தன் முதிர்ச்சிக் காலப் படைப்புகளிலுமே கூட அனுவங்களின் ஆழ்நிலைப் பார்வைகளை மறுகட்டுமானம் செய்பவராய்த் தோன்றுகிறார். மறைஞான நிலைக்கும் கடைவிரித்துக் காட்டலுக்குமிடையிலான ஜாய்ஸின் திடீர்க் கோண மாறுதல்கள் தலை சுற்றச் செய்யக் கூடியவை. அவ்வாறே மொழியியல் சோதனைக்கும் போர்னோகிராஃபித்தன்மையான மனந்திறப்புகளுக்கும் இடையில் ஏற்படும் திடீர் மாற்றங்களையும் நாம் ஜாய்ஸின் படைப்புகளில் பார்க்க முடியும். குறியீட்டுத்தன்மைகளுக்கும், நேச்சுரலிஸ அம்சங்களுக்கும், மதத்தின் வெளிப்படு உணர்வுக் காட்சி நிலைகளுக்கும் ஜாய்ஸ் இலக்கிய பதிலிகளை உருவாக்குபவராய் இருந்தார். Epiphany இறையியலில் வேர்கொண்டிருந்த போதிலும் இன்று ஒரு முழுமை பெற்ற இலக்கிய உத்தியாக மாறியிருக்கிறது. நவீன ஃபிரான்ஸின் சமுதாய மற்றும் மனோவியல் ஆய்வாக ஆகும் பொருட்டு, பால்ஸாக்கின் The Human Comedy நாவல் தொடர்களைப் பின்பற்றி எமிலி ஸோலா தனது Rougon-Macquart நாவல் தொடர்களை எழுதினார். டப்ளினர்ஸ் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் டப்ளின் மாந்தர்களைப் பாத்திரமாக வைத்து எழுதப்பட்ட சிறுகதைத் தொகுதி. கதைத் தலைப்புகளும் இடம் சார்ந்தவை. குறிப்பிட்ட கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த சித்திரத்தைத் தரும் பொருட்டு ஜாய்ஸ் எழுதியிருக்கக் கூடும். ஆனால் முன் குறிப்பிடப்பட்ட நாவல் தொடர்களுடன் ஒப்பிட்டால்

ஜாய்ஸின் கதைகள் சிறிய வரைபடங்கள் அல்லது குறு-மனப்பதிவுகள் போலவோ தெரிகின்றன. இத்தகைய மனப்பதிவுகளின் பிராபல்யம் இம்ப்ரஷனிஸ ஓவிய இயக்கத்துடன் தொடர்புடையது. குறிப்பாக அக்கதைகளின் உத்தி. இம்ப்ரஷனிஸ்ட்டுகளின் ஓவியப் பொருட்கள் ஸ்டுடியோக்களில் வடிவமைக்கப்பட்டு மறுகட்டுமானம் செய்யப்படுவதைத் தவிர்த்து கண்டுபிடிக்கப்பட்டன. ஏற்றுக் கொள்ளப்பட்ட சித்திர உருவாக்க முறை புறக்கணிக்கப்பட்டு ஓவியனின் மனப்பதிவு இழக்கப்படுமுன், ஓவியம் நுண்மைமிக்கதாயும் அதிவேகத்துடனும் தீட்டப்பட்டது. கணத்தைக் கைப்பற்றுதல் என்னும் இம்ப்ரஷனிஸ ஓவியனின் அக்கறைக்கு இலக்கியத்தில் சமமான முயற்சிதான் Slice of Life கதைகள் உருவாயின. இக்கதைகளில் குறிப்பிட்ட மன உணர்ச்சியின் சூழல் மறுகட்டுமானம் செய்யப்படுகிறது. ஃபிரான்சில் இதன் மிகப் பெரிய விற்பன்னராகக் கருதப்பட்டவர் மாப்பஸான். ஆனால் ஜாய்ஸ், மாப்பஸானின் சாதனை எல்லைகளைக் கடந்து சென்றவர். நகர்சார் யதார்த்தக் கதைகளின் முன்னோடிகளாய் Arthur Morrisonஎன்பவர் எழுதிய Tales of Mean Streets(1894), Arnold Bennet என்பவர் எழுதிய Tales of Five Towns(1905)போன்ற நூல்கள் ஏற்கனவே ஆங்கில மொழியில் வெளிவந்திருந்தன. அயர்லாந்தைப் பொருத்தவரை ஜாய்ஸின் முன்னோடியாகவும் அவரது போட்டியாள ராகவுமிருந்தவர் George Moore. மூரின் கதைகள் அயர்லாந்து விவசாயிகளின் வாழ்க்கையை மையமாகக் கொண்டிருந்தன.

ஜாய்ஸ் டப்ளினர்ஸ் சிறுகதைகளை எழுதிய காலகட்டத்தில் ஒரு இலக்கிய உத்தியாக சிம்பலிஸம் அதிகம் பேசப்பட்டது. யேட்ஸ்-ஐ தலைசிறந்த ஆங்கில சிம்பலிஸ்ட் என வர்ணித்தார் ஆர்தர் சிமென்ஸ். ஆர்தர் சிமன்ஸ் 1899ஆம் ஆண்டு சிம்பலிசத்தைக் கீழ்க்கண்டவாறு வரையறை

செய்தார்- ஒரு வகையான வெளிப்பாட்டு முறை, மிக உயர்ந்த விதத்தில் ஆனால் உத்தேசமாய் . . . பிரக்ஞையால் உணரப்பட்ட, கண்ணுக்குப் புலனாகாத ஒரு நிஜம்” (Arthur Symons, The Symbolist Movement in Literature, New York,(E.P.Dutton &co) 1958, p.1) சார்ல்ஸ் பாதலெரின் மிகப் பிரபலமான கவிதையான ‘Correspondences’ இயற்கையை குறியீடுகளின் வனமாக மனதின் முன் விரிக்கிறது. 50 வருடங்களுக்கு முன்னரே இந்தக் கவிதை வெளிவந்துவிட்டது. சிமன்ஸினால் விளக்கப்பட்ட பல கவிஞர்கள் பாதலெரைப் பின்பற்றி சிம்பலிஸக் கவிதை எழுதியவர்கள். அதன் கொள்கைகளைப் பின்பற்றி ஓவிய இயக்கமொன்றும் உருவாயிற்று. ஆஸ்கார் வைல்ட் தன் நாவலான Picture of Dorian Gray வுக்கு எழுதிய முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிட்டார்:

“All literature is both surface and symbol”.

ஆஸ்கார் வைல்டின் மேற்கோள் சிம்பலிஸக் கருத்தாக்கம் பற்றிய பரந்துபட்ட பரிச்சயத்தை இலக்கிய உலகிற்கு உருவாக்க உதவிற்று. ஃபிளாபரும் எமிலி ஸோலாவும் மிகப் பிரத்யேகமாக சிம்பலிஸ நாவலாசிரியர்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கும். நேச்சுரலிஸம் மற்றும் சிம்பலிஸ இலக்கிய இயக்கங்களிடமிருந்து ஜாய்ஸின் Epiphany பற்றி இலக்கிய கொள்கை கடன் பெற்றிருக்கிறது. எனினும் Epiphany முதன் முதலாக 1944ஆம் ஆண்டு ஜாய்சால் கைவிடப்பட்ட நாவலான ஸ்டீபென் ஹீரோ-வில்தான் அறிமுகம் செய்யப்பட்டது.

டப்ளினர்ஸ் சிறுகதைத் தொகுதி யதார்த்தமே உத்தியாகவும் இறுதி விளைபொருளாகவுமிருக்கும் ஒரு நிலையை ஆய்வு செய்கிறது. முதல் மூன்று கதைகளும் முதல்நபர் பார்வையில் சொல்லப்பட்டிருக்கின்றன. எல்லாக்கதைகளும் சுயப்பிரக்ஞையுடன் கவனமிக்க அமைவுபடுத்தல் மூலம் வடிவம்கொண்டிருக்கின்றன. An Encounter இன் விவரணைத் தொனி பீதியூட்டும் அமைதி கொண்டிருக்கிறது. Eveline இல் கடினத்தன்மை மிக்க தெளிவும் ஒழுங்குபடுத்தப்பட்ட சித்தரிப்பும் காணப்படுகிறது. A Littel Cloud இல் கவனத்துடன் சமன்படுத்தப்பட்ட உள்வயப் பிரதேசங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.

ஜாய்ஸ் தன் சகோதரர் ஸ்டானிலாஸ்-க்கு விளக்கியபடி டப்ளினர்ஸ் தொகுதியின் முதல் மூன்று கதைகள் ஜாய்ஸின் குழந்தைப்பருவக் காலத்து அனுவங்களிலிருந்து உருவானவை. முதல்நபர் பார்வையில் சொல்லப்பட்ட இந்த மூன்று கதைகளும் மயக்கமகன்று போதலை கதைக் கருவாகக்

கொண்டுள்ளன. பாதிரியாக ஆக விரும்பிய ஒரு சிறுவன் கொண்டிருந்த வாழ்க்கை நோக்கம் (The Sisters)சிதைந்து போகிறது. சிறுவர்களின் தான்தோன்றித்தனமான விளையாட்டும் துணிகரச் செயல்களும் ஒரு பாலியல் வக்கிரக்காரானால் திடீரென நின்றுபோகின்றன(An Encounter). அரேபிய பஜாருக்குச்(Araby) சென்று பார்க்க நினைக்கும் சிறுவன் பஜாரை அடையும் சமயம் அதன் கடைகள் மூடப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கிறான். வெறிச்சோடிய இருண்ட கூடங்களில் அச்சிறுவன் திரிந்தலைந்து தாமதமாக வீடு திரும்புகிறான். பிற கதைகளில் ஜாய்ஸ் மூன்றாம் நபர் பார்வைக்கு மாறிவிடுகிறார். ஜாய்ஸின் பெரும்பான்மையான பாத்திரங்கள் அவரது உறவினர்கள் அல்லது தெரிந்தவர்களை எடுத்துக்காட்டுகளாக வைத்து உருவானவை. குறிப்பாக (A Painful Case) கதையில் வரும் டஃபியின் பாத்திரம் ஜாய்ஸின் சகோதரரான Stanislausஐ முன்மாதிரியாக வைத்து உருவாக்கப்பட்டது.

திருமதி Sinico, Sydney Paradeஇல் ரயில்விபத்தில் இறக்கிறாள். ஒரு சம்பிரதாய புனைகதை எழுத்தாளர் இதில் இடம் பெரும் நிஜமான இடப்பெயர்களை மாற்றியிருப்பார். ஆனால் ஜாய்ஸ் கற்பனையாகக் கண்டுபிடிக்கப்பட்ட பெயர்களை இடங்களுக்குப் பொருத்துவதை நிராகரித்தார்.

ஜாய்ஸின் டப்ளினர்ஸ் சிறுகதைத் தொகுதியை வெளியிட வாக்குறுதியளித்திருந்த Mounsel &Co வைச் சேர்ந்த George Roberts என்ற ஐரிஷ் வெளியீட்டாளர் அத்திட்டத்திலிருந்து பின்வாங்கிக் கொண்டார். கடைகளுக்கும் விடுதிகளுக்கும் ஜாய்ஸ் நிஜப்பெயரை வைத்திருந்ததை அவர் ஆட்சேபித்திருந்தார். திருவாளர் டஃபி ஒரு பூங்காவில் காதலர்கள் சரசமாடுவதைக் கண்டும் காணாமலும் செல்கிறார். அவர் அந்த ஜோடிகளைப் பார்ப்பதாக வரும் Magazine Hill நிஜமாகவே Phoenix Park பூங்காவில் உள்ளது. புனைவாக்கப்பட்ட ஒரு அயர்லாந்தை தன் கதைகளின்

வழியாகப் படைப்பதில் ஜாய்ஸுக்கு விருப்பமிருக்கவில்லை. டப்ளின் வாழ்க்கையை ஜாய்ஸ் paralysis என்ற உருவகம் மூலமாக விவரித்தார்.

An Encounter கதையில் வரும் சிறுவன் பள்ளிக்குச் செல்லாமல் நாளெல்லாம் தெருக்களில் சுற்றித் திரிந்து இறுதியில் சிறுவர்களை பாலுறவுக்குப் பயன்படுத்தும் வயோதிகனுடனான சந்திப்பைப் பற்றிச் சொல்கிறது. இந்தக் கதையிலும் The Sisters கதையிலும் வளர்ந்த மனிதர் உலகத்திற்கும் குழந்தைகளின் உலகத்திற்குமிடையிலான மோதல் அல்லது குறுக்கீடு விவரிக்கப்படுகிறது. மதப்பிரச்சாரகரும், சிறுவர்களைப் பாலுறவுக்குப் பயன்படுத்துவோனும் ஒருவித விரிந்த மர்மத்தைக் கொண்ட ஆசாரமற்ற உலகினை விரிக்கின்றனர். அந்த மர்மம் கரைபடிந்ததாயும் அருவருப்பூட்டுவதாயுமிருந்த போதிலும் மனிதத்துவம் கொண்டதாயிருக்கிறது. இந்த இரு மனிதர்களுமே அந்த சிறுவர்களிடத்தில் பரிவினை மறுபேச்சுக்கிடமின்றி கோருபவர்கள். சிறுவன் சிறிது சிறிதாய் வளர்ந்தோர் உலகின் குற்றவுணர்வை அறிந்து கொள்கிறான். இம்மாதிரியான புனைவம்சத்தை போர்ட்ரெயிட் நாவலில் ஜாய்ஸால் முழுமைப்படுத்த முடிந்திருக்கிறது. Counterparts கதையில் செகாவ் கதையின் குணாம்சம் இருப்பதை வாசகர்கள் கவனிக்கத் தவறிவிட முடியாது. இவற்றில் இறுதிக் கதையான The Dead மற்ற கதைகளை விட ஜாய்சின் கலாபூர்வமான முழுமையை உள்ளடக்கியது மட்டுமன்றி தனக்கான ஒரு கதைத்திட்டத்தையும் (Plot) கொண்டிருக்கிறது. The Dead ஐ சிறுகதை என்று சொல்வதை விட குறுநாவல் என்றழைப்பதே பொருந்தும். The Dead கதையில் வரும் Gabriel Conroy சமூகத்திலிருந்து சற்றே அந்நியமான பிரஜை. இந்த நீள்கதை அடர்த்திச் செறிவான தீட்சண்யமிக்க சமூகக்காட்சியைப் பின்னணியாகவும் செயல்களமாகவும் கொண்டது. டப்ளின் நகரின் தீவிர இசைக் கலாச்சாரத்தை எந்த அளவுக்கு நுணுக்கமாய் ஜாய்ஸ் அறிந்து வைத்திருந்தார் என்பதற்கும் இக்கதை சான்றாகிறது. நாடகத்தன்மை மிக்க சில நிகழ்ச்சிகள் கதையை உயிரோட்டம் மிக்கதாய் ஆக்குகின்றன. எல்லாவற்றையும் விட தலைசிறந்த அம்சமாய்த் திகழ்வது அந்தக் கதையின் பெண் பாத்திரமான கிரேட்டா கோன்ராய்-உடன் ஜாய்சுக்கு இருந்த அத்யந்தமான புரிதல். டப்ளினர்ஸ் தொகுதிக் கதைகளில் வரும் ஏனைய பெண் பாத்திரங்கள் வெறும் நிழல்கள் போன்று தோற்றமளிக்கின்றன. அவர்கள் மீது விவரணையாளனுக்கு அதிகக் கரிசனம் கிடையாது. The Boarding Houseஇல் வரும் Pollyயின் மனோநிலையைச் சித்திரிப்பதற்கு ஜாய்ஸ் சற்றுக் கூடுதல் அக்கறை எடுத்துக் கொண்டிருக்கிறார். The Deadஇல் Gretta Conroy திடீரென காசநோயில் இறந்து போன தன் பழைய காதலனை நினைவு கூர்கிறாள்–அவன் அவளது உணர்வுகளை தற்போதிருக்கும் கணவனை விடக் கூடுதலாகப் பெற்றிருந்தவன்.

ஜாய்சின் மொழிநடையில் ஏற்பட்ட மாற்றங்களும் வடிவப் பிரக்ஞையும் அதன் அடுத்த கட்ட நாவலான Portrait of the Artist as A young Man க்கு இட்டுச் சென்றது. ஸ்டீவென் ஹீரோ எழுதப்பட்ட வருடம் 1904. ஜாய்சும் நோரா பார்னகிளும் டப்ளின் நகரை விட்டு ஐரோப்பாவுக்குக் கிளம்பிச் சென்ற வருடமும் அதே.

மொழியாசிரியர் வேலை ஏற்று ஜாய்ஸ் 10 வருடங்களுக்கு மேலாக அட்ரியாட்டிக் பகுதியிலேயே தங்கிவிட்டார். முதல் உலகப் போர் தொடங்கியவுடன் அவர் ஸ்விட்சர்லாந்துக்குக் குடிபெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 1913ஆம் ஆண்டு எஸ்ரா பவுண்டிடமிருந்து ஜாய்ஸூக்கு வந்த ஒரு யதேச்சைக் கடிதம்தான் ஜாய்சை இலக்கியப் பிரபலர் வரிசையில் வைக்கக் காரணமாயிற்று. Egoist இலக்கிய ஏட்டில் போர்ட்ரெயிட் நாவலைத் தொடராக வெளியிடுவதற்கு பவுண்ட் ஏற்பாடு செய்தார். 1914இல் Egoist ஒரு அரசியல் ஏடாகவும், இலக்கிய முன்னணிப் பத்திரிகை யாகவுமிருந்தது. 1914ஆம் ஆண்டில்தான் லண்டன் பதிப்பகத்தைச் சேர்ந்த கிராண்ட் ரிச்சர்ட்ஸ் டப்ளினர்ஸ் சிறுகதைகளை ஒரு தொகுதியாக வெளியிட்டார். போர்ட்ரெயிட் நாவலை எழுதுவதற்கு ஜாய்ஸ் எடுத்துக் கொண்ட காலம் 10 வருடங்கள். அகதியாகவும், மௌனமாகவும்,

தந்திரமாகவும்தன் நாயகனான ஸ்டீவென் டெடாலஸின் திட்டத்தை ஜாய்ஸ் கடைபிடித்தார் என்று சொல்வது அதிகபட்சமில்லை.

மேலதிக சமூக மற்றும் மனோவியல் தகவல்களை புதினம் கோரும் போது அவற்றை நாவலாசிரியன் தன் சொந்த அனுபவங்களிலிருந்து தர வேண்டியிருந்தது. எந்த சக்திகள் அவனை ஒரு வெளியாள்ஆக ஆக்குகின்றனவோ அவை அவனை தனக்குள்ளாகப் பார்க்கவும் வைக்கின்றன. அவன் தனது சொந்த நாயகனாகிறான். பிற பாத்திரங்களை பின்புலத்தில் இட்டு நிரப்புகிறான். பின்னணி அல்லது பின்புலம் புதிய முக்கியத்துவம் வாய்ந்ததாவதற்குக் காரணம் அது அவன் மீது செலுத்தும் பாதிப்பே. நாவலின் மையஓட்டம் நாவலாசிரியனின் ஆளுமை உருவாக்கப்பெறும் விதமாய் மாறுகிறது. இதை ஜெர்மானிய விமர்சனத்தில் Bildungsroman என்ற சொல் மூலம் குறிக்கிறார்கள். நாயகன் கல்வி பெற்று ஒரு ஆளுமையாய் உருவாகும் வகை நாவல்களை இவை. பிரத்யேகமாக ஒரு நாவலாசிரியனின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் நாவலாக ஆகும் பொழுது இதை Kunstelrroman